இருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 05, 2019

ஒளியைப் பார்ப்பேன்

நாற்புறமும் இருளிருப்பினும்
எங்கோ சுடரும் ஒற்றைப்பொட்டு ஒளியின் 
துணைகொண்டு வெளிவருவேன்
வெளிச்சத்தை எதிர்கொள்ளச் சகியாது
உனது கண்கூசும் என்கிறாய் ஆதுரமாக
இருளையே பழகியாயிற்று
ஒளியைப் பார்ப்பேன்
ஒளியில் உன்முகம் சிதைவதையும் பார்ப்பேன்
ஒளி என் பாதை நிறைக்கும்
இருள்,உடல்,இருள்,உடல் சொல்லிச்சொல்லி
மருட்டிய உன் கையை உதறி
ஒளியை மூச்சுக்குள் நிரப்பிக்கொள்வேன்
கைவீசி நடப்பேன்
#பொள்ளாச்சி 

வியாழன், நவம்பர் 23, 2017

வீழ்சருகின் குரல்

தரையோடு படர்ந்து கிடக்கிறது குப்பைக்கீரை
பெயரின் கண்ணாடியில்
முகம் பார்க்கத் தெரியாதவரை
பிழைத்தேன்

********************************************************

வீதிகளற்ற கனவில் 
தினமும் தாவிக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி 
எதிர்ப்படும் கைரேகை பட்டழிகிறது

***********************************************************
புல்லையும் அளவாகக்
கத்தரித்துவிட வேண்டிய
உலகில் 
விடுதலை கீதம்
பாடிச்சுற்றும் பொன்வண்டே
உன் சின்னச்சிறகுகள்
கண்டு பட படக்குதென் இதயம்


***************************************************************
மேல் கீழாக எழுதிப் பார்த்தேன்
கீழ்மேலாகவும்
இடவலம் வல இடம்
எப்படி எழுதிடினும்
குன்றா கசப்பு 
தேனால் மெழுகித்தான் என்ன


************************************************************
விழுதாடிக்கொண்டிருந்த
காற்றைப் பார்த்து சிரித்துக்கொள்கிறது
அடர்கிளை
இங்கோ
அடர்கிளையின் இலை
துறந்த ஒற்றைக்குச்சி


**********************************************************
கழிவிரக்கப் புன்னகைக்குப் பதில்
காறித் துப்பிவிட்டு
சுருண்டது நிழல்


*****************************************************

இந்த நதியின் அலைகளுக்கப்பால்
இந்த முகடுகளின் மேகப்பூச்சுக்கப்பால்
இந்த நீலத்தின்
கூசும் ஒளிக்கப்பால்
இருப்பதெல்லாம் இருள்
ஏன் இத்தனை திரை


********************************************************
இலை இலை இலை
அடுக்கடுக்கடுக்காக
இலை
வளைந்து நெளிந்து
நுழையும் கீற்று அதுபோக்கில்தான் தரை தொடுகிறது
கோணல் புன்னகையென
சலம்புகிறது வீழ்சருகு


**********************************************************
எதுவுமே நினைக்காதவர்கள்
பற்றிக்கூட
என்ன நினைப்பார்களோ என 

நினைத்துக்கொள்கிறீர்கள்


செவ்வாய், நவம்பர் 21, 2017

கிணற்றகல இருள்

இருளை விசிறுகிறவர்கள்
ஒளியைக் கைப்பற்ற 
உங்களைத் தூண்டுகிறார்கள்
அது விதியாகத்தான் இருக்கட்டுமே

**********************************************

கிணற்றகல இருளில் மிதந்து கொண்டிருந்த 
இரண்டு 
நந்தியாவட்டைகள் மட்டும்
இன்னும் வெளிச்சமாக

**********************************************

தூவானத்துக்கென்று
தனி நிறம்
உங்கள் எந்த தூரிகையிலும் இல்லாதபடி

********************************************************
நினைத்தது நிஜம்
நினைக்காததும்
இங்கிருப்பதெல்லாம்
இங்கில்லாததும்தானே

*****************************************************

செம்பருத்தியின் அடர்சிவப்பு காணாதவனே
சாம்பிய முகத்தோடு நாள் திறப்பதன்றி 
ஏது வழியுனக்கு

***************************************************************


புதன், ஜனவரி 06, 2016

டிசம்பர் பூக்கள்-4

ஏற்றிவந்த சுடர்
அகத்திருக்கிறது 
இருள் 
இருள் என 
அச்சம் கொள்ளாதே
*************************
ஆங்காரமும் அன்புதானாம் 
நன்றாகத்தான் இருக்கிறது 
இந்த 
மொழிபெயர்ப்பு
**********************************
ஒவ்வொரு மரணத்தின்
பின்னும்
உறவு பேணுதல்
குறித்த ஞானோதயங்களும் தீர்மானங்களும் பிறக்கின்றன
உயிர் வாழ்பவர்களால்
மரணிக்கின்றன

**************************************
தெரியும் என்ற இருப்பு
தெரியாததன் நெருப்பில்
நீர் தெளித்து
அவித்துக் கொண்டிருக்கிறது

*****************************
பழுத்த கம்பி 
நீ தொட்டாலும் சுடும் 
கனலின் அடையாளம் 
கற்றல் அவசியம்


************************

வெள்ளி, நவம்பர் 22, 2013

மண்ணாகப் போகுமுன்...

கீற்று இணைய இதழில் நேற்று(21 11 13)

வண்ணம் வெளிறிய, பூச்சு உதிரும் 
சுவர்கள் காத்துக் கொண்டே இருக்கின்றன 
எதையாவது கிறுக்கவும்,
நினைவூட்டும் கோடுகள் புள்ளிகள் இழுக்கவும்,
மஞ்சள் வட்டமும் குங்குமமும் 
தீற்றிப் பூசை போடவும் ,
தன்மேல் சாய்ந்தபடி கதைபேச,
மூக்கைச் சிந்தித் துடைக்க,
தோரணையாகக் கையூன்றி நிற்க ...
ஒரு படத்தை, கண்ணாடியை, வாழ்த்துமடலை
எதையாவது மாட்ட -
சுத்தியும் ஆணியுமாக இடம் தேட ...
யாராவது வந்து உறவு கொண்டாடி
வெற்றிலை கிள்ளியபடி மீதிச் சுண்ணாம்பைத்
தடவும் ஒரு நடுங்கும் கையும்
நெருங்காமல்
இடிந்தே போய்விடப் போகிறோமோ
என்ற நடுக்கத்தில் ...
இடம்பெயர்ந்த எவரேனும் மீள வேண்டுமென்ற
வேண்டுதலை
வீட்டுத் தெய்வத்திடம் வைத்தபடி

செவ்வாய், பிப்ரவரி 19, 2013

வன தேவதா





பழுத்த இலைகளில்
பாதம்புதைய நடந்துகொண்டிருக்கிறேன் ..
இருள் கவிந்த வனத்தில்
என்றோ கவிந்ததன் எச்சமான
ஒளியின் சாயலில்
நடக்கிறேன்...
செவியுரசும் விழுது ...
வண்ணமோ வடிவமோ
வாழிடமோ காட்டாது
மணத்தால்
உடன் நடந்த பூ..
உணர்ந்தறியாக் குளிர்மையோடு
கால் நனைத்த நீர்ப் பெருக்கு,
தக்க உதாரணங்களோடு
சேகரித்தபடியே நடக்கிறேன்......
மழையுதிரும் மாலையிலோ,
நிலா வழியும் இராமணலிலோ
நாம் நடக்கையில்
கதைக்கத் தோதாக இருக்குமென...


ஒருவேளை.....
ஒளியின் தடம் தீண்டாமலே
என் பயணம் முடியவும் கூடும் ..
நெடுக அழைத்தபடி
நீ வரும் நாளில்
இந்தப் பழுப்புகள்
சருகாய் மொடமொடத்தால்
அதன் வழியே
நீ கேட்கலாம் என் சேகரங்களை.....
.
என் சிறகில் ஒளியிருந்ததைச்
சொல்லி அழாதே தயவுசெய்து
....!

புதன், ஜனவரி 30, 2013

ஸ்னேஹலதாவுடன் ...



இந்த இக்கணம்
என்னுடையது....
காற்று அறையும் முகத்தில்
வந்து வந்து விழும்
கற்றை முடியொதுக்கி
ஒதுக்கி...
கைநோவதும் பொருட்டில்லை...

வெம்மையின் உப்பு பூசும்
ஒவ்வொரு நொடியும்
கூடிக் கூடி
என்னுடையதாகும்
கணங்களில் இருக்கிறேன்..

ஸ்னேஹலதாவைச்
சந்திக்கச் செல்லும்
இந்தப் பயணம் முக்கியமானது...

ஒவ்வொருமுறையும்
இந்தக் கணங்களைப் பற்றிக்
கதைத்திருப்பது
எங்கள் வழக்கம்...

எதுவும் சொல்லமாட்டாள்
இம்முறை.

புதிதாய் வாங்கிய
கண்ணாடி
முன் நெற்றிக் குழலைக்
கண்ணிலிருந்து தள்ளி வைப்பதால்
அந்தக் கற்றை
காரணமில்லை -
துளிர்த்து இறங்கும் துளிகளுக்கு..

நேற்றைய பயண விபத்தில்
மரித்து
கண்ணாடிப் பேழையில்
உறங்கும் ஸ்னேஹலதா
கேட்டிருந்த
இதன் ஜோடிக் குளிர்க் கண்ணாடி
என் கைப் பையில்...

திங்கள், ஜனவரி 21, 2013

ஜகன்மோகினி



நான்...
அனாமிகா...
வினோதினி...
தாட்சாயணி...
என் விரிசடையோ .
மூன்றாம் நேத்ரமோ ,
தோள் தொடும் தூக்கிய திருவடியோ
கை ஏந்திய எரிதழலோ,
காணவியலாக் கண்முன்னே
தலையாட்டி பொம்மைகள்
உருண்டு கொண்டிருக்கின்றன !
உருப் பெறும்
சாபவிமோசனம்
எப்போது -உன் கண்ணுக்கு?

வெள்ளி, டிசம்பர் 07, 2012

"ஆம்பிள சட்டை "



                                   
பிரிய   நடிகை 
காதலன் பிரிவை 
அவன் சட்டை நிரப்புவதாக 
பட்டன் திருகி நின்ற படம் 
அன்று -வினோதம்.
நாகரிகப் பெண்களின் 
தேநீர்ச் சட்டை வாசகங்கள் 
நாவலில் ,
கவர்ச்சிக்கோ,கேலிக்கோ.....

மடித்துவிட்ட

முழுக்கைச் சட்டையோடு வந்து 

பேசினால் -அவள் 

புரட்சிப்பெண் என்பது நம்பிக்கை!
.
பள்ளி நாடகத்தில் 

ஆண்வேட வாய்ப்பை 

அண்ணன் தம்பி உள்ளவளுக்கே 

தருவார் ருக்மிணி டீச்சர்..

எங்கள் வீடு போல், 

பாத்திரம் வாங்க உதவாத 

மாமாவின் கதர்ச் சட்டைகள் 

அத்தைக்குப் பிடித்ததேயில்லை.

யோசனைகளோடு ,

பழைய சட்டைகள் மடிக்கிறேன்-

சேலையின்மேல் அணிந்து 

கல் சுமக்கப்போகும் செல்விக்காகவும்,

நெல் உலர்த்தும் சந்திராவுக்காகவும் .

செவ்வாய், அக்டோபர் 09, 2012

ரெட்டை வரி நோட்டு




இருளின் முற்றுப்புள்ளி 
வெளிச்சத்தின் 
தொடக்கப் புள்ளியாய் 
இருந்திருக்கலாம் .
ஆனால்..
இருளின் நீள அகலத்துக்குள் 
இடுங்கிப்போன 
வெளிச்சத்தின் முற்றுப்புள்ளியும் 
அதுவானதால் ,
காற் புள்ளிகளோடு  கதைத்தபடி 
இருளின் வரி நீண்டு கொண்டே .....
 உங்களால் 
அதனிடம் ,முற்றுப்புள்ளியை 
நினைவூட்டமுடியுமா ?

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...