திங்கள், ஜூலை 16, 2018

நெட்டை மரம்

பின்முதுகின் கண்கள் உங்களைத்தான் பார்க்கின்றன
குறிப்பாக உங்கள் இதழ் அரும்புகிறதா என
கற்பிதம் செய்து கொள்ளுங்கள்
அது நெட்டை மரமென

*******************************************************************************

வீசி எறிந்துவிட விரும்பினேன்
நீளாக்கைகளில் நிறைந்திருந்தது தேன்கூடு
விலகிச்செல்ல எழுந்தபோது
நில்லாக்கால்கள் பதிந்திருந்தது நெடுவானில்
கரையேற எத்தனித்தேன்
முங்கியெழுந்த தலையின்
நாற்புறமும் நீர்வெளி
நெருப்புக்குவியலின் நடனத்தில்
நேர்நிற்கும் ஒற்றைப்புள்ளி
தேடும் செம்போத்து
வருமோ
பற்ற விரல் தருமோ
அதற்கும் சுடுமோ....

**************************************************************

ஒரே அளவிலான சன்னல்கள்
ஒரே மாதிரியான வெளிச்சம்
ஏறியிறங்கும் அலைவழி உடைந்த படகு

**********************************************************
காயப்படுத்துவதை விருப்புடன் செய்யும்
உன் கைகளில் சிறு துரும்பையும் யாரும் கண்டதில்லை
உன்னால் முடிகிறது
யார் மனதையும்
ஒரு கோவை இலையைக் கிள்ளி கசக்கி
சிலேட்டின் எழுத்தாக்கிட

****************************************************************

தீப்பொட்டுகள் சுடர்ந்து கொண்டிருக்கின்றன
உயர வேறுபாடிலாது எல்லாக்கிளைகளிலும்
நல்ல பெயர்தான்
கல்யாண முருங்கை

****************************************************
மயில் வரக் காத்திருக்கையில் 
பூனைக்குட்டிதான் வருகிறது
செத்த எலி வாடை உணர்த்தும் கவிச்சிப்பார்வையோடு
குமட்டுகிறது
இதுவரை உணராக் குற்றவுணர்ச்சி

**********
**************************************

பதற்றமாயிருக்கிறது
பழுத்துவரும்
இலைக்காம்பில் 
புதுக்கூடு

*********************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...