வெள்ளி, டிசம்பர் 19, 2014

உமா மோகன் கவிதைகள்-அதீதம்

1 கேளாமனம்

ஆசைதான்
எல்லோருக்காகவும் பிரார்த்திக்க
கைஎன்னவோ
வழிநடையில் சுவர் தாண்டி
நீட்டிக்கொண்டிருக்கும் செம்பருத்தியை
வீட்டு மாடத்தில் பூசிக்கப்
பறிக்கிறது

2 விலங்கு 

ஒரு கேவல்
எழும்பி
வெடித்தால்தான்
என்ன

3 படைப்பாளி

கவிதை எழுதி நீண்ட காலமானது
ஆரஞ்சு நிறத்தில் காரட்
சிறுவேர்சூழ் சிவப்புமுள்ளங்கி
ஓடடைந்த புளி
உருண்டு உதிரும் நெல்லி
மணக்கும் பசிய மல்லி

கழுவி ஆய்ந்து அடுக்கி ..
இதன் ஒரு கீற்றையும்
படைக்க இயலா வெறுமையுடன்
இன்றும் ஏடு மூடவேண்டியதுதான்
***

டிசம்பர் இரண்டாம் இதழ் 2014


புதன், டிசம்பர் 10, 2014

அன்புடை நெஞ்சம்...


எனக்கு கம்பீரம் 
உனக்கு திமிர் 
எனக்கு எரிச்சல் 
உனக்கு ஈர்ப்பு 
எனக்கு அதிசயம் 
உனக்கு அனாவசியம் 
கான்க்ரீட்டில் பொழியும் நீர் போல் 
வழிந்தே போகிறோம் 
கழுவிக் கழுவி ஊற்றும் வாழ்க்கைக்கு 
இது போதும் 
என்ன...
நீர் எப்போதும் நீயல்ல 
நான் எப்போதும் தரையல்ல 

பங்கு




கப்பக்கார வூடு என்ற பெயரை 

நிலை நிறுத்த  அரசுமாமா 
கப்பல் செதுக்கிய  வீடு கட்டினார்
அதற்கு எதிர்வீடாகிய அந்தஸ்தே 
போதுமாக இருந்தது எங்களுக்கு 
குண்டான்களில் சொட்டிய மழைநீரும் 
ஒற்றைத் தாழ்வாரம் முழுக்க 
புழுக்கைபோடும் ஆடுகளும் 
எப்போதும் புகைவிசிறும் அடுப்படியும் 
கொடிகளில் தழைந்து தொங்கும் 
பழந்துணிகளும்வெடித்த தரையும் 
இருந்தபோதும் 
முறைவைத்து அழைக்க முடிந்தது.
அரசுமாமாவை .
க்ளாஸ்கோ ரொட்டியை
எங்களுக்கும் பங்குவைக்க
மறந்ததே இல்லை  மீனா அத்தை 

சகலமும் உள்ளடக்கிய 
புதிய நகரியத்தில் 
அங்கிள் ஆண்டிகளின் கால்புன்னகை 
கண்டே வளரும் பிள்ளைகள்
அதிலும் கால் புன்னகையே வீசுகிறார்கள் 
அரசுமாமா 
க்ளாஸ்கோ ரொட்டி 
கப்பக்கார வீட்டின் எதிர்வீடு 
எதைச் சொன்னாலும் .....

செவ்வாய், டிசம்பர் 09, 2014

முகம் தேடுகிறேன்



கதுப்புகளில் சதை பற்றாத காலத்தின்
கறுப்புவெள்ளைப்படம் 
தேர்வின் அச்சம் வழியும் 
ஹால் டிக்கெட் படம் தொடங்கி 
சுற்றுலாக் கணங்கள்  
திருமணக்கோலம் 
நட்பு,உறவு எவ்வளவோ படங்கள் 
வயதுகளின், தருணங்களின் 
சாட்சியாய் ..
யார்யார் வீட்டிலோ ,
விருந்திலும் விழாவிலும் 
சேர்ந்துநில்லு...சேர்ந்துநில்லு...
முன்னே வாங்க இப்பிடி ..
உபசரிப்பும் தர்மசங்கட நெளிவும் 
எப்படிப் பதிவாகின 
 காணக் கூடுவதில்லை  பிறகு 

கண்ணாரக் காண்


உண்மையைச் சொல் 
உண்மையைச் சொல் 
என்கிறாய் 
உண்மையைத்தான் சொல்கிறேன் 
வேலியோரத் தும்பைப்பூவையும் 
அகன்ற திரையில் 
உருப்பெருக்கிப் பார்த்தே 
அறிந்துகொள்ளும் உன்னிடம் 
எப்படி விளக்குவேன் 
உண்மை இதுதான் 
இவ்வளவுதான் என்று......


10 12 14 விகடன் சொல்வனத்தில் வெளியான கவிதை 
படம் -நன்றி ராமலக்ஷ்மி ராஜன் 

திங்கள், டிசம்பர் 01, 2014

தெரியாதிருந்தது



ஒரு பார்வை,ஒரு தொடுகை,
ஒரு புன்னகை,
ஒரு தலையசைப்பு ,
ஒரு "ம் 
எதையாவது உதிர்த்து 
ஒரு சுடரை ஏற்றமுடியும் 
என்று தெரியாமலே இருந்தது...
தெரிந்திருந்தால் 
பொருட்படுத்தியதன் அடையாளமாக 
ஒரு வசவையேனும் ..எறிந்திருக்கலாம் 

வெள்ளி, நவம்பர் 21, 2014

செவிபடாது மிதந்தலையும் கானம்




வரி சொல்வாய் 
கருவி சொல்வாய் 
எத்தனையாவது நொடியில் எந்தக் கருவி முடிந்து 
எது தொடங்கும் 
கூட எது இழையும் என்பதும் அறிவாய் 
குரல் எப்போது குழையும் 
எங்கே நிமிரும் 
முத்திரை விழுந்திருப்பது எங்கே 
சாயல் வேறெங்கு உண்டு எல்லாம் 
பிரித்துக் கலைத்து 
ஆறிய தேநீரோடு பாடலை அருந்திய 
நாட்களின் சாட்சியான 
தோப்புமில்லை

கடைக்கார வைத்தியும் காலமானார் 

ஒலிநாடாக்கள் சுழலவும் வழியில்லாது 
மரப்பெட்டியின் ஓரத்தில் 
தூசியோடு துயில 
பதிவகங்கள் தேவையிலா உலகில் 
தரவிறக்கும் தனியாளாக 
நீயும் நுட்பம் கற்றிருக்கலாம் 

ஏதோ ஒரு  வானொலியோ ,தொலைக்காட்சியோ 
வழங்கும் பாடலுக்குள் புகவியலாது 
மணல் மிதிக்கும் என் பாதங்களைப்போல் 
நீயும் உணர்வாயோ 

19 11 14 விகடன் சொல்வனம் பகுதியில் இடம்பெற்ற கவிதை 

சனி, நவம்பர் 08, 2014

எனக்குத் தெரிந்தவன்



ஊர்ப்பக்கம் போனா
பொவொண்டோ வாங்கிவாஎன்பான் 

பன்னீர் சோடா மறக்காம குடி 
மாயவரம் தாண்டுமுன் என்பான் 

டிகிரி காபிக் கடைகள்தோறும் 
குடித்துப்பார்த்து  
அசல் நகல் சொல்லிடுவான் 

பச்சைத்தேநீர்,பால்கலந்தது ,இஞ்சி மிளகு 
எதெது எவ்வெப்போது 
பட்டியல் உண்டு அவனிடம் 
பழச்சாறு கடைக்காரனிடம் 
நீரும் சர்க்கரையும்
அருகில் நின்று கலந்தால்தான் 
திருப்தி அவனுக்கு 

என் வீட்டின் காபி பில்டர் 
அவன் தந்த பரிசுதான் 
டிகாக்ஷன் பக்குவமும் சொல்லித் தந்தான் 

மதுக்கூடமொன்றிலிருந்து
தள்ளாடி வெளியே விழுந்த 
அந்த நாளில் 
அவனை நான் பார்த்திருக்க வேண்டாம் -
அவன் குழந்தையோடு 

வியாழன், நவம்பர் 06, 2014

கமலஹாசனின் ரசிகைகள்




ஒல்லிக்குச்சி கமல்
அவள் ஒரு தொடர்கதையில்
எச்சில் விழுங்கிப் பாடுகையில் ரசித்தவள் 
மெச்சி அக்கா...
சப்புன்னு அறைஞ்ச கோபாலக்ருஷ்ணன்
கீதாவின் பிரியன்
நினைத்தாலே இனிக்கும் மைக்
சிம்லா ஸ்பெஷல் மைக்
சேர்ந்து பாட முடியா வருத்தம் பூரணிக்கு
வில்லனாக்கி விட்டதில்
பாரதிராஜா மேல் கொலைவெறி
சிகப்பு ரோஜா பார்த்த கிரேசிக்கு
சான்சே இல்ல -இந்த வார்த்தை
அப்போது புழக்கத்தில் வந்திருந்தால்
ராஜபார்வைக்குப்பின் தேவி
இதைத்தான் சொல்லித் திரிந்திருப்பாள்
சரோஜினியின் கணவன் குள்ளமாக இருந்ததில்
பிரச்னை ஏதும் தெரியவில்லை
அப்புவுக்குப்பின்
குருவின் காலத்தில்
தொங்குமீசை விரும்பிய
சச்சு அக்கா புரிந்துகொண்டாள்
சுருண்ட மீசைக்காரன் பின்னால்
விமலா சுற்றியதை -
அது தேவர் மகன் விளைவு என்று....
கனவுகளைப் பங்கிட
யார் யாரோ வந்தபோதும்
"கமலாசனின் "ரசிகைகள்
இருந்துகொண்டே இருந்தார்கள்
படங்களை வெட்டி ஒட்டியபடி...
பாடல்களை முணுமுணுத்தபடி...
சண்டை போடும்,சங்கடப்படும் ,
சங்கடப்படுத்தும்
கமல் ஹாசன்களையும் ரசித்தபடி....

ஞாயிறு, நவம்பர் 02, 2014

சக உதிரிகள் அல்லது சாமான்யர்கள்




இழவு வீட்டிலும் 
பிணமாகக் கிடக்க வரம் கேட்கும் 
"முன்னிலை"யாசகர்களின் உலகில் 
அவன் நுழைந்ததேயில்லை.....

கிடைத்தது தின்று 
கிடைத்ததில் வாழ்ந்து 
கிடைத்த வழியில் சாவான் 
விருப்பத் தேர்விலாமல் ...
.
இடிந்து குலையும் கட்டிடம் 
கவிழும் இரயில் 
வெடிக்கும் குண்டு 
எங்கும் ஒப்புக் கொடுத்தபடி 
உதிர்கிறான் ...

உதிரி மனிதன் ஒருவனை 
குப்பைக் குள்ளிருந்து 
மீட்டெடுக்கும் மஞ்சள் தொப்பிக்காரன் 
காமெராக் கண்கள் தின்ன 
அவனை அனுப்பியவாறே 
தானும் உதிரி சாம்ராஜ்யப் பிரஜையே 
எனச் சொல்லாமல் 
நகர்கிறான் 
இன்னொரு காலோ கையோ 


தேடியபடி... 

சனி, அக்டோபர் 25, 2014

இல்லாமல் இருப்பதுவும் இருப்பு



என் பெயர் எனக்கானது என்றிருந்தேன்
பெயரின் சுருக்கம்,குறுக்கம்
எதுவும் பெருமையோடு ஏற்றிருந்தேன்
பெருமைகள் பெயருடையதா
என்னுடையதா
பிரித்தே அறியவில்லை
பிறிதொருநாள் என் பெயர் சொல்லி
எவரோ அழைத்தது
எவரையோ
என்றறிந்தபோது
அது எனதானது மட்டுமில்லை
என்றானபோது
நான் என்று உங்களிடம்
எதை அறிமுகம் செய்வது
நான் என் பெயரிலும் இருக்கலாம்
 இல்லாமலும் இருக்கலாம் 

ஞாயிறு, செப்டம்பர் 14, 2014

வாய்ப்பினால் ஆனது





அச்சத்தின் துளிகளால்
எனது பெருங்கடல்
தளும்பிக்கொண்டிருக்கிறது.
எப்போதும் வறண்டுபோகும்
வாய்ப்புடன் அமுதம்
ஒரு குட்டையில் ..
அமுதம்
பருகக்கூடிய வாய்ப்பை
அலையாடிக் கொண்டிருக்கும்
கட்டுமரத்தின் திரைச் சீலையில்
முடிந்திருக்கும் சாவி கிட்டியவுடன்
திறப்பேன் என்கிறான்
அங்கே தூண்டிலோடு
திரியும் கிழவன்.
எனக்கோ அவன் தனது
ஓட்டைக் குவளையில்
நிரப்பியது போக மீதமிருப்பது
அமுதக்குட்டையின் கானல் நீரே
என்றஎண்ணம்.
கட்டுமரம் அசைந்துகொண்டிருக்கிறது
அசைவின்றித் தூண்டிலோடு
குந்தியிருக்கிறான் கிழவன்
 
 
2014 ஆகஸ்ட்  11 திண்ணை இணைய இதழில் 

சார்த்திய கதவு



இருகரமும் விரித்து நடந்தேன்
எல்லோரையும் தழுவிக் கொள்ளவும்
ஆதுரமாய்த் தலைகோதவும்
பாராட்டி வழித்துத் திருஷ்டி கழிக்கவும்  Hand held beam balance scale
ஆறுதலாய்க் கன்னம் தட்டவும்
முதுகு தடவிப் பாரம் இறக்கவும்
தோதாக இருக்கட்டுமென
இருகரமும் விரித்துதான் நடந்தேன்…
என் கையில் தராசு வந்தது எப்போது ?
சல்லிசாய்க் கிடைக்கும் வம்புகளும்
சரமாய்த் தொடரும் அம்புகளும்
நாணயக் குறைவான நாணயங்களும்
வாசனை நோட்டுகளும்
வசதியான எடைக்கற்களும்
மாறி மாறி உட்கார்ந்திருக்கும்
இந்தத் தராசே என் கையாகிப்போன
நொடி எது…
நிறுத்தலே வாழ்க்கையா ?
வல்லமை இணைய இதழில் செப் 5 2014

வெள்ளி, ஜூலை 25, 2014

ஒன்றாக என்றால் ஒன்றாக இல்லை

டயர் உருட்டியபடியே 
வாய்ப்பாட்டைத் தப்பாய்ச்சொல்லி 
என்னிடமே குட்டு வாங்கிய 
மண்ணெண்ணெய் வண்டிக்காரர் மகன் ரவி 
ஒன்பதோடு ஒதுங்கி 
மார்க்கெட் தாதா ஆகிவிட்டான்...

இறங்கும் காற்சட்டையை
இழுத்துவிட்டவாறே 
நோட்டு சுமக்கும் துரை 
லாரிஷெட்டில் அண்ணனோடு ..

பின்னலைத் திருகாமல் 
பேசத்தெரியாத வசந்தியிடம் 
சீனிசாரின் பிரம்பு விளையாடியபின் 
அவள் கல்யாணத்தில்தான் 
பார்த்தோம் 
பத்தாம்வகுப்பு பி பிரிவு சார்பில் 
குங்குமச்சிமிழ் பரிசோடு ...

சீதர் என்றே அறியப்பட்ட ஸ்ரீதர்
தப்புக்கணக்கிற்காக  
 மைதானத்தில் முட்டிகசிய 
சுற்றிய நாளிரவு 
பதினைந்து ரூபாயோடு ஓடிப்போனான்...

முன்னாள் மாணவர் சந்திப்புக்கு 
மெல்லவும் ,துப்பவும் தெரிந்து 
மிட்டாயோடு வெளியேறிய 
இருபத்து ஏழுபேர் கூடினால் 
போதுமென்கிறார் 
இப்போதைய தலைமை ஆசிரியரும்......

படம் -இணையம் 

ஞாயிறு, ஜூலை 20, 2014

பிட்சாந்தேஹி


கவனம்பதியாப் 
பாடலின் நடுவிலும் 
ஒற்றை வயலின் இழுப்பில் 
உயிர் துளிர்க்க வைப்பவன் 

பெயரறியாத் தெய்வத்திற்காக
சம்பங்கிப் பூக்களை 
நெருக்கித் தொடுத்துக் காத்திருப்பவன் 

மலிவுவிலைத் துப்பட்டாவிலும் 
கவின் சித்திரம் பதித்தவன் 

நாற்பது ரூபாய்த் துண்டுப் பாவாடை 
நாலுமுழம் அரளியிலும் 
உங்கள் வேண்டுதல்களுக்காகக் 
தேவியை 
ஆவாஹனம் செய்துவைப்பவன் 

நிமிடங்களில் கடக்க இயலாமல் 
நாசிமூடி நகரும் 
தெருமுனையில் 
நாள்முழுதும் நின்றபடி 
திடமானதொரு தேநீர் கலப்பவன்  

யாரோ வாங்கவோ,
புறக்கணிக்கவோ போகும்,
பழச்சுளைகளின் மேல் கவனமாக 
பாலிதீன் போர்த்துபவன் .....

நம்பிக்கையுடன் வாழ 
இன்னும் இருக்கிறது உலகம் 

23 7 14 ஆனந்தவிகடனில் வெளியான கவிதை 

திங்கள், ஜூலை 14, 2014

அபி உலகம்-நீண்ட இடைவெளிக்குப் பின்

வாசல் முருங்கையின்
வலுவில்லாத கிளைகளில்
கூடு கட்டியது  பறவை
வழக்கம்போல் பூ உதிர்க்கப் போன
அபியிடம்
அம்மா உச்சு கொட்டினாள்..
ஏம்மா ..
பாவம் அபி ..அந்தக் கூடு
கலைஞ்சுரும்
கலைஞ்சா என்ன
நம்ப வீடு மாதிரிதானே
அம்மா ..அது கூடு கட்டும்போது
நீ பார்த்தியா
ம்ம்...கொஞ்ச கொஞ்சமா குச்சி வெச்சு
ரெண்டு நாளாக் கட்டுச்சு அபி....
நீ மோசம்மா....
ஏண்டா....
பாத்துகிட்டே சும்மாதானே இருந்தே ...
சொல்லியிருக்கலாம்ல...
என்ன அபி  பூ உலுக்குவான்னா....
இல்லம்மா...நம்ப வீடு கட்டும்போது
அப்பாகிட்டே
சிமென்ட் பாத்து வாங்கச் சொன்னீல்ல

ஞாயிறு, ஜூலை 13, 2014

என் தோழி

ஜூலை 7 அதீதம் இணைய இதழில் 

manjal
பட்டாம்பூச்சிகள் இங்கேதான்
சுற்றுகின்றன.
மஞ்சள் கறுப்பி ,ஆயிரம் குட்டி
போட்டிருப்பாள் போல…
அவளைக் கொண்டாடி
ஒரு நூறு கவிதை எழுதியிருப்பேன்…
அவளோடு நடப்பெல்லாம்
ஒரு தோழி போல் பகிர்ந்திருப்பேன் ..
நகைச்சுவைத் துணுக்குகளை
வாசித்துக்காட்டி சிரித்ததும் உண்டு …
எனக்குப் பிடித்த பாடலை
கள்ளக் குரலில்
பாடிக்காட்டி அபிப்பிராயமும்
கேட்டிருக்கிறேன்…
அவள் வலப்பக்க பூ தாவினால்
பிடிச்சிருக்கு…
இடப்பக்கமென்றால் சரியில்லை…
எல்லாமே கழிந்த நாட்களில் நிகழ்ந்தவை….
இப்போதுகூட
மகளின் மழலையர் வகுப்பு
வண்ணப்படமே நினைவுகளைக் கிளர்த்தியது..
ஒரு வண்ணத்துப்பூச்சியின்
ஆயுள் குறித்த அறிவியல் உண்மை
சொல்லாமல்
என் மஞ்சள் கறுப்பியைத் தேடித் தருவாயா
அவளை மறந்து
அனாதையாய் விட்டதற்காக மன்னிப்புக் கேட்கவேனும்…
**

வியாழன், ஜூன் 19, 2014

ஜெயமோகனுக்கு எதிரான பெண் படைப்பாளிகளின் கண்டன அறிக்கை


வணக்கம்

எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் சிந்தனைப்போக்கையும் வரலாற்றையும் மாற்றியமைத்தார்கள். அத்தகையசக்திவாய்ந்த எழுத்தானது அடிப்படைவாதிகளது இருப்பிற்கான களமாக அமைந்துவிடும்போது, அந்தச் சமூகமே சீரழிந்துபோகும் கெடுவாய்ப்பு இருக்கிறது. அந்த இழிநிலையை நோக்கி தமிழிலக்கியம் நகர்ந்துகொண்டிருக்கிறதோ என்ற அச்சங்கலந்த ஐயம், அண்மைக்காலமாக சில இலக்கியவாதிகளது பொறுப்பற்ற பேச்சினால் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுள், ஜெயமோகன் செய்துவரும் இலக்கிய மேட்டிமைத்தனங்கள் சொல்லுந்தரமற்றவை.அதிகாரத்தரப்பை உயர்த்திப்பிடித்தல், சிறுபான்மையினரைத் தரந்தாழ்த்துதல், பிறமதங்கள்பால் சகிப்புத்தன்மையற்று இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தல், இடதுசாரி சிந்தனையாளர்கள்பால் காழ்ப்புணர்வைக் கொட்டுதல், வரலாற்றைத் தன் நிலைப்பாடுகளுக்கியைந்தபடி திரிபுபடுத்துதல் இவற்றோடு ஆணாதிக்கத்தின் தடித்தனமும் அவரது எழுத்துக்களில் புரையோடிக்கிடக்கிறது. காலாகாலமாக ஆண்களே இந்தச் சமூகத்தை வழிநடத்திச் செல்லும் மேய்ப்பர்கள் என்ற ஆண்மையவாதத்திலிருந்தபடி தொடர்ந்து பெண்களுக்கெதிரான நச்சு வார்த்தைகளை இறைத்துவருகிறார். எழுத்துரு மாற்றம் இன்னபிற விடயங்களில் தனது “மேலான” கருத்துக்களைச் சொல்லி சர்ச்சைகளின்மூலம் “மஞ்சள் ஒளி வட்ட“த்தில் இருந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிற அவரது மனச்சிக்கலைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், எழுதும்
பெண்கள்மீது அவரால் பிரயோகிக்கப்படும் கருத்து வன்முறையை இனியும் புறந்தள்ளிக் கடந்துசெல்வதற்கில்லை.

‘பெரிதினும் பெரிதினை’த் தேடுவதாகத் தன்னைக் குறித்துச் சொல்லிக்கொள்ளும் ஜெயமோகன், தமிழிலக்கிய வாசகர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஆர்.சூடாமணி இறந்தபோது எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“சூடாமணியின் கதைகளில் இலக்கியமதிப்பு மிகக்குறைவு என்றே நான் எண்ணுகிறேன். சூடாமணியை இன்றைய நிலையில் வாழும் இலக்கியகர்த்தாவாக அணுகமுடியாது. தமிழ்ச்சிறுகதை, நாவல் ஆகியவற்றின் பரிமாணத்தில் அவருக்குப் பங்கேதும் இல்லை”எனக் கூறியதன் மூலம், தமிழின் முன்னோடிகளுள் ஒருவரான சூடாமணியின் இலக்கியப் பங்களிப்பையே தடாலடியாக நிராகரித்திருக்கிறார். மேலும், அவருக்கு ‘கலைமகள் பாணி எழுத்தாளர்’என்று பெயர் சூட்டிக் குறுக்குகிறார். (பார்க்க: ஆர்.சூடாமணி, நவம்பர் 02, 2010) இங்ஙனம் எழுதுவதன்மூலமாக தமிழிலக்கியத்தின் அறிவித்துக்கொள்ளப்படாத தரநிர்ணயக் கட்டுப்பாளராக தன்னைத் தான் நியமித்துக்கொண்டிருக்கிறார். ஒரு வாசகனாக, படைப்பாளியாக அவ்விதம் சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் அதைப் பொறுத்துக்கொண்டோம்.

கேரள இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான மாதவிக்குட்டி என்கிற கமலா தாஸ் மறைந்தபோது, அவரைக் குறித்து எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரையில், (பார்க்க: அஞ்சலி: கமலா சுரையா, ஜூன் 01,2009) “இளவயதுத் தோழனின் விந்துவின் வாசனை பற்றிய வர்ணனைகள் அவரைப் புகழ்பெறச் செய்தன”என்று சற்றும் கூச்சமின்றி எழுதுகிறார். மேலும், மாதவிக்குட்டியின் மகன் மாத்ருபூமி ஆசிரியராக இருந்த காரணத்தினாலேயே அவர் மிகையாகப் புகழப்பட்டார் என்றும் எழுதுகிறார். அவர்பாலான தன்னுடைய அசூசை வெளித்தெரிந்துவிடக்கூடாதென்பதற்காக சற்றே புகழ்ந்துவிட்டு, “கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான, குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பரவெறியும் கொண்டவர் கமலா.”என்கிறார். ‘மாதவிக்குட்டி தனது தோற்றம் குறித்துக் கொண்டிருந்த தாழ்வுணர்ச்சியினால், தாளாத காம இச்சை கொண்டிருந்தார் என்பதை அவரது சுயசரிதை வழி அறியமுடிகிறது’ என்றும் கீழ்மைப்படுத்துகிறார். ஆக, படைப்பு முதற்கொண்டு பெண்களின் அனைத்துச் செயற்பாடுகளும் அவர்களதுதோற்றம் மற்றும் உடலையே அடிப்படையாகக் கொண்டவை என்பதை ஜெயமோகன் நிறுவமுற்படுகிறார். மேலதிகமாக, தமிழ்கூறும் நல்லுலகில் அறியப்பட்ட படைப்பாளியாக இருக்கக்கூடிய ஜெயமோகனின், அழகு பற்றிய வரைவிலக்கண இலட்சணமும் நமக்குத் தெரிந்துபோகிறது. இந்தப் பாரதத் திருநாட்டில் விசித்திரமான நடத்தைகளோடும் பேச்சுக்களோடும் உலவும் சில ஆண் இலக்கியவாதிகளை எவ்வுணர்ச்சி செலுத்தியது என்பதைக் குறித்து ஜெயமோகன் ஏன் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை என்பதை, அவரது உள்ளொளிதான்அவருக்கும் நமக்கும் விளக்கிச்சொல்லவேண்டும். இத்தகைய நவீன மனுக்களின் ஆசாடபூதித்தனங்கள், பக்கச்சாய்வுகள் பொதுவெளியில்
அம்பலப்படுத்தப்படவேண்டியவை.

பெண் படைப்பாளிகள்மீது இவருக்கு ஆழமான வெறுப்பு இருப்பதை அவர் எழுத்துப்பூச்சினால் என்னதான் மறைக்கமுயன்றாலும் அவரையும் மீறிக்கொண்டு அந்த வெறுப்புணர்வு வெளிப்பட்டுவிடுகிறது. “பெண்-1, பெண்களின் காதல்” (அக்டோபர் 22, 2012) என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“இன்று இளம்வாசகிகளில் கணிசமானவர்கள் நம்முடைய அசட்டுப்பெண்ணியர்களால் ஆரம்பத்திலேயே பார்வை திரிக்கப்பட்டு இலக்கியத்திற்குள் நுழையவே முடியாதவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். உண்மையான இலக்கிய அனுபவம்
என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.”

“இங்கே பெண்ணியம் பேசும் பெண் எழுத்தாளர்கள் பலரை நான் கவனித்து வருகிறேன். பொருட்படுத்தும் அளவுக்கு அடிப்படை வாசிப்புள்ள எவரையுமே நான் பார்த்ததில்லை. அவர்களிடம் ஒரு எளிய விவாதத்தை முன்னெடுக்கக்கூடத் தோன்றியதில்லை. அவர்களால் ஒரு சிறு சலசலப்புக்கு அப்பால் பொருட்படுத்தும்
இலக்கிய ஆக்கங்கள் எதையுமே உருவாக்க முடியாமல் போனமைக்குக் காரணம் இதுவே. இவர்கள் பேசும் பெண்ணியம் என்பது இலக்கியவாசகனின் எதிர்பார்ப்பு என்ற சவாலைச் சந்திக்கமுடியாமல், தங்கள் சொத்தைப் படைப்புக்களைப்
பொத்திக்கொள்ள உருவாக்கிக்கொள்ளும் ஒரு எளிய தற்காப்புமுறை மட்டுமே”

“இந்தச் சல்லிக்குரல்களை முழுக்கத் தூக்கிவீசிவிட்டு வரும் உண்மையான படைப்பூக்கமும் அதற்கான படைப்புத்திமிரும் கொண்ட பெண்ணெழுத்தாளர்களுக்காகத் தமிழ் காத்திருக்கிறது.”

எத்தனை வன்மம், காழ்ப்புணர்வு, ஒவ்வாமை இருந்தால் இப்படி எழுதமுடியும்! ஒருவருக்குள் இத்தனை மன இருட்டும் வெறுப்புணர்வும் மறைந்திருப்பது அதிர்ச்சியூட்டுவதாயிருக்கிறது.பெண்ணியம் என்ற சொல்லின் பொருள், ‘ஆண்கள்மீதான வெறுப்பு’ என்ற தவறான புரிதலையே ஜெயமோகனும்
கொண்டிருக்கிறார். அதனால்தான் அந்தச் சொல்மீது இத்தனை செருப்படி விழுகிறது. மேலும்,‘தமிழ் காத்திருக்கிறது’என்று மொழிவதன் மூலம் அவர் சொல்ல எண்ணுவது ஒன்றுதான்: இங்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண்களுள் யாருமே குறிப்பிடத்தக்க அளவில் எழுதவில்லை, அவர்கள் அடையாளமற்றவர்கள், ஆகவே, தமிழிலக்கியத்தில் பங்குதாரர்களாக உரிமை கொண்டாடும் பாத்தியதை அற்றவர்கள் என்பதையே அவர் தன் ஆணித்தரமான வாதங்கள் மூலம் மீண்டும் மீண்டும் நிறுவ முயற்சிக்கிறார். மேலும், ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அதை உண்மையென நம்பவைக்கும் உத்தியை, ‘பெண்களுக்கு ஆழமான வாசிப்பு கிடையாது’என்று சொல்வதன் மூலம் இன்றுவரை அவர் செய்துவருகிறார். எழுதுகிற பெண்களது வாசிப்பின் ஆழத்தை ஜெயமோகன் போன்ற இலக்கியப் பிதாமகர்களிடத்தில் அடிக்கடி சென்று நிரூபித்துச் சான்றிதழ் பெற்றுவருவதன் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

திருவாளர் ஜெயமோகன் சில முடிந்த முடிபுகளைக் கொண்டிருக்கிறார். அவர் இரவும் பகலும் எழுதிக்கொண்டிருக்கிற காரணத்தால், தலையைத் தூக்கி அவற்றை மீள்பரிசீலனை செய்ய அவருக்கு நேரம் இருப்பதில்லை. ‘ஐஸ்வர்யா ராயும்
அருந்ததி ராயும்’ (டிசம்பர் 08, 2010) என்ற கட்டுரையில்
பெண்வெறுப்புத்தாரை கீழ்க்கண்டவாறு பொழிகிறது.

“ஐஸ்வர்யா ராயை நான் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அழகான பெண். அழகான பெண்கள் வழக்கமாக இருப்பதுபோல அல்லாமல், புத்திசாலியும்கூட”என்கிறார்.

ஆக, அழகான பெண்கள் எல்லோரும் முட்டாள்கள் என்ற முடிந்த முடிவினை அவர் கொண்டிருக்கிறார். இவரைத்தாம் தமிழ்
வாசகப்பரப்பு இலக்கியகர்த்தா என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது என்ற நிலை அவமானகரமானது. அதே கட்டுரையில், “அருந்ததி போராளி அல்ல, வெறும் ஊடகப்பிரமை மட்டுமே!”என்று சொல்கிறார். புக்கர் பரிசுபெற்ற அருந்ததிராயின் நாவல் ஆழமற்றதும் இந்திய வாசகர்களுக்கு ஏமாற்றமளித்ததும் என்கிறார். அது ஒரு படைப்பினை விமர்சனம் செய்யும் உரிமையின்பாற்பட்டது. ஆனால், அருந்ததி ராய் என்ற பெண்மீது, அந்த ‘ஊடகப் பிரமை’மீது ஜெயமோகன் கொண்டிருந்த காழ்ப்புணர்வானது ‘எனது இந்தியா’ (ஜூலை 02, 2012) என்ற கட்டுரையில் மிகக் கேவலமாக வெளிப்பட்டிருக்கிறது.

“அடிப்படையான வரலாற்றுணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததி போன்ற குருவிமண்டைகள் ஊடகங்களில் இன்று பெறும் அதீத முக்கியத்துவம் மிக மிக ஆச்சரியமானது” என்கிறார் ஜெயமோகன்.

அருந்ததிராயின் நாவல்மீது, அவர் மேலைத்தேய ஊடகங்களால் அளவுக்குமீறித் தூக்கிப்பிடிக்கப்படுகிறார் என்ற விமர்சனத்தின்மீது எங்களிற் சிலருக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், ஒருவரை, அவரது தோற்றத்தினை முன்வைத்து இகழும் அற்பத்தனத்தை எக்காரணங்கொண்டும் மன்னிக்கமுடியாது. நொண்டி என்றும்,
குரூபி என்றும், குருவிமண்டை என்றும், சல்லிக்குரல்கள் என்றும் சகமனிதரை வசைபாடுவது அருவருப்பின் உச்சம். அதையொரு அறியப்பட்ட படைப்பாளி செய்வதென்பதும் அதைச் சகித்துக்கொண்டு, ‘என்றாலும் அவர் நன்றாக
எழுதுகிறார்’என்று சிலர் குழைந்து பின்செல்வதும் மனச்சாட்சிக்கு விரோதமான செயலாகும். படுகொலைகளுக்கும் மனக்கொலைகளுக்கும் அப்படியொன்றும் பெரிய
வித்தியாசங்கள் இல்லை.

ஆக, இவரது பெண்வெறுப்பு தமிழகத்தையும் தாண்டி அகில இந்தியாவெங்ஙணும் விரிந்துபரந்துசெல்கிறது. அண்மையில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களால், ஆனந்த விகடனில், ‘நம்பிக்கை நட்சத்திரங்கள்’என்று சுட்டப்பட்ட படைப்பாளிகளது பட்டியலைக் குறித்து ஜெயமோகன் கீழ்க்கண்டவாறு தன் “மேலான“
கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக
எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.

இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான்
நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள்
‘எதுக்கு வம்பு, காலங்கெட்ட காலத்திலே?’என்று ஜகாவாங்கிவிடுவார்கள்.”

–‘நாஞ்சில் நாடன் பட்டியல்’(ஜூன் 09,2014)

எழுதுகிற பெண்களை இதைவிடக் கேவலப்படுத்திக் கீழிறக்க முடியாது. பெண்ணியம் பீறிடுகிறதோ இல்லையோ, ஜெயமோகனுள் படிந்து கிடந்த பெண்வெறுப்பு மேற்கண்ட வாசகங்களில் பீறிட்டுப் பாய்ந்திருக்கிறது. இது சகித்துக்கொள்ள இயலாத இழிவுபடுத்தல், அவமானம், எழுந்தமானத்தில் கருத்துரைக்கிறஅறிவீனம், பெண்களது தன்மானம்மீது விழுந்திருக்கும் ஆணாதிக்கத்தின் மிலேச்சத்தனமான அடி. பெண்களால் எழுதப்பட்ட அனைத்துப் படைப்புக்களையும் ஜெயமோகன் வாசித்துவிட்டாரா? என்ற கேள்விகளெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். ‘உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்கள் ஆனவர்கள்’என்பதன் பொருள்தான் என்ன? உத்தி என்பது உடலைக் குறிக்கிறதா? வளைந்து நெளிந்து
செய்யும் சாகசங்களையும் சமரசங்களையும் குறித்ததா? இத்தகைய இழிவுபடுத்தலுக்கு, பாலியல் நிந்தனைக்கு பதிலடி கொடுக்கும்முகமாக ஜெயமோகன்மீது பொதுநல அவதூறு வழக்குக்கூடத் தொடுக்க இயலும்.

சர்ச்சைகள்மூலம் என்றென்றைக்குமாகத் தனது இருப்பினை
ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் ஜெயமோகன், வழக்கம்போல கேள்வியும் பதிலுமாக அடுத்த பதிவில்-‘பெண்களின் எழுத்து’ (ஜூன் 11,2014)- வந்து சப்பைக்கட்டு விளக்கமொன்றை அளித்திருக்கிறார்.

“இந்த ஆண் எழுத்தாளர்களில ஒருத்தர்கூடவா முக்கியமில்லை? ஒருத்தரோட பேட்டியோ படமோ எங்கியாவது வந்திருக்கா? பலரோட முகமே இந்த ஸ்டாம்பு சைஸ் போஸ்டரிலதான வந்திருக்கு. ஏன்?”என்று தனது பாலினம் சார்ந்து
‘தர்க்க’ரீதியாகக் கேள்வியெழுப்புகிறார். ஜெயமோகன் தன்னால் வாங்கப்படும் சஞ்சிகைகளை வாசிக்கிறாரா அன்றேல் எழுதியநேரம் போக அவற்றின்மீது படுத்து உறங்கிவிடுகிறாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்தவேண்டும்.

“செய்திகளை அவங்களேகூட திறமையா உருவாக்கிக்கிறாங்க” என்கிறார். பெண்கள்தான் எத்தகைய சூழ்ச்சிக்காரிகளாகவும் விளம்பரமோகிகளாகவும் இருக்கிறார்கள்! நெடுந்தொடர்களில் வரும் (அபத்தமான) வில்லிகளைக் காட்டிலும் படுபயங்கரமானவர்களாயிருக்கிறார்கள் இந்தப் பெண் படைப்பாளிகள்!

“சில பக்கங்களுக்கு பிழையில்லாமல் தமிழ் எழுதக்கூட தெரியாதவர்கள் பலர். உட்கார்ந்து பத்துப் பக்கம் தொடர்ந்து எழுதக்கூட பொறுமையற்றவர்கள்”என்கிறார். பெண் படைப்பாளிகள்மீது காழ்ப்புணர்வுகொண்டு எழுதிய குற்றச்சாட்டுக் கட்டுரையிலேயே எழுத்துப்பிழை விட்ட புத்திசாலி,
பெண்படைப்பாளிகளுக்கு இலக்கண வகுப்பெடுப்பதை காலக்கொடுமையன்றி வேறென்னவெனச் சொல்வது? எழுதுகிற பக்க எண்ணிக்கையில் இல்லை இலக்கியம்; அது
அதன் செறிவிலும் சாரத்திலும் அழகியலிலும் வடிவத்திலும் இருக்கிறது என்பதை காலந்தான் அவருக்குக் கற்பிக்கவேண்டும். ஆயிரம் பக்கக் குப்பைகளை எழுதி காடழித்து மழைவீழ்ச்சியைக் குறைப்பதைப் பார்க்கிலும், காலத்தால் அழியாத
ஒரேயொரு கவிதையை எழுதி வரலாற்றில் நிற்பவர் மேல்.

பெண்ணியவாதிகள்மீது இவருக்கு இருக்கும் எரிச்சலை, அண்மையில் வலையேற்றிய
தன்னிலை விளக்கக் கட்டுரையிலும் வெளிப்படுத்துகிறார்.

“இந்தப் பெண்களில் பலர் எழுதும் அசட்டுப் பெண்ணியப்படைப்புகளை பெண்ணியமென்பதற்காக அங்கீகரிக்க வேண்டுமென்றால், இதேபோல மாக்ஸியம், சூழியல் என எதையாவது வைத்து எழுதப்படும் எல்லாப் பிரச்சாரக் குப்பைகளையும் அங்கீகரிக்கவேண்டியதுதானே?”என்கிறார்.

பெண்ணெழுத்தையும் சேர்த்து ஆணே எழுதிக்கொண்டிருக்க அனுமதியாது அலையலையாக எழுதக் கிளம்பியிருக்கும் பெண்களைக் குறித்த ஆற்றாமையாகவும் பதட்டமுமாகவே
ஜெயமோகனின் கோபத்தைக் கொள்ளவேண்டியிருக்கிறது.

“உண்மையிலேயே இவ்விசயத்தில் விவாதிக்க நினைப்பவர்கள் தமிழில் கிருத்திகாவுக்குப் பின் பெண்கள் எழுதிய எந்த இலக்கியப்படைப்பில் அவர்கள் முக்கியமான வாசக அனுபவத்தை அடைந்தனர் என்று எண்ணிப்பார்க்கட்டும். பெண்கள் எழுதிய எந்தப் படைப்பு சென்ற முப்பதாண்டுகாலத்தில் தமிழில்
பேசப்பட்டது என்பதைக் கணக்கிடட்டும்”என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.

ஆக, கடந்த முப்பதாண்டு காலத் தமிழிலக்கியம் ஆண்களால் மட்டுமே நிறைக்கப்பட்டிருக்கிறது என்ற அடிமுட்டாள்த்தனமான வாதத்தினைச் செய்திருக்கிறார். அம்பை, சிவகாமி, பாமா போன்று தமிழில் பெண்ணியச் சிந்தனைகளுக்குத் தமது படைப்பின்வழி வித்திட்டவர்களுக்கும், விளிம்புநிலை மக்களின் வாழ்வைக் குறித்து எழுதியவர்களுக்கும் அந்த முப்பதாண்டு காலப்பகுதியில்
எழுதிக்கொண்டிருந்த, எழுதிக்கொண்டிருக்கும் இதர பெண் படைப்பாளிகளுக்கும் தமிழிலக்கியச் சரித்திரத்தில் இடமில்லை என்று சொல்கிறார். அவர்களெல்லோரும் ஆணாதிக்கத்தின் துர்க்கந்தத்தில் கற்பூரம்போல கரைந்து
போயிருக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து சொல்லிவருவதன் மூலமாக, இலக்கியத்தில் பெண்களுக்குப் பங்கில்லை, அவர்கள் தொடர்ந்தும் அடையாளமற்றவர்களாகவே நீடித்திருக்கிறார்கள் என்ற வாசக மனப்பிம்பத்தைக் கட்டியெழுப்ப ஜெயமோகன் பெரிதும் முயன்றிருக்கிறார்.தமிழிலக்கிய வரலாற்றின் பாதையில், கண்களில் பட்டை கட்டப்பட்டகுதிரையின்மீதேறி ஆண் சார்புச் சாட்டையோடு விரைந்து வந்துகொண்டிருப்பது ஜெயமோகனாகவன்றி வேறு எவராக இருக்கவியலும்?

நாஞ்சில் நாடனது சர்ச்சையைக் கிளப்பிய பட்டியலில் இடம்பெற்றிருந்த ‘வகைமாதிரி’களில் ஒருவராகவே இந்தக் கண்டனக் கூட்டறிக்கையில் ஜெயமோகன் மையமாக
வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தமிழிலக்கியச் சூழலிலும் இணையவெளியிலும் ஆணாதிக்கவாதிகளும் கலாச்சாரச் சாட்டையேந்திய காவலர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைக் காட்டமுடியும்.
மாற்று அரசியற் கருத்துக்களை முன்வைக்கும் பெண்களது ஒழுக்கங் குறித்து கேள்வியெழுப்புவதன் மூலமும், அவர்களைக் குறித்து அவதூறுகளைப் பரப்புவதன்மூலமும், பாலியல்ரீதியான வக்கிரச் சொல்லாடல்கள் மூலமும் பெண்களைப் பின்னடிக்கச்செய்வதே அவர்களது அரசியல் விவாதமாக இருந்துவருகிறது. தனிமனிதத் தாக்குதல்களில் பதிப்பாளர்களோ (சிலர்) அன்றேல் இலக்கியவாதிகளோ (சிலர்) சளைத்தவர்களல்ல என்பதைக் கண்கூடாகக் கண்டுவருகிறோம். அவர்களிற் சிலர் குழுவாகச் சேர்ந்துகொண்டு பெண்களுக்கெதிரான தங்களது எள்ளல்களை, இழிவுபடுத்தல்களை, அவதுாறுகளை ‘நிறுவனமய’ப்படுத்தி வருகிறார்கள். இக்கூட்டறிக்கையின் கனதி மற்றும்விரிவஞ்சி அவர்களது பெயர்களை விலக்கியிருக்கிறோம். இனிவருங்காலத்தில் அத்தகையோரின் நிலைப்பாடுகள் குறித்து தொடர் உரையாடல்களை நிகழ்த்தவுள்ளோம். ஆக மொத்தத்தில், ஜெயமோகனால் ‘கண்டுபிடிக்கப்பட்ட’ வார்த்தையொன்றில் சொல்வதானால், இணையம் ஒரு விரிந்த ‘வசைவெளி’யாக மாறிவருகிறது. துரதிர்ஷ்டவசமாக அந்த வார்த்தையைக் கண்டுபிடித்தவரே அதனைப் பிரயோகிப்பவருமாயிருக்கிறார். இலக்கியத்தில் அறம் என்றும், அழகியல் என்றும், உள்ளொளி என்றும் சொற்களை வைத்து சிலம்பாட்டம் ஆடினால் மட்டும் போதாது; சகவுயிரை மதித்தலே மனித விழுமியங்களில் முதன்மையானதாகும் என்பதை முதலில் ஜெயமோகன் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்த ஆணாதிக்க சமூகத்தில் குடும்பம் என்ற பாரபட்சங்கள் நிறைந்த அமைப்பினுள் இருந்தபடி எழுதுவதென்பது எத்தனை சிரமத்திற்குரியது என்பதை, அறிவின்பாற்பட்டுச் சிந்திக்கும் அனைவரும் அறிவர். எனினும், அதற்காக பெண்கள் தங்கள் எழுத்தின்மீது மென்சாய்வு காட்டுங்கள் என்று கோரவில்லை;
விமர்சனங்களில் கருணைகூர்ந்திடுங்கள் என்று கையேந்தி நிற்கவில்லை. இத்தகைய அவதூறுகளை, இழிவுபடுத்தல்களை சகவுயிரிகளாகிய எங்கள்மீது செய்யாதீர்கள் என்பதே எங்களது வேண்டுகோள். எத்தனையோ நூற்றாண்டுகளாக
பெண்ணடிமைத்தனம் என்ற ஈயக்குண்டை எங்கள் கால்களில் இழுத்தபடி நகரமுடியாமல் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில், படைப்பாளிகள் என்ற முகமூடியை அணிந்தபடி உங்கள் பிற்போக்குவாத எச்சிலை இங்கு வந்து
கொட்டாதீர்கள் என்றே நாங்கள் சொல்கிறோம். உங்களைக் குறித்தமிகைபிம்பங்களைக் கட்டியெழுப்ப ஆயிரக்கணக்கிலான வழிகளுண்டு. அவற்றையெல்லாம் விடுத்து, உங்கள் ஆணாதிக்க ‘அறிவாயுதங்களை’ எங்கள்மீது கூர்தீட்டிப் பார்க்க முற்படாதீர்கள்.

ஜெயமோகனது மேட்டிமைத்தனத்திலிருந்து முகிழ்த்தெழும் அபவாதங்களைத் தட்டிக்கேட்கும் பொறுப்பு, பெண்களைப்போலவே சக ஆண் எழுத்தாளர்களுக்கும் உண்டு. எனினும், அவர்களிற் பலர் அதைக் கண்டுகொள்ளாததுபோலவே கடந்துசெல்கிறார்கள். அல்லது, அவரது நிலைப்பாட்டினையே அவர்களும் கொண்டிருந்து அவரது வார்த்தைகளில் உள்ளுக்குள் மகிழ்கிறார்கள். ஒவ்வொரு படைப்பாளியும் தத்தம் மனச்சாட்சியைக் கேள்வி கேட்கவேண்டிய நேரமிது. சகஎழுத்தாளர், நண்பர், முன்னுரை எழுதித் தருகிறவர், விருதுகளுக்குப் பரிந்துரைத்தவர், பரிந்துரைக்கவிருக்கிறவர் என்ற சமரசங்களையெல்லாம் பின்தள்ளி மனச்சாட்சியின் குரலுக்கு செவிமடுத்து எழுபவரே மனிதர்! அவரே உண்மையான படைப்பாளி!

தன் இருப்பின் மூலவேர் ஆட்டங்கண்டுவிடுமோ என அஞ்சி எல்லோரையும் சந்தேகிக்கும், தன் வீரத்தை அடிக்கடி பறையறைவித்துக்கொள்ளும், பாதுகாப்பு வளைத்தை இறுக்கமாக்கும் சர்வாதிகாரியின் சஞ்சல மனநிலையையே ஜெயமோகன் தற்போது கொண்டிருக்கிறாரோ என ஐயுறுகிறோம். நூற்றாண்டுகளாக ஆணாதிக்கம் என்ற சகதியினுள்ளிருந்து வெளிவரப் போராடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான ஜெயமோகனின் காழ்ப்புணர்வுச் சாடல்களுக்கு எதிராக, இந்த அறிக்கையினூடாக எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்ஙனம்

அம்பை, குட்டிரேவதி, சுகிர்தராணி, தமயந்தி, கவிதா முரளிதரன், சே.பிருந்தா, அ.வெண்ணிலா, சல்மா, பெருந்தேவி, தமிழச்சி தங்கபாண்டியன், மோனிகா, ஜீவசுந்தரி பாலன், உமா சக்தி, தர்மினி, கவிதா சொர்ணவல்லி, வினோதினி சச்சிதானந்தம், கவின்மலர், மயு மனோ, சக்தி ஜோதி, தமிழ்நதி, லிவிங் ஸ்மைல் வித்யா, ஸ்வாதி ச.முகில், ஆர்த்தி வேந்தன், நறுமுகைதேவி, முபீன் சாதிகா, பாரதி செல்வா, ரமா இன்பா சுப்ரமணியம், ஷஹிதா, கொற்றவை, பரமேஸ்வரி, சபிதா இப்ராஹிம், ச.விஜயலட்சுமி, உமா மோகன், ஹேமாவதி, பிரசாந்தி சேகரம், நாச்சிமகள் சுகந்தி, ஜீவசுந்தரி பாலன், பத்மஜா நாராயணன், கீதா இளங்கோவன், பாலபாரதி, சி.புஷ்பராணி, பானுபாரதி, பவானி தர்மா, இளமதி, கிர்த்திகா தரன், நிலவுமொழி செந்தாமரை, சு.தமிழ்ச்செல்வி, நந்தமிழ்நங்கை, கல்பனா கருணாகரன், சி.மீனா, ஜென்னி டாலி, ப்ரியம்வதா, இந்திராகாந்தி அலங்காரம்,தமிழ்ப்பெண் விலாசினி, கு.உமாதேவி, தேனம்மை லஷ்மணன், அப்துல் ஹக். லறீனா, கீதா நாராயணன், ஃபாயிஸா அலி, பெண்ணியம் இணையத்தளக் குழு (தில்லை, கேஷாயணி, சுகந்தி,வெரோனிக்கா, சரவணன்), லதா சரவணன், ஜீவலக்ஷ்மி, ஷில்பா சார்லஸ், அகல்யா பிரான்ஸிஸ், ராஜ் சுகா, சசிகலா பாபு, சுபாஷினி திருமலை, நிவேதா உதயன், கோதை, சாந்தி, பிறேமா, நிலா லோகநாதன்,மீசா. காதம்பரி, பரிமளா பஞ்சு, சக்தி செல்வி, சந்திரா ரவீந்திரன், தமிழரசி, சுபா தேசிகன்.கிரிஜா ராகவன், சுஜாதா செல்வராஜ்

(எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள்)

பிற்குறிப்பு: இந்தக் கண்டனக் கூட்டறிக்கையோடு உடன்படுகிற ஆண்

படைப்பாளிகள், கலைஞர்கள் இந்தப் பதிவின்கீழ் தமது ஒப்புதலைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

திங்கள், ஜூன் 16, 2014

இன்னொரு மரணம்


கட்டைல போறவனே 
என யாவரையும் கரித்த 
பரமசிவம் தாத்தாவை 
நகர
மயானம் 
காரில்தான் அழைத்தது.

ஈட்டாத செல்வம்
முகூர்த்த நாள் மரணம் 
பூஇறைக்காத 
துப்புரவான பயணம் தாத்தாவுடையது 

சமைக்க அலுப்பான 
ஏதோ ஒரு இரவு போலவே 
மயானத்திலிருந்து திரும்புகையில் 
பக்கத்துக்கு வீட்டில் நாதஸ்வரமும் 
மேசைமேல் பரோட்டா பார்சலும் 

"போனா இப்பிடிப் போவணு ம்" 
"பொசுக்"கென்று முடிந்த வாழ்வை 
எடுத்தபின் வந்த அத்தை 
பாராட்டிக் கொண்டிருந்தாள் 
குறைந்தபட்சம் -அவளாவது 
அழுதிருக்கலாம் இல்லை 
சண்டைபோட்டிருக்கலாம் .....

வெள்ளி, ஜூன் 13, 2014

நெஞ்சு இரண்டாக


ஆடை குலைக்கும் கைகள்
அப்படியே துண்டாக,
நெறிகெட்ட நினைப்பு வந்த
நெஞ்சு இரண்டாக,
தொட்டதும் தலைவெடிக்க,
தொடருமுன்
தொடைகிழிக்க
அவளுக்குப் பலம் தரவோ
அடுக்காக வரம் தரவோ
ஆரு சாமி இருக்கீங்க ..

குழந்தைப் பருவத்திலேயே
குறுவாள் கொடுத்திடவா...
தவழும்போதே
தற்காப்புக் கலை சொல்லவா..

பேன்,சிரங்கு பெருமையோட
பழஞ்சட்டை வாசத்தோட
காயும் வயித்தோட
கண்ட வழியோடும்
வறுமைக்குப் பொறந்த மக்கா
இத்தனையும் தாண்டி இத்துப்போன உன் உடம்பு
என்ன தருமுன்னு வந்தான்
வந்தவழி மறந்த நாயி...
 —

புதன், ஜூன் 11, 2014

வலியின் தோற்றம்-3



பசுமையான காட்சி 
விரியும் மலர்
கனிந்த முகம் 
நெகிழ் குரல் 
கடலும் வானுமான நீலச் சங்கமம் 


வர்ணக் குழம்பை விசிறும் கதிர்
சர்க்கஸ் கோமாளிபோல் வளைந்து தொங்கி
கவனம் கேட்கும் மேகம்
ஜன்னலோரக் காற்று
குறும்புக் குழந்தை ...

கண்ணுக்கும் மனதுக்கும்
குறுக்கே மறிக்கிறது
வலி

வலியின் தோற்றம்-2



நான் சொல்லாததை 
எது சொல்லிவிடும் 
பாவனைகளில் வெளிப்பட்டுவிடாதபடி 
பயின்றிருக்கிறேன் 
வெளிச்சம் அருகிருப்பதாகவும்
நம்பிக்கையிலேயே ஆக்சிஜன்
உற்பத்தியாகும் என்றும்
புன்னகையால் பசியை அடக்கவோ,கடக்கவோ
முடியுமென்றும்
என் சொற்களால் உன்னையும் உணரவைப்பேன்
ஆனால் ...என் வலியை.....

வலியின் தோற்றம் -1


உடல் மொழியில், வாய் மொழியில்,
ஒரு தலையசைப்பில் ,
உன் இதழ்க்கடை நெளிவில் 
எப்போதோ பிறந்துவிட்டிருக்கிறது இது 
அணுவைத் துளைத்த கடலானதும்
ஒரு கடல் ஏழு ஆனதும்
எப்போதென்று தெரியவில்லை...
ஏழோடு நிறைந்துவிடும்
என்பதே இப்போதைய நம்பிக்கை

வீதி நாடகம்



அவள் வாளைப்
பாடநூலில் பார்த்திருக்கிறாள்...
கத்தி..சமையலறையில் 
அரிவாள் தேங்காய் உடைக்கவும் 
வேலிக்கொடியைக் கழித்துவிடவும்....
துப்பாக்கி தம்பியின் தீபாவளி...

உச்சிமுடி பிடித்திழுத்து
தெருவோரம் மிதிப்பவனுக்கு
எச்சில் போதும்
அவள் தூய்மையைக்
கூண்டிலேற்றும் சொற்களுக்கு
எதிர்ப்பதமும் தெரிந்தவள்தான்...
முகம்சுளித்தபடி ஒதுங்கும்
மகளின் நாகரீகம்
ஆயுதம் தரவில்லை
அவனோடு சேர்ந்து மிதிக்கிறது
அவமானமும் அழுத்தமும்

புன்னகைக்கு மணமுண்டா ..



உனக்கு வியப்போ ,எரிச்சலோ,
வரலாம்....
ஆனாலும்,இதற்கு விடை தா....
ரூபியின் புன்னகையில் 
சமையலறை தாளிப்பு வாசமும்,
அம்மாவின் புன்னகையில் 
கவலைகளின் கசங்கிய வாசமும்,
தேவாவுக்கு இழப்பின் 
அழுகல் வாடைச் சிரிப்பும்,
ரஞ்சியிடம் பொறாமையின் 
மழுப்பலான குப்பைநெடியும் ,
உணர்ந்தேன்  என்றாயே....
என் இதழ் உதிர்ப்பதில் 
நீ உணர்ந்ததென்ன 

செவ்வாய், மே 06, 2014

அங்கீகாரத்தின் குரல்


நான் பேசாமல் என்னோடு 
பேசிக் கொண்டிருந்திருக்கலாம் 
பேசாத உன்னோடு பேசிக் கொண்டிருப்பதாய் 
மட்டுமே புரிந்து கொண்டு 
கேட்காத உன்னோடு பேசிக் கிடந்திருக்கிறேன்
என் துயரெலாம் இப்போது
என்னைப் பற்றியே அல்ல
ஏந்திக் கொள்ள யாருமின்றி
சுவரில் மோதித்
தரையில் புரண்டுக்
காற்றில் கைவிரித்தழும்
என் சொற்களை
எப்படி ஆறுதல் செய்ய.....

-லதாம்மாவின் மரணம்


நான் ஏறிய பேருந்து,
அடுத்த தெருப் பள்ளிக்கூடம் ,
எங்கும் ஒட்டப்பட்டிருந்தது 
அந்தக் கண்ணீரஞ்சலி சுவரொட்டி ...

முட்டைக் கண்ணன் என்றோ,
தனா என்றோ கூப்பிடப்பட்ட 
லதா அண்ணன் அதிலே 
தனபால் ஆகியிருந்தான்...

வருந்தும் பா தனபால் குடும்பத்திற்குள் 
லதாவும் அடக்கம் என்றும் தெரியவில்லை,
லதாம்மாதான் 
ஆதிலட்சுமி என்றும் தெரியவில்லை

பறக்கும் தலையும் மூளிக்காதும்,
தாம்புக் கயிறுமாகவேதிரிந்த 
லதாம்மாதான் 
கொத்துச் சங்கிலியும் 
குறிப்பாகப் புன்னகையுமாகச் 
சுவரொட்டியில் பார்க்கிறாள் 
என்றும் தெரியாமல்தான் 
அன்று கடந்தேன் என்பதைச் சொல்லித் 
துக்கம் விசாரிக்கலாமா ..... 

7 5 14-ஆனந்தவிகடனில் வெளியானது.

வெள்ளி, மார்ச் 28, 2014

சில நூறு கிலோ மீட்டர்களும் கொஞ்சம் மைல் கற்களும்-எஸ் வி வேணுகோபாலன்

டார்வின் படிக்காத குருவி நூல் வெளியீட்டு நிகழ்ச்சி குறித்து எழுதிய பகிர்வு 



கவிதைக்கும், கவிதை தொகுதிக்கும் தலைப்பு வைப்பதில் பெண் கவிஞர்கள் நேர்த்தியான கவனம் செலுத்துபவர்கள். உலகப் போர்களுக்கு ஆண்களே காரணம் என்று இடித்துரைக்கும் நோக்கில் ரஷ்ய கவி அன்னா அக்மதோவா  தமது படைப்பு ஒன்றுக்கு எம் டபிள்யூ 2 என்ற தலைப்பிட்டார் ! கிறிஸ்துமஸ் தாத்தா பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். சாண்டினியா கிளாஸ் என்று கிறிஸ்துமஸ் பாட்டியை உருவகப்படுத்தினார் பெல்லா அக்மதூலினா.  அலுவலக மனைவி என்ற தலைப்பில் கவிதை ஒன்றைப் படைத்தார்அன்னா மேரி. இப்படி தலைப்புகளிலேயே கலகக் குரல் எழுப்பும் பல பெண் படைப்பாளிகளைப் பார்க்கிறோம். கவிஞர் உமா மோகன் அவர்களது டார்வின் படிக்காத குருவி என்ற தலைப்பும் அப்படித்தான்...பரிணாம வளர்ச்சி குறித்து அறியாத குருவி என்றும், டார்வின் படிக்க விடுபட்ட குருவி என்றும் வெவ்வேறு பொருள் தரும் தலைப்பு அது. காணாமல் போய்க் கொண்டிருக்கும் உயிரினம் பற்றிய அற்புதக் கவிதை அது.  சொல்லவரும் சமூக அதிர்ச்சிக்கு ஏற்ப பயன்படுத்தப்படும் சொற்கள் இவை என்றார் ஆயிஷா இரா நடராசன். 

ஜனவரி 11 அன்று பாண்டிச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றில், அகில இந்திய வானொலியின் புதுவை நிலைய அறிவிப்பாளராக இயங்கும் கவிஞர் உமா மோகன் அவர்களின் கவிதை நூலை வெளியிட்டுப் பேசிய அவர், சம கால சிக்கல்கள், முரண்பாடுகள் குறித்த முக்கிய கவிதைகளைக் கொண்டிருக்கும் தொகுப்பு என்று பாராட்டினார். 

நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட கவிஞர் சுகிர்தராணி, சுவாரசியமான முறையில் பேச்சைத் தொடங்கினார். தான் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராணிப்பேட்டையிலிருந்து வந்திருக்கும் தமக்கு பத்து கிலோமீட்டருக்கு ஒரு நிமிடம் என்று பார்த்தாலும் பேசுவதற்கு 15 நிமிடங்கள் கொடுத்திருக்க வேண்டும், நட்பின் நிமித்தம் அதிலும் ஐந்து நிமிடம் குறைத்துக் கொண்டால் என்ன பேசுவது என்றார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தமது போராட்ட வாழ்க்கை, இலக்கிய தளத்தில் செயல்பாடு ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர், உமா மோகனின் கவிதைகளின் உணர்வு வெளிப்பாடு, கூர்ந்த பார்வை, உலகமய காலத்தின் பிரதிபலிப்பு ஆகியவை கவனத்தை ஈர்ப்பதாக இருப்பதை கவிதைகள் சிலவற்றின் மூலம் வெளிப்படுத்தினார்.

வாழ்த்துரை வழங்கிய அகில இந்திய வானொலியின் தென் மண்டல கூடுதல் இயக்குனர் க பொ சீனிவாசன் தான் ஹைதராபாத், பெங்களூரு என்றெல்லாம் சென்று அலுவல்கள் முடித்துக் கொண்டு பாண்டி வந்திருப்பதால் அவர் பயணம் செய்தது இன்னும் அதிக கிலோமீட்டர் தூரம் என்று சுகிர்தராணி எழுப்பிய தூர-நேர விகிதக் கணக்கைச் சுட்டிக் காட்டினார். தங்களது நிறுவன ஊழியர் சிறந்த கவியாக பரிணமிப்பது துறைக்கே பெருமை என்று பாராட்டினார். புதுவை நிலைய இயக்குனர் சிவபிரகாசம், கவிஞர் கோவிந்தராசு ஆகியோரும் வாழ்த்திப் பேசினார். 

ஆய்வுரை வழங்கிய முனைவர் நா இளங்கோ, மாறி வரும் காலச் சூழலுக்கேற்ப பொருளோடு அழகியலையும் முன்னெடுக்கும் கவிதைகளின் வரிசையில் உமா மோகன் கவிதைகள் பாராட்டுக்குரியவை என்றார். இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் துணைப் பொதுச் செயலாளர் எஸ் வி வேணுகோபாலன், மனிதர்களை ஒற்றை ஒற்றை ஆளாகப் பிரித்துப் போடும் உலகமய சவாலைப் பண்பாட்டுத் தளத்திலும் எதிர்கொள்ளவேண்டும், அந்த சவாலை ஏற்று பளீரென பதிலடி கொடுக்கும் கவிதைகள் உமா மோகனுடையவை என்றார். விளைநிலங்கள்மீது கட்டிடங்கள் எழுவதன் வேதனைக் காலத்தை, தானியம் தேடி வந்து டெட்ரா பேக்குகளைக் கொத்தி ஏமாறும் குருவியைப் பார்த்து சுவரொட்டி தின்னும் பசு சிரிப்பதை விவரிக்கும் தலைப்புக் கவிதை மக்களிடம் பேசப்பட வேண்டிய விவாதப் பொருள் என்றார் அவர். 

முன்னதாக நூலைப் பதிப்பித்த முரண்களரி வெளியீட்டகத்தின் யாழினி முனுசாமி வரவேற்புரை வழங்கினார். தலைமை ஏற்று நடத்திய மன்னர் மன்னன், தனி முத்திரை பதிக்கும் கவிதைகள் என்று பாராட்டினார். குழந்தைகள் உலகத்தை உமா அறிமுகப் படுத்தும் பாங்கு அற்புதமானது என்றார். உமா மோகன் அவர்களுடைய இளைய மகன் பிரணவ ஸ்வரூப் தாயைப் பாராட்டி கவிதை வாசித்தார்.

நிறைந்திருந்த அவையில் ஒரு கவிதை நூல் வெளியீடு நடந்த சிலிர்ப்போடு ஏற்புரை நிகழ்த்திய உமா மோகன், இங்கே கிலோமீட்டர் தூரம் பற்றிய பேச்சு எழுந்தது. உள்ளபடியே நான் கடந்துவந்த மைல் கற்களின் தொலைவு இது என்றார். அன்பான குடும்பச் சூழல், ஊக்குவிக்கும் அலுவலக நண்பர்கள் வட்டம்-அங்கீகரிக்கும் அதிகாரிகள் நிரம்பிய நிர்வாகம் ஆகிய சாதக அம்சங்களைக் குறிப்பிட்ட அவர் தமது தொகுப்பு வருவதற்கு உதவிய நண்பர்கள் வட்டத்திற்கு நன்றி பாராட்டனார். விருந்தினர்களுக்கு பாரதி-செல்லம்மா படங்களோடு மகாகவியின் வசன கவிதை தாங்கிய நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 

மேற்கோள் காட்டப்பட்டுக் குவிந்திருந்த கவிதைச் சொற்களின் உள நிறைவோடு விடைபெற்றனர் பார்வையாளர்கள். 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...