ஆத்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆத்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜனவரி 09, 2022

காவிய பாத்திரங்கள்

 சன்னலுக்கு வெளியில் அலமாரிக்கும் கதவுக்குமான இடுக்கில் கிணற்றடி வாழையிலைகளில் குடியிருந்த பேய்கள் பாய்நனைந்த அவமானங்களின் பின்புலத்தில் நின்றாடியது அறியாத

அப்பா

ஒரு குண்டு பல்பை மாட்டி
வைத்தார்.
முறுக்கிய வயர்களில்தான்
அந்தப் பேய்கள் தூக்கில் தொங்கின
அறிந்திருந்தால்
அதற்கும் இரண்டு ரூபாய்
ஏற்றி வைத்திருப்பான்
கம்பெனிகாரன்
அன்றாடம்
பாய் அலசும் வேலை அற்றுப் போனபின்
அம்மா செல்லமாகச் சலித்துக்கொண்டாள்
”இந்தப்பிசாசுங்க
இவ்வளவுநாள் படுத்துன பாடு” என்று ********************************************************
வாங்கிய கடன் டெமக்ரானில் கரையுமா என
யோசிக்காது தொண்டையில் கவிழ்த்த தகப்பன்
தகனமேடையிலிருந்து பிடிசாம்பலோடு
பொறுப்புகளையும் அள்ளிவந்த
பிள்ளைகளின் கதையிலும்
தொடுகையின் இதம் அறியாது
வசவுச்சொற்களின் கைப்போடு
தள்ளியிருந்தே நெருப்பு விழுங்கிய
பிள்ளைகளின் கதையிலும்
தன் தேவை தன் சுகம் தன் உரிமையென்று
அணுவழி உறவன்றி
அணுவளவும் யோசிக்காது
அலையவிட்ட அப்பனின் குடும்பக் கதையிலும்
அப்பா என்ற சொல்லை
அழிரப்பர் வைத்து அழித்துவிட்டு
கோடிட்ட இடங்களாகவே வைத்திருக்கும்
பக்கங்களில் தவறுதலாகப் போய் தந்தையர்தினச் சித்திரங்களைக்
கவிழ்க்காதீர்கள்
எல்லாச்சொல்லுக்கும்
எல்லார் வாழ்விலும் ஒரு பொருள் இல்லை ***************************************************************
இத்தனை செல்லம்கொஞ்சும் வார்த்தைகளை
எங்கே கற்றான் இவன்
வியப்புடன் பார்க்கிறான் மகனை
எம்பிராணனை எடுக்காதே என்று
அந்தநாளில் பிள்ளைகளிடம் கத்திக்கொண்டிருந்த
மனைவியும் மருமளுக்குப் போட்டியாகத்
தலையாட்டி ,உடல் நெளித்து ,குரல் மாற்றிகூடக்
கதை பேசுகிறாள்
மனதுக்குள்ளான ஒத்திகைகள் மறந்துபோக
ஒவ்வொரு முறையும்
ம்
சரி
என்றே பதில் சொல்லித் தொலைக்கும் அவன்
அப்பாவாகவே உறைந்துவிட்டதை
உதறித் தாத்தாவாக வளர வேண்டுமென
நினைத்துக் கொள்கிறான்
தங்கமே என்று பேத்தியை விளிக்கும் நாளில்
சொல்லு ராசா என்று மகனை
அழைத்தால்...
முழிக்கப்போகும்
முகங்களை நினைத்து முளைத்த புன்னகையை
அவசரமாக விழுங்கியபடி
பத்திரிகை படிக்கிறது அந்த அப்பா காரெக்டர் ************************************************************
என்னிக்கி சொன்ன பேச்சு கேட்டிருக்கான்
பனிக்குடத்தண்ணிய குடிச்சுராதேன்னு சொன்னா
கொடிசுத்தி உருண்டவன்தானே
கெப்புறு புடுச்ச கிழவி
திட்டுதா பெருமை பேசுதான்னே
அவனுக்கும் புரியல
ஊருக்கும் புரியல
உருண்டு திரண்ட
உடம்பை வச்சுகிட்டு
ஒருவேளை சோறுகூட சம்பாதிக்காதவனுக்கு
வண்ணமா வடிச்சி கொட்டுற கிழவி
வாரியலோட துரத்துனப்ப ஏன்னு புரியல
போதை தெளிஞ்ச காலைலயும் புரியல
ஆனா
கிழவி எல்லாத்தையும் பெருமையாப் பேச மாட்டான்னு மட்டும்
அவன் வயசுல
அன்னிக்கிதான் புரிஞ்சுது

புதன், நவம்பர் 10, 2021

ஆத்தா

 எதற்கென்றும் இல்லாமல்

புன்னகைத்தபடியே இருக்கிறாள் ஆத்தா
முகமே அப்படியாகிவிட்டது
பிடித்த நிறச்சிற்றாடை கட்டி சிரிக்க நினைத்தது
பிடித்தவனைக் கட்டி
சிரிக்க நினைத்தது
மழலைகளோடு
சிரிக்க நினைத்தது
எதுவும் நடந்ததா தெரியாது
கரகரவென்று சாம்பலையள்ளி கரிப்பாத்திரம் தேய்க்கவே பிறந்தது போலக்
கடந்த
ஆண்டுகளும்
தேய்ந்த
கைகளும் கூட நினைவின்றி
சிரித்துக் கொண்டிருக்கிறாள்
அவ்வப்போது எதையோ
சரிபார்ப்பது போலக் கையை விரித்தபடி
வீட்டில் சாவு விழுந்தாலும் சிரித்தபடி இருக்கும்
ஆத்தாவை
வையும் உறவுகளுக்கும்
இல்லாமலில்லை
என்றாவது ஒருநாள்
சிரித்துவிடும் ஆசை

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

மருதநிலத்துக் கொற்றவை

 அப்போதெல்லாம் பார்த்திராத

வெடிப்புரேகைகள் இன்று கண்டேன்.

சேற்றையோ நாற்றையோ சுற்றிக்கிடக்கும் அவள் பாதங்கள்
புடைத்த நரம்புகளோடு
வெளிறிக் கிடக்கின்றன
நகரத்தின் முற்றத்தில்
ஈரமிலா
நரகம் என்று திருத்துகிறாள்
என் பிள்ளைகளின் சேடியான
மருதநிலத்துக் கொற்றவை
வரப்புக்குள் கூட அணியாத செருப்பை
கூடத்துக்குள் அணிந்து சுற்றும்
இந்த ஊரை அப்படித்தான் பார்க்கிறாள்
பேரப்பிள்ளைகளின் கடைவாய் எச்சிலால்
தொண்டை நனைத்துப் பிழைக்கும்
மூதாய்

சனி, அக்டோபர் 12, 2019

ஐந்திலிருந்து ஐந்துக்கு

முற்றிய வெற்றிலையின் காம்பைக்கூடக் 
கிள்ளி மென்றுகொள்வாள்
துளியும் வீணாக்காத
ஆத்தா
இந்த வாழ்க்கையும் அவளைப்போல
அட சனியன் 
அதேபோல சக்கையும் விழுங்குது
***************************************************
படிகள்
பார்த்து பார்த்து
அபிக்குட்டியை எச்சரிக்கிறாள் அம்மா
தாவுவதுதான் பிடிக்கிறது அவளுக்கு
ஒன்றிலிருந்து மூன்றுக்கு
மூன்றிலிருந்து ஐந்துக்கு
அச்சோ பாத்து பாத்து
அம்மா பாவம்
போனால் போகிறதென்று
ஐந்திலிருந்து ஐந்துக்கே 

ஒருமுறை ஏறிக்கொண்டாள்
****************************************************
நடந்து நடந்து அடையாத நிழலைத் 
தாவிஓடிப் பிடித்துவிடுகிறாயே
மனப்பூனையே
மீசைமுறுக்காது
சற்றே காத்திரு
எப்படியும் அடையத்தானே வேண்டும்
நிழலையோ உன்னையோ



வெள்ளி, பிப்ரவரி 05, 2016

பிரியங்களின் தடம்

இவரைத் தெரியுமா
அவரை...
விசாரித்துக்கொண்டே நகர்கிறது கணிணித்திரை
தெரிந்த மாதிரியும்
தெரியாத மாதிரியும் கூட
மேலவீதி வேப்பமரவீடு
கண்ணாடிக்காரர் மகன்
என்பது போல் மேலதிகக்
குறிப்புகளோடு கேட்காதவரை
ஆத்தாவுக்குப்
போட்டியில்லை

**************************************
எல்லா மரமும்
பூத்திருக்கிறது என்பதற்காக
சோம்பிவிடாது பூக்கும்
மரத்தடியில் 
விழுந்து வணங்குகிறேன்.
முருங்கையை
ஆட்கொண்ட தெய்வத்தின் பெயர் தேடாதீர்

***************************************

இந்தப்பிரியத்தை
வரைந்து காட்ட முடிந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்
நிறம் தீட்ட உன்னை 
அழைத்திருக்கலாம்
பேச்சுக்கு சொல்வது
போலவே
நீயும்
திருத்தங்கள் சொல்லியிருப்பாய்
பிறகு அது
உன் ஓவியமாகி இருக்கும்
என் பிரியம்
வழக்கம்போல மிதியடிக்கு அருகே சுருண்டிருக்கும்

****************************************************
இது நான் சொல்ல விரும்பியது
யாரோ சொல்லி விட்டாராமே
நான் சொல்ல வந்தது
இல்லையென்றாகி விடுமா

*********************************************
திரும்பிப் பார்க்காமல் 
போக வேண்டும் என்பது
திரும்பிப் பார்க்கும்போது
மறந்து விடுகிறதோ

***********************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...