புதன், நவம்பர் 30, 2011

முரண் (சற்றே பெரிய கவிதை)


வெற்றிக்கு விலாசம்
சொல்லாத
பயணம்..

குறிப்பு ஒட்டிப்
புதையல் தேடுபவன்போல் 
சந்துகள் தாண்டிய 
பொந்துக்குள் 
தலையோடு கால் போர்த்தியவன் 
குறட்டையி ல்  குறுக்கிட்டு 
கைகுலுக்கிப் புன்னகைத்தது 
வெற்றி...
அவனுக்கு 
அதையும் 
தன்னையும்  அடையாளமே புரியவில்லை...
முகங்கழுவி வா...
தேநீர் பருகி
விரிவாய்ப் பேசலாம்
என
ஒட்டுத்திண்ணையில்
கால்மடித்துகாத்திருக்கிறது 
வெற்றி!
***********************************

தன்னை சந்தித்தாக வேண்டியது 
வெற்றியின் விதி 
எனக் கிளம்பினான் இவன் ....

தெளிவாக 
முழுப்பெயர் (தலை எழுத்தோடு)
கதவு எண்< தெரு<நகரம்>வட்டம்
மாநிலம்<அஞ்சல்குறியீடு 
அலைபேசி எண் _உட்பட 
முழுமுகவரி தந்திருந்தான்...
எதற்கும் இருக்கட்டும் என 
மின் அஞ்சல் முகவரிகூட...

புன்னகையோடு காத்திருந்தவன் 
ஊர்ப்பக்கம்
வெற்றியின் நிழலே.......
....................................காணோம்
உறுதியான ஆவலில்
பரிமாறத் தயாரான விருந்து
ஊசத்தொடங்க
வாத்தியக்குழு தூங்கிவழிய
மாவிலைத் தோரணம்
வாடியுதிரச் சகியாது
விசாரித்தான்.....
வெற்றி
துளியும் அறியாப் புதியவன்போல்
விளக்கம் சொல்லாமல்
அவனை
வெறிக்கின்றது !
மஞ்சள் செம்பருத்தி 


அவனுக்கும் 
மனிதன் 
என்றுதான் பெயர்....

மஞ்சளாய்ப் பூத்தாலும் 
மஞ்சள் செம்பருத்தி 
என்று அழைப்பது போல்...
                                           *   *************
பசித்த வயிற்றின்
எரிச்சல் உணராதவனும்
ஆடைக்கிழிசலின் 
அவமானம் உணராதவனும் 
ஏக்க விழிக் குழந்தையின் 
சடைத்தலைக்கு 
சலிப்பவனுமான 
அவனுக்கும் 
மனிதன் 
என்றுதான் பெயர்...... 
        

செவ்வாய், நவம்பர் 29, 2011

சும்மா இரு...

நிறமற்ற மண் மீது
பெருவெளிச்சம்
படரப் படர ....
சோம்பல் முறித்து
நிமிரும் கிளைகள் ...

கிளை இடுக்கு நீரை
பறவை உலுக்க
சிறுமழை...
திடுக்கிட்டு
அண்ணாந்த வேருக்கு
அருகிலமர்ந்து
சமாதானம்  சொன்னது
இணைப்பறவை.....

ஈரச் சிறகை உதறி உதறி
இடம் மாறி
வெயில் காய்ந்து
"இப்ப எங்க போனே...
வம்பு பேச மழை தேடியது
முதற்பறவை ....

:சும்மா இரு
அலகால்  ஆகாயம் திறந்தால்
இரை தேடல்  இம்சை
கடிந்தது இணைப்பறவை .... 

தேய் பிறை அச்சம்




.

 பிடித்தபாடல்  
அலைபேசி அழைப்பில்
பதிய வேண்டாம்

அழைப்பின் போதெலாம்
ஒலித்து ஒலித்து
நம்
பிடிப்பு கரையலாம் ....

சமயா சமயமின்றி
ஒலிக்கும் பாடலை
கோபமாய் எரிச்சலாய்
நிறுத்த நேரலாம்

முழுமையாய்க் கேளாமல் 
உடனே எடுக்க 
திரையில் ஒளிரும் பெயர் 
நிர்ப்பந்திக்கலாம் 

புதிய எண் பார்த்து
யோசிக்கும் மனதுக்கு 
பாடல் எட்டாமலே போகலாம்...

இடம் பொருள் கருதி 
நாமே மென்னி திருகி 
அமைதிப்படுத்தலாம் 

இந்தப்பாடல் 
எதற்கென்ற 
விளக்கவுரை கேட்டு 
யாரும் நிர்ப்பந்திக்கலாம் 

புதன், நவம்பர் 23, 2011

வாடகை வீடு(நினைவுகள்  சொந்தம்)


எப்படித்தான் இருந்தீங்களோ
பழைய வீடு ....
கரிசனமாய் நண்பர்!


அழுக்கு சுவர்
ஈரம் ஊறும் மூலைகள்
எத்தனை ஓவர் எத்தனை பந்து
கணக்கறிந்து
கொக்கியிலாது  ஆடும்
ஜன்னல் கதவின் லயம்
மழையோடு மல்லு க்கட்டும்
கதவுக்கான நுட்பங்கள் 
மாற்றி மாற்றி 
மஞ்சள் வட்டம் பூசிய 
சாமி அலமாரியில் 
படிந்திருக்கும் வேண்டுதல்கள் 
எந்த பாத்திரம் 
எந்த நேரம் 
எப்படி ஒலிக்கும் 
எல்லாம் தெரிந்த சமையல் மேடை 
(சமயத்தில் உணவு மேசை )
உள்ளக்கிடக்கைஎல்லாம் 
சொல்லியபடியே 
ஒட்டி உறவாடிய 
அடுப்பு மேடை .....

அவிழ்க்காது விட்ட கொடிக்கம்பி 
துவைத்த துணி அளவும் 
போனதும் ஒட்டிய 
நடுக்கதவின் பாரதி 
வெள்ளையடிக்கா வருடங்களையும்
உப்பு ஊறிய கரிச்சுவர் 
சுவைத்திருந்த உணவையும் 
சொல்லும் சாட்சிஎன்றான்
புது வீடு ரசிக்கா 
சின்ன மகன் ....

எப்படித்தான் இருந்தீங்களோ 
நண்பரின் கூற்றுக்கு 
சிரித்துவைத்தோம்.    

திங்கள், நவம்பர் 21, 2011

வெளிச்சம் வெளியே இருக்கட்டும்...


அகல்,கைவிளக்கு
குத்துவிளக்கு
மின்விளக்கு ....
எந்த ஒளியாலும்
துடைக்க முடியா இருள்
அழுந்திக் கிடக்கிறது
அகத்தில்...!        
    
                               சூரியனையே
                               
சுவிட்சு  போட்டு  
             நிறுத்திடுவோம்ல.....  ,
கனவிலோடும் கவிதை...


கண்ணாடி...
மின்விசிறி...விளக்கு...
உறக்க சம்பிரதாயங்கள் 
தொடரும்போது 
ஜன்னல் பூனையாய்
ஒரு வரி.....

போர்வையின் வெளியே 
கண்கள் 
மின்னியபடி காத்திருப்பதான
பாவனையில் 
தலையணை அடியில் 
தள்ளிவைக்கவும் 
முயன்றேன்...

விழித்தபோது 
பூனை 
ஓடிவிட்டிருந்தது....

ஞாயிறு, நவம்பர் 20, 2011

பாடலைக் கண்டேன்...


மாற்றித்தடவிய 
தூரிகையாய்
நிறம் கலங்கிய மேகம்...
அழைப்புமணிக்கு
விரைவதாய் நகர...

அலைபேசிக் கோபுரங்கள் 
மின்வடங்கள் 
மாறிமாறி
பாண்டி ஆடிக் கொண்டிருந்தன 
பறவைகள் .

முதிராப் பசுமையோடு 
காற்றில் நடுங்கியது நாற்று 

சுழலாக் குறுந்தகடு 
தாண்டி 
மனதில் அதிர்ந்து கொண்டிருந்த 
நரம்பொலியில்
கசிந்த விழியோரம் கண்டு 
கரிசனமாய்க் கண்ணாடி ஏற்றினாய் ....

இசை நின்றது ...!    



 தோழர் வேணுவின் கட்டுரை தொடர்ச்சி....##
ஒளிச்சேர்க்கை


இந்த கோவை இலை
சிலேட்டு துடைக்கப் 
பறிக்கப்பட்டிருக்கிறதா...

இந்த மா,புளி,கொய்யா 
கல்லடிபட்டு 
செங்காய் உதிர்த்திருக்கின்றனவா..

இந்த மருதாணி
இலை பழுக்க வாய்ப்பிலாது
துளிர்க்க துளிர்க்க
உருவப்பட்டிருக்கிறதா ...

இந்தவேம்பின் கீழ்
துணிவிரித்து உலுக்கி
பூ ,பழம் வாரப்பட்டிருக்கிறதா,..

இந்த இலந்தைமுள்
இளரத்தம் பார்த்திருக்கிறதா...
ஆமெனில் 
இவற்றோடு 
வாழ்க்கை -இருந்திருக்கிறது.
இலையெனில் -இறந்திருக்கிறது. ,

இன்று விடுமுறை விடவில்லை..

மதயானையாக
இலக்கின்றித்திரியும் கருமேகங்கள்...
வானின்று வீழும்
நீரெல்லாம்
வாகனம்   கழுவி வழிய
பழுப்பேறிய கோடுகளோடு குளிக்கும்
பெருவழிச் சாலை

சீருடைப்பட்டியலில்
சேராத மழைக்கவசங்களால்
வாகனந்தோறும்
வர்ணச்செண்டுகள்

வாரி அடைக்க
வாயில் திறக்கிறான்
பள்ளி வாயிலோன் . 

திங்கள், நவம்பர் 14, 2011

நாம் செலவழிக்கும் உலகம்...
அவர்கள்
காத்திருக்கிறார்கள்....
கண் கூசும் ஒளியில்
கரைவது
கனவா..உணவா...
உயிரா.. மானமா..
ஏதுமறியாது..

தருவது எதுவாக இருப்பினும்
பெறுவது
உன் கரமாக இருக்கட்டும்
ஆசீர்வதித்து
நிறுத்துபவர்கள்
நீங்களும் நானும் கூட   
குழந்தைகள்....


கைகால் முளைத்த மலர்கள்
நடக்கும் குயில்கள்
வீடு நிறைந்திருக்கிறது
ஒற்றை வரம் இருப்பினும்...

சொல்லில் ,அசைவில்
கனவில் கேள்வியில்
மனம் ஒன்றும் நொடிகளில்
நீள் தவத்தில்
கிட்டா தரிசனம்
சித்திக்கும்!

குழந்தைப்பருவம்
நாமும்
நம் வீட்டுக் குழந்தைகளும்
தாண்டியபின்னும்
அந்த "பாவமும்
பரவசமும்
விலகா மனசு
மழைநின்றும்
தூறலின் குளுமை தங்கும்
காற்றும் புவியுமாக 
மகிமை தாங்குகிறது... 

ஞாயிறு, நவம்பர் 13, 2011

பெயரளவு


அம்மாவுக்கு செல்லா
பள்ளியில் கே.செல்லத்துரை
நண்பர்களுக்கு துரை
தெருவில் நடுவீட்டு செல்லா
(இன்னொரு செல்லா இருந்ததால்)

செல்லா (எ) கே.செல்லத்துரை (எ)
துரை(எ)நடுவீட்டு செல்லா 
எங்கோ 
தனியாக விபத்தில் மரித்தான் 
இத்தனை பெயரில் 
ஒன்றையும் சொல்லாமல் 

உத்தேச வயது ,பால் ,
நிறம் மச்சம் 
உடையின் நிறம் கூட 
சுமந்த 
காவல் பதிவு 
பெயர்:தெரியவில்லை
என முடிந்தது .

வெள்ளி, நவம்பர் 11, 2011

சொல்லிக்கொண்டார்கள் ....

புடைத்த
கழுத்து நரம்பிலிருந்து
முதலில்
கொசு...
பிறகு தேள் ...
நெளிந்து துள்ளிய பாம்பு
டினோசர் கூட ...
எச்சில் குருதியோடு
எங்கும் புரள்கின்றன...
எது
யாரைக் கடித்தது?
யார் அடித்தார்கள்?
சம்பவங்களாகி
பதிந்து கிடக்கிறதாம்...

விழி தெறிக்கப் பார்த்தாலும் ...
கிடந்த இடம்
வந்த வழி
புலப்படவில்லை..
ஆனால்...

எல்லாம்
சொல்தானாம்....!
இருப்பதும் இல்லாததும்...


சிறகுகூட சுமைதான்

இறகு இறகாய்
உதிர்த்துவிடலாம் ...

உதிரும் இறகை
தொலைதூரக்
கிராமத்துக் குழந்தையொன்று
சொத்தாக சேமிக்கக் கூடும்..
மெத்தனமாக
வயசாளி ஒருவர்
காது குடைய வைத்துக்கொள்ளலாம்

கனமின்றி
காற்றில் மிதக்கையில்
யாராவது படம் பிடிக்கலாம் ...
வீண்குப்பை
என
பெருக்கித் தள்ளி
கொளுத்தியும் விடலாம்...

எப்படியாவது
இருந்துவிட்டுப் போகட்டும்
பறக்காத சிறகு.... 

செவ்வாய், நவம்பர் 08, 2011

சுற்றம் சூழ...

சின்னவன்
தோழர்களுக்கு
உணவு அடுக்கில்...

பெரியவனும்
அவன் தோழனும்
சாப்பிட இன்னொரு பாத்திரம்...

எப்படிப் பார்த்தாலும்

.............
குறைகிறதே ...?
இன்னும் நாலு...?


சுண்டெலிகள்
ஆளுக்கொரு மோதகம்
இழுத்து ஓடியதாகத 
தகவல் கிடைத்தது...

என்னைத் தவிர 
உனக்கு 
யார் என நினைத்தது 
தப்புக் கணக்கோ பிள்ளையாரே? 
உதிர்ந்தது....


நந்தியாவட்டை
கழுத்துவழி  நீண்டு
குறுகுறுக்க
திண்டாக மழுமழுத்த
திண்ணைக்கு
அப்புறம் நின்ற
பவழமல்லி
இந்தப்பக்கம் மட்டுமே
பூக்கவும் உதிரவும் வேண்டுமென
வேண்டுதல் ...

புது உரிமையே பழசாய்ப்
போன அடுத்தவீட்டு
அத்தையின்
அரைகுறை மனசிலான
அபூர்வ அனுமதி
"விளையாடினது போதும்
பூ பொறுக்குனது போதும் 
அப்புறம் வரலாம் 
போங்க ..போங்க..,


வெளியேறும் கணத்தில் 
ஒரு கேள்வி மட்டும் 
அங்கேயே கிடக்கும்...

தாததா ஏன்தான் 
இந்த வீட்டை விற்றாரோ?  

சனி, நவம்பர் 05, 2011

வாசமிலா மலராம்...


யாரோ சூடி வாடிக்கிடந்த
டிசம்பர் பூச்சரம்
மலரும் நினைவுகளை
ராமர் கலரில் விரித்தது...

கனகாம்பரம் டிசம்பர்பூ
நூறு(எண்ணி)
பத்துகாசுக்குத் தரும்
சுந்தராம்பா மாமியை
துரத்தித் தேடிய நாட்கள் ...
நடுத்தெருவுக்கு ஓடி
எண்ணிவாங்கி
கட்டிவைத்து 
பள்ளிக்கு ஓடி...

தேடிய நிறம் கிட்டாத 
சமரசத்தின் மீதான 
வெறுப்பில் 
ஒடித்துவந்து நட்ட 
டிசம்பர் குச்சியில்  
ரோஸும் ,ராமர் கலரும்
வெள்ளை-நீலக் கலபபுமாக
நூறு நூறாக 
கைவலிக்காமல் எண்ணி  
கனவில் குலுங்கிய பூக்கள்
வெள்ளை மொட்டு
வெளிப்பட்ட நாளில்
வாடி
வெளியேறின...
எதிர்பாரா சந்திப்பு...

காற்றில் உலரும்
காலை மலரும்
காலத்தில் வெளுக்கும்
காகித மலரும்
நலம் விசாரித்துக்கொள்ள
மேடை கிடைத்தது ...
பூ ஜாடிககுப் பக்கத்தில் 
கழுத்து மாலையை 
கழற்றி வைத்தவரை 
ஓரக்கண்ணால்  பார்த்தவாறே 
காலைமலர் கண்ணீர்  வடித்தது...

பறித்து அடைத்த
பைக்குள் அடங்கி
இறுக்கித் தொடுத்த
விரலில்  நசுங்கி
கண்டவன் கழுத்தேறி
வீழபபோகிறேன் சாலையோரம்...
ஒய்யாரம்தான் உன் வாழ்வு...!

உன் தொல்லை ஒருநாளில் முடியும்!
நாளொருமேடையும்
தெறிக்கும் எச்சிலும்...
வியர்வை வீச்சமும்..
சாயம் வெளுக்கும்வரை அல்லவா 
என் சங்கடம்.. 
காகிதமலர் 
கண்ணைக் கசக்கியது..

விழா இனிதே முடிந்தது!   

வெள்ளி, நவம்பர் 04, 2011

மெய் பிரியும் தருணம்..

சொற்கள் சாதுவாக
சுற்றியபோது
எழுத்துக்கள்
அச்சடித்ததுபோல்
அழுத்தமாக இருந்தன...
ஆக்ரோஷத்தின்
அழுத்தம் ஏறியபோது
மெய்யைக் கீழே தள்ளிவிட்டு
உயிரின் நீட்சிகள்
கொம்பாக காலாக
வளைந்து கிடந்ததிலிருந்து
நிமிர்ந்து 
பிணைந்து 
இறுகி இறுகிக் 
கயிறாக இறுக்கின

எதிர்ப்பட்ட 
அன்பு ஆசை காதல் 
காமத்தின் கழுத்தும் 
தப்பவில்லை...  

புதன், நவம்பர் 02, 2011

டார்வின் படிக்காத குருவி...


ஒருகாலத்தில்
களத்துமேடு இருந்த ஞாபகத்தில்....
ஒருகாலத்தில் 
கூட்டமாய் வந்த ஞாபகத்தில் ...
ஒருகாலத்தில் 
தானியம் கொத்திய ஞாபகத்தில் ...
புதிய நகரின் 
குப்பைமேட்டு 
டெட்ராபேக்குகளில்  
அலகால் தடவித்தேடும் 
குருவியைப் பார்த்து 
சிரித்தது 
சுவரொட்டி அசைபோடும் 
பசு. 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...