செவ்வாய், டிசம்பர் 19, 2017

சன்னத நட்சத்திரம்

இன்று ஒரு நட்சத்திரம் கேட்கிறேன் 
மௌனமாய் நகர்கிறது வானம் 
உன் முகம் போலவே எதையும் காட்டா இருள் 

சன்னதம் கொண்ட சந்தர்ப்பங்களை 
மீள்நினைவு கொள்ளவும் அறியாது 
மௌனமாகக் கல் பொறுக்கிக்கொண்டு 
அமர்ந்திருப்பாள் கனகா அத்தை
யாருமிலாத பொழுது ரகசியமாகக் கேட்பாள்
அப்பிடிஎல்லாமா கத்தினேன்
தலையசைத்தாலும்
அவள் கண்களில் தெரிவது திருப்தியா
அவநம்பிக்கையா
இன்றுவரை புரியவில்லை 


என்னால் முடிந்தது
அமாவாசை வானிடம் நட்சத்திரம் கேட்பது
பின்
மௌனத்தை எதிரொலிப்பது



ஈர மணல்

சிப்பியும் சங்கும் அள்ளி வராதவர் 
காலோடும்
ஒட்டிவந்துவிடுகிறது
ஈரமணல்


*******************************************************
தொலைவதற்கான ஆயத்தம் தேடலாக மாற
தேடலுக்கான ஆயத்தம் 
தொலைதலாகவில்லை
இருக்கிறேன்
இருக்கலாம்

***********************************************************
அழாதே எனச்சொல்லவில்லை
காலையில் அழாதே என்றாய்
பக்கத்து கண்ணாடியில் தற்செயலாக நோக்கிய
அழுவதற்கான காரணங்கள் 
திகைத்து நின்றன

****************************************************************

கிள்ளக்கிள்ள துளிர்க்கும் 
பசலைக்கொடிக்குப் புரிகிற மாதிரி 
ஒருமுறையாவது நன்றிசொல்ல வேண்டும் 
முடிந்து போகுமுன்

*********************************************************************
நேற்று மாலை வெளிச்சத்தைவிட 
இந்தக்காலை வெளிச்சம்
பூரணம் காட்டுகிறது
இடையில் வந்த இருள் 
தள்ளிநின்று சிரிப்பதை 
நான் கேட்க விரும்பவில்லை
பார்க்கவுமில்லை
அட..
அதைத் தெரியவே தெரியாது என்றே வையுங்கள்

*****************************************************************************


திங்கள், டிசம்பர் 04, 2017

மூக்குத்திப் பெண்கள்


எப்படியோ முடிந்தது
பிய்த்துப் பிடுங்கும் வறுமையிலும்
தோடு மூக்குத்தியை ஆடை போல அடிப்படையாய்ப்
பார்க்க
அதனினும் கொடிதான பொழுதுகளில்
அடகுக்குப் போகும் போதும்
கவுரவத்தைக் காப்பாற்றடி என்று
காதணிகள் கண்ணீரோடு சொல்லிப் போனது
எண்ணெய் படிந்த ஒற்றைக்கல் மூக்குத்தியிடம்
அணிவிக்கும் பொழுதுக்கு
வைபவப் பெருமையை அடையாவிடினும்
தோடுகள் மூக்குத்தியை
துணைச் சொல்லாகவே ஏற்றன.
அறியாத வயதில் சுழற்றிவிட்ட திருகைக்
கழற்றும் கொடுமை கருதியே பிழைத்தது
பலநேரம்
துயரங்களில் சின்னது என்ன பெரியது என்ன
பாழாய்ப்போன கண் கலங்குகையிலெல்லாம்
தொண்டையடைத்து வழியும் சளியைச்
சிந்திஎறிந்தால் இறங்கும் பாரம்
இடையூறுஎன்னவோ குத்தும் திருகுதான்
உழைப்பின் நெருப்பு தணலும் முகத்தில்
மிஞ்சிய ஒற்றைப் பொட்டாக
ஒற்றைக்கல் மூக்குத்தியின் சுடரிலே
இருள் கடந்த நாட்கள்தான் எத்தனை
முத்து பெரியம்மா எது தவறினாலும்
மெனக்கெட்டு திருகு கழற்றி
வெள்ளிக்கிழமை எண்ணெய்க் குளியல்களில்
சிவப்புக்கல்லும் வெள்ளைக்கல்லும்
தனித்தனியாகவே தெரியுமளவு ஏழுகல்லையும்
காத்து வந்தாள்
அவள் பொறுமையின் பெருமைகளில் ஒன்றாகவும்
திறமையாகவும் சொல்லப்பட்ட அதையும்
பறித்துச் சென்றான் குடிகார பெரியப்பன்
குடல் வெந்த மரணத்தில்
பழஞ்சீலையில் சுருண்டுகொண்டு
குளிர்மறந்த நாட்களில்
நாம் அறிந்திருக்கவில்லை
அந்தக் கணப்பை மூட்டிக் கொண்டிருப்பது
அம்மையின் மஞ்சளேறிய மூக்குத்தியில்
மிச்சமிருந்த நெருப்பென்பதை

ஆசையின் சுடரை வைரமாக்கிய பெண்டிரின்
கைகளுக்கு விலங்குண்டு
கோசும் தொங்கலும் கூடிய அந்தஸ்தின் அடையாளம்
இரண்டில் ஒன்றைக்கைவிட எடுத்த முடிவில்
வலதாகவே இருப்பதன் சௌகர்யம்
வீடு சொல்லிக் கொண்டேயிருக்கும்
இடது தேவலாம் என்றாலும்
எந்தப்பக்கம் என்பது அவள் தேர்வல்ல
ராஜமாதாக்களின் நிரந்தர அசௌகர்யங்களில்
ஒன்று
நிரந்தர சளித் தொங்கலாய் ஆடிய புல்லாக்குகளாக
இருந்திருக்கக் கூடும்

கட்டைவிரல் கீழ் யானை

கண்முன்னால் நின்று கொண்டிருக்கும் யானை 
துதிக்கை தூக்கி பிளிறுமுன்
இதோ 
இந்தக்கட்டைவிரல் நுனியால் 
அழுத்திவிடலாம் போலத்தான் இருந்தது

*************************************************************
சுரைக்கொடி யோசிக்கவில்லை 
கூரை கிடைக்காது குப்பைகளோடு பிணைந்து படர
யாரோ ஒதுங்கிய இடமென்ற
கவலை 
அந்தப்பிஞ்சுக்குமில்லை

*************************************************************
ஏதாவது சொல்லியிருப்பாய் 
என்ற சமாதானத்தோடு புலன் தீட்டுகையில் 
மௌனத்தின் கல்லை அழுத்தி 
அடைத்துவிட்டுப் போனாய்
குகை இருளுக்கு வெளியே அதிரும் முழக்கங்கள் 
யார் கேட்க
இங்கோ ரும் ரும்மெனச் சுற்றுகிறது
மிச்சம் வைத்த மூச்சு

****************************************************************





முளைக்குச்சி உடைவதையும் 
கயிறு நைந்து அறுவதையும் 
யாரும் உவப்பதில்லை
சுற்றுக 
அனுமதிக்கப்பட்ட தூரம் மட்டும்
உன் கயிற்றின் விட்டம் உன் உலகு
எனதும் 
நாம் அடித்த முளைகளின் மேலிருக்கட்டும் 

எப்போதும்
ஒரு கண்

****************************************************************

எதைக்குறி பார்ப்பதென்றே
முடிவுசெய்ய விடாமல்
கரகரவென்று சுற்றும் சக்கரத்தின் முன் 

அம்புடன்
நிற்கிறது வாழ்க்கை


*****************************************
குமுறிக்குமுறி புரளும் நினைவுகளைப் 
புதைத்துவிட்டு 
மேலே இரண்டு நித்யகல்யாணிச்செடி வளர்த்து
வசவுகளை வார்த்தே வந்தாலும்
அதுவும் சிரிக்கிறதே
பூ மனசுதான்


***********************************************************************************



தழையுணர்த்தும் சிறுவாழ்வு

உலுக்கி உலுக்கி ஆட்டியபோதும்
முருங்கைக்கிளை 
சிரித்துக்கொண்டு நிமிர்ந்துவிடுகிறது
பெருமழைசொரிந்த
நேற்றைய சலிப்பெங்கே என்றால்
நம் காலடியில் உதிர்ந்து பறக்கும்
இலைகளைச் சுட்டியபடி
ஓராயிரமாய்க் கிழிந்து தொங்கும் 
வாழையிலையை வருடப்போகிறது

ஏறியிறங்கும் அணிலுக்கும் 
ஒண்டு இடுக்கில் நார் சேர்க்கும் காக்கைக்கும் 
ஆட்சேபமின்றி இடம்

மழையைக்குடிக்கும்
ஒளியைத்தின்னும்
இளவெயிலில் தழையுணர்த்தும்
சிறுவாழ்வு
சொல்லிக்கொள்கிறோம்
எதற்கும் இடந்தரா எம்முடையதைப் 
பெருவாழ்வென்று


சேதாரமிலா உபச்சாரம்

வருத்தங்களை உருக்கி உருக்கி 
இழையத்தட்டி நகாசு கிகாசு செய்து 
புத்திமதிகளை 
நாலு கல்லோ சலங்கையோ செதுக்கி 
அமுக்கி அமுக்கி ஓரம் மூடி 
அடக்கமாகப் பெட்டியிலிட்டு 
வைத்திருங்களேன்
செய்கூலி சேதாரத்தோடு நல்ல விலை போகும்
நல்ல விலை கொண்டு நாயை விற்பார்
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ
எதற்குப் பின் வருத்தத்திடம்
உபசார வார்த்தைகள்




சாலையோர அங்காளம்மை-2

முழம் முழமாய்ச் சுற்றி வைத்த பந்துகளிலிருந்து
ஒரு கிள்ளு கூடத்தராது ஒயர்கூடையில் பதுக்கியபடி
தன்னை வணங்க காசு வீசும்
வாகனதாரிகளை மறித்துவிட்டு
பேரத்தின் எரிச்சலை வெற்றிலை எச்சிலாய்ப்புளிச்சிடும்
பேச்சியின் பேச்சும் கூவலும் 

அத்துணை சுவாரசியம்
எவரோ எப்போதோ சார்த்திய

மஞ்சள் சுங்கடியில் சான்னித்தியம் அருளும் 
அங்காளிக்கு 





மீனின்குரல் கேட்கும் தூண்டில்

வனத்தில் நிறைந்திருந்த
வயலட் சிறு பூக்களின் பெயர் தெரியவில்லை
வண்ணத்துப் பூச்சிக்கும் எனக்கும்
அதனாலென்ன

********************************************************
கு
ளத்தின் பாடலை 
நீங்கள் தவளையின் குரலில் கேட்கிறீர்கள் 
உங்கள் தூண்டில் மீனின் குரலில் கேட்க 
நானோ நீரின் குரலில்

********************************************************
தூறலில் தொடங்காத 
மழையையும் 
பழகிக் கொள்கின்றன தொட்டிச் செடிகள்
***************************************************************

கண்ணாடித்தாள் போலச் சிறகு விரிக்கும் வண்ணத்துப்பூச்சி 
எங்கு கிழிபடுமோ 
பதட்டமாயிருந்ததில் 
சற்றுமுன் கிழித்த இதயம் மறந்து போனது

******************************************************************


வெள்ளி, டிசம்பர் 01, 2017

உதிரி செவ்வந்தி

உதிரி செவ்வந்தியை இட்டு 
கமலம் 
வரைந்த வாசலைத் தயக்கத்துடன் 
சாய்ந்து சாய்ந்து நனைக்கிறது மழை 
திருநாள் எங்கபோகுது 
நா எங்க போறேன் 
அட இந்த உதிரி செவ்வந்தியும்தான் 
எங்க போகுது
நீ வா தாராளமா
மழையிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்
அவள்



தளராடைவேளை

மாற்றிப்போட்ட சேலையின் ஓரப்பிசிறுவழி
கொடியிலிருந்து சொட்டிக் கொண்டிருக்கிறது
வெளியில் நான் விட்டுவந்த
மழை
கேட்கவேண்டும் எனத் தோன்றும் பாடல்கள்
எதையும் தேட நேரமில்லை
மெழுகுவத்தி கரைந்தே விடுமோ என்ற அச்சத்துடன்
ஊதிஊதி அணைத்து அணைத்து
ஏற்றிக் கொண்ட இரவுகளுக்கு
இருந்த வாசம்
இன்றைய நாசியில் அரூபமாய்
இறுக்கமாய்த் தோள் சார்த்திய வயலினை
இழைக்கும் விரல்களை நினைத்தபடி
வெங்காயம் நறுக்கும்
இந்த தளராடைவேளையின் பரபரப்பு
என்றாவது மணக்கக் கூடும்

குருதியின் நீர்மை

சொட்டுச் சொட்டாய் உதிர்ந்து கொண்டிருக்கிறது
எவ்வளவற்றை ஏந்திவிட முடியுமோ
அவ்வளவையும் ஏந்திவிடக் கை குவிக்கிறேன்
ஏந்திய மறுநொடி வழிந்தபோதும்
மழைத் துளியே உன்மீதிலான காதலைத்தான்
எப்படித் துறப்பேன்
உள்ளிறங்கி உள்ளிறங்கி

என் ரத்தக் குழாய்களில்
பயணிக்கும் பேரன்பு உனக்கு வாய்க்காதபோதும்
என் குருதியின் நீர்மை நீதானெனக்
கற்பித்துக் கொள்கிறேன்
பைசாசத்தைக் கூட்டு சேர்த்துக் கொண்டு
வெறியாடும் பொழுதுகளையும் மன்னித்து
பழரசமருந்தி இசைபாடும் 

காவிய நாயகனாக உருவகித்துக்
காத்திருக்கப் பழகுகிறேன்



வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...