kavalai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kavalai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012

போதனை


கனவுகள் 
இறைந்து கிடக்கும் 
பால்யத்தின் வீதி...
நம்பிக்கையின் 
பொம்மையாக 
நடக்கும் புத்தன்கள்
போதிக்கிறார்கள் 
நம் பால்யத்தின் 
பெருமதிப்பை  

சனி, ஜூன் 09, 2012

"முடிசூடா மன்னர்"


என்னுடைய கிரீடத்தை 
நீங்கள் 
பார்த்திருக்கிறீர்களா ?
பரம்பரையாய் 
ஆகிவந்தது.
ரசனையில் தேர்ந்தவன் 
செய்தது ....
நுணுக்கமான வேலைகள் ...
நல்ல பசும்பொன் 
நவமணிகள்...
என் ராசிக்கேற்ற 
பெரிய கோமேதகமும் உண்டு..
சரியான கனம்!
அப்புறம் ஒன்று ....
இந்த ...பெட்டிக்கடை பாக்கி 
தீர்க்க 
முன்னூறு ரூபாய் கிடைக்குமா?
 
அடுத்த மாதம் திருப்பிவிடலாம்.

செவ்வாய், ஜூன் 05, 2012

பொருள் விளங்காப் புள்ளிகள்

 
தொடக்கத்திலேயே 
முடிவும் 
சேர்ந்துதான் இருக்கிறது.
கேள்வி,ஆச்சரியம் 
இரண்டின் கீழும் 
இடும் புள்ளிகள் 
இணைக்கவும் ,பிரிக்கவும் 
தெரிந்து வைத்திருக்கின்றன ....
தோளில்
ஆட்டுக்குட்டியோடு 
வனமெங்கும் 
புள்ளிக்குப்பின் 
போய்க்கொண்டே......இருக்கிறோம் 
முடிவுறாப் பயணமாக.... 

சனி, மே 19, 2012

அவன் பார்க்கக் கூடாத கதவு

மே16 சொல்வனம் மின்னிதழில் 
திறக்கப்போவதில்லை 
என்ற தெளிவின்றிப் 
பூட்டப்பட்ட கதவு அது.

யாரேனும்
முன் வந்தால் -
திறக்கத் தோதாக
நிலையின்மேல் சாவி கூட
இருக்கிறது.
இந்த வளைவுகளையும்
கொண்டிகளையும்
செதுக்கி கோர்த்தவனுக்குத்
தெரியாது,
உரிமையாளனின்
ஆன்மாவை -அதில்
தொங்கவிடப் போவது…
அந்த வளையம் ,
அழுத்தமாகத் தாழிடத்
தோதாக -தன்னை
இழுத்துப் பிடித்துக்கொள்ளும்
விரல்களின்
ஸ்பரிசத்துக்காகவே
காற்றில் அசைந்து அசைந்து
முனகுகிறது.
வீடுமறந்து
அயல்மண்ணில் நிலைகொள்ள
முயலும்
தோழன் கண்ணில்
படாதிருக்கட்டும்
இந்தக் கதவின் படமும்
என் வரிகளும்…..

செவ்வாய், மே 15, 2012

நான் பொழிந்த புனல்

மே 14  உயிரோசையில் 

உள்ளங்கை குவித்து
ஏந்தி வந்தேன் 
என் வீட்டுக் கிணற்றுநீர்..
பிரியா விரல்களூடும்
கசிந்த நீர் போக 
மீதம் சொரிந்தேன் 
ஒரு நுரை ததும்பிய 
பேராற்றில் .....
இன்றைய வண்டலில் 
அந்தத் துளிகளைத் தேடித் 
தோண்டிக் கொண்டேயிருக்கிறேன் 
ஒரு ஊற்று....
நானும் புதைந்திருக்கும் 
அதன் மேல் நின்று 
நக அழுக்கு சுட்டி 
சிரிக்கும் 
நீ 
கொண்டிருக்கிறாய் 
புதுப் புனல் நாள் குறித்த 
நம்பிக்கையை...

சனி, மே 12, 2012

பூட்டாத பூட்டுக்கள்


 May 11,வல்லமையில் 

பூட்ட ஏதும் 
பொருளிலாத போதும்
பூட்டிச் செல்வது 
வழக்கத்தின் காரணமாய் 
நிகழ்கிறது.
கதவைத் திறக்கும்போது 
ஞாபகமாய் 
மனசைப் பூட்டிக் கொள்ள 
வேண்டியிருக்கிறது …..
உள் சுவர்களெங்கும் 
பிறர் அறியாப் 
பூட்டுகள் 
தொங்கிக்கொண்டே இருக்கின்றன …..
தேவைக்கேற்ப 
அவரவர் 
எடுத்துக் கொள்வதுண்டு 
சிலசமயம் 
தனக்கு….
சிலசமயம் 
பிறர் வாய்க்கு….
பலசமயம் விஷயங்களுக்கு ….
எப்போதும் கனவுகளுக்கு

 

சனி, ஏப்ரல் 28, 2012

அது இதுவல்ல

ஏப்ரல் 27 வல்லமையில்வெளியானது




அது இதுவல்ல
கடிகாரம் எனச் 
சொல்லலாம்தான் !
ஆனால்…
உன்-இடது கையிலிருந்து 
அவிழ்த்தோ ,
என்ன செய்வதெனத் 
தெரியாமல் அடுக்கியுள்ள 
எண்ணற்ற அன்பளிப்பு 
சுவர்க்கடிகாரம்
உறைகளைப் பிரித்தோ
தந்து விடலாம் என 
நிம்மதி அடையாதே !
என் பதட்டம் வேறானது. 
அதில்தான் வைத்திருந்தேன் 
புதிய சமையல் குறிப்பு 
முயன்று பார்க்க,
மகனுக்கான வரைபடம் 
வரைந்து முடிக்க,
நாங்கள் நட்ட 
தென்னம்பிள்ளை பற்றி 
தோழியிடம் விசாரிக்க,
தலையணை அருகே 
அலைபேசியோடு
சுருண்டிருக்கும் அம்மாவின் 
நலம் கேட்க,
எல்லாவற்றுக்குமான 
என் மணித்துளிகளையும்…!
என்ன பெயரிட்டு யாரிடம்,
எவ்விடம் கேட்பதெனத்
தெரியவில்லை.
கடிகாரம் என்று மட்டும் சொல்லி விடாதே.

புதன், ஏப்ரல் 25, 2012

உடை மாற்றும் கனா

ஏப்ரல் 23  வல்லமை இணைய இதழில் வெளியானது


உப்புக் கரிந்த
உதடுகளோடு
வியர்வையின்
வீச்சம் தாளாது
வேண்டுகிறார்கள்
வெள்ளுடைத் தேவதைகள்…..
சிலுவைகளை விடக் கனமான
சிறகுகளையும்
நடமாடத் தோதிலாது
தடுக்கும் ஆடைகளையும்
புறக்கணித்து
எளிதான புதிய
அவதாரம் எடுக்க வேண்டுமாம்.
யாராவது
கனவு காணுங்கள்…
ஓவியம் கற்றவராயிருந்தால்
கூடுதல் மகிழ்ச்சி!

தூறலுக்குள் இடி இறக்காதீர்

ஏப்ரல்  22 திண்ணையில் வெளியானது

-எடுக்கப்படாமல்
ஒலித்து நிற்கும்
 
தொலைபேசிமணி…
 
ஏகப்பட்ட
 
கேள்விக்கிளை விரிக்கிறது…
 
அச்சம்,எரிச்சல்,
 
ஆவல்….
 
ஏதோ மீதூர ,
 
மீண்டும்,மீண்டும்…முயலவேண்டாம்!
 
அந்த முனையில் ,
 
உக்கிரமான வாதம்
ஓடிக்கொண்டிருக்கலாம் !
 
உருக்கமான பிரார்த்தனை
பக்கத்தில் நடக்கலாம்..
 
கடன்காரனோ,
 
அதிகாரியோ,
திணறடித்துக் கொண்டிருக்கலாம்…
 
மரணச் சடங்கோ,
விபத்தோ,கூட்டமோ,
தவிர்க்கவியலா தவிர்ப்பாயிருக்கலாம்!
 
தவறவிட்ட உறக்கம்
நேரங்காலமின்றி
வாய்த்திருக்கலாம்.-

கனவின் சிறகுகள்



ஏப்ரல்22 கீற்று இணையத்தில் வெளியானது
நிலவின் கீற்றும் 
குளத்தின் சுவாசமும் 
மரங்களின் மௌனமும் 
புதர்களின் சிலிர்ப்பும் 

அவள் 
பின்னிய கரங்களின் 
விடுவிப்புக்காகவோ, 
சிறகுகளின் 
வீழ்ச்சிக்காகவோ...
காத்திருக்கின்றன.
ஒவ்வொன்றாக 
அல்ல ஒட்டுமொத்தமாக 
அகற்றப்படுகையில் 
அவள் 
வெள்ளுடை நனையாது 
சற்றே தூக்கி 
நீரின்மேல் 
நடந்து ...வனம் சேர்வாள்.

சனி, ஏப்ரல் 07, 2012

யுகாந்திரமாய்த் தவறும் உறக்கம்

  ஏப்ரல் மாத செம்மலரில் வெளியானது
 
குழாயடிப் பாத்திரங்கள் 
விட்டுப்போன பால்கணக்கு 
ஊறும் அரிசி உளுந்து ........
தீர்ந்துபோன வெங்காயம் ,
காலையில் வீசிப்போன 
ஒரு வசைச்சொல் ........
ஒவ்வொன்றாக 
நுழைந்து 
குழுப்படத்திற்கு 
இடம்பிடிப்பதுபோல் 
நெருக்கியடிக்கின்றன 
என்
மேல் இமைக்கும்
கீழ் இமைக்கும் -நடுவே 
கருவிழிக்கு சற்று மேலே...
                                              

புதன், மார்ச் 28, 2012

நிழல் தேடவில்லை


புதிய மாடிப்படி .... 
                                                   
க்ரோட்டன்சின்  எதிரி! 
தொட்டி துறந்து 
வேர்பிடித்தபின் 
இளவெயிலும் படராத்தடுப்பாய் 
அது முளைத்தது !
இயலாமையோடு 
இடித்தபடி குரோட்டன்ஸ் 
அந்தப்பக்கத்தில் நிற்கும் 
வாழை ,முருங்கையிடம் 
விசாரித்தது
விதையா,பதியமா
எப்படி வளர்ந்தது மாடிப்படி என்று?

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

பெயர் துறப்பு விழா

ஒரு சுபயோக ,சுபவேளை 
குறியுங்கள்!
அவமானம்,  அவச்சொல் ,
தவிப்பு, புறக்கணிப்பு,
புலம்பல்,இயலாமை
சகலமும் துறக்க வேண்டும் !
இந்த இப்பிறவியின் 
தடங்கள் துடைத்தெறிய 
தற்கொலையை விட 
சிறந்த வழி!
ஒவ்வொரு எழுத்தாக 
உதிர்ப்பதா, உடைப்பதா,
பிய்ப்பதா 
கசக்கி நெருப்பில் இடுவதா ..
எதுவாயிருப்பினும் 
முகூர்த்தம் முடியுமுன் 
முடித்துவிடவேண்டும்...
பெயரற்று 
உலவி உலகைப் பார்த்தல் 
வாய்க்குமா...?
கிரீடமும் முள்முடியும் 
உனக்கன்று !
உன் பெயர்க்கே....
 

ஞாயிறு, ஜனவரி 29, 2012

இப்போது பரணில்...

மல்லிகை கனகாம்பரம் 
நெருக்கித் தொடுக்கும் நேர்த்தி...
இழைகோலமா
கரைபதம் 
கருகா முறுவல் பக்குவங்கள் 
பொடிகளின் 
அரைபதம்,இடிபதம் 
கொதிமணம்
கொண்டறியும் குறைகள் ,
வகை வகையாய் வழிமுறைகள்..
**************************************.
பொட்டலம் ,பொதிகள் 
சுமந்த 
கழுதை முதுகின் 
கற்பூரப் பொட்டலம்.

சனி, ஜனவரி 28, 2012

ஆறாவது பூதம்

இடம் பொருள் 
அறியாக்காற்று 
ஏவலுக்குக்கட்டுப்பட்டு ,......
*********************
அடக்கமாக 
தீக்குச்சி நுனியில் 
அக்கினிக்குஞ்சு .
****************************
நட்ட கல்லுக்குள்
நாமே 
பூமிபுத்திரர்!
****************************
கண்ணுக்கெட்டியவரை
விண்
என்றும் சொந்தம்!
******************************
ஜலப்பிரவாகம் 
சிறு குடுவை 
அல்லது 
அணைமதகுகளுக்குள்...
********************************
மனசு...?
மனசு....?
மனசு...?  
 

திங்கள், ஜனவரி 23, 2012

வினைச்சொல்

ஒரு தூக்கு வளையத்துக்குள் 
கழுத்தை நீட்ட 
முன்பதிவு செய்து 
காத்திருப்போர் பட்டியல்... 
நம்பிக்கை,
புரிதல்,
தைரியம்,
அன்பு,
நேர்மை,
....................
முடிவிலியாய்த்தொடரும்
வரிசையிலிருந்து 
முன்னுரிமை 
தீர்மானிக்கிறாய் 
நீ......
நானும்.... 
 

புதன், ஜனவரி 11, 2012

இறந்த காலத்தின் தெய்வம்

மைதீர்ந்த
எழுதுகோல்கள்
சிரிக்கின்றன...
கேள்வி கேட்கின்றன..
சவால் விடுகின்றன..
எழுதி முடிக்கவியலா
நெடுநெடுநெடு
வரிகளை
அடையாளம் தெரியுமா
கெக்கலிக்கின்றன ....
மணல் மூடிய நதியாக
ஈரமிலா முனைகள்
கேள்வி கேட்பது விசித்திரம்தான் !
ஆனாலும் ,
அவை
கனவிலும்
வாத்தியக் குழுவோடு
வந்திறங்கிப் பாடுகின்றன ...
அதே  கேள்விகளை!

துளிகளால் சமுத்திரம்


சிவன் கோயிலுக்கு
விளக்குப்போட
அம்மா எடுத்துப்போகும்
எண்ணைக்கிண்ணம்  அளவுதான்
இருந்தது!
நான்
திவலைகளாகச் சொட்டுவதற்கு
அதுவே தாராளம்...
அப்போதுதான்
நீ வந்தாய் ...
நீயும் விட இடம் கேட்டாய்
உன்னிடம்
பாவத்தால் சம்மதித்தேன் ...
உன்னிடம்
நேசத்தால்...
உன்னிடம்
இரக்கத்தால்/...
உன்னிடம்
வேறுவழியின்றி....
பிறகு
என் சம்மதத்துக்கே வேலையில்லை...
கிண்ணம்
திருவண்ணாமலை தீபக்கொப்பரையாகிவிட்டது!

    ஏ
       றி
அதற்குள் கவலையை வடிக்க
ஏணிகூட....
ஏற்றி இறக்குவது
யாரென்று
தெரியாமலே

நான் திவலை...திவலையாக...
...
 
    

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...