வியாழன், நவம்பர் 23, 2017

வீழ்சருகின் குரல்

தரையோடு படர்ந்து கிடக்கிறது குப்பைக்கீரை
பெயரின் கண்ணாடியில்
முகம் பார்க்கத் தெரியாதவரை
பிழைத்தேன்

********************************************************

வீதிகளற்ற கனவில் 
தினமும் தாவிக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி 
எதிர்ப்படும் கைரேகை பட்டழிகிறது

***********************************************************
புல்லையும் அளவாகக்
கத்தரித்துவிட வேண்டிய
உலகில் 
விடுதலை கீதம்
பாடிச்சுற்றும் பொன்வண்டே
உன் சின்னச்சிறகுகள்
கண்டு பட படக்குதென் இதயம்


***************************************************************
மேல் கீழாக எழுதிப் பார்த்தேன்
கீழ்மேலாகவும்
இடவலம் வல இடம்
எப்படி எழுதிடினும்
குன்றா கசப்பு 
தேனால் மெழுகித்தான் என்ன


************************************************************
விழுதாடிக்கொண்டிருந்த
காற்றைப் பார்த்து சிரித்துக்கொள்கிறது
அடர்கிளை
இங்கோ
அடர்கிளையின் இலை
துறந்த ஒற்றைக்குச்சி


**********************************************************
கழிவிரக்கப் புன்னகைக்குப் பதில்
காறித் துப்பிவிட்டு
சுருண்டது நிழல்


*****************************************************

இந்த நதியின் அலைகளுக்கப்பால்
இந்த முகடுகளின் மேகப்பூச்சுக்கப்பால்
இந்த நீலத்தின்
கூசும் ஒளிக்கப்பால்
இருப்பதெல்லாம் இருள்
ஏன் இத்தனை திரை


********************************************************
இலை இலை இலை
அடுக்கடுக்கடுக்காக
இலை
வளைந்து நெளிந்து
நுழையும் கீற்று அதுபோக்கில்தான் தரை தொடுகிறது
கோணல் புன்னகையென
சலம்புகிறது வீழ்சருகு


**********************************************************
எதுவுமே நினைக்காதவர்கள்
பற்றிக்கூட
என்ன நினைப்பார்களோ என 

நினைத்துக்கொள்கிறீர்கள்


நனையும் குப்பை


கோடி கோடி இலைகள்
உதிர்ந்து கொண்டே இருக்கின்றன
அந்த ஒற்றை இலை
சுழன்று விழுந்தது
ஓரலை இழுத்து விழுங்கியது
ஏனோ நடுங்குகிறது


***********************************************

உங்களைப்பற்றி 
நினைத்துக்
கொண்டேயிருக்கையில் நீங்களே 

வருவது அற்புதம்தான்
நினைத்த மாதிரியே
வந்திருந்தால்


************************************************

நசநசத்துக்கிடக்கிறது
குப்பை
ஞாபகங்களைப்போல
மழையில் நனைந்துகொண்டு


***************************************************
யாரையோ யாருக்கோ
பிடித்திருக்கிறது
அது
உங்களுக்குப் பிடிக்கிறதா
என்பதே உங்கள் பிரச்னை


***********************************************


செவ்வாய், நவம்பர் 21, 2017

அப்படியும் இப்படியும்

இறந்தவன் பெயரை எப்படி மாற்றுவது
இறப்பதற்கு முன்பாகத்தான்
அழகான ஒரு படத்தை முகநூலில்
அடையாளப்
படமாக்கியிருக்கிறான்
முகவரிக்குறிப்பேட்டில்
அலைபேசி சேமிப்பில் எண்ணாக எழுத்தாக
அடங்கிக்கிடக்கும் நினைவுகளை
முகநூல்வழி ஆட்டிப்படைக்கும்
அவனிடம் சொல்ல வழியில்லை
போனவன் பெயரைநினைவூட்டாதே என
இவனிடமாவது 
சொல்ல முடியுமெனத் தோன்றவில்லை
*******************************************************************

பாதுகாப்பாக உணர 
முற்படுகிறது ஒரு ஆயுதம்
ஏந்தியிருப்பவனும்
 எதிர்கொள்பவனும்
 மறைத்தும் மாற்றியும் 
ஏமாற்றியும் 
பாதுகாப்பைப் போர்த்திக்கொள்ளத் 
துடித்துக்கொண்டிருக்கையில்
ஆயுதத்தின்
பாதுகாப்புணர்வுக்கென்ன அவசரம்
**************************************************
ஆயுதங்கள் அறிவதில்லை அழிக்கவே பிறந்த கதை

*************************************************************
இது உனக்கான நேரம் என்பதை 
எப்படியாவது சொல்ல விரும்புகிறாய்
நீயே மறந்தும் போகிறாய்
வேறு வழியின்றி
**************************************************
இப்படி இருப்பதில்
குற்றவுணர்வு மிக
அப்படி ஆக முயல்கிறாய்
அப்படி இருப்பதிலும்
குற்றவுணர்வு கிளைக்கும்
எப்படியேனும் மாறத் துடிப்பாய்
அப்படி இப்படி இருப்பவர்கள்
அப்படியே இருப்பதைக் கண்டு
வியந்தபடி
*********************************************



வீட்டுக்குப் போகும் வழி


நாம் வீட்டுக்குப் போகும் வழியில்
இரண்டு அல்லிக் குளங்கள்
ஒரு ஆறு 
கொண்டையன் வாய்க்கால் ஆற்றில் சேர்த்தியா
என்ற சந்தேகமும் இருந்தது
பாதையோரப் புளியமரங்களின் முதற்குத்தகை
நமக்கு
கொடுக்காப்புளி.,அருநெல்லி,
நாவற்பழத்துக்கு சற்றே பாதை விலகியும்
நடையிலும் ஓட்டத்திலும் சேர்த்தியிலா போக்கில்
சிதறாது சேகரிக்க முந்தி வேண்டியே
முந்திப்போட்ட தாவணிகள்
திடீர் பாண்டி கட்டங்கள் 
நேரமிழுத்தபோதும்
அம்மையர் புலம்பவில்லை
குட் டச் பேட் டச் தெரியாத தடிக்கழுதை என்று
வாசலில் வண்டி ஏற்றி கம்பிச் சிறையிலிருந்து
கட்டிடச் சிறைக்கு இடம் மாறித் திரும்பும்
ஏழுவயதுப் பெண்ணிடம் 
எப்படியும் சொல்லிவிடவேண்டும்
இவ்வார விடுமுறையில்
என்ன இருந்தாலும்
காலில் முள் படாத நாகரீக காலம் இது

வண்ணக் குழம்போடு திரியும் கடவுள்

எந்த இரண்டு புள்ளியில் பொறி உறங்குகிறது
எனத் தெரியாது 
மாற்றி மாற்றி உரசிக் கொண்டிருக்கிறோம்
நேசத்தின் இலைகளின்மேல் பனி மூடிக் கிடக்கிறது
பசிய ஒளி சுடராமல் இற்று விழுந்து விடுவோமோ
என்று நடுங்குகிறது கிளையோடு
காற்றோ தன்னிடம் வனம் உரையாடக் காத்திருப்பதாகப்
புறப்பட்டு வருகிறது
தப்பித் தப்பி நடக்கும் எல்லாவற்றுக்கும்
அமரத்துவம் பூசிவிட

வண்ணக் குழம்போடு
திரிகிறான் கடவுள்
அவனிடமிருந்து பிழைப்பதுதான் பெரும்பாடு

எங்களுக்கென.....

பேசத்துவங்குமுன் சற்றே
தொண்டை கமறுகிறது
உனது சொற்களா எனதா
எதைத் துப்புவது என்ற
தள்ளுமுள்ளுதான்
இதற்கு விக்ஸ் என்செயும்
ஸ்ட்ரெப்ஸில்ஸ் தான் என் செயும்


*************************************************

நீங்கள் நம்பவே போவதில்லை
எங்களுக்கென்று ஒரு உயரம்
இருந்ததையும்
எங்களுக்கென்று ஒரு துயரம்
இருப்பதையும்

கண்ணீராலாவதென்ன
***********************************************

கதவைத் தட்டுபவர்கள் என்று
யாருமே இல்லை
மின்சார அழைப்புமணி 
வைக்கத்தொடங்கிய பின்னும்
கதவைத்தட்டி அழைப்பவர்கள்
கதவைத்தட்டி நுழைபவர்கள் இருந்தார்கள்
அப்படி யாரும் தட்டாத
பொழுதுகளிலும்
தட்டிய ஒலியின் பிரமையில்
திடுக்கிட்டு எழுமளவு
கதவைத் தட்டும் ஒலி நம் இதயத்தில்
கேட்டுக்கொண்டிருந்தது
இங்கோ தட்டுவதற்கானதல்ல கதவு
என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்
எப்படி நுழைகிறார்கள் என்பதுதான்
தெளிவாகவில்லை


கிணற்றகல இருள்

இருளை விசிறுகிறவர்கள்
ஒளியைக் கைப்பற்ற 
உங்களைத் தூண்டுகிறார்கள்
அது விதியாகத்தான் இருக்கட்டுமே

**********************************************

கிணற்றகல இருளில் மிதந்து கொண்டிருந்த 
இரண்டு 
நந்தியாவட்டைகள் மட்டும்
இன்னும் வெளிச்சமாக

**********************************************

தூவானத்துக்கென்று
தனி நிறம்
உங்கள் எந்த தூரிகையிலும் இல்லாதபடி

********************************************************
நினைத்தது நிஜம்
நினைக்காததும்
இங்கிருப்பதெல்லாம்
இங்கில்லாததும்தானே

*****************************************************

செம்பருத்தியின் அடர்சிவப்பு காணாதவனே
சாம்பிய முகத்தோடு நாள் திறப்பதன்றி 
ஏது வழியுனக்கு

***************************************************************


போகாத இடங்களின் பட்டியல்


அதாவது 
போக வாய்க்காத இடங்களின் பட்டியல்
இது ஒன்றும் நிலாவையும்
செவ்வாயையும் 
அமெரிக்காவையும் அண்டார்டிகாவையும் பற்றியதல்ல
ஊரிலேயே முதலில்
பால் சர்பத் அறிமுகப்படுத்திய தேரடி
முருகன் கடை
தெருமுனையில் கண்ணாடிப்பெட்டிக்குள்

 உப்பியபடியே இருக்கும் 
பூரிகளின் காவலனாக 
பாய்லர் முன்
நின்றவாறே வானையும் பூமியையும்
தேநீர் ஆற்றிப்பிணைத்த மணிகடை
பேன்பார்ப்பதும்
பூ தைப்பதுமாக உறவாடி
கீழத்தெரு குடிபோன
பேபியக்காவின் புதுவீ்டு
இன்னபிற தலங்களே


முற்றுப்புள்ளிக்கு முன் உள்ள தூரம்

உங்கள் கண்களுக்கே 
புலப்படாத 
ஒரு முற்றுப்புள்ளிக்கு முன் 
எவ்வளவு தூரம்

*************************************
அவரவர்க்கென்று
பிரத்யேக பாவமும்
பிரத்யேக சொல்லும்
பிரத்யேக தூரமும்
பிரத்யேக வேகமும்
பிரத்யேக ஆயுதங்களும்
*****************************************

அவள் பெயர் கொண்டவள்
அவள் போலில்லை
அவள் போலிருப்பவள்
அவள் பெயர் கொள்ளவில்லை
எப்போதேனும் 
இவள் அவளையும்
அவள் இவளையும்
நினைவூட்டி
திடுக்கிட வைத்து விடுகிறார்கள்

********************************************
உங்களிடம் எப்படி எல்லோரும் 
கேள்விகளைத் தயக்கமின்றி எழுப்புகிறார்கள்
நீண்டகாலமாக இதையே யோசிக்கிறீர்கள்
நீங்கள் யோசிக்கத் தொடங்கியதிலிருந்தும்
அதற்கு முன்பாகவும்
அது அப்படிதான் இருக்கிறது 
கேட்டுக் கொண்டே இருக்கும்வரை
இருக்கும்

*****************************************************
பார்க்காதது போல
நகர்ந்தார்
ஆசுவாசமாக இருந்தது

*****************************************

இரட்டை நீல டிக்

எல்லாவற்றையும் எப்படியும் 
திட்டமிடும் வீட்டிலும் 
திடீரெனப் பூத்து விடுகிறது 
ஒரு பூ

***********************************************

அட்டை கிழிந்த 
முனை மடிந்த அந்தப் புத்தகத்தினுள் 
மயிலிறகெல்லாம் இல்லை 
ஆனாலும் 
எடுத்து எடுத்து 
பார்த்துக் கொண்டிருக்கிறேன்


***************************************************
இரட்டை நீல டிக்
மற்றும் பேரமைதி
இதுவும் விடையாகலாம்


******************************************
யாரேனும்
என்றேனும்
எப்போதேனும்
புரிந்து கொள்ளக்கூடும்
இல்லாமலும்....

எதனால்தான் என்ன
எனும்போது
அதனாலும் ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை என்பதில்
எல்லாம் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்


நிறமிலியானவள்

திருத்தமான ஒரு சித்திரத்தை 
வரைந்தே தீர்வதென்றே நீ அமர்கையில் 
கையிருப்பில் வண்ணமேயில்லை 
அதனாலென்ன 
என் பசுமையெலாம் குழைத்தளிப்பேன் 
கசிந்துருகும் உளமஞ்சள்
இளமஞ்சளுக்கீடாகும்
கண்மணியில் நீலக்கீற்று 
கரைத்த சாந்தோ துளிப்பொட்டு
வரைந்து முடித்த ஆசுவாசத்தில் 

நிமிர்ந்தபோது 
ஒரு நிறமிலியாகி நின்று கொண்டிருக்கும் என்னை
இயல்பாக 

கடந்து செல்கிறாய்

********************************************************************

நீ அப்போது வெட்கப்பட்டிருக்க வேண்டும்
என்றார் நண்பர்
அப்படி ஒன்றும் நிகழவில்லை
அது வழக்கமும் இல்லை என்றேன்
வாழ்வின் நுண் கணங்களை இழந்தவள்
எனப் பரிதாபப் பட்டார் 
அப்படி ஒன்றும் தோன்றவில்லை
அதுவே வாழ்வும் இல்லை என்றேன்
ஒரு பெண்
பெண் போல இல்லாது போவதன்
அவலங்கள் குறித்து
அவர் இந்நேரம் 

ஒரு கட்டுரை வரைந்திருக்கக் கூடும்
நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்
வெட்கம் கொள்ளாது போன
மனிதர்களைப் பற்றி
நுண் கணங்களின் வரையறை பற்றி
எங்களை எங்களைப் போலக்
காண முடியாத காரணம் பற்றி ....

"இருக்கட்டும் இருக்கட்டும்"


கடவுச் சொற்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
திரும்பத் திரும்ப
மின்னஞ்சல் ,முகநூல்,வானொலி,கட்செவி 
எங்கெங்கும் எச்சரிக்கை
துரத்திக்கொண்டே இருக்கிறது
பூட்டி வையுங்கள்
இறுக்கி வையுங்கள்
மாற்றுங்கள்
ஊகிக்கும்படி இருக்க வேண்டாம்
ரகசியங்களை உற்பத்தி செய்வோர்
ஒருபுறமும்
ரகசியங்களை உடைக்க விழைவோர்
ஒருபுறமுமான உலகில்
ரகசியங்களைப் பாதுகாக்க விழைவோர்
ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.
உடைப்பவர்கள் பாதுகாப்பதும்
உற்பத்தியாளர்கள் உடைப்பதும்
என முரண் இணைகளும்
இருப்பதைப் பார்த்து
ரகசியங்கள் சிரித்துக் கொள்கின்றன
முதலில் சூட்டியவை
திருத்தியவை,மாற்றியவை,
ஒவ்வொரு தேவைக்குமான நடப்பு இருப்பு .....
தலைமுதல் கால்வரையிலான ஒவ்வொரு அணுவிலும்
கடவுச் சொற்களையே சுமந்திருக்கிறீர்கள்
அவற்றையே சுவாசிக்கவும்
அவற்றையே உண்ணவும் கூடிய வாழ்வில்
அவற்றை கழித்திடவே முடியாது
சுமந்திருக்கும் நீங்கள்
இந்த வரிகளுக்குள்ளும் அவற்றின் அங்கங்களைத்தான்
தேடுகிறீர்கள்
உங்களைத் தவிர
வேறெவராலும் அவற்றை அடையாளம்
காண முடிகிறதா என ரகசியமாக
நோட்டமிடுகிறீர்கள்
உங்கள் கடவுச் சொல்லின் ஒரு எழுத்து
ஒரு பகுதி
ஒரு பாணி
வேறெவரிடமும் இருக்கக் கூடும்
என்பதே உறக்கம் பிடுங்குகிறது.
உங்கள் உடைமை எல்லாம் உங்கள் உடைமை அல்ல
உங்கள் மூலம் உடைமையாக இருப்பவை
இருக்கட்டும்.


தயாவனம்

சொல்வதற்கென்று ஏதுமில்லாமல் போகவில்லை
கேட்கும் இடத்தில் காகம் கரைந்து கொண்டிருக்கிறது
நிசப்தத்துக்கும் இரைச்சலுக்கும் 
வேறுபாடு மறைந்த காலம் 
அரூபக் கதவுகளைத் தட்டித்தட்டி 
தட்டித்தட்டி
உங்கள் கரங்கள் காய்த்துக்கிடக்கின்றன
என்றாலும் 

வெளுக்கும் என்றே உறங்கப் போகவும்

*********************************************************
இருத்தல் என்பதற்கு
இருத்தலே பொருளல்ல
தொலைந்து போனதாகவும் இருக்கலாம்
தொலைந்து போனதையெல்லாம்

 கண்டடைந்துவிடும் அதீத நம்பிக்கையில்
வெளிச்சத்தின் மேலேயே
தேடிக்கொண்டு திரிகிறேன்
வெளிச்சத்தின் உள்ளடுக்கில் 

உறங்கும் இருள் சிரிக்குந்தோறும்
திடுக்கிட்டு விட்டு
தொடர்கிறேன்
வெங்காயத்தோல் எத்தனை அடுக்கென்று சொல்ல


******************************************************************

தயாவனம்

வாகனவரிசையில் 
ஒளிர்பச்சை தரிசனத்துக்குள்
எத்தனை முறை....
மெய்யும் பொய்யும் புனைவும் 
தவிப்பும் கொண்டு 
யாரிடமோ நீட்டப்படும் கரங்களுக்கு
சாந்தி செய்ய வாய்க்காத
குறுகுறுப்பு துளிர்த்து துளிர்த்து 
விர்ரெனத் தாண்டுகையில் பேயாட்ட விருட்சமாகி
இரு நிமிடத்தில் இலையுதிர்ந்து
பட்டென பட்டு
அரை நிமிடத்தில் அப்புறமாகி
அடுத்த தயாவனம் 
கடைத்தெருவிலோ
சிவப்புத்தடையிலோ படரும்


இல்லாதபோது பெய்த மழை

இல்லாதபோது மழை பெய்திருக்கிறது
எப்படித் தெறித்திருக்கும்
எப்படி வழிந்திருக்கும்
எப்படித் தேங்கியிருக்கும்
எந்த சுவடும் இல்லாது போன 
இந்த மாலை துக்கமாய் இருக்கிறது
இருக்கும்போது

நடப்பது எதையுமே உணரமுடியாது போகிறது
நீ ஏன் இல்லாதபோது நடந்த ஒன்றைப்பற்றி
இவ்வளவு வருந்துகிறாய்
நாளையும் மழை வரலாம்

என்று நீ ஆறுதல் கூறுகிறாய்
உணராத சொற்களோ புதிய துக்கம்
நேற்றைய மழையும்
நாளைய மழையும்
ஒன்றாகி விடுமா

நாடும் நாட்டு மக்களும் .......

சில சாலைகளின் படங்கள் 
நம்மை நடக்க அழைக்கின்றன
நடந்தவர்களுக்குத்தான் தெரியும் 
எப்போது 
தகிக்குமென

*******************************************

பூஞ்சையான ஒரு நாய்க்குட்டி
அலைபாய்ந்து கொண்டிருக்கிறது
உங்கள் கவலையோ
அது வாலாட்டுவது 
யாரிடம் என்றுதான்

****************************************
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதில் 
கூச்சம் அடையுமளவு 
அவர்கள் நாகரிகம் பழகவில்லை
பார்த்துக்கொண்டே இருப்பது தீர்வல்ல 
என நீங்கள் உணரவில்லை
நாடும் நாட்டு மக்களும்....
...........,..........
அதிகம்போனால்
என்னவாம் என்பீர்கள் சந்தானம் போல
அவ்வளவுதான்


****************************************

அடித்துப்புரண்டோடும்
காட்டாற்றோரச் சிறு
பாறையாகக் கிடந்திருந்த நாளை நினைக்கிறது
கடலோரப் பெருமணல்
வாழ்வுதான்


***************************************

எவ்வளவோ நினைத்திருந்த ஒன்று 
ஏதுமற்றுப்போவதுவும்
ஏதுமறியா ஒன்றுக்காய்
எவ்வளவோ ஆனபின்னும்
ஏதேதோ தோணுவதும்
இவ்வளவுதானோ என்ற
கனத்துடன் அலைவதுமான
வாழ்வை
வட்டிலில் வைத்து நீட்டியிருக்கும் உலகை
கண்ணீரை விழுங்கும் கணத்தில் கூட 

காறித்துப்ப விட மாட்டேன் என்கிறீர்கள்
அடக்கிய கண்ணீருக்கு 

ஆயுள் முப்பது நாளா


மறைக்கும் குழல்

வெற்று நெற்றியில் 
ஒற்றைவிரலால் தள்ளிக்கொண்டேயிருக்கும்
முதியவளின் கண்ணை 
இன்னும் மறைக்கிறது
சுருண்டு ஆடும்
குழற்கற்றை
***********************************************

விழுதுகள் படர்ந்த தூரம் விட்டுப் 
பாதை போடச்சொல்லி கெஞ்சிப்பிழைக்கும்
பிழைப்பில் ஆலென்ன
அரசென்ன
சிறுமை சிறுமை எனக்கரைந்த காகம் 
அமர மின்வடமும் தோதுதான்


**********************************************

பிடித்திருப்பது எதுவெல்லாம் 
எனப்பிட்டு வைக்கத் 
தெரியாத பிரியங் கொள்ள 
நாடினேன் பிதாவே
பிட்டுப்பிட்டு வைப்பதென்ற வரியை மட்டும்
கோடிட்ட இடத்தில் நிரப்பியது நீயா
நானேதானா


*********************************************************


கைகளுக்குள் நிறைந்த நீரும்
கையிடுக்கில் உறுத்திய மணலும்
இப்போதும் இருக்கிறது
ஆற்றில் இல்லாத ஈரத்தை
அங்கேதான் கண்டடைந்தேன்



******************************************************

யாராவது ஒருவர் அரங்கிலிருந்து வாருங்கள்எ
ன மந்திர வித்தைக்காரர் அழைக்கும்போது 
நீ போவாயென நானும்
நானோ என நீயும்
ஆசனத்தை இறுகப்பற்றியவாறு பார்த்துக்கொண்டோம்.
தற்காலிகமாக தொலைவதில் 

என்ன சுவாரசியம் என 
நிச்சயம் சொல்லிக்கொள்வோம்
அடுத்த சண்டையில்


*****************************************************


பெருக்கெடுக்கும் கண்ணீர்நதியை விட
அதிகம் நனைத்து விடுகின்றன
வீழாது சுரந்து நிற்கும்
சில துளிகள்




***************************************
















வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...