செவ்வாய், மே 28, 2013

பெரிது ஏலா வாழ்வு

நீ  அமர வாய்ப்பிலாச்
சிறிய இதழ்களோடு
நான் இன்று சிரிக்கிறேன்...
நீ
மேலும் சில நாள் தவிக்கலாம்..

.
சிறு சிறகுகளோடு
ஒரு பூச்சியோ தேனீயோ
அலையக்கூடும் 


நகர்கிறாயா ..


நிழலிலேயே மரிக்க
எனக்கு சம்மதமில்லை...

செவ்வாய், மே 14, 2013

பனிக்கட்டி யானை



சமுத்திரத்திரத்தின் அலைகளில்
தவழ்ந்தும் அமிழ்ந்தும்
சமுத்திரம் தேடும் மீன்.


மகரப்பொன் தூளாகப்
பிறவி கொண்டு
மலரின் மணம்
உணரா சுவாசம் .


நிலவின் வெளிவட்டமும்
அதனோரக் கறையுமாக
இருந்தபடி
வளர்பிறை தேய்பிறை
வழிநடை..


கிளையிருக்கும் துளிரும்
விழுந்திருக்கும் சருகும்
ஒன்றாய் சரசரக்கிறதென்று
சொல்ல உனக்கு எங்ஙனம்
வாய்த்தது ....

சனி, மே 11, 2013

மன்னித்துவிடுங்கள்..


இது போதும் எனச் சொல்லும்
அதிகாரம் எனக்கில்லை ..
வேண்டும் என்பதும்.....



நானே விலகிடினும்
நிழலைப் படம்பிடித்துக்
கொண்டாட ஏழு பேர் குழு
அமைத்தாகிவிட்டது....


ஒளியின் வீச்சை
உள்ளங்கை மடங்கலில்
பிடித்துவிட்டதாக
அல்பதிருப்தி..


சொர்க்கத்தில் பறவைகள்
இப்படித்தான் சிறகடிக்கும்
என்கிறான் -தானே
 தானியம் இறைத்தவன்போல் ...


ம்ஹூம் 'என்பதை
ம்'என்றும்
'ஐயோ'என்பதை
'ஆஹா'என்றும்
மொழிமாறாட்டம் நடத்துகிறது
நாவு..


ஆன்ம ஒளி குறித்த
சொற்பொழிவாற்றத் தயாராவதால்
கடவுளுக்கு
இன்று நேரம் தர இயலாது

புதன், மே 08, 2013

மலர்வது.... முள்ளா ?




ஆன்மாவின் சிறகுகளுக்கு
வண்ணம் பூசுவது
வழக்கம் இல்லைஎன்கிறாய் 


அம்புகளின் நுனியிலும்
மலரிணைத்தே விடுப்பவள் நான்..


துப்பும் நிறத்தையே
அடையாளமாக அணிந்திடும்
மொட்டுகளுக்கு
குழப்பம் தருவதே
உன் வழக்கமாகிவிட்டது...


உன்,என்,
வழக்கங்களை மீறியும்
சிரிக்கிறது பூ...
கூடவே அதன் முள்ளும்...

ஞாயிறு, மே 05, 2013

என் கடன்

மெல்லக் கால் நனைத்துக்
குதித்துக் கும்மாளமிட்டு
வெளுத்த பாதங்களுடன்
மனமின்றி
நாளைய நனைதல் நினைவுகளுடன்
கரையேற்றி அனுப்பிய
நுரைமிதக்கும் நதி -இன்று
வற்றி மெலிந்த ஒற்றைத்தட
சிற்றோடை...


நாளை நான் வருகையில்
கான்க்ரீட் பொந்து தள்ளும்
கழிவு நீரருவி வழிய வழிய
சாக்கடையோரக் கொசு
விரட்டியபடி விரையலாம்...


ம்ம் ....
மறக்காமல் வாங்க வேண்டும்
தண்ணீரின் தேவை குறித்த
புதிய நூல்..
கடக்காமல் பகிரவேண்டும்
முகநூலின்
தண்ணீர் தகவல்களை

வியாழன், மே 02, 2013

வானம் வழங்கித்தான் பழக்கம்

இருள் விலகாப் புலரியில்
ஏதோ ஒரு கிணற்றடி
வேம்பிலமர்ந்து -கூவுவது
குயில் என
நான் அறியாக்காலம்வரை
அங்கே இருந்தது குயில்...

புலரியின் தேவதைக்கு
தங்க விசும்பு
தயாரிக்கச் சொல்லியிருக்கிறேன்
ஏனோ என் கிரீடம்
முனகிக் கொண்டே இருக்கிறது...
..
அட ... இந்த சிறகுத் தொப்பியை
கிரீடம் எனத்தான் சொல்வேன்...


போதும் ..
நான் ஒருபோதும் பார்த்திரா
வேம்புக் குயிலின் சிறகும்
இதில் இருக்கும்
என்றெல்லாம் வதந்தி பேசாதே..

.
புறப்படு .....
அந்தத் தங்க விசும்பை
அட்சய திருதியை அன்று
கொண்டுவந்துவிடு...!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...