திங்கள், டிசம்பர் 04, 2017

கட்டைவிரல் கீழ் யானை

கண்முன்னால் நின்று கொண்டிருக்கும் யானை 
துதிக்கை தூக்கி பிளிறுமுன்
இதோ 
இந்தக்கட்டைவிரல் நுனியால் 
அழுத்திவிடலாம் போலத்தான் இருந்தது

*************************************************************
சுரைக்கொடி யோசிக்கவில்லை 
கூரை கிடைக்காது குப்பைகளோடு பிணைந்து படர
யாரோ ஒதுங்கிய இடமென்ற
கவலை 
அந்தப்பிஞ்சுக்குமில்லை

*************************************************************
ஏதாவது சொல்லியிருப்பாய் 
என்ற சமாதானத்தோடு புலன் தீட்டுகையில் 
மௌனத்தின் கல்லை அழுத்தி 
அடைத்துவிட்டுப் போனாய்
குகை இருளுக்கு வெளியே அதிரும் முழக்கங்கள் 
யார் கேட்க
இங்கோ ரும் ரும்மெனச் சுற்றுகிறது
மிச்சம் வைத்த மூச்சு

****************************************************************





முளைக்குச்சி உடைவதையும் 
கயிறு நைந்து அறுவதையும் 
யாரும் உவப்பதில்லை
சுற்றுக 
அனுமதிக்கப்பட்ட தூரம் மட்டும்
உன் கயிற்றின் விட்டம் உன் உலகு
எனதும் 
நாம் அடித்த முளைகளின் மேலிருக்கட்டும் 

எப்போதும்
ஒரு கண்

****************************************************************

எதைக்குறி பார்ப்பதென்றே
முடிவுசெய்ய விடாமல்
கரகரவென்று சுற்றும் சக்கரத்தின் முன் 

அம்புடன்
நிற்கிறது வாழ்க்கை


*****************************************
குமுறிக்குமுறி புரளும் நினைவுகளைப் 
புதைத்துவிட்டு 
மேலே இரண்டு நித்யகல்யாணிச்செடி வளர்த்து
வசவுகளை வார்த்தே வந்தாலும்
அதுவும் சிரிக்கிறதே
பூ மனசுதான்


***********************************************************************************



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...