ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

காலமாகிய சாட்சி



அது அன்று பூத்திருந்தது ...                                 
சம்பவம் நிகழ்ந்தபோது,
அதிர்ச்சியில் குலுங்கிப் 
பனித்துளி உதிர்ந்தது,
அழுததுபோல் கூட 
இருந்திருக்கலாம்...!
ஆனாலும்...
வாகனம் சறுக்கித் தடுப்போரம் 
விழுந்த 
சரவணக்குமாரின்
உயிர் பிரிந்த நொடியில் 
என்ன கூவினான் 
என்பதை-அந்த 
நெடுஞ்சாலையோர அரளியால் 
சொல்ல முடியவில்லை...
ஒருவேளை 
அந்தச் செவ்வரளி நிறம் 
அவனுக்குப் பிடிக்குமானால் 
அல்லிவட்டத்தில் 
அவன் ஆவி தஞ்சமடைந்திருக்கலாம் !
ஆனாலும்...
அது நேற்றாகிவிட்டதால் 
எதையும் சொல்லாமல் 
அந்த அரளி சாம்பிக்கிடக்கிறது.

சனி, செப்டம்பர் 29, 2012

விலங்கியலார் கவனத்திற்கு

மீள் பகிர்வு 

சிறகிருப்பதாக                                               
சொல்லியிருந்தார்கள்
அதனால்
தான் பறவையாய்இருக்கலாம்
என நினைத்தது .
ஒருநாள்
இறகுகளால் கோர்த்த
சிறகைக்காணோம்
கல்லாய் இறுகிய
பாறை இருந்தது ....
சமயத்தில்
பறக்க முடிகிறதே என
பரிசோதித்தபோது
சக்கைகள் சேர்ந்த
தக்கை தெரிந்தது ....
வளர்ச்சியா?
மாற்றமா?
வளர்சிதைமாற்றமா?

வெள்ளி, செப்டம்பர் 28, 2012

இடிந்த வாசல்


புதன், டிசம்பர் 14, 2011

மீள் பகிர்வு 


காலம்கடந்து நிற்கும்                                         
ஆசையில்
1972
என கட்டிய ஆண்டு
பொறித்துக்கட்டிய
முன்வீடு உடைத்து
காரை பெயரும் நடுவீட்டுக்குள்
கிடப்பவளின்
உறக்கம் ,கனவு,இளமை,குடும்பம்
யாவற்றின் மேலும்
ஓடிக்கொண்டிருந்தன
விரிவான சாலையின் வாகனங்கள்...
புல்டோசர் புதைத்த
அவள் வாழ்க்கையில்
புல் முளைக்காததை
உறுதிப்படுத்திப் போகிறது
தாழப் பறக்கும் விமானம்..

வியாழன், செப்டம்பர் 27, 2012

தங்க வேட்டை !



   
மீள் பகிர்வு 



நெற்றிச்சுட்டி
...........................                                     
தோடு ..ஜிமிக்கி ...
மாட்டல் ....,
சங்கிலி ,நெக்லஸ் ...
...........................
.........................
..........................
வளையல் ..மோதிரம் ,
..........................
.........................
.........................
விளம்பரத்தாளை
வைத்துவிட்டு
எழுந்த  தமிழரசி 
காது .மூக்கின் 
வேப்பங்குச்சி மாற்றினாள்ll   lllllllllllllllllllllll
குறிப்பு!
கோடிட்ட இடங்கள்
அவளுக்குப்பெயர்
தெரியா நகைகள் ....

புதன், செப்டம்பர் 26, 2012

MY SONG...MY STORY...2





அவன் பாடிய 
அந்த இரு பாடல்களையும்,
உரக்கப்பாடிடவும்,
முடிந்தால்-ஆடவும் 
தீராத ஆவல் கனன்றபடி அவன்....
ஒரு குத்துப்பாடலும்,ஒரு கானாபாடலும் 
பாடிப் பிரபலமடையாதிருந்த 
அவனை 
நீங்களும் அறிவீர்கள் ..
பிரமாதமான பக்திப் பாடகனாக ...
எந்த மேடையிலும் ,
தன விருப்பமாகவோ,
நேயர் விருப்பமாகவோ 
தன பாடலிரண்டையும்
பாடவே முடியாது போன 
அவன் 
குளியலறைக்குள் முயன்றபோது 
அதுவும் 
பக்திப்பாடலாகவே தொனிக்கிறது ... 

செவ்வாய், செப்டம்பர் 18, 2012

வழியும் நிழல்கள்


ஒட்ட நறுக்கியபோது 

சட்டமிட்டிருக்கலாம்...

ஓரப்பிசிறுகள்

வழிய வழிய ...

முக்கோணம்..

நீள்சதுரம்...

செவ்வகம்...கோளம்... 

விரிந்து,வளர்ந்து,வளைந்து .....

கொண்டேயிருக்கிறது 
.........................
நிழல்!

நறுக்கிய நிழல் 
உற்சாகம் கொப்பளிக்க உயர்ந்து 
தலைக்குமேல் 
சிரிக்கும்போது,
சிறுநடுக்கம்....

தள்ளிவிட்டும் சிரிக்குமோ...?

செவ்வாய், செப்டம்பர் 11, 2012

வலி பற்றிய கதைகள்...

10 9 12  உயிரோசை இணைய வார இதழில் வெளியானது


வலியின் திரவம் 
வழிந்தோடியது...

காய்ந்த கோடுகளின் 
அடையாளம் 
வரி வரியாய்ப் படிந்திட 
வலியின் கதைகளைப் பேசியபடி 
பொழுதுகள் விடிகின்றன...
முடிகின்றன..

நேற்றைய வலியோ ,இன்றையதோ...
சென்ற வருடத்தையதோ..
உன்னுடையதோ,என்னுடையதோ...
சொல்லிக்கொள்ள,
வியக்க,ஒப்பிட...
வலிகள் ஏராளமாய்!

வலி பிழிந்த நொடிக்குத் 
தொடர்பிலாது 
தக்கைச் சொற்களாய் மிதக்கின்றன 
வலி பற்றிய கதைகள்  -

ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

MY SONG..MY STORY...1



தேநீர்க்கடையின் 
பண்பலைப்பாடலையோ,
தேநீரையோ-சிலாகித்தபடி 
நீங்கள் கூடியிருக்கையில் 
மௌனமாகச் சில்லறை தந்து 
விலகிப்போகும் 
அவனும் ஒரு பாடலாசிரியன் என 
உங்களுக்குத் தெரியாது ..
அவன் தெரிவிப்பதுமில்லை...
மிகுந்த பிரயாசையோடு 
அவன் எழுதிய வரிகளை 
கருவிகள் விழுங்கியதை -
அவன் பொறுத்துக் கொண்டான் 
வெற்றிக்குப்பின்னான 
ஒரு நேர்முகத்தில் 
தான் தாண்டியதான சவால்களில் 
சொல்லிக்கொள்ளலாம் என்று...!
எவர் பெயரும் போடாது
 ஏதோ ஒரு படத்தின் பின்னொட்டாய் 
வந்த பாடலை 
நூறாய் அழுத்தும் கள்ளத்தகடுகளும் 
ஏந்தவில்லை...
அவன் எழுதிய அந்த ஒற்றைப்பாடலை 
பெயர் சொல்லாமல் யாரேனும் 
முணுமுணுத்தால் கூடப் போதும்.
யாரோ போல் இவனே கேட்டும் 
இருப்பில் இல்லாததாய் 
வானொலிகளும் மறுத்துவிட்ட 
அவன் பாடலை நீங்கள் 
அறிவீர்களா?

வியாழன், செப்டம்பர் 06, 2012

புல்லின் விசும்பு


 பாறையின் கீழ் 
வேர் விட்டு,
சூரிய சுவாசத்துக்குத் 
தவித்து 
தவித்து ...
த......வி....த்து... 
இதழ் நீட்டுகிறது புல்....
பேரழுத்தங்களையும் 
பிளப்பாய் என்ற 
உன் 
விசுவாசிப்பில் திறந்தது 
புல்லின் விசும்பு...!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...