அது அன்று பூத்திருந்தது ...
சம்பவம் நிகழ்ந்தபோது,
அதிர்ச்சியில் குலுங்கிப்
பனித்துளி உதிர்ந்தது,
அழுததுபோல் கூட
இருந்திருக்கலாம்...!
ஆனாலும்...
வாகனம் சறுக்கித் தடுப்போரம்
விழுந்த
சரவணக்குமாரின்
உயிர் பிரிந்த நொடியில்
என்ன கூவினான்
என்பதை-அந்த
நெடுஞ்சாலையோர அரளியால்
சொல்ல முடியவில்லை...
ஒருவேளை
அந்தச் செவ்வரளி நிறம்
அவனுக்குப் பிடிக்குமானால்
அல்லிவட்டத்தில்
அவன் ஆவி தஞ்சமடைந்திருக்கலாம் !
ஆனாலும்...
அது நேற்றாகிவிட்டதால்
எதையும் சொல்லாமல்
அந்த அரளி சாம்பிக்கிடக்கிறது.