திங்கள், ஆகஸ்ட் 05, 2013

சில சமயங்களும் சில கடமைகளும்

தாளின்
நிறமும் வனப்பும் நீ தேர்ந்தாயோ


ஒற்றைமலரின்மேலிருக்கும்
பட்டாம்பூச்சி முடிச்சு
யார் கற்பனை...
கத்தரித்துக் குப்பைக்கூடையில்
போடுவதான அல்ப ஆயுளை
சற்றே நீட்டித்தாலென்ன...
பொதியோடு அலமாரியில் வைத்த
பரிசைப் பிரிக்காமலேயே
கொடுத்தவனின் இறுதி அஞ்சலிக்குப்
போன கொடுமை வேறு அச்சுறுத்துகிறது...
நாட்காட்டி,நேரங்காட்டி,
கண்ணாடிக்குள்
அழகெழுத்துக்களில் பூத்தூவி
தத்துவங்காட்டி.....
சச்சதுரத்துக்குள் வேறென்ன ...

பிரிக்காது கைமாற்றவோ
எடுத்தெறியவோ கத்தரிக்கவோ
யோசிக்கின்ற
என்போலன்றி
பரிசை
விலைமதிப்பு சொல்லிக்
கட்ட உத்தரவிட்டபடி
பணப்பையோ கடன் அட்டையோ
துழாவியிருக்கலாம் நீ...

துளி அன்பு அக்கறைக் கீறல்
பரிவின்சுவடு ஏதுமின்றி
நீ வாங்கிய கணத்தின் வெறுமை
காணமுடிந்தால்

நிம்மதியாக யாருக்கும் கொடுத்து
விடுதலை பெறலாம்

1 கருத்து:

கீதமஞ்சரி சொன்னது…

\\பரிசைப் பிரிக்காமலேயே
கொடுத்தவனின் இறுதி அஞ்சலிக்குப்
போன கொடுமை வேறு அச்சுறுத்துகிறது...\\

சற்றே அசட்டையோடு ஆரம்பமாகி, அடுத்த சிலவரிகளில் துணுக்குறச்செய்கிறது கவிதை. நிம்மதியாக யாருக்கும் கொடுத்து விடுதலை பெறவியலாதபடி வாழ்நாள் சுமையாக வாழ்ந்தவனின் நினைவாக... அலமாரியை அலங்கரித்திருக்கும் சின்னப்பொதிக்குதான் எவ்வளவு கனம். மனத்தை சுண்டியிழுத்து தன்னிடத்தே தக்கவைக்கும் கவிவரிகளுக்குப் பாராட்டுகள் சக்தி.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...