சனி, மார்ச் 31, 2012

நீலங்களின் திரை

                              வாளி நிறைய நீலக்குழம்போடு
                              வண்ணம் தீட்டிக் கொண்டே    
                              போனார் கடவுள்...
                              இன்னும் 
                              எவ்வளவு நாளாகும் 
                              என்றான் வழிப்போக்கன்...
                              தீரா நீலமும்
                              தீரா வானமும் 
                              பார்த்தபடி 
                              புன்னகைத்தார் கடவுள்..
                              பிறிதொருநாள் 
                              கடல் பார்த்தான் வழிப்போக்கன்.
                              கரைத்த இடமா..
                              கழுவியதா ...?
                              கடவுளைக் காணவில்லை...
                              நீலத்திடம் மொழியில்லை...
                                                       
 
                                  
                                 

புதன், மார்ச் 28, 2012

நிழல் தேடவில்லை


புதிய மாடிப்படி .... 
                                                   
க்ரோட்டன்சின்  எதிரி! 
தொட்டி துறந்து 
வேர்பிடித்தபின் 
இளவெயிலும் படராத்தடுப்பாய் 
அது முளைத்தது !
இயலாமையோடு 
இடித்தபடி குரோட்டன்ஸ் 
அந்தப்பக்கத்தில் நிற்கும் 
வாழை ,முருங்கையிடம் 
விசாரித்தது
விதையா,பதியமா
எப்படி வளர்ந்தது மாடிப்படி என்று?

சனி, மார்ச் 24, 2012

அபி உலகம் -8

துரத்தும் தெருநாய்                                            
அபியிடம்
தனியாய்க் குழைய
அம்மா நினைக்கிறாள்
குழந்தைக்கான பரிவு என்று.
அவளுக்குத் தெரியாது
வீட்டின் செல்ல நாய்த்தீனியில் 
பாதி
ஜன்னல்வழி வெளியேறுவது.......
**************************
களிம்பும் கையுமாய்
அபி வாசலில்......
வெளுத்த புள்ளிப்புண்ணோடு
கடைத்தெருவில்
காசுவாங்கிய யானையை
அப்பா
எங்குபோய்த் தேடுவாரோ    

வெள்ளி, மார்ச் 23, 2012

யுகங்கள் தோறும்

காரை பெயர்ந்த 
கட்டைச்சுவர் ..
புதுக்கருக்கில் 
சுவரொட்டி மறுக்கும்                                                          
ஆள் உயரம்...
...............
மதில்கள் மாறினாலும் 
விரிந்த விழிகளோடு 
பூனை அங்கேயே...
கண்ணாடிச் சில்லும் 
கம்பிவலையும் கூட 
அரூபமாய்த் தள்ளிவிட்டு 
தன இடம் விடாமல் 
எப்போதும்போல் 
இப்போதும் பூனை...
மதில் நிலையற்றது !
பூனை நிலையானது!     
                                        
19 3 12 உயிரோசையில் வெளியானது
 
 
 
 
 

சனி, மார்ச் 17, 2012

விலகிய சக பயணி

பரபரப்பான                                                                                 
நகரச் சந்தடியில் தொடங்கியது ...
புறநகர்த்தனி வீடுகள்,
மிஞ்சிக் கிடந்த
வயல்பரப்பு
தொலைதூரச் சிறுமுகடு
தப்பிய மரக்கூட்டம்
சிற்றூர்க் கடை வெளிச்சங்கள் ....
கூடவே.......
நகர்ந்துகொண்டிருந்த
மேகங்களைக் காணோம் ...........
அனிச்சையாய்
வாய் துடைத்து
உறக்கம் மீண்டபோது.

முந்தையநாள் படக்கதையை
சுவாரசியமாய் நிகழ்த்துகையில்
கண் சொக்கும் ஆச்சியிடம்
கோபித்து எழுந்து செல்லும்
பேபியக்கா போல
மேகங்களும்
மீண்டுவரக்கூடும் !

   

வெள்ளி, மார்ச் 16, 2012

பாராட்ட வருகிறார்கள்



அவசரமாய் 
 
ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை!
 
சம்பிரதாய வாழ்த்து ,
 
அழுத்தும் கைகுலுக்கல்,
 
பொய்யெனப் புரியும் 
 
புனைந்துரைகள் 
 
எல்லாவற்றுக்கும் 
 
முகநூலின்
 
ஒற்றை விருப்பச் சொடுக்காக 
 
புன்னகைக்கலாமா?
 
பல்....?
 
தலையசைப்பு 
 
சம்மதமாகவா ?மறுப்பாகவா?
 
மையமாகவா?
 
கண் பணித்துவிடுமோ...
 
சீரான சுவாசத்தோடு 
 
வெற்றுப்பார்வை தோதாகுமா?
 
பெருமிதம்?கூச்சம்?
 
''எவ்வளவோ பாத்துட்டோம்..?
 
இதற்குத் தானே ஆசைப்பட்டாய்....?
 
எது பொருந்தும்....?
 
அவசரமாய் ஒரு கண்ணாடி
 
அல்லது 
 
 ஒத்திகைக்கு ஒரு நல்ல துணை! 

                                            12 3 12 திண்ணையில் வெளியானது .

போக்குவரத்து நெரிசல்

    
எதிரிலுள்ள 
 
அடுக்ககத்தின்
 
பின்பக்கத்திலிருந்து  கிளம்பி,
 
மின்வடம்,தந்திவடம்
 
அளவிலாக்குடியில் தன்னிலை
 
இழந்த பாதசாரிபோல்
 
அண்ணாந்து கிடக்கும்
 
தொலைக்காட்சிக்குடைகள் 
 
அலைபேசிக் கோபுரங்கள்,
 
வழிமறித்து வேடிக்கைபார்க்கும்
 
நட்சத்திரங்கள் தாண்டி 
 
கண்ணுக்கெட்டும் 
 
ஜன்னல் சதுரத்துக்குள் 
 
நிலா 
 
வந்து சேரும்போது 
 
இரவு உணவு நேரமாகிவிடுகிறது ! 
 
                   12.3. 12  உயிரோசையில் வெளியானது  

வியாழன், மார்ச் 15, 2012

நஞ்சாகும் அமுது

சோப்பு விற்க
(எல்லாம் திறந்திருந்தால்)
முப்பது வீடாவது
ஏறி இறங்க வேண்டும்.....!

தள்ளுவண்டி காயின்
பசுமை வாட
தராசுக்கு வேலையில்லை..
தெருமுனை உணவக
தள்ளுபடிவிலையே மிஞ்சும் !

மூட்டை இறக்க வாகாக
அந்திவரை நிற்காது
வந்த வாகனம் ...!

தலைக்கவசத்துக்குள்ளும்
பேருந்து நெரிசலிலும்
பெருகும் ஆறு
உதிர்க்கும் சொல்லில் எல்லாம்
லாவா தெறிக்கிறது ...!

இங்கேயே
கிடந்து இறைபடும்
சூரியனே
எட்டப்போ கொஞ்சம்...
பிரபஞ்சம் பெரிதாமே....? 

திங்கள், மார்ச் 12, 2012

அபி உலகம் -7

அபிக்கு மிகப் பிடிக்கும்
திராட்சையோ
கல்கண்டோ
காலை மறந்தாலும்
மாலை வரை
தின்னாமல்,திட்டாமல்
ஈ ,எறும்பு,
அண்டாமல்
காத்திருக்கும்
அலமாரிப் பிள்ளையாரை!
***************************
மழைக்கால மரவட்டையின்
குறுக்கே
குச்சி நீட்டினான் ஜீவா...
சுருண்டு சுருண்டு
திரும்பிக் கொண்டது !
"நேத்து,ரயில் ஏன்
சித்தப்பா
இப்பிடித் திரும்பல...."
அபியின் கேள்வியில்
தண்டவாளத்தில்
குண்டு வைத்துத்
தகர்ந்த ரயில்
நகர்ந்து கொண்டேயிருந்தது.....

வெள்ளி, மார்ச் 09, 2012

குருவே சரணம்

தகிப்பின் அச்சமோ 
ஒளியின் பிரமிப்போ  
நீள,அகல,தூர 
பிரக்ஞையோ 
இன்றி .....
பறவைகள் பறக்கின்றன 
சூரியனைத் 
தாண்டியும்,சுற்றியும் 
குறுக்காகவும்....   


வியாழன், மார்ச் 08, 2012

அபி உலகம் -6



தாத்தாவும் அபியும் பூங்காவில்...


"சறுக்குமரம் போறியாம்மா?"
"நம்ம தெருவிலே இருக்கே

  

அது என்ன?"
"அது வேப்பமரம்.. "
"தோ...அது... "
"அரசமரம்டா..
அந்தப்பையன் இறங்கிட்டான்...
வாம்மா..."
"இந்த மரத்துல
ஏன் எல(இலை) இல்ல..?"
அன்றுதான் தாத்தா
சறுக்குப்பலகை
சொல்லப்பழகினார்...
***************************
தன் ரயில்
கவர்ச்சி வண்ணங்களில்
இல்லாத ரயிலை
அபி ரயிலென்று ஏற்கவில்லை!
ரயில் மந்திரி முகவரியோ,
ரயில் பொம்மை செய்பவர் முகவரியோ
தேடுகிறார்
அபி அப்பா -முறையிட ...
***************************

செவ்வாய், மார்ச் 06, 2012

வெயில்நதி சிற்றிதழுக்குப் படைப்புகள் அனுப்ப veyilnathi@gmail.com அபி உலகம்-5


  

சரியாகப் படிக்காத
டூடூவின்
காது திருகிவிட்டு
உடனே
தடவிக்கொடுத்தாள் அபி
அம்மாவுக்குப் பாடம்.
*****************************
வண்ணக் குழம்பான
கைகளை ஆட்டி ஆட்டி
அபி பேசிக்கொண்டிருந்தாள்...
வரைந்த சித்திரங்களுக்குப்
பேச்சுப் பயிற்சியாம்...
**************************
பூத்தது ஒற்றைத்தொட்டி
மகிழ்ந்த அபி
நிறைய தொட்டி
வாங்கலாம் என்றாள்.
பரப்பு கருதி
எரிச்சலான அம்மா
நாம எங்க போறது?
என்றாள்..
அதுல ஒரு தொட்டிக்கு ....
அபியின் தலை சாய்ந்த விடையில்
அம்மாவுக்கு
 தானும் அவளும்
இருமலரான உருவம்...தோன்றியது!.

சனி, மார்ச் 03, 2012

நழுவிய கணம்


 
பட்டாம்பூச்சி 
வண்ணங்களின் மின்னலாய்ப் 
பறந்தது ஒருகணம்...
பார்த்தது 
பார்க்காது -
ஏழு கடல்,ஏழுமலை,
ஏழுவானம்,ஏழுசூரியன் 
தாண்டிக் கொண்டேயிருக்கிறது 
மனம்.....
தேடல் தொடர்கிறது..
சூரியனின் ஆரஞ்சுச்சாறு ,
வானின் நீலபானம் 
பருகி இளைப்பாறியபடி 
மீண்டும் ,மீண்டும்....
அதே நிறச்சாயல் தேடுகிறது ...
அந்த நிறம் 
அதே நிறமா...
பனியில்,வெயிலில்
இளந்தூரலில்,
பருவங்களின் பாய்ச்சலில்...
கரையாது காணக்கூடுமோ ..
தேய்ந்த  நிறம் தெரியாமல் 
தாண்டிடும் சாத்தியம் 
ஏற்காது.. 
தேடல் தொடர்கிறது..
                               

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...