ஞாயிறு, டிசம்பர் 30, 2012

அறிவாய் செறிவாய்..


நீலமென்றோ...
மஞ்சளென்றோ ...
சிவப்பு என்றோ..
அறுதியிட முடியா
வண்ணக்குழம்பின் கரையில்
நின்று
இவளுக்கு நிறம் தேறத் தெரியுமோ...?
தொக்கிய கேள்வியும்
மக்கிய மனதுமாய்ப்
பார்த்திருக்கிறேன் ...
லாவகமாய்த்
தூரிகை பிடிக்கிறாய்..
வாழி மகளே !

சனி, டிசம்பர் 29, 2012

நடத்தை பழகிடு மகனே





எனக்குப் பிறவாத
என் இனிய பொன்மகளே..!
எனக்குத்தெரியும்
நீ இதையும் தாண்டி
வருவாய்....வருவாய்..!
புதைகுழியில் உன்னை
மூடியிருந்த
மண்ணைக் குழைத்துத்தான்
மேடு சமைத்தாய்...
"அங்கேயே கிடக்காதே "
என உன்னை உலுக்கியதும்
உடன் மண் குழைத்ததும்
ஆணின் கரங்களும் தானே ..
நம்பிக்கையிருக்கிறது..
நீ
நடைபழகி முடிக்கும்போது
மன அழுக்கிலா மகன்கள்
உன்னுடன்
நடை பயில்வார்கள்!



செவ்வாய், டிசம்பர் 25, 2012

தவிப்பின் குரல்

பேசு..பேசாதே..
உன் கண்ணும்  மறைத்திருக்கலாம் ..         
பொட்டு வை..வைக்காதே..
சிறிது,பெரிது,...நீளம்..குட்டை..
உன் மேலாடை ,ஆபரணம்..
பழசு புதுசு..,
மாறு..,மாறாதே..,
சிரி.. பல் தெரியவேண்டாம்...
இருள் தவிர்..
ஒளியும் தவிர்..,

எதையும் சொல்லுங்கள் கேட்கிறேன்..
எந்த வயதில்,இடத்தில்,
நலம் அழிக்க வாய்ப்பிலாத
பத்திரம் தருவீர்..?

சனி, டிசம்பர் 22, 2012

அபி உலகம் -11




வாசல் வேம்பு
வந்த கதை கேட்டாள் அபி
'காக்கா ,ஒரு வேப்பம்பழம்
சாப்டுச்சாம் ...
ம் ...
அந்த வெதைய  நம்ம வீட்டு
வாசல்ல போட்டுச்சாம் ..                                     
ம்ம்
அதுதான் வளர்ந்து மரமாச்சாம்..."
கையிலிருந்த ஆப்பிளோடு
காகத்துக்காகக் காத்திருக்கிறாள் அபி.
**********************
நூடுல்ஸ் காய்ப்பது
செடியிலா,மரத்திலா..
சாக்லேட்  காயா,பழமா...
காக்காய் பாட்டியிடம் திருடும்
வடை கீழே விழுந்தால்
வடை மரம் முளைக்குமா ?
அபியின் கேள்விகளோடு
விழித்திருக்கும் தாத்தாவுக்கு
கொஞ்சம் கைகொடுங்களேன் ....

புதன், டிசம்பர் 19, 2012

தடங்கல(ள )ற்ற பாதை

உன் வழிதான்
என் வழி
என் வழிதான்                                                           
அவன் வழி -அவள் வழி
அவள் ..அவன்..அவள்..
அவர்கள்..இவர்கள்...

யார் பாதம் புல் பூண்டு
மிதித்ததோ ..?
தடம் பிறந்தது என்றோ..?
அறியோம் பராபரமே ..
அடி பிரதட்சிண பாதயாத்ரையில்தான்
என்,உன்,அவன்,அவள்
வாழ்வு நடக்கிறது..


சேறோ ..,நீரோ,
அறியேன்...
ஒடிந்த முள்..,பறக்கப் பார்க்கும்
ஒற்றை இதழ்
எதையும் தலைதூக்க விடாது
பாதங்கள் சுற்றிக்கொண்டேயிருக்கின்றன
என்..,உன்..,அவன்..அவள்..,
இவன்,இவள் ..பாதங்கள்

செவ்வாய், டிசம்பர் 18, 2012

சற்றே ..



பழுத்த இலைபோல்
படர்ந்து கிடக்கும்
ஆயாசத்தின் பின்
தேனுண்ட களைப்பா...
தேடிய பிழைப்பா....


ஞாயிறு, டிசம்பர் 09, 2012

வெள்ளி, டிசம்பர் 07, 2012

"ஆம்பிள சட்டை "



                                   
பிரிய   நடிகை 
காதலன் பிரிவை 
அவன் சட்டை நிரப்புவதாக 
பட்டன் திருகி நின்ற படம் 
அன்று -வினோதம்.
நாகரிகப் பெண்களின் 
தேநீர்ச் சட்டை வாசகங்கள் 
நாவலில் ,
கவர்ச்சிக்கோ,கேலிக்கோ.....

மடித்துவிட்ட

முழுக்கைச் சட்டையோடு வந்து 

பேசினால் -அவள் 

புரட்சிப்பெண் என்பது நம்பிக்கை!
.
பள்ளி நாடகத்தில் 

ஆண்வேட வாய்ப்பை 

அண்ணன் தம்பி உள்ளவளுக்கே 

தருவார் ருக்மிணி டீச்சர்..

எங்கள் வீடு போல், 

பாத்திரம் வாங்க உதவாத 

மாமாவின் கதர்ச் சட்டைகள் 

அத்தைக்குப் பிடித்ததேயில்லை.

யோசனைகளோடு ,

பழைய சட்டைகள் மடிக்கிறேன்-

சேலையின்மேல் அணிந்து 

கல் சுமக்கப்போகும் செல்விக்காகவும்,

நெல் உலர்த்தும் சந்திராவுக்காகவும் .

ஞாயிறு, நவம்பர் 25, 2012

நாளையும் வரக்கூடிய பரிசுப்பொதி



ஒரு காலையைப்
பரிசாக அனுப்பியிருந்தார்கள்...                      
வெளிச்சத் தாள் பளபளப்பில் 
பொதியைப் பிரித்தேன் ,...
தெர்மகோலில் செய்த புன்னகை...
சின்னக் கண்ணாடிப் பேழையில் 
நம்பிக்கை..,
உதிரி சாக்லேட்டுகளாய்
சந்தோஷங்கள்..,
பரிசு நியதியை மீறாமல் 
என் நேரம் ஏந்திய கடிகாரம்..,
பானம் தயாரிக்க நினைவூட்டிய 
அரை டஜன் கோப்பைகள்..,
இடம் நிறைத்த 
உதிரித்தாள் உரையாடல்கள்..,
இந்தக் களேபரத்தில் 
நல்லவேளையாய் உடையவில்லை 
கனவுப் பூ பொம்மையின் 
இதழ்கள்...
எல்லாவற்றுக்கும் பக்கமாய்த்தான் 
கிடக்கிறது 
இறுக முடிந்திருந்து 
நான் கத்தரித்த இருள் நாடா...!  

செவ்வாய், அக்டோபர் 30, 2012

"பஞ்சம் பிழைக்க..."

21 10 12கல்கி இதழில் வெளியானது 



முதுகிலேறி,
எல்லைக்காவல் செய்த 
மண்குதிரைகள் ரெண்டும் 

 
தண்டவாளம் தாண்டி                                  
வண்ணமிழந்து சாய்ந்து கிடக்க ,
அவ்வழி வந்த 
விரைவுரெயிலில் தொற்றி,
கட்டிட மேஸ்திரியாகப்
போயிருக்கலாம் 
நொண்டிக்கருப்பு.. ...
வண்ணக்கொடிகளுடன் 
எல்லைக்கல் கட்டி நிற்கும் 
புதிய நகரில் 
கருவைக்காடும்,கருப்பு கோயிலும் 
தேடிக்கொண்டிருக்கிறான் 
அப்பனின் வேண்டுதலுக்காய்  
புதிய குதிரை 
நேர்ந்துவிட வந்தவன்.

வியாழன், அக்டோபர் 18, 2012

நான்... நான்... நான் ....

  

சின்ன அத்தை போல்  
செவிமடல் ..
வம்சமே ஏறிய  நெற்றிமேடு ..
பிசிறடிக்கும்  பல்வரிசை ,
தலைசாய்த்த உரையாடல் 
ரெண்டுமே தாத்தாவழி ...
வரிக்கு வரி "ம் "போடுவது 
ஆச்சியின் வழக்கம் ..
பெயரின் பின்வால் 
தலைமுறைச் சிந்தனைகளை 
வெட்டி ஒட்டியது !
ஆகிருதி கூட்டும் ஆடைகள் 
அவ்வப்போதைய நடைமுறைப்படி ...

"நான் "

என்னிலிருந்து பிரிவதுமில்லை 
என்னில் உறைவதுமில்லை...                              

வியாழன், அக்டோபர் 11, 2012

அபி உலகம் -10

சாலை தாண்டி ஓடித் திரும்பும் 
அபியைத் திட்டுவதா ,
பத்திரமாக மீண்டதற்கான 
பெருமூச்சோடு 
அணைத்துக் கொள்வதா 
எனத் திகைத்திருக்கும் 
அம்மாவை 
மேலும் குழப்புகிறாள் 
அந்தக் காலிமனையில் 
கொத்தித் தின்ன ஏதுமற்று 
ஏமாந்து திரும்பும் 
காக்கைகளிடம் 
காட்பரிஸ் பகிர்ந்து 
திரும்பும் அபி...

செவ்வாய், அக்டோபர் 09, 2012

ரெட்டை வரி நோட்டு




இருளின் முற்றுப்புள்ளி 
வெளிச்சத்தின் 
தொடக்கப் புள்ளியாய் 
இருந்திருக்கலாம் .
ஆனால்..
இருளின் நீள அகலத்துக்குள் 
இடுங்கிப்போன 
வெளிச்சத்தின் முற்றுப்புள்ளியும் 
அதுவானதால் ,
காற் புள்ளிகளோடு  கதைத்தபடி 
இருளின் வரி நீண்டு கொண்டே .....
 உங்களால் 
அதனிடம் ,முற்றுப்புள்ளியை 
நினைவூட்டமுடியுமா ?

செவ்வாய், அக்டோபர் 02, 2012

ஒரு குடம் தண்ணி ஊத்தி....

கீற்று இணையத்தில் இன்று 

                                                                  

கவிழ்ந்த தென்னங்கீற்றாய் 
விரிந்த பஞ்சுத்தலை கோதி
கால் நீட்டிக் கிடக்கும் 
கிழவியைப் 
போகவரப் பார்த்திருக்கிறேன்...
ஒருவேளை 
இவள் அறியக் கூடுமென ,
ஒருநாள் கேட்டேன் 
புதிய வீட்டின் 
வாசலோரப் பூஞ்செடிகள் 
எத்தனைகுடம் 
நீரூற்றியும் 
ஒரு பூ கூட பூக்காததன் 
மர்மத்தை..!
தளும்பத் தளும்ப 
நீர் நிறைந்திருந்த 
குளத்துக்கு
குடங்கள் போதாதென 
வன்மமாய்ச் சிரித்தாள்...
மனநிலை பிறழ்ந்தவளோ
என நழுவியபோது 
பின்னால் சொல்லிக்கொண்டிருந்தாள்
வீடுகளாகிவிட்ட 
குளக்கரையில்,வெகுகாலமாய் 
கூட்டிய செங்கல்லினுள் சிற்றகலாகக் 
காவலிருந்த 
பேச்சி 
தான்தானென்று...!

MY SONG.... MY STORY..-1


மீள்பகிர்வு 
                                                     

தேநீர்க்கடையின் 
பண்பலைப்பாடலையோ,
தேநீரையோ-சிலாகித்தபடி 
நீங்கள் கூடியிருக்கையில் 
மௌனமாகச் சில்லறை தந்து 
விலகிப்போகும் 
அவனும் ஒரு பாடலாசிரியன் என 
உங்களுக்குத் தெரியாது ..
அவன் தெரிவிப்பதுமில்லை...
மிகுந்த பிரயாசையோடு 
அவன் எழுதிய வரிகளை 
கருவிகள் விழுங்கியதை -
அவன் பொறுத்துக் கொண்டான் 
வெற்றிக்குப்பின்னான 
ஒரு நேர்முகத்தில் 
தான் தாண்டியதான சவால்களில் 
சொல்லிக்கொள்ளலாம் என்று...!
எவர் பெயரும் போடாது
 ஏதோ ஒரு படத்தின் பின்னொட்டாய் 
வந்த பாடலை 
நூறாய் அழுத்தும் கள்ளத்தகடுகளும் 
ஏந்தவில்லை...
அவன் எழுதிய அந்த ஒற்றைப்பாடலை 
பெயர் சொல்லாமல் யாரேனும் 
முணுமுணுத்தால் கூடப் போதும்.
யாரோ போல் இவனே கேட்டும் 
இருப்பில் இல்லாததாய் 
வானொலிகளும் மறுத்துவிட்ட 
அவன் பாடலை நீங்கள் 
அறிவீர்களா?

ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

காலமாகிய சாட்சி



அது அன்று பூத்திருந்தது ...                                 
சம்பவம் நிகழ்ந்தபோது,
அதிர்ச்சியில் குலுங்கிப் 
பனித்துளி உதிர்ந்தது,
அழுததுபோல் கூட 
இருந்திருக்கலாம்...!
ஆனாலும்...
வாகனம் சறுக்கித் தடுப்போரம் 
விழுந்த 
சரவணக்குமாரின்
உயிர் பிரிந்த நொடியில் 
என்ன கூவினான் 
என்பதை-அந்த 
நெடுஞ்சாலையோர அரளியால் 
சொல்ல முடியவில்லை...
ஒருவேளை 
அந்தச் செவ்வரளி நிறம் 
அவனுக்குப் பிடிக்குமானால் 
அல்லிவட்டத்தில் 
அவன் ஆவி தஞ்சமடைந்திருக்கலாம் !
ஆனாலும்...
அது நேற்றாகிவிட்டதால் 
எதையும் சொல்லாமல் 
அந்த அரளி சாம்பிக்கிடக்கிறது.

சனி, செப்டம்பர் 29, 2012

விலங்கியலார் கவனத்திற்கு

மீள் பகிர்வு 

சிறகிருப்பதாக                                               
சொல்லியிருந்தார்கள்
அதனால்
தான் பறவையாய்இருக்கலாம்
என நினைத்தது .
ஒருநாள்
இறகுகளால் கோர்த்த
சிறகைக்காணோம்
கல்லாய் இறுகிய
பாறை இருந்தது ....
சமயத்தில்
பறக்க முடிகிறதே என
பரிசோதித்தபோது
சக்கைகள் சேர்ந்த
தக்கை தெரிந்தது ....
வளர்ச்சியா?
மாற்றமா?
வளர்சிதைமாற்றமா?

வெள்ளி, செப்டம்பர் 28, 2012

இடிந்த வாசல்


புதன், டிசம்பர் 14, 2011

மீள் பகிர்வு 


காலம்கடந்து நிற்கும்                                         
ஆசையில்
1972
என கட்டிய ஆண்டு
பொறித்துக்கட்டிய
முன்வீடு உடைத்து
காரை பெயரும் நடுவீட்டுக்குள்
கிடப்பவளின்
உறக்கம் ,கனவு,இளமை,குடும்பம்
யாவற்றின் மேலும்
ஓடிக்கொண்டிருந்தன
விரிவான சாலையின் வாகனங்கள்...
புல்டோசர் புதைத்த
அவள் வாழ்க்கையில்
புல் முளைக்காததை
உறுதிப்படுத்திப் போகிறது
தாழப் பறக்கும் விமானம்..

வியாழன், செப்டம்பர் 27, 2012

தங்க வேட்டை !



   
மீள் பகிர்வு 



நெற்றிச்சுட்டி
...........................                                     
தோடு ..ஜிமிக்கி ...
மாட்டல் ....,
சங்கிலி ,நெக்லஸ் ...
...........................
.........................
..........................
வளையல் ..மோதிரம் ,
..........................
.........................
.........................
விளம்பரத்தாளை
வைத்துவிட்டு
எழுந்த  தமிழரசி 
காது .மூக்கின் 
வேப்பங்குச்சி மாற்றினாள்ll   lllllllllllllllllllllll
குறிப்பு!
கோடிட்ட இடங்கள்
அவளுக்குப்பெயர்
தெரியா நகைகள் ....

புதன், செப்டம்பர் 26, 2012

MY SONG...MY STORY...2





அவன் பாடிய 
அந்த இரு பாடல்களையும்,
உரக்கப்பாடிடவும்,
முடிந்தால்-ஆடவும் 
தீராத ஆவல் கனன்றபடி அவன்....
ஒரு குத்துப்பாடலும்,ஒரு கானாபாடலும் 
பாடிப் பிரபலமடையாதிருந்த 
அவனை 
நீங்களும் அறிவீர்கள் ..
பிரமாதமான பக்திப் பாடகனாக ...
எந்த மேடையிலும் ,
தன விருப்பமாகவோ,
நேயர் விருப்பமாகவோ 
தன பாடலிரண்டையும்
பாடவே முடியாது போன 
அவன் 
குளியலறைக்குள் முயன்றபோது 
அதுவும் 
பக்திப்பாடலாகவே தொனிக்கிறது ... 

செவ்வாய், செப்டம்பர் 18, 2012

வழியும் நிழல்கள்


ஒட்ட நறுக்கியபோது 

சட்டமிட்டிருக்கலாம்...

ஓரப்பிசிறுகள்

வழிய வழிய ...

முக்கோணம்..

நீள்சதுரம்...

செவ்வகம்...கோளம்... 

விரிந்து,வளர்ந்து,வளைந்து .....

கொண்டேயிருக்கிறது 
.........................
நிழல்!

நறுக்கிய நிழல் 
உற்சாகம் கொப்பளிக்க உயர்ந்து 
தலைக்குமேல் 
சிரிக்கும்போது,
சிறுநடுக்கம்....

தள்ளிவிட்டும் சிரிக்குமோ...?

செவ்வாய், செப்டம்பர் 11, 2012

வலி பற்றிய கதைகள்...

10 9 12  உயிரோசை இணைய வார இதழில் வெளியானது


வலியின் திரவம் 
வழிந்தோடியது...

காய்ந்த கோடுகளின் 
அடையாளம் 
வரி வரியாய்ப் படிந்திட 
வலியின் கதைகளைப் பேசியபடி 
பொழுதுகள் விடிகின்றன...
முடிகின்றன..

நேற்றைய வலியோ ,இன்றையதோ...
சென்ற வருடத்தையதோ..
உன்னுடையதோ,என்னுடையதோ...
சொல்லிக்கொள்ள,
வியக்க,ஒப்பிட...
வலிகள் ஏராளமாய்!

வலி பிழிந்த நொடிக்குத் 
தொடர்பிலாது 
தக்கைச் சொற்களாய் மிதக்கின்றன 
வலி பற்றிய கதைகள்  -

ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

MY SONG..MY STORY...1



தேநீர்க்கடையின் 
பண்பலைப்பாடலையோ,
தேநீரையோ-சிலாகித்தபடி 
நீங்கள் கூடியிருக்கையில் 
மௌனமாகச் சில்லறை தந்து 
விலகிப்போகும் 
அவனும் ஒரு பாடலாசிரியன் என 
உங்களுக்குத் தெரியாது ..
அவன் தெரிவிப்பதுமில்லை...
மிகுந்த பிரயாசையோடு 
அவன் எழுதிய வரிகளை 
கருவிகள் விழுங்கியதை -
அவன் பொறுத்துக் கொண்டான் 
வெற்றிக்குப்பின்னான 
ஒரு நேர்முகத்தில் 
தான் தாண்டியதான சவால்களில் 
சொல்லிக்கொள்ளலாம் என்று...!
எவர் பெயரும் போடாது
 ஏதோ ஒரு படத்தின் பின்னொட்டாய் 
வந்த பாடலை 
நூறாய் அழுத்தும் கள்ளத்தகடுகளும் 
ஏந்தவில்லை...
அவன் எழுதிய அந்த ஒற்றைப்பாடலை 
பெயர் சொல்லாமல் யாரேனும் 
முணுமுணுத்தால் கூடப் போதும்.
யாரோ போல் இவனே கேட்டும் 
இருப்பில் இல்லாததாய் 
வானொலிகளும் மறுத்துவிட்ட 
அவன் பாடலை நீங்கள் 
அறிவீர்களா?

வியாழன், செப்டம்பர் 06, 2012

புல்லின் விசும்பு


 பாறையின் கீழ் 
வேர் விட்டு,
சூரிய சுவாசத்துக்குத் 
தவித்து 
தவித்து ...
த......வி....த்து... 
இதழ் நீட்டுகிறது புல்....
பேரழுத்தங்களையும் 
பிளப்பாய் என்ற 
உன் 
விசுவாசிப்பில் திறந்தது 
புல்லின் விசும்பு...!

வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

உலரும் மை


காணாமற் போனவன் குறித்து 
புகார் தருகையில்                                                     
கேட்டார்கள் ....
அவன் என்ன ஆடை உடுத்தியிருந்தான்?
அது நீலததின் சாயலா?
பச்சையின் சாயலா?
கோடு-நீலததில் பச்சையா?
பச்சையில் நீலமா?
அதை அணிந்து 
அவர் பார்த்தார்-
மாற்றிப் போனானோ...?
அவன் காணாமற் போனது...
அப்போதா?-எப்போதோவா?

சுழலும் கேள்விகளின் 
விடை மனதிற் படியாமல் 
திறந்த பேனாவோடு 
அமர்ந்திருக்கும் தந்தைக்கு 
நீங்கள் உதவ முடியுமா?
அந்தப் பேனாவின் 
மை 
உலர்ந்து கொண்டிருக்கிறது.

சனி, ஆகஸ்ட் 25, 2012

வாழ்வின் தருணங்களை எழுப்புதல்



ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு 
வர்த்தக வளாகம் 
எது வேண்டுமானாலும் 
எழுப்புங்கள்...
தனிமனைகளாகக் கூடப் 
பிரிக்கலாம்.
நோக்கம்போல் செய்யுங்கள்....
சுவரொட்டி ,ஒலிபெருக்கிப் பாடல்கள்,
தட்டிப்படங்கள்,துண்டு விளம்பரங்கள்                   
கோலாகலத் தோரணங்களை 
விலக்கி நுழைவதும்,
கட்டி இறங்குவதுமான உற்சாக முகங்கள்...
வியர்வை ,கசங்கல்,காத்திருப்பு,
தள்ளுமுள்ளு தாண்டி...
கண்ணீரும் புன்னகையும் 
கைத்தட்டலும் சீழ்க்கையுமாய் 
யார் யார் வாழ்வையோ 
அங்கீகரித்த பொழுதுகள் 
அந்த கிழிந்த திரைக்கு 
கீழும் ,
உடைந்த இருக்கைகளின் ஊடேயும் 
உறைந்து கிடக்கின்றன ....
அவற்றை தக்க முறையில் 
அடக்கம் செய்துவிட்டு 
மூடிக்கிடக்கும் 
பழைய திரையரங்கை 
நோக்கம் போல் மாற்றிக்கொள்ளுங்கள் ...
தினமும் காட்சி தொடங்குமுன் 
ஒலித்த 
பழைய பாடலின் எதிரொலி 
தொடர்நதால்
பயப்பட  வேண்டாம் 
மணி அடித்ததும் நின்றுவிடும் 

திங்கள், ஆகஸ்ட் 20, 2012

உன்னோடு போனது துக்கம்



எந்த வீட்டிலும்
பிலாக்கணம் பாடவும் 
எந்தச் சாவிலும் மாரடிக்கவும் 
முன்னே முன்னே போகும் 
அலமேலு ஆத்தா
வாய் கோணிச் செத்தாள்... 
சாராயக் காசு வாங்க 
ஆளில்லாக் கவலையில் 
மகனும்,
சிறுவாட்டு இருப்பு சொல்லாது 
பொசுக்கென்று போன கவலையில் 
மருமகளும்...
வாசல் பெருமாளைப் பட்டினி 
போட வேண்டாமென 
அழுகையை ஒத்தி வைத்தது 
தெரு சனம்..


சனி, ஆகஸ்ட் 18, 2012

எழுதப்படாத நாட்குறிப்பேட்டின் பக்கங்கள்



 வெற்றுவரிகளுக்குள் 
வலி, துரோகம், காமம், 
காதல்,இழப்பு,
சுவாரஸ்யம்,பிரார்த்தனை 
சகலத்துக்குமான 
எழுத்துக்கள் -மனமொழியில்...
நீ கோடுகளாகப் பார்க்கும் 
பக்கங்களுக்கிடையேதான் 
ஆண்டின் மகாநதி 
சலசலத்தபடி ஓடுகிறது 
இதோ பார்...
என் கையின் ஈரம்... -- 

வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012

போதனை


கனவுகள் 
இறைந்து கிடக்கும் 
பால்யத்தின் வீதி...
நம்பிக்கையின் 
பொம்மையாக 
நடக்கும் புத்தன்கள்
போதிக்கிறார்கள் 
நம் பால்யத்தின் 
பெருமதிப்பை  

ஞாயிறு, ஜூலை 29, 2012

கனவு நிறுத்தம்


   
ரோஸ்நிற சக்கரங்களும்,
மஞ்சள்,பச்சைநிற இருக்கைகளும்,
கைப்பிடியில் தொங்கும் 
சிவப்புக் குஞ்சலமுமாக 
புல்வெளிகளில் அலையவும் 
மைதானத்தில் வட்டமிடவும் 
முதுகு வளைத்து 
சாலையில் போட்டியிட்டு 
விரையவுமான 
கற்பனையிலிருந்து -அப்பு 
வெளிவந்தபோது 
சைக்கிள் பொம்மை விற்ற 
சிக்னலிலிருந்து
வெகுதூரம் வந்திருந்தது 
பேருந்து.
சிக்னல் பொம்மைகள்
கடையில் விற்பதில்லை 
கிடைக்கும் 
கடைகளுக்கு 
அம்மா போவதில்லை.              

சனி, ஜூலை 21, 2012

ஆடுகளம்


    
தொடக்கத்தில் 
பரத புஷ்பாஞ்சலி ,
பின் 
சற்றே கதகளி
கொஞ்சம் மோகினியாட்டம் 
அதன்பிறகுதான்...
அற்புதம்.
பறந்து பறந்து 
பாலே ....
தாவியும் ,மிதந்தும் 
அலைந்துவிட்டு ,
இப்போது 
கம்பியைப் பற்றி உந்தி 
முகம் பதித்துத் 
தொங்கிச் சிரிக்கும் 
சிறுவனாகி விட்டது 
யாரோ கட்டி,
அறுந்து ,
மிச்சமிருந்த கட்சித் தோரணம்.

வியாழன், ஜூலை 12, 2012

அப்பு,நீ என்னவாகப் போறே....


யாருமே விஞ்ஞானம் படிக்கலியாம்
அதனால்,
அப்பு விஞ்ஞானியாகட்டும்
என்கிறாள் அம்மா.
"ஊர்ப்பிள்ளைங்க எல்லாம் 
கம்ப்யூட்டர் படிச்சு 
கைநிறைய வாங்கையில 
நம்ப பிள்ள கொறஞ்சு போகலாமா....?"
பாட்டியின் கேள்வி.
"கோடிகள் சேர்க்க 
என்னாலாகாது .....
மெரிட்ல கிடைச்சா 
டாக்டராகட்டும்"-அப்பா...
அவ்வப்போது வந்துபோகும் 
அத்தையும் ,மாமாவும் கூடச் 
சொல்கிறார்கள் -
கப்பலோ விமானமோ 
ஓட்டப்படி"-என்று...
அப்பு விரும்புவது 
சூப்பர்மேன் அல்லது பேட்மேன் வேலை...
பாடிக்கொண்டே திரியும் 
எதிர்ச்சாரி 
டீக்கடைச் சிறுவன் ஆக
விரும்புவதை 
அப்பு யாரிடமும் சொல்வதில்லை...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...