ஞாயிறு, ஜூன் 26, 2016

மே 31 முகநூலில்

ஒரு வெட்கம் என்பது
துடிக்கும் உதடுகளையும்
சிவந்த கன்னங்களையும்
மட்டுமே நினைவூட்டுமா என்ன
உறங்குவது போலவே
இறந்து கிடக்கும்
குழந்தைகளை ஏந்த வேண்டிய உலகில்

*****************************************************
செயல்படுவோம்
செயல்படுவோம்
சொல்லிக்கொண்டே 
இருந்த களைப்பு தீர்ந்தபின்
சொல்லவேண்டிய பணி
வந்துவிடும்

மே 22 முகநூலில்

உலகம் இப்படி இருப்பதாக
உலகம் இப்படி நினைப்பதாக
உலகம் இப்படி இயங்குவதாக
நான் நினைப்பது எனது
நீ உனது
ஆனால் இதுவோஅவர்கள் உலகம்

**************************************************
பேசிக் கொள்வதில்லை 
பேசவேண்டியவற்றை 
பேசிக்கொண்டேயிருக்கிறோம்
பேசத் தேவையில்லாதவற்றை 
பேசுபொருளும் 
பேசாப்போருளும்
வீசுகின்றன
நம்மை

என்னை என்னவென்று சொல்லிக்கொள்வது


நெருப்பாக இருக்க முடிவுசெய்கையில்
ஊழிப் பெருமழைக்காலமாகி விடுகிறது
பனிப்பாளமாகக் கிடக்கையில்
மேலிருந்து உச்சிவெயில்
கீழிருந்து காட்டுத்தீ
சகஹிருதயர்களை அடையாளம் கண்டால்
அவர்களைச் சாவு தின்று விட்டிருக்கிறது
தனிமையே தீர்வென்கையில்
நான் நிற்குமிடம் திருவிழாக்கூட்டம்
எனை என்னசெய்வாய் வேய்ங்குழலே
சங்கீத ஞானமில்லா வெறும்
ஊதாங்குழலாகிக் கிடக்கும் உன்னிடம்
நிச்சயம் கிடைக்கவேண்டும் விடை

உள்ளிருக்கும் வெளியில்

 


செம்மை கூடிய வானவெளியின் 
அரிய தருணத்தைச் சிறைப்படுத்தியிருந்த 
புகைப்படத்தில் ஒரு கோடுபோல் 
தெரிந்தது என்ன பறவையோ 
என்றே துடிக்கிறது மனச்சிறகு 

அலைபேசி உரையாடலில் 
லத்தின் அமெரிக்கப்பாடலை
 சிலாகித்துக்கொண்டிருக்கிறார் நண்பர்.
 பின்னணியில் 
குழந்தைகளின் விளையாடற் கூச்சல் 
"டேய் அந்தண்டை போங்க "
 தொடர்கிறார் அவர் 
லத்தின் அமெரிக்காவிலிருந்து 
நான் அந்த முற்றம் இறங்கிவிட்டேன் 
என்ன ஆட்டமாயிருக்கும் 


ஜம் பம்மென அதிரும் இசைக்குள் 
வளைந்து குழையும் ஒரு புல்லாங்குழல் துணுக்கு 
சட்டென்று பதிந்து இழைகிறது 
எல்லாம் தாண்டி நாள் முழுக்க 

பிரம்மாண்டங்களின் ,அதீதங்களின் 
ஊர்வலத்தைக் கேலிசெய்தபடி 
சிறுகோடுகளின் 
படியில் தொங்கும் பயணி எனப் 
பரிகசிக்கிறாள் தோழி 

_
திண்ணை 16 5 16

மே 15 முகநூலில்

பறத்தல் விடுதலை 
என எப்படித் தீர்மானிப்பது
இருத்தல் 
அவ்வாறில்லாதபோது
*****************************************வழக்கமான புன்னகை
வழக்கமான சண்டை
வழக்கமான கேள்வி
வழக்கமான பதில்
வழக்கமான பாதை 
வழக்கமான பயணம்
வழக்கமான தாமதம்
வழக்கமான காத்திருப்பு
இந்தப்பக்கமா
கன்டெய்னர்கள் வருவதேயில்லை

*************************************************

மே 14 முகநூலில்

புல்வெளியில் இலையும்
பூவும் உதிர்வதைச்
சொல்கையில்கூட
உங்களால்
காய்ந்த புல்லைக்
கற்பனையும் செய்ய இயலவில்லை.
எல்லாம்
சிறப்பாக இருக்கிறது
மகிழ்ச்சி

********************************************
எங்கள் கதாநாயகர்கள்தான்
எவ்வளவு துன்புற்று
விட்டார்கள்
நைந்த முந்தானைகள்
நனையும் காலம்வரை
சுபிட்சம்

*************************************************
எங்கிருந்தாவது 
ஒரு சுசீலா பாடல்
ஒலித்தால்
யாரோ சூடியிருக்கும்
சாதிமல்லியின் சுகந்தம்
கடந்தால்
மெல்லிய குரலில்
ஒரு பூனை மியாவினால்
களுக்கென ஒரு மழலை
சிரித்தால்
அட
வீறிட்டழுதால் கூடத்தேவலாம்
இந்த நொடி உடைந்துவிடும்

************************************************
கோத்துக் கொள்ள
நீண்ட கரங்கள்
தட்டையாக இருக்கிறதா
பஞ்சு போலிருக்கிறதா
மெல்லியதா
கொடுத்துச் சிவக்குமா
பரஸ்பர பரிசீலனையில்
நடுங்குவதைக் கவனியாது
இப்புறமும் அப்புறமும்
நீண்ட படியே..

******************************************************


மே 11 முகநூலில்

கரித்துண்டுபோல் கிடந்தன
எழுத்துகள்
தணலாக்க முடிகிறது உன்னால்
சொல்சொல் எனச்சொன்னதல்லோ
பிழை
*****************************************************
புரிஞ்சுதா புரிஞ்சுதா என்பார் பெரியப்பா
ஒவ்வொரு வரிக்கு நடுவிலும்
மொத்தமாகவே புரியவில்லை
எனச்சொல்லும் தைரியம் வந்தபோது
அவருக்கு எதுவும் புரியும் நிலையில்லை
*****************************************************************
கவனிக்காதது அலட்சியம் என்பாய்
கடந்து செல்வது திமிர் என்பாய்
நின்றால் எதிர்பார்ப்பு
நெருங்கினால் ஏக்கம் 
விலகினால் எரிச்சல்
எங்கிருந்தால் இயல்பு

********************************************************
வந்திருக்கவேண்டும் மழை
வாசல் திறந்திருந்தபோதே
குழந்தை விழித்திருந்தபோதே
மூடிய கதவுக்கு வெளியே
இப்போது
வெறும் சலசலப்பு

*********************************************************
ஒளி உறுத்தும்போது
இருள் பிடிக்கிறது
தெரியும்
இருளும் உறுத்தும்

************************************************

மே 10 முகநூலில்

அதீதத்தில் வந்த சமீபக் கவிதை
சுமந்தாய்
சுமந்தேன்
சுமப்பார்கள்
சிற்றெறும்பின் முதுகில்
முதலை ஏறி அமர்ந்தபடி
நட..நட என்கிறது
அட..அட..
என்ன திறமையான எறும்பு
குரல் கேட்டவர் இதை வாசிக்கிறார்
மற்றவர்..
அவர்தான் நசுங்கிவிட்டாரே
அவர் முதுகு முதலைதான்
இவர் முதுகில்..
இங்கிருந்து பார்க்கையில்
அதுவே பாறாங்கல்
பொறுப்பு என்பீர்கள் உங்கள் மொழியில்-

வில்லாய் வளையும்


குறுகுறுப்புடன் காத்துக்கிடந்தார்கள்
எப்படி வரப்போகிறது
எவர்வழி ,எந்நேரம்,எவ்வளவு ....
கேள்விகளின் திகைப்பு குறித்து
யாருக்கும் வெட்கமில்லை
பூடகம் என்ன வேண்டியிருக்கிறது
உண்ணும் வாய்ப்புக்கான ஐயம் இன்றி
ஐயம் இட விளக்கணைப்பார்
எனப் பேச்சுண்டு
மீண்டும் எரிவது விளக்கா கூரையா
பாருங்கள்
மூக்குத்தியோ,கறிச்சோறோ,குடமோ
சாராயமோ
உங்கள் அழுக்கு ஆடைகளுக்காக
வானம் பேச்சுவழக்கில் ஆனதுதானோ
மானம்

மே 10 2016 முகநூலில் 

எங்கள் வெய்யிலும் உங்கள் வெய்யிலும் ஒன்றல்ல

வானிலை  ஊகங்களில்  தொடங்குகிறது 
உங்கள் வெய்யில் 
குளிரூட்டிகளில்  அதை உறைய வைக்கிறீர்கள் 
எங்கள் வெய்யிலோ  உச்சியில் உறைக்கும்போது
தொடங்குகிறது 
முந்தானையிலோ  கைக்குட்டையிலோ 
சும்மாட்டுச் சுருணையிலோ
இழுத்தணைத்துக் கொள்கிறோம் 

இருபத்தஞ்சா  என்று புலம்பியபடியே 
இளநீர் அருந்துகிறீர்கள் 
இருபத்தஞ்சு  என்பதால் சீவமட்டுமே 
செய்வோம் நாங்கள் 

பனங்குலையும்,வெள்ளரியும் 
நின்று விற்கவோ நீட்டிப்படுக்கவோ 
நிழலும்  கிளையுமிலாது வெட்டி விரிந்த 
சாலைகளில் 
வெய்யிலுக்கு முன்பாய்ப் போக 
விரைகின்றன உங்கள் குளிரூட்டிய வாகனங்கள் 
சுமையேற்றிய மிதிவண்டிக்காரன் 
விஸ்வரூபமெடுத்துச் 
சிரிக்கும்  வெய்யிலை மிதிக்கவியலாது 
முன்கம்பியில் அமர்த்திக் கொள்கிறான் 

மரம் நடுவோம் மரம் நடுவோம் 
என்றபடி செடிநட்டுச் செல்கிறீர்கள் 
மழைக்காக இல்லாவிடிலும் 
எங்களுக்காக நடுங்களேன்
 
தார்வண்டி தள்ளியவன் காலில் 
சுருண்டு கிடக்கும் சாக்குச் சுருள் 
கண்டு உயர்த்திக் குலுக்குகிறீர்கள்
ஸ்லீவ்லெஸ் தோள்களை 

ஆண்டுதோறும்  உங்களுக்காக 
உலர்பருப்பு தூவி நிறமூட்டி உறைமாற்றி
பனிக்குழைவு விற்கப்புறப்படுகிறார்கள்
நாங்கள்  சிரமப்படுத்துவதேயில்லை 
ஆண்டாண்டுகாலமாக  ஆரஞ்சு நிறமான 
நாவை நீட்டியே பரவசம் கொண்டுவிடுகிறோம் 

இது எங்கள் தேசம் எனத் தெரியும் 
எனவேதான் 
வெயிலுக்கேற்ற பிளாஸ்டிக் தொப்பிகளோடு 
காத்திருக்கிறோம் முன்னூறு ரூபாய்க்கு 
அந்தக்குளிர் எப்படியிருக்குமெனப் பார்க்க 
அருகில்கூட போகவியலா வரிசையில் 
மண் தரையில் குந்தியதுபோக 
பிளாஸ்டிக் நாற்காலியில்அமர்வது 
தலைமுறை வளர்ச்சியல்லவா 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...