பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 15, 2019

பூரண நிலா

எங்கோ தூரத்தில் ஒலிக்கிறது 
மனம்கவர்ந்த பாடல்
இடம் வலமா எங்கு நெருங்கவென 
முடிவு செய்யுமுன் 
முடிந்தேவிடுகிறது

**************************************************
மஞ்சள் தளும்பும் 
நிலவுக்குத் தெரிவதில்லை 
கோபதாபங்களோ 
தூரதேசங்களோ

**********************************************
கைப்பிடிச்சுவரில் 
ஒருகையை இறுகப்பற்றி 
மறுகையால் விரிந்த உலகை எள்ளுகிறாள் 
ஒருகாலில் நின்றாடும் பாப்புக்குட்டி
பாத்து...பாத்து எனும் 
என்னையுந்தான்

******************************************************
நேற்று என்பது எவ்வளவு நிம்மதியானது
ஒரு கோடு குறைவான நிலாதான் 
என்றாலும்
அவனை நினைவூட்டவில்லை
*****************************************************
அண்ணாந்து பார்க்காமலே 
தனிப்பாதை தந்த அச்சமோ தைரியமோ 
மினுங்க 
தாளம் தப்பிய குத்துப்பாடலை 
உரக்கப் பாடியபடி
மிதிவண்டியில் போகும் 
அவன் பின்னாலேயே போகிறது பூரணநிலா
மௌனமாய் ரசிக்கும் 
என்னைக் கைவிட்டு

*************************************************
பெட்ரோல் புகை அழுக்கில் மங்கிக்கிடந்த அரளிக்கும்
ஆளுயர முருங்கைக்கிளைக்கும்
கிழிந்த வாழையிலைக்கும்
வஞ்சமின்றி வாரி வாரிப்பூசுகிறது
இருளின் ஒளியை 
ஒய்யாரப்புன்னகை கசியக் கடக்கும்
சமான நிலா




புதன், ஜூலை 06, 2016

பொறுப்பு

உடைத்துக்கொட்டிய கல்குவியலுக்கும் 
தகரத்தடுப்புக்கும் இடையே ஓய்வெடுத்து
அசைபோட்டுக் கொண்டிருக்கும் பசுவின்
தாடைக்குள் கிடப்பதைப்
பார்க்கத் துணிவதில்லை

************************************************************

நிலா பார்க்க 
விரல் கணுவுக்கெல்லாம் எண் வைத்து நட்சத்திரங்களெண்ண
சோப்புக்குமிழின் நிறங்களை உறுதியாய்
அறிந்திட முயலும் குட்டிப்பெண்ணொருத்தி
இதோ இந்த நெஞ்சுக்குழிக்குள்தான்
ஆடிக்கொண்டிருக்கிறாள்
என் கடமைகள் மேலெழும்
கவலைகள் கருத்துகள்
சங்கடம் சலிப்பு
இன்னோரன்ன
வளர்ந்த சிக்கல்களைக்
கையாளுகையில்
வெளியே வராதேயெனச்
சொல்லித்தான்
அவளை அங்கே நிறுத்தினேன்
வெளிவரும் தருணம்
அவளைப்போலவே
யானும் அறியேன்
இதற்கிடையில்
பொறுப்பான மனுசியென
கவசமொன்றை வேறு மாட்டிவிட்டீரே உலகத்தீரே

******************************************************************************************
கனத்த மௌனத்துடன்
நீ கவனிக்கும்படி
இமையோர நீரை
யாருமறியாது சுண்டிவிடவோ 
விம்மலைப் பெருமூச்சாக்கி இறக்கிவிடவோ 
செய்யும்வண்ணம்
கொத்துமலர்
பயிர்பச்சை அசைவு
இதனாலோ எனத்திகைக்கும் வண்ணம்
ஒரு பாடலைப்பாடிவிட வேண்டிய தருணம்தான் இது
என் பாடலோ
இறுகக் கை கட்டிக்கொண்டு
அடிவயிற்றில் நிற்கிறது


****************************************************************

சனி, அக்டோபர் 24, 2015

பாடல் பெறா வாழ்வு


என்ன பொறுக்குதென்றே
தெரியாத குருவிகள்,
எப்போதாவது வரும் புறாக்கள் 
எங்கிருக்கிறதென்றே இருப்பிடம் காட்டாது
அன்றாடம் தன் குரலால் இழுக்கும்
ஒற்றைக்குயில்
கேலி செய்வதுபோல் திரும்பித் திரும்பிப்
பார்த்துக்கொண்டே தாவும் அணில்
எல்லாவற்றையும் பற்றி
எழுதியாயிற்று
அன்றாடம் ஒரு கவளம் சோற்றுக்கு
வருவது ஒரே காக்கையா என
ஏனோ நினைத்ததில்லை
நான் நினைத்தேனா
என அதுவும் நினைக்கவில்லை
எங்கள் பந்தம் ஒரு கவளம்
அதற்கு மேல் ஏதுமில்லை


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...