ஞாயிறு, நவம்பர் 13, 2016

செல்வதும் செல்லாததும்

என்ன செய்ய
எந்தக்கணமும் நீ நீயல்ல
என்ற உத்தரவு வரலாம்
செல்லத்தக்க அன்பு பற்றி
செல்லத்தக்க புன்னகை பற்றி
செல்லத்தக்க விரோதம் பற்றி
செல்லத்தக்க நோய் பற்றி
செல்லத்தக்க கும்பிடு பற்றி
முன்கூட்டியே சொல்லமுடியுமா
உத்தரவுகளின் பின்பக்கத்தில்
பழைய பாக்கிகள் போல
பழைய பற்றுகளை
பழைய எதிர்ப்புகளை
பழைய உறவுகளை
பழைய நினைவுகளைக் குறித்துத்
தருவாருண்டா
படர்கிளைகளைக் கழித்துவிட்ட 

முருங்கை போல நிற்கத் தயாராக
இருக்கட்டும் மனது
வரிசைகளில் நிற்கும்போது
கைபேசியில்
ஜல்லிக்கட்டு விளையாட முடியுமென்றால் 

ஏது கவலை


எறிந்த முதுகெலும்பு

விட்டுவிடு விலகிவிடு என்று 
யாருக்கும் உத்தரவிட 
இயலா அடிமைகள் நாங்கள் 
பிறந்தபோது முதுகெலும்பு இருந்திருக்கலாம் 
சதைப்பிண்டத்தையே ஆதாரமாக 
தகவமைத்துக் கொண்டுவிட்டோம்
எப்போதும் குனிய
குட்டிக்கரணம் போட
இலைபோர்த்திக் கதையெழுத
கற்பனையிலேயே புளகாங்கிதம்பெற
எல்லோருக்கும் தோதாக
சாம்பல்சத்து தேவைப்பட்ட சந்தர்ப்பங்களில்
எடுத்துக்கொள்ள ஏற்றபடி
எரித்து வைத்திருக்கிறோம்
மற்றபடி
பால் வேறுபாடில்லா குலவழக்கம் இது
என்பதையும் பதியுங்கள்

உருளைக்கிழங்கு துண்டுகளின் பிம்பம்


தும்பைச்செடிகளும் கீழாநெல்லியும்
ஓரமாய்ப்பெருகிக் கிடக்கும் ஒரு பாதையில்
நடந்து சென்றிருந்தோம்.
வராமல் கூட இருந்திருக்கலாம்
ஆனால்
படுபாடு பட்டு வந்தாயிற்று
திடீரென போய்ச் சேர்ந்து
புதிய சமையலொன்றைச் செய்யும்
அசௌகர்யம் தந்த குற்ற உணர்வோடு
கால்களைக் கழுவிய
அதே கிணற்றடி
உள்ளே கசகசத்த நெருக்கத்திலிருந்து
தப்பிக்க ஏற்ற பதுங்குகுழிதான்
சகடையில் இப்போது
டயர்களால் ஆன கயிறு
குறைந்தது நான்கு பண்டமில்லாமல்
இலைவிரிக்க மாட்டேன் எனத்
தூக்கிச் செருகிய சேலையும்
உடைந்த பற்களிடையே
வழிந்த புன்னகையுமாக
ஓடிக்கொண்டிருந்த அத்தைதான்
முன்வாசலில் நாற்காலியில்
சார்த்தப்பட்டிருக்கிறாள்
இந்த வீட்டின் நகரக்கிளையில்
உருளைக்கிழங்கைத் தோல்சீவி
சமைப்பதா ,அவித்து உரிப்பதா
எது சிக்கனம்
என்ற நீள் விவாதத்தின் பின்
சமைத்து பரிமாறப்பட்ட இரண்டே துண்டு
போல கிணற்றின் நீரலைவில் தெரிந்தது
திடுக்கிட்டுத் திரும்பியபோது
நீரிறைக்க வந்திருந்தாள் மருமகள்
அவள் கைகளின் நீட்சி போல


நீர்மையற்ற வாழ்வு

உங்களோடுதான் அவர்களும் இருந்தார்கள் 
அல்லது
அவர்களோடுதான் நீங்களும் 
சரி 
உங்களைப்பற்றி சொன்னால்தான்
உங்களுக்குப்பிடிக்கும்
முதலிலிருந்தே வருகிறேன்
உங்களோடுதான் அவர்களும் இருந்தார்கள்
பொருள் வந்த பொழுதிலோ
பொருளின் பொருளறிந்த பொழுதிலோ 

நிகழ்ந்த நகர்வு அது
நகர்ந்தது நீங்களென்பதால்
அறியாது
எப்போதும்போல் சிரிக்கும்
அந்த முகம் எரிச்சலூட்டுகிறது
அவமானம் தருகிறது
கொஞ்சம் கை கொடுத்தாலென்ன
கேட்கும் குரலும் விரோதமாகிவிடுகிறது
சுற்றிப்பாருங்கள் பாளம் பாளமாய்
வெடிப்பு
நீர்மை காய்ந்த சேறு



காலம் கேள்விகளால் தொடுக்கப்பட்டிருக்கிறது


கடலாகவோ மலையாகவோ
விரிவானாகவோ சொல்லிவிடமுடியவில்லை
காலத்தை
கோபமாகவோ மகிழ்ச்சியாகவோ
குமைவாகவோ அணுகமுடியவில்லை
காலத்தை
அறிந்ததாகவோ அறியாததாகவோ
நுனிப்புல்லாகவோ உணரமுடியவில்லை
காலத்தை
கொண்டதாகவோ இழந்ததாகவோ
ஏங்கியதாகவோ விடமுடியவில்லை
காலத்தை
உன்னுடையதாகவோ என்னுடையதாகவோ
நம்முடையதாகவோ பொதியமுடியவில்லை
காலத்தை
இறுகினால் இற்றுவிடுவிடுமோ
இளகினால் கொட்டிவிடுமோ
என்ற பாவனைக் கேள்விகளால்
தொடுக்கப்பட்டிருக்கிறது காலம்
மாலை வாடிவிடாது என்ற நம்பிக்கையுடன்...

செவ்வாய், நவம்பர் 08, 2016

இட்லி அரிசியும் சாப்பாட்டு அரிசியும்


நிறைநாழி நெல் முந்தானையில் ஏந்திக்கொண்டுதான் 
உள்ளே நுழைந்தார்கள்
வாழவந்த பெண்கள்
மணையில் அமருமுன் கவனமாக
அடியில் நெல் பரப்பியே சமுக்காளம்
விரிப்பது மங்கலநிகழ்வுதோறும்
கொத்தான புதிர்நெல் எரவாணத்தில்
அடுத்த கொத்து வரும்வரை
உலர்ந்தாலும் உதிர்ந்தாலும் தொங்கும்
பத்தாயங்களின் வாசனையோடு
கோணிச்சாக்குகளின் உதறலோடு
மழையும் வெயிலும் முற்றத்தில் இறங்கின
இதெல்லாம் தொன்மமாகிவிட்ட வீடு இது
நேராக உட்கார்ந்தே அறியாத தலைவன்
சாய்வு நாற்காலியில்
அகன்ற திரை தொலைக்காட்சி பார்த்தபடி
நடவு,அறுப்பு என்று அலைந்துகொண்டிருந்த தலைவி
நல்லவேளை நமது நாலு ஏக்கரும்
பிரதான சாலையில் இருந்தது
என்று பெருமூச்சோடு ஆறுதல் அடைகிறாள்
நல்லவேளை நமது ஊருக்கு
கலெக்டர் ஆபீசும் கல்லூரியும் வந்தது
என்கிறாள் தாய்வீடு வந்திருக்கும்
இளைய மகள்
நல்லவேளை நீயும் அப்பாவும்
வயலை மனையாக்க சம்மதித்தீர்கள்
என்றாள் தாய்வீடு வந்திருக்கும்
மூத்தமகள் தலைதுவட்டியபடி
உங்கள் வாழ்வு அல்லவா
என்றபடி தானும் தலைதுவட்டத்
தொடங்கினாள் தலைவி
அவர்கள் அப்போதுதான் துக்கவீட்டிலிருந்து
திரும்பியிருந்தார்கள்
காய்ந்த வயல் பார்த்துக் கடனை நினைத்துப்
பாலிடால் பருகிய பங்காளி சாவு அது
"அம்மா என்ன வாங்கவேண்டும் "
பட்டணத்திலிருந்து வந்திருக்கும்
மகன் கேட்கிறான்
அரிசி வாங்கணும்பா
இட்லி அரிசியா சாப்பாட்டு அரிசியா
தலைவர் சற்றே திரும்பிப் பார்த்தார்
எரவாணத்தில் காய்ந்த புதிர் ஆடும்
இடத்தை

திங்கள், நவம்பர் 07, 2016

இதுவும் அதே ஏன்தானா

ஏன் இழந்தவற்றுக்காக
வருந்தவேண்டும்
ஏன் தவறியவற்றை நினைத்து
 தலையிலடித்துக்கொள்ள வேண்டும்
ஏன் கடந்தவர்களை நினைத்துக்
கண்ணீர் விடவேண்டும்
ஏன் உளறல்களை நினைத்து
கொதிக்க வேண்டும்
ஏன் பித்துகளை தக்கவைக்க 

இப்படித் தவிக்க வேண்டும்
ஏனென்று தெரியாதவற்றையெல்லாம்
ஏனிப்படி ....


கடந்த எழுத்து

சென்ற காலங்களில் சிந்திய புன்னகை
காற்றிலேயே 
கரைந்து போயிருக்குமென்று நம்பியிருந்தேன்
அதே பருவத்தின் திரும்பலில் 
ஒரு முல்லைப்பூ இப்படி 
அகழ்ந்தெடுத்துக் கடைபரப்பி
அழவைக்குமென அறியவில்லை
பழைய காகிதங்களைக் கழிக்கும்போது 
திடுமென ஒரு கையெழுத்து பாதி அழிந்து
மீதி அழிக்க கண்ணீர் 

பொங்குமெனத் தோன்றவில்லை
கடந்தவையெல்லாம்
கடந்து விடுவதில்லை




அது போலில்லை

ஒரு பெருவனம்
ஒரு சிறுநதி
இரு இளம்பிடி
எங்கோ கேட்ட கதையின் 
தொடக்கம்போல இருக்கிறதா...
தொடக்கம் போல 
தொடர்ச்சி இருக்க வாய்ப்பில்லை
இன்னும் சொல்ல வேண்டுமா





இயக்கிய மலர்

மலர் ஒன்றோடு உரையாட நேர்ந்தது
முதல் கேள்வியே 
கொஞ்சம் அசைத்துவிட்டது போலும்
இப்படி ஒற்றைநிறமாக இருப்பது 
அலுப்பாயில்லையா ?
கொஞ்சம் வேறு வண்ணமும் கலந்திருந்தால் 
கவர்ச்சியாக இருக்குமே என்று வருந்தியதுண்டா?
தேவையில்லா தொந்தரவுக்கு 
ஆட்பட்டுவிட்டதைப்போல
காம்பின் நுனிவரை 
வளைத்து வளைத்து ஆடியபின்
என் நிறம் என் பெருமை
நீ கேட்டதுபோல் ஏங்க ஆரம்பித்திருந்தால்

யுகங்கள் கடந்து 
என் வர்க்கத்தை வளர்த்திருக்க முடியாது
இல்லாதது பற்றியோ இழந்தது பற்றியோ 

கலங்குவது 
இயக்கத்துக்கு எதிரானது என்றது
பழக்கதோஷத்தில் 

அது எங்கோ உறுப்பினர் எனக்கருதி 
நகர்ந்துவிட்டேன்


இடிந்த வாழ்வு

எல்லாம்தான் நடந்திருக்கும்
எல்லாரைப்போலவும் நடந்திருக்கும்
நாய்அலைச்சல் அலைந்து 
உண்ணாமல் உறங்காமல் உடுத்தாமல் 
இழுத்து இழுத்துப் பிடித்தது போதாமல்
கையெழுத்துக்களால் உயிர்ப்பித்த
கனவுகள் இருந்திருக்கும்
தேடித்தேடி தேர்வு செய்து
கொஞ்சம் அப்படி இப்படிதான் 

இருக்குமென்று பொய்யைய்யும்
சேர்த்தே படி ஏற்றிக்கொண்டு
நுழைந்து பார்த்திருப்பார்
சுளையாக எண்ணிவைத்து
சுமாராக எழுதிக்கொண்டிருக்கலாம்
பத்திரிகையா,கட்செவியா 

எப்படி அழைப்பது என்று
 திட்டமிட்டுக் கொண்டிருந்திருக்கலாம்
தானாய் இடிந்தபோது பாதி
தள்ளி வெடித்தபோது மீதி
புகைந்தது வாழ்வு
#மவுலிவாக்கம்



அளவிலா விளையாட்டுடையான்

மிளகாய்த்தூள் அளவான காரமாகவும்
உப்பு அளவான கரிப்பாகவும்
புளி அளவான புளிப்பாகவும்
சர்க்கரை அளவற்ற இனிப்பாகவும்
அமைந்திட அருள்வாய் எம் தந்தையே
அப்படியே தண்ணீரும் அளவான அளவாக எடுக்கவும்
அளவுகளோடு பிறந்து அளவாக வளர்ந்து
அளவாகப்பேசவும்
அளவாக சமைக்கவும் அருள்வீராயின் 

அளவற்ற நன்றி உடையவளாகிடுவேன்
அளவிலாத்துயர்களையும்
அளவிலா உளறல்களையும்
அளந்துகொண்டிருக்காத உள்ளம் 

இலவச இணைப்பாக அருளுவீராக


வெள்ளி, நவம்பர் 04, 2016

படைப்பு

கத்தியில் ஏழுவகை
கரண்டியில் நூறுவகை
தட்டு,தாலம்,ஒட்டிசமைக்க,
ஒட்டாமல் எடுக்க ,
ஊர்சமையல்,உலகசமையல்
முறைக்கேற்ற முன்னூறு எடுப்பு
எல்லாம் வாங்கி எல்லாம் கற்று
எடுத்து வை இரண்டடிசந்தில்
ஓடுங்கால் ஓடி ஒடுங்குங்கால் ஒடுங்கி 

நாடுங்கால்
நல்லவண்ணம் படைத்து
சாடுங்கால் சத்தமின்றி துடைத்து
வாடுங்கால்
வருமானம் தேடி ஓடு ஓடு
அவரவர் வயிறு அவரவர் பாடு
அனைவர் வயிறும் உந்தன் பாடு


விடமுண்ட கண்டன்

ஆரஞ்சு நிறத்திலான கேசரித்துண்டுகள் 
விருந்தினரை,
வீட்டுக்குழந்தைகளை,
கட்டிகளின்றி கிளறிமுடித்தவளை
என எத்தனை பேரையோ 
பரவசப்படுத்திய காலத்தில்
புறப்பட்டோம்.
அதிகபட்ச உபசாரத்தின் அடையாளமான 

கேசரித்துண்டுகள் மஞ்சள் நிறம்
உற்ற காலை
நாம் கொஞ்சம்
அந்த நிறப்பொடி போலக் 

கொஞ்சமே கொஞ்சம் திடுக்கிட்டோம்.
மூடநெய்பெய்து முழங்கை வழிவார 

சர்க்கரைப்பொங்கல் தின்று சலிப்புற்ற சாமியெல்லாம்
கேசரித்துகள்களில் பசியாறத் தொடங்கியபோது
நமது உலகம் வண்ணமயமாகிவிட்டது
குட்டி குட்டி குப்பிகளில் நிறைந்த
வாசனாதி திரவியங்களும் பொடிகளுமாக 

பொங்கும் நிறங்களில் படைக்க விரும்புகிறோம்.
கேசர்பாதாம்,பிஸ்தா பச்சை,

வாடாமல்லி வண்ணங்களில் ததும்பும் 
பண்டபாத்திரங்களைப் பார்த்து 
பெருமூச்சு விடாதிரும் ஈசனே
இதிலாவது வண்ணங்களைத் தக்கவைக்கிறோம்.
எல்லாம் ரசாயனம்
எம்மைப்போல் குடல் பெறவில்லை
நீர்



வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...