அடையாளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடையாளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 13, 2022

துண்டு துண்டான பக்கம்

 நீ கேட்டாய் என்று

வழியில்
அடையாளமாகப்
போட்டுவைக்க
என்
வாழ்வின் ஒரு பக்கத்தைத்
துண்டு துண்டாகக்
கிழித்து
ஒன்றும் பறந்துவிடாமல் அமுக்கிஅமுக்கி
உன்கையில் கொடுத்து அனுப்பினேன்
அடைந்ததும்
அழைத்துவிட மாட்டாயா என்று காத்திருக்கிறேன்
உன் பாதை என்ன
அத்தனை நீளமாகவா போகிறது
*****************************************************
பிரயாசை என்ன புதிதா
யார்தான் படவில்லை
என்னைப்போல் இல்லை
என்பது மட்டுமல்ல
எனக்கல்ல
என்பதும்தானே
உங்கள் மற்றும் என் சிக்கல்
************************************************

புதன், மார்ச் 20, 2019

இறங்கி ஆடும் நிலவு

எங்கிருந்தோ ஒரு மெல்லிய மணியோசை
யாராவது யாரையாவது அழைக்கிறார்களா
யாரோ அலாரம் வைத்து புறப்படுகிறார்களோ
என்னவென்று தெரிந்துகொள்ள முடியாமல் 
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
உங்கள் அலைபேசியை எடுங்கள்
அந்த அலாரத்தையாவது நிறுத்துங்கள்
அததற்கென்று 

பிரத்யேக அடையாளங்களிருந்த நாட்கள்தான் 
எத்தனை அருமையானவை

******************************************************************
முன்பொருமுறை 
எண்ணெய்க்கையோடு சுவரில் ஊன்றியிருந்தாய்
காத்திருக்கிறேன்
வண்ணம்பூசும் நாளுக்காக


**********************************************************************
எத்தனை பச்சை
புங்கை இலைகளில் வழியும் நிலவு 

இதையொன்றும் சட்டைசெய்யாது சிரிக்கிறது
எனக்குத்தான் விரல் போதவில்லை
மேற்கிளை 

ஏளனமாக இறங்கி ஆடுகிறது
அண்ணாந்து பார்த்துவிட்டு

 மீண்டும் தொடங்குகிறேன்



வியாழன், ஆகஸ்ட் 31, 2017

அடையாளங்களின் சுமை


புராணநாடக பாத்திரங்களின் 
பித்தளை கவச கிரீடங்களைவிடவும்
கசகசப்பாகவும் கனமாகவும்
துன்புறுத்துகின்றன 
இந்த அடையாளங்கள்
அம்மா ,மகள், மனைவி,
அக்கா தங்கை,அதிகாரி,அடிமை,
அவள்,இவள் ...
போதும் போதாதற்கு 
படிப்பு,பண்பு,பட்டறிவு வகையறாக்கள்
என்ன எரிச்சல்
என்ன கோபம்
என்ன ஆத்திரம்
ஆலகால விஷமெல்லாம் விழுங்கும் 
வேலையே பிழைப்பான சக்தி
கழுத்தை இறுக்கினாலும் திருநீலகண்டமாவதில்லை
அது நித்திய கண்டமல்லவா.
பொங்கும் உணர்வுக்கெல்லாம்
மண்ணை வாரிவிட்டு
வாசாப்புகளையும்
சேர்த்திறைத்த ருக்கு பெரியம்மாவை
ஊர் பிடாரி என்றது.
பரவாயில்லையென நினைத்தாலும்
இந்தப் பெயருக்கெல்லாம் பிடாரி பட்டம் தர்ரதில்ல 
எனத்
தள்ளி விடுகிறீர்களே

புதன், ஜனவரி 06, 2016

டிசம்பர் பூக்கள் -2



புன்னகையைப் பார்த்தால்
பதிலுக்குப் புன்னகைக்கவும் இயலாத
சுவர் கல்லிடம் 
பகிருமோ வருத்தம்
********************************

பூவேலை சித்திரங்களோடு
பளிச்சென்ற நிறக்கலவையில்
ஊர்ந்து செல்கிறது
அமரர் ரதம்.
பணி முடிந்தது.
*************************************
கேட்காத பொழுதுகளிலும்
இசை ஒலித்துக்கொண்டே
இருக்கிறது
கேட்பதான பாவனைகளின் சுமையற்று
*****************************************
மறதியை நம்பியிருக்கிறது
காதல்
மறதியை நம்பியிருக்கிறது
பாசம்
மறதியை நம்பியிருக்கிறது
அன்பு
மறதியை நம்பியிருக்கிறது
அரசியல்
மறதியை நம்பியிருக்கிறது
கோபம்
நீ ஏன் நினைவாற்றல் பற்றிக் கவலை கொள்கிறாய்
மறக்கத்தெரிந்தால்
பிழைக்கத்தெரிந்தது போல்தான்
***********************************************
அவசரமாக செல்லவேண்டியிருக்கிறது
சின்னதுதானே என்று சொல்லிவைத்த
பொய்
பொய்தானென்று
நீ கண்டுவிட்டாயோ
இல்லைதானென்றால்
சொல்லித்தொலை
இன்னும் உனக்குப் புலப்படவில்லையென
********************************************
பார்த்தேன்
பார்த்தேன்
பின்னும் பார்த்தேன்
ஒன்றுமில்லை
நீ பார்த்த 
அதுவே என்று
ஒப்புக்கொண்டு நகர்ந்தேன்
நிம்மதி
உனக்கென்று தோன்றினாலும்...
பின்னும் பார்ப்பேன்
நீ
பாரா கணத்தில்
************************************
காற்றின் எதிர்த்திசையில்
புறப்பட்டது
ஒளிக்கீற்று
குவிந்தகரங்கள் காக்க
**********************************

ஞாயிறு, மே 10, 2015

சரியாய் இருப்பதன் அடையாளம்

சிலநேரம் வார்த்தைகள் சரிசெய்கின்றன
சிலநேரம் மௌனம்
உற்றுப்பார்த்துக் கொண்டேயிருப்பதும்
ஒன்றையும் பார்க்காமலிருப்பதும் கூட
சரிசெய்யத்தான் வேண்டுமா
என்ற கேள்வியும்
சரியாகிவிடாதா என்ற தாபமும்
சரியாகத்தான் எல்லாம் இருக்கிறதா
என்ற சலிப்பும்
நமக்கு மட்டுமேன்
சரியாவதே இல்லை என்ற இரங்கலும்
இதற்கெல்லாம் நடுவில்
சரியாகியிருந்தால்
அது
அடையாளம் தெரியாமலிருக்கவும்
வாய்ப்பிருக்கிறது

வெள்ளி, பிப்ரவரி 07, 2014

அடையாளம்


அன்பைக் கண்டுகொள்ள
ஆவல் கொண்டேன்
என்னை நான் பார்க்கும் தருணம்
தெரியுமென்றாய் …….
சலனம் துடைக்க
பொதியில் அடைந்த உயர்காகிதச்சுருள்
உதவாது என உணரும்போது
அது பெருகித் தளும்பி
வழிந்து கொண்டிருந்தது…

ஒளிக்கீற்றைத் தொடர்ந்து
நடந்து கொண்டே இருக்கிறேன்
வெளிச்சம் எக்கணமும்
என்னுள்
நிரம்பிவிடலாம் என்று.

இளைப்பாறல் உறக்கம் அல்ல
உறக்கம் இளைப்பாறல் அல்ல
என்கிறாய்.
என் பாதங்களைப் போலவே
முன்பின்னாக மாற்றிப் போட்டுக் கொண்டே
போகிறது வானம்…

வானவில் பார்க்கலாம் என்றவன்
பாலை தாண்டி எப்போது வருவானோ…
நானோ மழைவானத்தின்
அடிவாரத்தில் நின்றும்
அவன் திசைப் பார்வையோடு.

சனி, டிசம்பர் 14, 2013

உறைந்த காலம்

வல்லமையில் நேற்று  13 12 13

உதிர்த்த சொற்களில்
நீ நின்றாய் ..
உரைக்காத சொல்லில் நான்…
என் உச்சரிப்பு குறித்து
கிளர்ச்சியோடு பகிர்கிறாய்…
மௌனத்தில் நடமிட்ட
பொழிவை கோர்க்க இயலவில்லை
என்னால் …
வண்ணத்துப் பூச்சியின்
சிறகு படிந்த மகரந்தமென ரசிக்கிறாய்
கூட்டுப் புழுவின் வரிகள்
என்னாயின ..
ஒருமுறை கேட்டிருக்கலாமோ

வெள்ளி, நவம்பர் 29, 2013

பூனை மீசையும் காட்சிப்பிழையும்


-- அந்த சுவர் சொல்கிறது 
நான் அதுவாய் ஒருபோதும் 
இருந்ததில்லை என்று....
ஆம்...நீயாய் இருந்திருக்கலாம் 
என்றுதான் இருந்தேன்...என்றேன்!

அந்த வெயில் சொல்கிறது 
நான் அதுபோல் தகிப்புடன் 
ஒருபோதும் 
ஒளிர்ந்தது இல்லையென்று...
ஆம்..வெளிச்சமோ,கணப்போ
எப்போதும் பற்றாக்குறையில்தான் 
எனக்கே என்றேன்...!

அந்தப் பூ சொன்னது 
என் இதழ் அடுக்கை நீ
ஒருநாளும் சரியாய்க் கணக்கிடவேயில்லை என்று..
மகரந்தம் வாசனை நிறம் என்று 
எதையுமே யூகிப்பதுதான் 
என் ரசனையென ஒப்புக்கொண்டேன் ...

என் காலடிப் பூனை 
சிரிப்பது போல் தோன்றியது...
பூனைகளின் மீசை அவ்வாறு 
போலிக் காட்சி காட்டுவதைத் தான் 
காட்சிப் பிழை என்றாயோ.....
-

ஞாயிறு, நவம்பர் 24, 2013

அவளுக்கு டிசம்பர் வருகிறது



காற்றழுத்தத் தாழ்வுநிலை.....
மழை வரும் ,வரலாம்,வரவில்லை....
புயல் கிழக்கே,தென்கிழக்கே,மேற்கே தென்மேற்கே..
கடந்தது,
மாறியது,
வலுவிழந்தது..
மண்டலவிரதம்,அவசரமாலை,
வேன்,கார்,ரயில்,பேருந்துநிரம்பும் 
பக்தர்கள்,
பிச்சி,சாமந்தி,பட்டன்ரோஜா,கதம்பத்தோடு 
ஒருபந்து டிசம்பர் பூவும் கட்டிவைத்து
இம்மாதத்தைக் கடக்கிறாள் 
கனகாம்பர  சீஸனில் பிறந்ததால் 

கனகா வான கனகா.... 

வெள்ளி, நவம்பர் 22, 2013

மண்ணாகப் போகுமுன்...

கீற்று இணைய இதழில் நேற்று(21 11 13)

வண்ணம் வெளிறிய, பூச்சு உதிரும் 
சுவர்கள் காத்துக் கொண்டே இருக்கின்றன 
எதையாவது கிறுக்கவும்,
நினைவூட்டும் கோடுகள் புள்ளிகள் இழுக்கவும்,
மஞ்சள் வட்டமும் குங்குமமும் 
தீற்றிப் பூசை போடவும் ,
தன்மேல் சாய்ந்தபடி கதைபேச,
மூக்கைச் சிந்தித் துடைக்க,
தோரணையாகக் கையூன்றி நிற்க ...
ஒரு படத்தை, கண்ணாடியை, வாழ்த்துமடலை
எதையாவது மாட்ட -
சுத்தியும் ஆணியுமாக இடம் தேட ...
யாராவது வந்து உறவு கொண்டாடி
வெற்றிலை கிள்ளியபடி மீதிச் சுண்ணாம்பைத்
தடவும் ஒரு நடுங்கும் கையும்
நெருங்காமல்
இடிந்தே போய்விடப் போகிறோமோ
என்ற நடுக்கத்தில் ...
இடம்பெயர்ந்த எவரேனும் மீள வேண்டுமென்ற
வேண்டுதலை
வீட்டுத் தெய்வத்திடம் வைத்தபடி

செவ்வாய், அக்டோபர் 08, 2013

உன்னை எனக்குத் தெரியாதே

பார்த்ததுபோல் இருந்தாலும்
பாராதுதான் போனேன்...


"நில்'...நின்றேன்...
"பாராது போகிறாயே.".
"உன்னை ...பார்த்ததில்லையே."..
"எல்லாம் அறிந்த முகம்தான் ..."
அம்ஹம்...
உறவா..நட்பா...
"மன்னிக்க வேண்டும்...நினைவுக்கு
வரவில்லை.."
"தெரிந்துகொண்டே தெரியாது என்பது....."
"தயவு செய்து நொடிக்காதே ...
அ ....  ஏதாவது குறிப்பு தரக் கூடாதா...
எங்கே பழக்கம்...பார்த்தது எப்போது ...ஏதாவது..."
"உண்மையில் தெரியவில்லையா..."
"உண்மையாய்த் தெரியவில்லை.."

"பொய்யையே பார்த்துப் பார்த்து
பொய்யுடன் பொய்யாய் கலந்து
உண்மையையே
அடையாளம் மறந்து போனதோ..."

உண்மைதானா என்ற
தயக்கத்துடன் நிற்கிறேன்...
அடையாளம் தெரிந்தவர் யாரும்
இருக்கிறீர்களா...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...