இருகரமும் விரித்து நடந்தேன்
எல்லோரையும் தழுவிக் கொள்ளவும்
ஆதுரமாய்த் தலைகோதவும்
பாராட்டி வழித்துத் திருஷ்டி கழிக்கவும்
ஆறுதலாய்க் கன்னம் தட்டவும்
முதுகு தடவிப் பாரம் இறக்கவும்
தோதாக இருக்கட்டுமென
இருகரமும் விரித்துதான் நடந்தேன்…
என் கையில் தராசு வந்தது எப்போது ?
சல்லிசாய்க் கிடைக்கும் வம்புகளும்
சரமாய்த் தொடரும் அம்புகளும்
நாணயக் குறைவான நாணயங்களும்
வாசனை நோட்டுகளும்
வசதியான எடைக்கற்களும்
மாறி மாறி உட்கார்ந்திருக்கும்
இந்தத் தராசே என் கையாகிப்போன
நொடி எது…
நிறுத்தலே வாழ்க்கையா ?
வல்லமை இணைய இதழில் செப் 5 2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக