திங்கள், டிசம்பர் 04, 2017

மூக்குத்திப் பெண்கள்


எப்படியோ முடிந்தது
பிய்த்துப் பிடுங்கும் வறுமையிலும்
தோடு மூக்குத்தியை ஆடை போல அடிப்படையாய்ப்
பார்க்க
அதனினும் கொடிதான பொழுதுகளில்
அடகுக்குப் போகும் போதும்
கவுரவத்தைக் காப்பாற்றடி என்று
காதணிகள் கண்ணீரோடு சொல்லிப் போனது
எண்ணெய் படிந்த ஒற்றைக்கல் மூக்குத்தியிடம்
அணிவிக்கும் பொழுதுக்கு
வைபவப் பெருமையை அடையாவிடினும்
தோடுகள் மூக்குத்தியை
துணைச் சொல்லாகவே ஏற்றன.
அறியாத வயதில் சுழற்றிவிட்ட திருகைக்
கழற்றும் கொடுமை கருதியே பிழைத்தது
பலநேரம்
துயரங்களில் சின்னது என்ன பெரியது என்ன
பாழாய்ப்போன கண் கலங்குகையிலெல்லாம்
தொண்டையடைத்து வழியும் சளியைச்
சிந்திஎறிந்தால் இறங்கும் பாரம்
இடையூறுஎன்னவோ குத்தும் திருகுதான்
உழைப்பின் நெருப்பு தணலும் முகத்தில்
மிஞ்சிய ஒற்றைப் பொட்டாக
ஒற்றைக்கல் மூக்குத்தியின் சுடரிலே
இருள் கடந்த நாட்கள்தான் எத்தனை
முத்து பெரியம்மா எது தவறினாலும்
மெனக்கெட்டு திருகு கழற்றி
வெள்ளிக்கிழமை எண்ணெய்க் குளியல்களில்
சிவப்புக்கல்லும் வெள்ளைக்கல்லும்
தனித்தனியாகவே தெரியுமளவு ஏழுகல்லையும்
காத்து வந்தாள்
அவள் பொறுமையின் பெருமைகளில் ஒன்றாகவும்
திறமையாகவும் சொல்லப்பட்ட அதையும்
பறித்துச் சென்றான் குடிகார பெரியப்பன்
குடல் வெந்த மரணத்தில்
பழஞ்சீலையில் சுருண்டுகொண்டு
குளிர்மறந்த நாட்களில்
நாம் அறிந்திருக்கவில்லை
அந்தக் கணப்பை மூட்டிக் கொண்டிருப்பது
அம்மையின் மஞ்சளேறிய மூக்குத்தியில்
மிச்சமிருந்த நெருப்பென்பதை

ஆசையின் சுடரை வைரமாக்கிய பெண்டிரின்
கைகளுக்கு விலங்குண்டு
கோசும் தொங்கலும் கூடிய அந்தஸ்தின் அடையாளம்
இரண்டில் ஒன்றைக்கைவிட எடுத்த முடிவில்
வலதாகவே இருப்பதன் சௌகர்யம்
வீடு சொல்லிக் கொண்டேயிருக்கும்
இடது தேவலாம் என்றாலும்
எந்தப்பக்கம் என்பது அவள் தேர்வல்ல
ராஜமாதாக்களின் நிரந்தர அசௌகர்யங்களில்
ஒன்று
நிரந்தர சளித் தொங்கலாய் ஆடிய புல்லாக்குகளாக
இருந்திருக்கக் கூடும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...