திங்கள், ஏப்ரல் 30, 2012

ரோஜா ரோஜாவல்ல....

ஏப்ரல் 30 திண்ணை இணைய இதழில் 



சந்தேகமும் எரிச்சலுமாய்ப்                         
  
பார்க்கிறான் பூச்செடி விற்பவன்…
மஞ்சள்,வெள்ளை,
சிவப்பு,மரூன்,ஆரஞ்சு ..
இன்னும் பெயர் சொல்லவியலா 
நிறச்சாயல்களில்
எதையும் தேர்ந்தெடுக்காது 
எதையோ தேடும் 
என்னை அவனுக்குப்
 பிடிக்கவில்லை…
“மூணுநாள் கூட வாடாது,…”
“கையகலம் பூ….”
அவன் அறிமுக இணைப்புகளைக்
கவனியாது ,
“நா கேட்டது ….லைட் ரோசுப்பா …
இவ்ளோ பெருசா பூக்காது…
மெல்லிசா…சட்டுன்னு உதிரும்…
அந்த வாசனையே இதுல இல்ல்லியே….”
வாரந்தோறும் 
நான் தரும் மறுப்புகளில் 
என் நினைவில் படிந்த
ரோஜாவைத் தேடிக்கொண்டே இருக்கிறான் 
அவன்……

சனி, ஏப்ரல் 28, 2012

அது இதுவல்ல

ஏப்ரல் 27 வல்லமையில்வெளியானது




அது இதுவல்ல
கடிகாரம் எனச் 
சொல்லலாம்தான் !
ஆனால்…
உன்-இடது கையிலிருந்து 
அவிழ்த்தோ ,
என்ன செய்வதெனத் 
தெரியாமல் அடுக்கியுள்ள 
எண்ணற்ற அன்பளிப்பு 
சுவர்க்கடிகாரம்
உறைகளைப் பிரித்தோ
தந்து விடலாம் என 
நிம்மதி அடையாதே !
என் பதட்டம் வேறானது. 
அதில்தான் வைத்திருந்தேன் 
புதிய சமையல் குறிப்பு 
முயன்று பார்க்க,
மகனுக்கான வரைபடம் 
வரைந்து முடிக்க,
நாங்கள் நட்ட 
தென்னம்பிள்ளை பற்றி 
தோழியிடம் விசாரிக்க,
தலையணை அருகே 
அலைபேசியோடு
சுருண்டிருக்கும் அம்மாவின் 
நலம் கேட்க,
எல்லாவற்றுக்குமான 
என் மணித்துளிகளையும்…!
என்ன பெயரிட்டு யாரிடம்,
எவ்விடம் கேட்பதெனத்
தெரியவில்லை.
கடிகாரம் என்று மட்டும் சொல்லி விடாதே.

புதன், ஏப்ரல் 25, 2012

திரியும் பால்


ஏப்ரல் 23  உயிரோசையில் வெளியானது

முகம்..
        உடல்...
முகம்...
       உடல்...
தாவியலையும் விழிகளோடு
வழிதவறிய ஆடுகளை
அனுப்பியவாறு
உன் பார்வை...

தேடும்
சங்கடமணிந்து தொடர்கிறது
என்பார்வை...

சாவியாய்
இறைந்து கிடக்கின்றன
உரையாடலில்
நீ
மற்றும்
நான்
உதிர்த்த சொற்கள்...
                                           

உடை மாற்றும் கனா

ஏப்ரல் 23  வல்லமை இணைய இதழில் வெளியானது


உப்புக் கரிந்த
உதடுகளோடு
வியர்வையின்
வீச்சம் தாளாது
வேண்டுகிறார்கள்
வெள்ளுடைத் தேவதைகள்…..
சிலுவைகளை விடக் கனமான
சிறகுகளையும்
நடமாடத் தோதிலாது
தடுக்கும் ஆடைகளையும்
புறக்கணித்து
எளிதான புதிய
அவதாரம் எடுக்க வேண்டுமாம்.
யாராவது
கனவு காணுங்கள்…
ஓவியம் கற்றவராயிருந்தால்
கூடுதல் மகிழ்ச்சி!

தூறலுக்குள் இடி இறக்காதீர்

ஏப்ரல்  22 திண்ணையில் வெளியானது

-எடுக்கப்படாமல்
ஒலித்து நிற்கும்
 
தொலைபேசிமணி…
 
ஏகப்பட்ட
 
கேள்விக்கிளை விரிக்கிறது…
 
அச்சம்,எரிச்சல்,
 
ஆவல்….
 
ஏதோ மீதூர ,
 
மீண்டும்,மீண்டும்…முயலவேண்டாம்!
 
அந்த முனையில் ,
 
உக்கிரமான வாதம்
ஓடிக்கொண்டிருக்கலாம் !
 
உருக்கமான பிரார்த்தனை
பக்கத்தில் நடக்கலாம்..
 
கடன்காரனோ,
 
அதிகாரியோ,
திணறடித்துக் கொண்டிருக்கலாம்…
 
மரணச் சடங்கோ,
விபத்தோ,கூட்டமோ,
தவிர்க்கவியலா தவிர்ப்பாயிருக்கலாம்!
 
தவறவிட்ட உறக்கம்
நேரங்காலமின்றி
வாய்த்திருக்கலாம்.-

கனவின் சிறகுகள்



ஏப்ரல்22 கீற்று இணையத்தில் வெளியானது
நிலவின் கீற்றும் 
குளத்தின் சுவாசமும் 
மரங்களின் மௌனமும் 
புதர்களின் சிலிர்ப்பும் 

அவள் 
பின்னிய கரங்களின் 
விடுவிப்புக்காகவோ, 
சிறகுகளின் 
வீழ்ச்சிக்காகவோ...
காத்திருக்கின்றன.
ஒவ்வொன்றாக 
அல்ல ஒட்டுமொத்தமாக 
அகற்றப்படுகையில் 
அவள் 
வெள்ளுடை நனையாது 
சற்றே தூக்கி 
நீரின்மேல் 
நடந்து ...வனம் சேர்வாள்.

சனி, ஏப்ரல் 21, 2012

ஒளியின் வீடுகள்

வெளிச்சத்தைவிட
விளக்குகள்
மதிப்பாகிவிடுகின்றன
வெளிச்சம்
விளக்குவழிதான்                                                                    
வரமுடியும் என்றானபோது....
****************************
விளக்குகளை
உருவாக்குகிறவர்கள்
வெளிச்சத்தை
உருவாக்கிட முடிவதில்லை..
****************************
நேற்றிருந்த வெளிச்சம்
விளக்கினுள்
திரும்பாவிடினும்
புதிய வெளிச்சத்தைக்
கூட்டிவரும்
தோழமையுடன்
இருளை வரவேற்கின்றன
விளக்குகள்.
***************************
பழைய விளக்கு
புதிய வெளிச்சம்.

வியாழன், ஏப்ரல் 19, 2012

மன்னிக்கவும்..வர இயலாது

ஏப்ரல்13  அதீதம் இதழில் வெளியான கவிதை

மஞ்சள் மலர்
கொட்டும்
பாதையைத்
தாண்ட வேண்டியிருக்கிறது…
****************************
என் பாதணி ஒரு தடை ….
வெற்றுப் பாதங்களோ
அழுக்கும் வெடிப்புமாய் …
மெத்தென்று சிறிதாய்
 மாற்ற வழியுண்டா
தெரியவில்லை..
கட்டைவிரல் நுனி
ஊன்றித் தாண்ட
சிறு தொலைவுமில்லை…
****************************
உதிர்ந்து
காற்றில் அலைந்து
என்முகம் மோதித்
தாண்டும் சருகு ,
ஆடைதொட்டு விலகி
உதிரும்
செம்பழுப்பு இலை
இரண்டும்
பரிகசித்துப் போனாலும்
பரவாயில்லை…

திங்கள், ஏப்ரல் 16, 2012

கடன் வாங்கிக் கழித்தல்

 
நேற்றைய நடுக்கத்திடம் 
இன்றைய தினத்தைக் 
கடன் வாங்கியிருந்தேன் !
முந்தாநாளைய வெறுப்பிடம்
இரவல் வாங்கியதுதான் 
நேற்றாக இருந்தது!
இன்றைய எரிச்சலிடம்
நாளையைத் தரச் 
சொல்லியிருக்கிறேன்....

அச்சத்திடமும்,அவமானத்திடமும்,
இரங்கலிடமும் 
ஏதுமிலாவிடினும் 
புழுக்கத்திடமாவது 
கேட்டுப் பெற்றவைதான் 
போன வாரத்தின் 
போன மாதத்தின் 
போன வருடத்தின் 
நாட்கள் கூட....

நிறைவு நாளாவது
நிறைவிடம் 
பகிர்ந்து கொள்ள 
வாய்க்குமோ ....
தெரியவில்லை.

ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

மேக உலா



உன்னில் குடியேறி 
உலகெலாம் நோக்கவேண்டும்...
பஞ்சுப்பொதியாய் 
அலையவேண்டும்...
தினம் 
பார்ப்பது நீதானா,
வேறு வேறு 
நீயா -என 
வடகோடி நட்சத்திரத்திடம் 
வினவ வேண்டும்....
நிலாமலரின் 
மணம் சற்று நுகரவேண்டும்.......
பிரபஞ்சக் குளிர்  குறைக்க 
சூரியச் சுள்ளி 
கொளுத்திக் காய்ந்தபடி 
புவியை 
அச்சுப்பிழை திருத்தவேண்டும்.....
நில் மேகமே.....
.
யாரங்கே 
நூலேணி கொண்டுவா .........

சனி, ஏப்ரல் 07, 2012

யுகாந்திரமாய்த் தவறும் உறக்கம்

  ஏப்ரல் மாத செம்மலரில் வெளியானது
 
குழாயடிப் பாத்திரங்கள் 
விட்டுப்போன பால்கணக்கு 
ஊறும் அரிசி உளுந்து ........
தீர்ந்துபோன வெங்காயம் ,
காலையில் வீசிப்போன 
ஒரு வசைச்சொல் ........
ஒவ்வொன்றாக 
நுழைந்து 
குழுப்படத்திற்கு 
இடம்பிடிப்பதுபோல் 
நெருக்கியடிக்கின்றன 
என்
மேல் இமைக்கும்
கீழ் இமைக்கும் -நடுவே 
கருவிழிக்கு சற்று மேலே...
                                              

வியாழன், ஏப்ரல் 05, 2012

பதின்பருவம் உறைந்த இடம்



2 4 12 திண்ணையில் வெளியான கவிதை

இயலுமானால்                                                                             
சுவர் அலமாரியின் 
இரண்டாம் தட்டை 
இடிக்காமல் விடுங்கள் ...
 
உடைந்த மரப்பாச்சி,
கறுத்த தாயக்கட்டைகள்,
தொலைந்த சோழிக்கு மாற்றான 
புளியங்கொட்டைகள்,
ஆத்தாவின் சுருக்குப்பை,
ஜோடியோ திருகோ
தொலைந்த காதணிகள்,
அறுந்த  பிளாஸ்டிக் மாலை 
கோர்க்கும் நரம்பு ,
கல்யாணமாகிப்போய்விட்ட 
நிர்மலா தந்துசென்ற 
கமல் படம் ....
எதுவுமே காணாவிடினும் 
காண்பதுபோல் 
கண்டுகொள்ளமுடியும் 
இரண்டாம் தட்டு இருக்குமானால்...
                                                        

போக்கிடம்

8 4 12 கல்கியில் வெளியான கவிதை                                             
 
 
 
 
 மணல்
செங்கல்...மனைவிலை,
ஆட்கூலி...வேலைநிறுத்தம் 
எந்தக் கவலையுமின்றி ,
மொட்டைமாடி 
நீர்த்தொட்டியின் 
பின்புறக்கூட்டிலிருந்து
எட்டிப் பார்க்கிறது 
பெயர்தெரியாக்குருவி. 
**********************************
கைப்பை,கடன் அட்டை,
கள்ள நோட்டு,சில்லறை 
எந்தக்கவலையுமின்றி
தனியாளாய்ப் புறப்பட்டு 
தந்திவடத்தில் அமர்ந்து 
சிறகு தூக்கி 
அலகை நுழைக்கிறது காகம்
இருப்பை எடுக்கிறதோ,
அழுக்கு கோதுகிறதோ... 
***********************************
மச்சுப்படி,மாங்கிளை ,
கட்டைச்சுவர் 
ஏறி,தாவி.குதிக்கும்
அணிலுக்குத் தொண்டனாகி 
ஓடிப்போய்விட்டது மனசு-
நாற்காலியில் புதைந்திருக்கும் 
என்னைக்கைவிட்டு !
கவலைகளைக் கைமாற்ற 
இடமறியாது திகைப்பதைப் 
பார்த்து -சிரிக்கிறது 
ஒற்றைச் செம்பருத்தி.
                            

புதன், ஏப்ரல் 04, 2012

நிராகரிக்கப்பட்ட வானவில்




9 4 12 உயிரோசையில் வெளியானது

 


என் கையில்
ஒரு 
காலிப் பையோடுதான்
வந்திறங்கினேன்...
எனக்கென்று 
வழங்கப்படக் கூடிய 
வானவில்லை 
மடித்து வைக்குமளவு 
வசதியான பைதான் அது....
எனக்கான 
வானவில் கிட்டாததால்
 இட்டு வைத்திருக்கிறேன்
 பழைய காகிதம்,பால்கவர்,
உடைந்த பிளாஸ்டிக்,பாட்டில் மூடி,
இத்யாதிகளை...!
இவை 
எடைக்கு எடுக்கப்படும் 
வாய்ப்பாவது உண்டு !
எனவே நான்
வானவில் வழங்கப்படும் 
திசைவிலகியும் 
நடந்திருக்கக் கூடும் ...!

ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

அபி உலகம் -9


நீண்ட கால் முயல்,

சிலிர்க்கும்

பிடறியோடு மான்,
யானை இளைத்து
முழு மஞ்சளில்...
"இப்படியா வரைவாங்க.."
அம்மாவுக்கு அபியின்
பதில் ,
"வரைவாங்ங்களே".....!
கடவுள் ஆதியில்
வரைந்தபோது
யார் சரிபார்த்தது...?
*****************************
தேவதை வேடமாம்
அபிக்கு நாடகத்தில் !
அட்டை சிறகுகளை
அகற்றிவிட்டாலே
போதுமே...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...