சனி, நவம்பர் 03, 2018

ராஜலட்சுமியைப் பார்த்தவள்


என்னால் சொல்ல முடியாது
சற்றுமுன்கூட பதற்றமானது

ஒளிபொங்கும் பாதையின்
சிறுகிளைச்சந்தில் தனித்து நடந்த 
சீருடைச்சுடிதார் சிறுமகள் பின்னால் 
நடந்து போன என் மனமே 
திரும்பாதபோது எப்படிச்சொல்வேன்

விற்பனைப்பணி முடித்து பேரங்காடி வாசலில் 
பேருந்துக்காக நிற்கும் ஒடிசல்பெண்ணின் 
சேலைக்கறை பார்த்தே கசங்கிவிட்ட
என்மனதால் எப்படி இயலும்
கொத்தாய் விழுந்த தலை 
கொண்டவளைப் பற்றி எழுத

வெஞ்சினங்கொள்ள
வெறிகொண்டு தாக்க
வெட்டித்தறிக்க
நூறாயிரங்காரணமுள்ள ஊரில்
ஒற்றைச்சிறுமி மேல் அத்தனையும் இறக்கிய 
இழிமகன் மேல் துப்ப
அடிவயிற்றிலிருந்து ஆங்காரம் தேக்கி 
எச்சில் கூட்டலாம்
எரிதழல் வீசலாம்
எழுதவும் கூடுமோ

சொட்டிய ரத்தம் பார்த்து
உறைந்த உடல்
உதறுகின்றது
சாதியா மதமா இனமா
பணமா
என்ன சனியனாகவும் இருக்கட்டும்
அவன் வீச்சரிவாளில் ஒட்டிக்கொண்டிருந்த அதை எப்படிக் கழுவப்போகிறீர்கள்
எட்டூர் வீச்சம் இன்னும் உங்கள் நாசி துளைக்கவில்லையா

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...