ஞாயிறு, ஜனவரி 29, 2012

இப்போது பரணில்...

மல்லிகை கனகாம்பரம் 
நெருக்கித் தொடுக்கும் நேர்த்தி...
இழைகோலமா
கரைபதம் 
கருகா முறுவல் பக்குவங்கள் 
பொடிகளின் 
அரைபதம்,இடிபதம் 
கொதிமணம்
கொண்டறியும் குறைகள் ,
வகை வகையாய் வழிமுறைகள்..
**************************************.
பொட்டலம் ,பொதிகள் 
சுமந்த 
கழுதை முதுகின் 
கற்பூரப் பொட்டலம்.

சனி, ஜனவரி 28, 2012

நிறம் தந்த சாமி


 

அமர்ந்து எழுகையில் 
வண்ணத்துப்பூச்சி 
தடவிச் செல்லும் 
மினுங்கல் பொடியா?
சந்திரபிறை பொழியும் 
இரவின் ஒளித்துளியா?
ஆரஞ்சு குழம்பாய் 
அரங்கேறும் 
கதிர்ச்சொட்டா?
விரிந்த நீளத்தின்
மேக நீலங்களில்
ஏதோ ஒரு நீலமா?
துளிர்ப்பச்சை....
இலைப்பச்சை....
வெளிர்ப்பச்சை....
என்னை வரைந்த தூரிகை 
எதில் தோய்ந்தது...? 
 

ஆறாவது பூதம்

இடம் பொருள் 
அறியாக்காற்று 
ஏவலுக்குக்கட்டுப்பட்டு ,......
*********************
அடக்கமாக 
தீக்குச்சி நுனியில் 
அக்கினிக்குஞ்சு .
****************************
நட்ட கல்லுக்குள்
நாமே 
பூமிபுத்திரர்!
****************************
கண்ணுக்கெட்டியவரை
விண்
என்றும் சொந்தம்!
******************************
ஜலப்பிரவாகம் 
சிறு குடுவை 
அல்லது 
அணைமதகுகளுக்குள்...
********************************
மனசு...?
மனசு....?
மனசு...?  
 

சொற்கள்


என்னோடு இருந்தன ....
இல்லாமல்  இருந்தன..
இல்லாமலும் ....
இருந்தன!
இருந்தாலும் 
இல்லாவிட்டாலும் 
என்னோடு, 
எனக்கானவையாய் இருந்தன...
இருக்கும் வரை  
இருக்கும்!

வியாழன், ஜனவரி 26, 2012

நினைவின் சரத்தில்

அந்த மனோரஞ்சிதம் 
வருடங்கள் கடந்தும்  
வாடாமல் சிரிக்கிறது !
பிரத்யேக மணமும் 
பெயரற்ற நிறமும் கூட 
மங்குவதேயில்லை...
வெல்வெட் துணியிலிட்ட 
முத்துமாலைகூட
சற்றே 
பழுத்த வெண்மையில் ...
ஆனால் 
என் ஒற்றை மனோரஞ்சிதம் 
முணுமுணுத்த பாடல் வரிகளையும் 
வெளுத்த கனவுகளையும் 
இதழ்களாய் இணைத்தபடி 
வாடாமல்....  

வாசம்

 
சாலைப்புறம்
இரவுதோறும் கிடக்கும் 
சில எலிகள் 
காலை வரும் 
காகத்தை ஏமாற்றாமல் .....
வேறொருபுறம்
காக்கை கிடைக்கலாம் 
ஏதோ ஒன்றுக்கு 
இரையாக....
இடையில் நாசி பொத்தியே 
நடந்து பழகிவிடுகிறது!
 

செவ்வாய், ஜனவரி 24, 2012

எல்லா இடமும் சதுர அடி

கருவைக்காடு 
இருந்திருக்கலாம்...
அறிந்த ,அறியாப் பெயர்களுடன் 
மரங்கள் நின்றிருக்கலாம் ....
எங்கள் கிராமம் போல 
வயல் நடுவேயோ ...
தோப்புகள் தாண்டியோ 
இருந்திருக்கலாம் ...
இன்று நாற்புற மதில் தவிர்த்து 
வீடுகள் சூழ நிற்கும் 



.

.

 

மயானம்..!.
அண்டை வீடுகளின் 
தொலைக்காட்சிப் பாடல் 
கூத்தனுக்குப் 
பழகியிருக்கலாம் 
நாற்றமும் சப்தமும் 
பழகிய நம்மைப் போல ..

திங்கள், ஜனவரி 23, 2012

பிறவிப் பெருங்கடல்

 


தேன்பிசுக்கு
இழையாகி இழுக்காமல்
சொட்டாகச் சேர்த்திருக்கும் 
மலரின்  சூட்சும 
அடையாளம் அறியாது 
வெற்று ரீங்காரத்துடன் 
அலைந்து  கொண்டிருக்கிறேன் 
வரம் வாங்கி 
வண்டான சிறு பொழுதிலும் ..........

வினைச்சொல்

ஒரு தூக்கு வளையத்துக்குள் 
கழுத்தை நீட்ட 
முன்பதிவு செய்து 
காத்திருப்போர் பட்டியல்... 
நம்பிக்கை,
புரிதல்,
தைரியம்,
அன்பு,
நேர்மை,
....................
முடிவிலியாய்த்தொடரும்
வரிசையிலிருந்து 
முன்னுரிமை 
தீர்மானிக்கிறாய் 
நீ......
நானும்.... 
 

திங்கள், ஜனவரி 16, 2012

நிரம்பா அரங்கம்





ஓரிருவர் ...
தொடர்பிலா திக்குகளில்.... 
அலைபேசி நோக்கியவாறு 
சில தலைகள் 
அருகே எவருமிலா 
மூலைஇருக்கையை 
கவனிக்க வசதிஎனத் 
தேர்ந்திருக்கலாம் .
தாமதமாக
சபை நிரம்பலாம்...
**************************************
எந்த சமாதானமும் 
தராத நிம்மதியை 
காலி இருக்கைகளுக்கும் 
காதுகள் இருக்கலாம் 
என்ற கற்பனை தந்தது...
இருக்கைதோறும்
கைப்பிடிபோல் 
ஈரிரு காதுகள் முளைத்தன ...... 
காத்திருக்கும் செவிகள் 
மீதான காதல்  
தூறலாய்த் தொடங்கி 
பெருமழையென நனைத்தது 
ஆளில்லா இருக்கைகளையும் .......
 

ஆசை ஆசை




அகன்ற 
மலையடிவாரம் ..
விஸ்தாரமாய் வீசிப்போக 
காற்றுக்கு 
 
ஆசை... 
விழுந்தால் 
விரிவாக வளரலாம் 
விதையின் ஆசை...
ஆனால்...
வென்றது  மனிதன் ஆசை...
கொடியும் தோரணமும் 
குறுக்கு சாலைகளுமாய் 
புதிய நகர் 
இனிதே உதயம்...

ஆற்றின் மேல் ஒரு சமாதி (பழைய பாலம்)

இப்படித்தான் 
என்னோடும் 
உறவாடிக் கொண்டிருந்தார்கள் 
கைப்பிடியோரம் 
சைக்கிள் சாய்த்து வைத்து 
கதையளக்கும் நிரந்தரக் கூட்டம் 
சரசரவென 
விரையும்  வாகனவரிசை 
சமயங்களில் 
வழிவிடாச் சண்டை 
மோதி மோதிக் 
கடந்து போகும் காற்று .....
*************************************
எல்லாம்
 ஒரு சந்தேகத்தில் 
முடிந்து விட்டது !
வலுவில்லை எனக்கென 
வந்தது புதிய பாலம் !
காற்றும் குப்பையும் 
மட்டும் 
கடந்துபோகக்  கிடக்கிறேன்  
பக்கத்து பரபரப்பின் 
பார்வையாளனாக ......

ஞாயிறு, ஜனவரி 15, 2012

உன்னை விட்டால்.


         

படபடத்த 
தாள்களிலிருந்து
எழுத்துக்கள் 
எம்பி 
       எம்பி 
முறையிடுகின்றன....
வசவுக்குள்   போடும்போது 
வலிப்பதாகவும் 
பொய்யில் சேர்க்கும்போது 
புண்ணாவதாகவும்
வறுமைக் காட்சியில் 
தமக்கே 
வன்முறை வளர்வதாகவும் 
காதல் வசனங்கள் 
கரைத்துவிடுவதாகவும் ....
****************************************
நீயாவது 
உணர்கிறாயே என்றேன் ! 

முன் வைத்த கால்



மின் வெளியில் 
என் எழுத்துக்கள் 
என் எழுத்துக்கள் மிதக்கின்றன...
மிதக்கின்றன...
 திருத்தியிருக்கலாம் 
ஒருவரியை 
மாற்றி இருக்கலாம் 
ஒரு சொல்லை 
சேர்த்திருக்கலாம் 
ஒரு எழுத்தை 
முன்பே...
போட்டிருக்கலாம் 
ஒரு புள்ளியை...
ஆனால்...
                     விரல் நுனியிலிருந்து 
                      இறங்கிப் போனபின் 
எனக்குச்சொந்தமின்றி 
மின்வெளியில்..... 
 

சனி, ஜனவரி 14, 2012

ஒளியே வாழி!

ஒளியில் தொடங்குகிறது நாள்..
ஒளியில் தொடங்குகிறது உற்சாகம் 
ஒளியில் தொடங்குகிறது உழைப்பு !
இருளில்நம்மை இழந்துவிடாமல்
தினம்
கிழக்கின் வாசலில்
நீள்கிறது கதிர்க்கரம் !
வெளிச்சத்தின் சக்தியை கண்டபோது ..
தொடங்கியது மனித சரித்திரம்!
*****************************
வெளிச்சக் கூழைக்
குடித்துக் குடித்து
ஆடி வளர்கின்றன பச்சைப் பயிர்கள்..
வெளிச்சம் தின்று வெளிச்சம் தின்று
விரிகின்றன விருட்சங்கள் ...
உண்ட ஒளியை
உருட்டித் திரட்டி
காயாய் பூவாய்
கனியாய்க் கிழங்காய்
மனிதனுக்கு
ஊட்டி வளர்க்கின்றன
தாவரங்கள் ...
********************
நம்பிக்கை
பொய்க்கா வண்ணம்
நடத்துவாய்
ஒளியே வாழி!வாழி!

புதன், ஜனவரி 11, 2012

இறந்த காலத்தின் தெய்வம்

மைதீர்ந்த
எழுதுகோல்கள்
சிரிக்கின்றன...
கேள்வி கேட்கின்றன..
சவால் விடுகின்றன..
எழுதி முடிக்கவியலா
நெடுநெடுநெடு
வரிகளை
அடையாளம் தெரியுமா
கெக்கலிக்கின்றன ....
மணல் மூடிய நதியாக
ஈரமிலா முனைகள்
கேள்வி கேட்பது விசித்திரம்தான் !
ஆனாலும் ,
அவை
கனவிலும்
வாத்தியக் குழுவோடு
வந்திறங்கிப் பாடுகின்றன ...
அதே  கேள்விகளை!

துளிகளால் சமுத்திரம்


சிவன் கோயிலுக்கு
விளக்குப்போட
அம்மா எடுத்துப்போகும்
எண்ணைக்கிண்ணம்  அளவுதான்
இருந்தது!
நான்
திவலைகளாகச் சொட்டுவதற்கு
அதுவே தாராளம்...
அப்போதுதான்
நீ வந்தாய் ...
நீயும் விட இடம் கேட்டாய்
உன்னிடம்
பாவத்தால் சம்மதித்தேன் ...
உன்னிடம்
நேசத்தால்...
உன்னிடம்
இரக்கத்தால்/...
உன்னிடம்
வேறுவழியின்றி....
பிறகு
என் சம்மதத்துக்கே வேலையில்லை...
கிண்ணம்
திருவண்ணாமலை தீபக்கொப்பரையாகிவிட்டது!

    ஏ
       றி
அதற்குள் கவலையை வடிக்க
ஏணிகூட....
ஏற்றி இறக்குவது
யாரென்று
தெரியாமலே

நான் திவலை...திவலையாக...
...
 
    

பரஸ்பரம் காணவில்லை

ஒருநாளும்  கைக்குட்டையோ
பேனாவோ
பரிசளிக்காதிருந்தும்
நானும் நீயும்
தொலைந்து போனோம்
பிரபஞ்சத்தின்
உயிர்க்காற்று
என்றேனும்
அடையாளம் காட்டலாம்
நான்..நீ
சுவாசித்துக் கொண்டிருந்தால்.....  

இப்போதும் பலிக்கவில்லை.....

தேவதைகள்
எப்படியிருப்பார்கள் ....
பாரதிராஜாவின் பாடல் போலா...
சித்திரக் கதைகளின்
சிறகுகளோடா .....
ஆடை மாற்றம்
நிகழ்ந்திருக்கலாமோ...
சலனமற்ற பார்வையா?
புன்னகைப்பது உண்டா....
அறியாமல்
தவறவிட்டு விடுவேனோ
அச்சத்தால் கேட்கிறேன்...
கேள்விகளை முடித்து
நிமிர்ந்தபோது
மேசையின் எதிர்ப்புறம்
அடையாளம் சொல்லமுடியா
நிறத்தில்
அழகிய மலர்
தேவதை வந்ததன்
அடையாளமாக...

ஏறமுடியாத கோபுரம்


திருக்கோட்டியூர் ராமானுஜனை
 
நினைக்கும்தோறும்
செவ்வாய்ப்பிள்ளையார்
ஔவை படுத்துகிறாள்..!
பரவாயில்லை....
அவர் பகிர்ந்தது
மறுமையற்ற வீடு! 
இதில்
அச்சமூட்டுகிறது
வெறுமையாகும் வீடு!

அபி உலகம் 3

விடுமுறை நாளின்
சித்திரங்கள்
திறந்தன...
இன்றைய வானவில்லில்
நீல நிறத்தையே காணோம்!
வானம் வரைந்தே
தீர்ந்து விட்டதென்றாள் அபி!
**************************
அபிக்கு
யானை,சிங்கம்,
புலி, காண்டாமிருகம் ,
உயரம் குறைவான
ஒட்டைச்சிவிங்கி
எல்லாம் வேண்டுமாம்
கரடியைப்போலவே
உட்கார்ந்து விளையாட....
********************************
நெய்ச்சோறு ,
நூடுல்ஸ் ,பழத்துண்டுகள்,
ஐஸ்க்ரீம் ....
கொஞ்சிக்கொஞ்சி
அபியால் ஊட்டப்படும்
பொம்மைப்  பரிவாரங்களைப்
பார்த்தால்
அம்மாவுக்குப் பயம்தான்
அவை
கேட்டுவிடுமோ என்று...  

சனி, ஜனவரி 07, 2012

உருப்பெருக்கி

நேராய் விழாத
நிழலுக்கு
நிலைக்கண்ணாடி
பொருந்தவில்லையாம்
உதிர்ந்த
ஒற்றை  இலை
சருகு கோபுரமென 
சலம்பியது 
ஜடாமுடியும் 
ஏறமுடியாத 
தாழைமடலோ
முள்
காட்டி மிரட்டியது 




இழந்த வரங்கள்

காதலை கண்ணீரை
காத்திருப்பை
கூறுகளோடு பேரத்தை
ஆயாச இளைப்பாறலை   
போதை உளறல்களை
பெருங்கூச்சல் வம்புகளை
பறக்கும் பந்துகளை
பெத்தாங் குண்டுகளை
பக்கத்திருந்து
பார்த்திருக்க சாட்சியிலா
வெட்டவெளி மனிதர்களானோம்,,,,,

அனிச்சையாய்க் கிள்ளியபோதும்
ஆள்வைத்துத் தள்ளியபோதும்
எட்டும் தொலைவெலாம்
நின்றிருந்த
நெட்டை,குட்டை
நீள் உறவைப் பறிகொடுத்தோம்
சருகுகள் நொறுங்க
இல்லாத மின்சாரம்
இழப்பீடு...
எல்லாக் கதையோடும்
நடக்கிறோம் சுடச்சுட....
 பக்கத்திருந்து
பார்த்திருக்க சாட்சியிலா
வெட்டவெளி மனிதர்களானோம் 

புதுவை

கிளைகள்
கவித்த இருளால்
நகரம்
மறைந்திருந்தது
அதில்
வெளிச்சம்
உறைந்திருந்தது !
****************************
ஏதுமற்ற
வெளியில்
வெளிச்சம்
படர்ந்திருக்கிறது
இதில்
 இருள்
 நிறைந்திருக்கிறது  

இனி எதற்கும் யோசியுங்கள்

கடற்கரையில் காந்தி
தாண்டிவந்த காற்று
மனிதனைத்
தேடியது
இல்லை
எனச்சொல்ல
நாணி
இற்று விழுந்தன
எங்கள் மரங்கள்.

புதன், ஜனவரி 04, 2012

பாக்யலக்ஷ்மியின் தலைப்பொங்கல்


 
வெல்லம்
குக்கர் பொங்கலுக்கு
வெளியிலா-உள்ளேயா?
************
அறுக்காத வயலிலும்
நாலுகதிர் பிடுங்கி
நசுக்கிப்போட்டாவது
புத்தரிசி"பொங்கல் வைக்கும்
அம்மா
அங்காடி அரிசிக்கு
அச்சுவெல்லம்
கணக்கு அறிவாளா?
*********************
அடிநெல் தள்ள
ஏறி இறங்கினால்
தொட்டுக்கும்பிட்ட
பத்தாயத்தில்
எலிப்புழுக்கை
கிடக்கிறதாமே?
**********************
வரப்பு மூலையில்
தம்பியோடு
நட்ட வாதங்கன்றுகள்
ஒன்றாவது இருக்குமா
தூர்த்து வீடாக்கியவர் 
நிழல் பெற?
************************
வயலைவிற்று 
வாழ்வு பெற்று 
பானைபிடிக்கப் போன 
பாக்யலக்ஷ்மிக்குப் 
பல கேள்விகள் ..... 
  

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...