வெள்ளி, ஏப்ரல் 01, 2016

ஏப்ரல் முதல் பூ

மௌனத்தையும் 
உளறலையும் 
ஒரே இலையில் பரிமாறியிருக்கிறாய்
எது பிரதானம்,
எது தொடுகறி புரியாமல்
காத்திருக்கிறது பந்தி


****************************************
கட்டிவந்து இறந்துபோன
அகாலப்பிரிவினால்
நெருக்கமாக மனதிலிருந்த
மூன்றாவது வீட்டு ரமணிமாமா போலவே 
உயர்த்திய புருவமும்
குழைத்த நீறு படிந்த சுருங்கிய நெற்றியுமாய்
ஒருவர் வந்திருக்கிறார்
கட்டிவந்து இறந்தவர் பற்றி
யாரும் சொல்லாமல்
அவரை அனுப்பிவிட்டால் தேவலை


**********************************************************
வேண்டுமென்றுதான்
தள்ளியிருப்பதாகச் சொல்கிறாய்
வேண்டும் என்றால் 
ஏன்...
வேண்டாமென்றால்தானே
தள்ளி வைத்தே
மணம் வீசும் தாழம்பூக்களின் காலமல்லவே

*************************************************
நினைவுகள்
சுற்றிக்கிடக்கின்றன
ஊர்க்குளத்து அல்லிக்கொடி போல
பூவோ
எங்கோ ஒன்றிரண்டுதான்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...