சனி, அக்டோபர் 29, 2011

மழை நின்ற காலை!

இரவு சரியான மழை...
சலசலத்து
ஊற்றியபடி கதையளந்தது
மொட்டைமாடி வடிகுழாய் ...
" உனக்கென்ன ...
தள்ளிவிட்டால் ஆச்சு...
உள்ளே-வெளியே
விளையாடும் நீர்
போதாதென்று
உன் தொல்லை வேற ...
குளிர் தாங்கலை..,:
புலம்பியது சுற்றுத்தரை .
மறந்துபோய்
வெளியில் வைத்துவிட்ட
மகாராசன் வரட்டும்...
மரத்துப்போன கால்களோடு
புலம்பிய ஏணிக்கும் 
வடிகுழாய் நீர் சிதறல் 
ரசிக்கவில்லை...
"என்ன விளையாட்டு,:;;;;
எரிச்சல்பட்டது...
கள்ளச்சிரிப்போடு
நகர்ந்தது
கருமேகம் !

வெள்ளி, அக்டோபர் 28, 2011

கண்ணாமூச்சி

சொற்களை
அழைத்துக் கொண்டிருந்தது
கவிதை...
மரவட்டையாக 
நீளும் குச்சியறிந்து
சுருண்டு சுருண்டு 
திரும்பிக் கொண்டிருக்கின்றன 
சொற்கள்..

காற்றில் 
அலைந்து திரிந்து 
சொற்களைத் துரத்தியது 
கவிதை..
பொறியை அறிந்த
எலிக்குஞ்சுகளாகி
கீச் கீச்சென
ஓடி ஒளிந்தன சொற்கள்..

தோல்வியை அந்த ஒலி
எதிரொலிப்பதாக 
துயரப்பட்டது கவிதை..

குழலூதும் பிடாரனாகி
சொற்களைத்
தன பின்னே தொடரச் 
செய்வதான 
சுகமான கற்பனையில் 
தூங்கிப்போனது கவிதை...

தொந்தரவின்றி 
சொற்கள் 
அலைந்து ...திரிந்து...
மிதந்து...பரவி... 
   
மழையின் அனல்மூச்சு...

விழும் துளிகளை
வணங்கி வணங்கி
வரவேற்க
மண்  புன்னகைத்தது ...
கோபாலன் குடையின்
மேலிருந்து
வழிந்து சொட்டிய
துளிகளை
உள்ளங்கையில் ஏந்திடக்
கிளை விரித்துக் காத்திருந்தன
நெடிய மரங்கள்...
செம்புலமில்லாது
விரியும் பிளாஸ்டிக்
தாண்டமுடியாது
தகிக்கும்
மழையின் அனல்மூச்சு  

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

கணவர்களின் காலத்தில்  ...


முப்பது வருடம் முன் வாங்கிய 
தேன்கூடு தோடும
கிளிப்பச்சை சிவப்பு பார்டர்
புடவையும்
கமலாவுடையது
பாகப்பிரிவினை டிசைனை
அழித்துச் செய்த
பூத்தோடும்
ஆராதனா நெக்லசும் 
அரக்குப்புடவையும் 
சரோஜாவுடையது 
கல்தோடும்
தாம்புக்கயிறு செயினும் 
சின்னம்மாவுடையது ...
சீமாட்டிகளாகத்தான்
சிரிக்கிறார்கள்
எல்லோருடைய
கல்யாண புகைப்படங்களிலும்
புதிய பட்டும் பவுனும்
இல்லா
கவலையின்றி
  
உரையாடலின் பின்னே 


பேசுகிறாய் ...
பேசத்தெரியும்
என நிரூபிக்க...
படித்திருக்கிறாய்
பார்த்திருக்கிறாய்
கேட்டிருக்கிறாய்
யோசிக்கிறாய்
கண்டுபிடிக்கிறாய்
நுண் உணர்வு
முன்யோசனை
புத்திசாலித்தனம்
பெருமை
சாமர்த்தியம் ...
சகலமும் உணர்த்த
நீ பேசிக்கொண்டேயிருக்கிறாய்


என்னைச்சுற்றி 
இறைந்து கிடக்கும் 
வார்த்தைச் சில்லுகள் 
(சமயத்தில் என்முகமும்
காட்டுகின்றன)
கிழிக்காமல் 
கடந்து போவதெப்படி.. 
யாருக்காக?


பொம்மை,விலங்குகள்
குழந்தைகளுக்கான 
ஓவியங்கள் ..

பூக்கள் 
பதின்வயதுக்குரியவை 

கோடுகள்,வட்டங்கள் 
கட்டங்கள் 
வளர்ந்தவர்களுக்காக...

உற்றுப்பார்த்தும் 
ஒன்றும் புரியா 
குழப்பத்தீற்றல்கள் 
அறிவுஜீவிகளின் 
கவனத்திற்காம்

எதற்கும்
புன்னகையோடு
 பார்த்துவைக்கலாம் ..
சென்னைப் பூ 

அடுக்ககத்தின் 
தொட்டிரோஜா 
மல்லி ,சாமந்தி 
மட்டுமே தெரியுமென்றாள்
அமலா..
பவழமல்லி,செண்பகம் ,
மகிழம்பூ  காட்ட 
பாண்டிபஜார் கிளம்பினாள்
அம்மா.
குறுஞ்செய்தி பார்த்து 
கேட்ட மகளுக்கு 
தனது  இடைநகரில்
எங்கு காட்டுவதென 
தெரியாத் திகைப்பு 
சித்திக்கு ...     

வெள்ளி, அக்டோபர் 14, 2011

யாருக்காக....

வினோத வகைகளோடு
பார்த்துப் பார்த்து 
பதார்த்தப்பட்டியல் 

எதிரொலிக்கும் அரங்கிலும் 
இசைநிகழ்ச்சி கட்டாயம்
குதிரையோ ,யானையோ
ஊர்வலத்துக்கு அவசியம்!
வண்ண விளக்கு
வாணவேடிக்கை 
பன்னீர் யந்திரம் 
பந்தல் புதுமை
பந்தியில் புதுமை
எங்கு பார்த்ததையும்
ஒன்று சேர்ந்தொரு
கனவுத் திட்டத்தில்
கல்யாணம்!

செலவுக்காரன்
கலக்கத்தில்...
வரவுக்காரன்
கணக்கில்..
வந்தவர்
கடமையில்....
வெட்டு ஒன்று !


எப்போதுமே
இடையில்
ஒற்றை இழைக்கோடுதான்
ஆம்-இல்லை  
வேண்டும்-வேண்டாம் 
முடியும்-முடியாது 
நடக்கும்-நடக்காது....


ஆனால் 
கச்சிதமாக வரைய 
கை கூடுவது 
சிலருக்குத்தான்..
நேர் கோடிழுக்க 
நீளாக்கரமுடையார் 
தலை
தஞ்சாவூர் பொம்மை.....

புதன், அக்டோபர் 12, 2011

தப்புத்தாளங்கள் 

வெளியில் நீண்ட 
வேரா ?
அடியைத் தேடும் 
விழுதா?

அடையாளம் 
அறியமுடியாமல் 
படர்ந்திருக்கிறது 
வெறுப்பின் நீட்சி...

முளை விடும்
முன்னரே
கருகிவிடுவதோ
களைஎனக்
கருதிவிடுவதோ
விருப்பின்
தலையெழுத்து...



வறுமைக்கோடு

எப்போதுமே 
உங்களுடையது
ஏட்டுச் சுரைக்காய்தான் ...


ஆனால் ...
அதில்
படமாவது இருந்திருக்கலாம்


முனை முறிந்த
பென்சிலால்
வரைந்தீர்களோ?


ஆனால்...
அதன்
தடமாவது பதிந்திருக்கலாம்


சுருட்டிய தாளுக்குள்
காணவேயில்லையே...

வறுமைக்கோடு


உழைக்கத் தெரியாதவனும்
பிழைக்கத் தெரியாதவனும்
கரைக்கும் அப்பால்
கடக்க முடியாத வெள்ளத்தை
கண்டு கொண்டிருப்பதாக

தொலை நோக்கியால்
உற்றுப்  பார்த்தவர்
உரைத்தார்...

அது
கட்டிய கரையல்ல ...
தேசத் துகிலில்
ஒட்டிய அழுக்கென்று
தொலைநோக்கி
பாவம்...
காட்டவில்லை!

வெள்ளி, அக்டோபர் 07, 2011

இடைவெளி 


புலால் மறுக்க 
புரட்டாசி தேடும் 
உனக்கு 
ஆச்சர்யம்தான்...

தச்சுக் கோளாறோ
பூச்சுக் கோளாறோ
நாற்காலிக்கும்
தரைக்கும் -நடுவே 
நொடிக்கும் இடைவெளியில் 
ஈ ,எறும்பு 
ஏதும் நசுங்காதிருக்க
பிரார்த்தித்தபடியே
அமரும்
அவனைப்பார்த்து ...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...