செவ்வாய், ஆகஸ்ட் 14, 2018

வழிவிடாக் கிணறு



வழிவிடாக் கிணற்றடிகளிலிருந்து
தெருமுனை அடிபம்புகளில் 
குடத்தோடு நின்றே நசுங்கினாள்
ருக்கு பெரியம்மா
உரிமை 
முன்னுரிமை
சலுகை 
யாவும் 
குழாயடிச் சொற்களாகவே 
அறிந்திருந்தாள் ராசாத்தி அத்தை
அவரவர் வீடு அவரவர் குழாய் 
என்றொரு நாள் பிறந்தபோது 
விடுதலை தரிசித்தாள் பூமா சித்தி 
அதிலும் காற்று வந்து 
உறக்கம் கலைத்தது
இன்னும் இருக்கிறார்கள் 
எம் அக்காளும் தங்கையும் மகள்களும் 
இறங்கிய கர்ப்பப் பையையும் 
பொருட்படுத்தாது சிக்குநடை போடுவதும் 
வேலைக்குமுன் வீடுமுழுக்க 
கழுவவும் துப்பவும் நிரப்பி நிரப்பி 
பிளாஸ்டிக் குடம் கண்டவனை 
வாழ்த்தியபடியுமாக

இருபது லிட்டர் கேனில் கணக்கிடப்படும் 
நாளான வாழ்வில் 
வந்தவர்க்கெல்லாம் நீர்ச்சொம்பு தந்த 
மரபு மாற்றியாயிற்று 
நீங்கள் தண்ணீர் என்ற சொல்லுக்குப் 
பொருள் மாற்றியதுபோல

கூவிச் சலித்து 
ஓட்டமே நடையென 
இடந்தேடி தடந்தேடிக் 
குடங்கள் சுமப்பதே பொழுதாகிப் 
போனவளுக்கு 
ஒருகை நீரைச் சேர்ப்பிக்கவும் 
வக்கிலா வாழ்வில் 
பரந்த 
கடல் நீரின் உப்பு காட்சி குமட்டுகிறது
என்கை இறுகப் பற்றுகிறது 
தண்ணீர்ப் போத்தலை
உயிரோவியத்துக்கு நன்றி தோழர் Ravi Palette

ரோஸ் கவுன்

ஒருநாளும் வாய்க்கவில்லை
அவள்போல ரோஸ் கவுனில் சுழன்றாட
பார்த்துவிட்டு வந்தவுடன் 
குழம்பு சுடவைத்து 
தோசை வார்த்த மும்முரத்தில் மறந்தாலும் 
கனவில் நினைவு வரும் 
ஒரு காலத்தில்
அதே ரோஸ் இல்லையென்றாலும் 
அதன் சாயலில் ஒரு ரவிக்கைத்துணி 
எடுத்தபோது ஏனோ நினைவிலேயே 
நினைவு வந்தது 

இப்போது சுற்றினால் தலை சுற்றும் என
சிரித்துக்கொண்டாள்

அச்சம் என்பது....

பொய்யுரைகளுக்கு
பொய்ச்சிரிப்புகளுக்கு
பொய்ம்முகங்களுக்கு
ஒரு மச்சம்கூட இல்லையே சகாவே


***************************************************************


அது முதலில் சன்னலுக்கப்பால் நின்று
 வெளிச்சமிலாப்பொழுதுகளில்
 எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது
ஏதோ நிழலாடுகிறதே என
தலை நீட்டியபோது
அரளிக்குத்துக்கும் சுருள்
குரோட்டனுக்கும்
நடுவே பதுங்கிக்கொள்ளும்
பார்த்தும் பாராதது போல்
உள்திரும்புகையில்
துணிந்து கதவருகே ஒண்டி நிற்கத் தொடங்கியது
இரவலனாக நின்ற பரிதாபம்
காணச்சகியாது
ஒரு பிடி அன்னமிட்ட நொடி முதல்
கர்ணகுண்டலமானது
செஞ்சோற்றுக்கடனாம்
ஆடிக்கொண்டிருக்கும் அவலமே
ஆட்டுவிக்கிறாய் ஆடுகிறோம்





வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...