தோடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

பெயர் மாறியது

    தேன்கூடு தோடு முத்தண்ணிக்கும்

பாகப்பிரிவினை தோடு

செல்வியக்காவுக்கும்
மாங்காய் தோடு
பாக்கியத்தத்தைக்கும்
ஏழுகல் தோடு
கமலத்தாச்சிக்கும் அடையாளம்.
தொங்கும் காதில் கனத்த சுரையோடு
கெம்புச்சிவப்பில் தன் வெற்றிலைச்சாறு போலவே வருவாள்
தெய்வானை ஆத்தா
ஆராதனா தோடும்
ஆடும் வளையமுமாக வந்த
மருமகள்கள் மாற்றிக்கொள்ளவென்று இன்னொரு செட்டும்
வைத்திருந்தது
நடுத்தெருவுக்கு
புதிய செய்தி
ஆராதனா தோட்டுக்காரி
எண்ணெய் இறங்கிய கல் தோட்டையும்
வாத்து மூக்குத்தியையும்
கழற்றாதே என்று
தாலி கழற்றிய தன் மாமியின் கையைப் பிடித்தது
அதைவிடப் புதிய செய்தி
ஆயுளுக்கும்
ஒற்றைத் தோட்டையே அடைகாத்த காலம் மாறி
பெயர்வைத்த,பெயர்வைக்காத
தோடுகள் சில வாங்கிக்கொள்ளப் பழகிவிட்டார்கள்
நடுத்தெரு நாயகியர்
நடுத்தெருவின் வீடுகள்
ஆட்கள்
மாறினார்கள்
வளர்ந்த ஊரின் ஓரத்தில் கிடக்கும் நடுத்தெருவுக்கு
ஜெயிலும் ஊருமாக வாழ்ந்த
உள்ளூர்த்தலைவர் பெயர்கூட வைத்தாயிற்று
குடும்பத்துக்கு ஆகாது என்ற குரல்களும்
வளை உடைத்துக் காயமாக்காதே
என்ற ஒற்றைக் குரலுமாகக்
கருமாதி வீடு சலம்பும் நடுத்தெரு
இன்னுமிருக்கிறதுதானே
ஏதேதோ பெயர்களில்
எல்லா ஊரிலும்




திங்கள், டிசம்பர் 04, 2017

மூக்குத்திப் பெண்கள்


எப்படியோ முடிந்தது
பிய்த்துப் பிடுங்கும் வறுமையிலும்
தோடு மூக்குத்தியை ஆடை போல அடிப்படையாய்ப்
பார்க்க
அதனினும் கொடிதான பொழுதுகளில்
அடகுக்குப் போகும் போதும்
கவுரவத்தைக் காப்பாற்றடி என்று
காதணிகள் கண்ணீரோடு சொல்லிப் போனது
எண்ணெய் படிந்த ஒற்றைக்கல் மூக்குத்தியிடம்
அணிவிக்கும் பொழுதுக்கு
வைபவப் பெருமையை அடையாவிடினும்
தோடுகள் மூக்குத்தியை
துணைச் சொல்லாகவே ஏற்றன.
அறியாத வயதில் சுழற்றிவிட்ட திருகைக்
கழற்றும் கொடுமை கருதியே பிழைத்தது
பலநேரம்
துயரங்களில் சின்னது என்ன பெரியது என்ன
பாழாய்ப்போன கண் கலங்குகையிலெல்லாம்
தொண்டையடைத்து வழியும் சளியைச்
சிந்திஎறிந்தால் இறங்கும் பாரம்
இடையூறுஎன்னவோ குத்தும் திருகுதான்
உழைப்பின் நெருப்பு தணலும் முகத்தில்
மிஞ்சிய ஒற்றைப் பொட்டாக
ஒற்றைக்கல் மூக்குத்தியின் சுடரிலே
இருள் கடந்த நாட்கள்தான் எத்தனை
முத்து பெரியம்மா எது தவறினாலும்
மெனக்கெட்டு திருகு கழற்றி
வெள்ளிக்கிழமை எண்ணெய்க் குளியல்களில்
சிவப்புக்கல்லும் வெள்ளைக்கல்லும்
தனித்தனியாகவே தெரியுமளவு ஏழுகல்லையும்
காத்து வந்தாள்
அவள் பொறுமையின் பெருமைகளில் ஒன்றாகவும்
திறமையாகவும் சொல்லப்பட்ட அதையும்
பறித்துச் சென்றான் குடிகார பெரியப்பன்
குடல் வெந்த மரணத்தில்
பழஞ்சீலையில் சுருண்டுகொண்டு
குளிர்மறந்த நாட்களில்
நாம் அறிந்திருக்கவில்லை
அந்தக் கணப்பை மூட்டிக் கொண்டிருப்பது
அம்மையின் மஞ்சளேறிய மூக்குத்தியில்
மிச்சமிருந்த நெருப்பென்பதை

ஆசையின் சுடரை வைரமாக்கிய பெண்டிரின்
கைகளுக்கு விலங்குண்டு
கோசும் தொங்கலும் கூடிய அந்தஸ்தின் அடையாளம்
இரண்டில் ஒன்றைக்கைவிட எடுத்த முடிவில்
வலதாகவே இருப்பதன் சௌகர்யம்
வீடு சொல்லிக் கொண்டேயிருக்கும்
இடது தேவலாம் என்றாலும்
எந்தப்பக்கம் என்பது அவள் தேர்வல்ல
ராஜமாதாக்களின் நிரந்தர அசௌகர்யங்களில்
ஒன்று
நிரந்தர சளித் தொங்கலாய் ஆடிய புல்லாக்குகளாக
இருந்திருக்கக் கூடும்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...