kanavu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kanavu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 03, 2012

சால மிகுத்துப்பெயின்

இவ்வார(8 07 12)கல்கியில்  



கரிசனத்தின்
பிறை வெளிச்சமே
பேரொளியாய்க்
கூசுகிறது...
இது பழக்கமில்லை....
புறக்கணிப்பின் இருள்
அகண்டமாய்ச் சூழ
அகட்டி அகட்டி விழித்தே
பழகிய விழிகளுக்குத்
தாளாது....

விரையும்
இடைநில்லாப் பேருந்தின்
சன்னலோரமாய்க்
காட்சிப்படும்
முதியவளோ,நோயாளியோ
பெறும் அதிர்வுக்கீற்று
போதும்...

புத்தனின்
மெலிய கரங்கள்
கபிலவஸ்துவின்
கனம் தாங்கா ...

வியாழன், ஜூன் 21, 2012

விடையிலாக் காட்சி

 ஜூன்20 வல்லமையில் 



விடையிலாக் காட்சி 
சிலநாட்களாகத்
தோன்றிக் கொண்டே இருக்கிறது 
 
சுழித்தும் ,வளைத்தும்,
இழுத்தும் 
"ஆ "எழுதும் காட்சி!
 
எழுதுவது நான்தானா
எனத் தெரியாவிடினும் 
நான்போலவே....
 
எங்காவது "ஆ"கண்டுவிட்டால்,
கண்ணுக்கும் ,எழுத்துக்கும் 
இடையே உலவும் புகையாக 
"ஆ"உருவாகும் காட்சி,....
 
சிரத்தையோடும்,சிரமத்தோடும்,
உதடு மடித்தும்,
"ஆ"எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது..
 
"அ"எப்படிக் கற்றாய் ,
"இ "சிரமமில்லையா என்றெல்லாம் 
கேட்டுவிடாதீர்கள்.
 
அது குறித்த காட்சி 
ஏதுமிலாததால் ,
என்னிடம் விடையில்லை.

சனி, ஜூன் 16, 2012

மாயச் சலங்கை


ஜூன்15 கீற்று இணையத்தில் வெளியானது 


உதிர்ந்து கிடந்த 
எழுத்துக்களைப் பரிசீலித்துக் 
கொண்டிருந்தேன்...
சலங்கையொலி 
தூரத்தில் தொடங்கியிருந்தது..
நாட்டியக்காரி யாரும் 
நடக்க வாய்ப்பிலாத 
இடமும் பொழுதும் தாண்டி 
என் எழுத்துக்களைச் 
செல்லம் கொஞ்சவிடாமல் 
இம்சித்து நெருங்கியது 
அந்த ஒலி...
பூம்பூம் மாடோ, கிருஷ் வேடதாரியோ ...
சுற்றிவளைத்த ஆர்வத்தினால் 
வாசல் வந்தபோது 
வெறித்த சாலையில் 
மணலாவது கொஞ்சம் கிடந்திருக்கலாம்.
 

செவ்வாய், ஜூன் 05, 2012

பொருள் விளங்காப் புள்ளிகள்

 
தொடக்கத்திலேயே 
முடிவும் 
சேர்ந்துதான் இருக்கிறது.
கேள்வி,ஆச்சரியம் 
இரண்டின் கீழும் 
இடும் புள்ளிகள் 
இணைக்கவும் ,பிரிக்கவும் 
தெரிந்து வைத்திருக்கின்றன ....
தோளில்
ஆட்டுக்குட்டியோடு 
வனமெங்கும் 
புள்ளிக்குப்பின் 
போய்க்கொண்டே......இருக்கிறோம் 
முடிவுறாப் பயணமாக.... 

அவளாக வேண்டும்

ஆதிகடவுளின் சாயலில் 
சுருள்முடி 
நெற்றி வழிந்து காற்றிலாட ,
பொருளறியாப் புன்னகை 
மிதக்கும் முகத்தோடு 
மிதிவண்டி ஓட்டிச் செல்லும் 
சிறுமியாக 
ஒரு வாய்ப்பளியுங்கள்...
இயலாதென்றால் 
அவள் 
முணுமுணுக்கும் பாடலாக ,
விரும்பி அணியும் 
மஞ்சள்வண்ண ஆடையாக,
அலட்சியமான பாவனையில் 
தோளில் மாட்டிச் செல்லும் 
பையாக....
நளினமாகக் கையாளும் 
மிதிவண்டியின் 
குஞ்சலங்களாக....
ஏதாவதொன்றில் 
என்னை உள்ளிருத்துங்கள்....
அவளது அன்றாடப் பயணம் தரிசிக்கும் 
மரத்தடியாக 
மாற்றினாலும் சரியே !

திங்கள், மே 28, 2012

குறுஞ்சிரிப்பு


மே25 வல்லமை மின்னிதழில்

விரைந்து கொண்டிருந்த
வாகனத்தை
ஓரம் நிறுத்தி
அவசரமாக
அலைபேசி எடுத்தான்....
உதடுவிரிந்த புன்னகையொன்றைச்
சிந்தினான்
எதையோ வாசித்து .....
தனித்த புன்னகையின்
கூச்சம் உணர்ந்து
வேகமெடுத்துப் போய்விட்ட
அவனை மகிழ்வித்த
குறுஞ்செய்தி
நண்பனின் கிண்டல்?
காதலியின் பகிர்வு?
ஏதேனும் வெற்றி ?
என் கேள்விக்கு
விடை சொல்லத் தெரியவில்லை
பாதையோரம்
சிந்திக் கிடந்த
அவன் புன்னகைக்கு....

சனி, மே 19, 2012

அவன் பார்க்கக் கூடாத கதவு

மே16 சொல்வனம் மின்னிதழில் 
திறக்கப்போவதில்லை 
என்ற தெளிவின்றிப் 
பூட்டப்பட்ட கதவு அது.

யாரேனும்
முன் வந்தால் -
திறக்கத் தோதாக
நிலையின்மேல் சாவி கூட
இருக்கிறது.
இந்த வளைவுகளையும்
கொண்டிகளையும்
செதுக்கி கோர்த்தவனுக்குத்
தெரியாது,
உரிமையாளனின்
ஆன்மாவை -அதில்
தொங்கவிடப் போவது…
அந்த வளையம் ,
அழுத்தமாகத் தாழிடத்
தோதாக -தன்னை
இழுத்துப் பிடித்துக்கொள்ளும்
விரல்களின்
ஸ்பரிசத்துக்காகவே
காற்றில் அசைந்து அசைந்து
முனகுகிறது.
வீடுமறந்து
அயல்மண்ணில் நிலைகொள்ள
முயலும்
தோழன் கண்ணில்
படாதிருக்கட்டும்
இந்தக் கதவின் படமும்
என் வரிகளும்…..

சனி, மே 05, 2012

கரிந்த சொல்

மே  2 அதீதம் இதழில் 

மினுக்கி உதிர்ந்த 
நட்சத்திரம் 
கடைசியாய் 
ஏதோ சொல்ல விழைந்தது….
அதற்காக இறங்குகிறது 
என்றே 
காத்திருந்தேன் நெடுநேரம் ….
ஒளித்துகள் 
இலக்கிலா விலக்கில்
வீழ்ந்திருக்கலாம் போலும்!
நிலா மீதான குற்றச்சாட்டோ ,
இடித்துத் தள்ளிய 
இதர நட்சத்திரம் மீதான 
மனத்தாங்கலோ,
என்னருகே 
சோம்பலாய்ச் சுருண்டிருந்த 
பூனைக்கான கேலிச்சொல்லோ…..
நட்சத்ரா …
என்ன சொல்ல விழைந்தாய்?

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...