ஞாயிறு, டிசம்பர் 27, 2020

ஆசுவாசம்

 என்னதான் ஆகிவிடுகிறது இந்த நேரத்திற்கு

ருக்கு பெரியம்மா கால் வெற்றிலையும் காலே அரைக்கால் கொட்டைப் பாக்குமாக அதக்கிக் கொள்வாளே
அந்த காலே அரைக்கால் கொட்டைப்பாக்களவு கிடைத்தால் போதும்
அந்த கவனத்திலேயே ஆசுவாசமாகிவிடும் ************************************************************
சிணுங்கி சிணுங்கி
முக்கால் இட்டிலி சாப்பிட
முப்பது கதை கேட்ட பாப்புக்குட்டி
அத்தனை "தங்கமில்ல'" கொஞ்சலையும் திருப்பிக்கொடுத்துக் கொண்டிருக்கிறாள்
விருந்தாளி குழந்தைக்கு
கொலுவில் நின்ற வாமனர் புருவம் உயர்ந்தது அப்போதுதான்




அடையா நெடுங்கதவம்

 கோடுகளும் கட்டங்களும் மறுதலித்த நாளில் இலைகளும் மலர்களும் பின்னிக்கொள்கின்றன

யாரோ ஒருவன் தறியில் பிசிறு நறுக்கி மடித்த அடுக்கினுள்ளிருந்து
அவன் வீட்டின் ஒட்டடை விழுகிறது
முறத்தால் புடைத்த
களத்திலிருந்து
கருக்கு முதற்கொண்டு கட்டியாயிற்று கெட்டிச்சாக்கில்
உலையரிசியும் திரையிலிருந்துதான்
விளைகிறது
தறி அறுக்கும் கத்தரியோடும்
அரிசி அளக்க ஆழாக்கோடும் உட்கார் உட்கார் ஆன்லைன் திருவிழாவில் ஷட்டர் இறக்குவதில்லை

அளவில் இல்லா உலகம்

 இதோ இதோ ஒவ்வொரு வரியாக நகர்த்தி பட்டென்று கண்விழிக்கிறது அந்த செம்பருத்தி

கூப்பிடு தூரத்தில்
அயர்ந்திருந்த பூனைக்குட்டி
தலை உயர்த்திப் பார்த்து
ஒரு வித்தியாசமுமில்லா
உலகம் என்ற அலட்சியத்துடன்
காலை மாற்றி மடித்து உறக்கம் தொடர்கிறது
***************************************************
உடைந்துவிடும்
கிழிந்துவிடும்
நசுங்கிவிடும்
நொறுங்கிவிடும்
கலைந்துவிடும்
சொல்லியபடியே
ஒவ்வொன்றாய்
பாப்புவுக்கு எட்டா
உயரத்தில் பத்திரப்படுத்தினேன்
வீம்பாய் நின்றவள்
மறுநொடி
பாவாடையை ஒற்றைவிரலில் உயர்த்திக்கொண்டு
ஒரு தாண்டுகுதியோடு ஓடிவிட்டாள்
எப்படித்தொட
இந்த உயரத்தை ***********************************************

எனக்கும் உனக்கும்

 கேட்கும் நிலையில் நீ இல்லையாம்

இப்போது சொல்ல வேண்டாமென
உன் நலம் விரும்பி சொல்கிறார்
அட
சொல்லும் நிலையில் நான் கூடத்தான் இல்லை
அதைப்பற்றி யாராவது வருந்துவதோ அஞ்சுவதோ இல்லையே
நான் கோவமா இருக்கேன் என்பதையும் குழந்தைப்பிள்ளை போல நானே சொல்லிக்கொண்டு
அதற்கு நகைக்கிறாயா என அடிக்கண்ணால் பார்த்துக்கொண்டு...ச்சை
சொல்லமுடியாதொரு உணர்வுப்பெருக்கில் திணறுகையில் என்னை அணுகாது
எச்சரிப்பதற்காகவாவது ஒரு துவாரபாலகர் வேண்டும்...
பார்
எதையெல்லாம் லட்சியமாகக் குறிக்க வேண்டியிருக்கிறது

செவ்வாய், டிசம்பர் 08, 2020

அந்தரத்தில் தொங்கும் கேள்விகள்

 ஸீரோவா

ஜீரோவா என்று
வாதிட்டுக் கொண்டு வீடு வந்த நாளுக்குப்பின்
பள்ளி செல்லவில்லை பாப்புக்குட்டி
நாளைக்கி மிஸ் கிட்ட
கேக்கலாம்னு சொன்னாம்மா மித்து
( அது மித்ராவா,மித்திராவா தெரியவில்லை)
நாளக்கி எப்பம்மா வரும்?
காலடியில் தொங்கும் பாப்புக்குட்டியிடம்
சும்மா தொணப்பாம
போய் விளையாடு என்ற அம்மாவசனம் சொல்லித் தப்புவது எத்தனைநாள் *****************************************************
முன்னங்காலை
வளைத்து சற்றே குனிந்து உற்றுப்பார்த்த நாய்க்குட்டிப் பார்வைக்கு மிரண்டே குழறினேன்
உன்னை அவ்வளவு பிடிக்கிறது அதற்கு
தூக்கு
என்றவள் சிரிப்பில்
பொறாமைதான் பெருகுகிறது
எதைத்தான் சரியாக அடையாளம் தெரிகிறது எனக்கு **********************************************************
திடீரென்று பாதையில் வந்துவிட்டது அந்த குட்டியானை
பக்கவாட்டு சாலையிலிருந்து
பக்குவமின்றி நுழைந்தவனைத் திட்ட முடியாமல்
சற்றே நிதானிக்கிறாள்
பின்னால் வந்து தாண்டும் சக ஈருருளியானுக்கு
ஒரே கேள்விதான்
செருகிவந்த
முந்தானை பறந்தால்
துப்பட்டாவின் முடிச்சு பிரிந்தால்
மணியாயிற்றே என்று சற்று முடுக்கினால்
பெண்ணைப்பார்த்துக்
கேள் என்று
மரபணுவில் புதைத்து அனுப்பிய கேள்வியை மறவாமல் வீசிவிட்டு
திரும்பும் கண்களில் சில
குற்றவுணர்ச்சியில்
தாழ்வதுண்டு
எவ்வளவு தூரம்
தாண்ட

எனக்குப் பிடித்த பாடல்

 வானத்தின் விரிபரப்பைவிட

நீலத்திற்குள் அமிழ உனக்குப்பிடிக்கும்
பிரம்மாண்ட தாரைகளை அண்ணாந்து பார்ப்பதைவிட்டு
உள்ளங்கை குவித்து
ஒழுகும் மழை ரசிப்பாய்
அலையாடு கடல்வெளியின் ஓரம்நின்று
சிப்பி பொறுக்கிச் சிரிப்பாய்
காத்திருக்கிறேன்
என்னை எப்படிப் பார்க்கிறாய் என்றறிய ****************************************************
ஆறுதலான சொற்களைத் தேடிக்கொண்டே
நடந்தாய்
கல்
கல்
கல்
கல்
சரியாய்ப் பிடிக்கும் லாவகம்
கை கூடிவிட்டது *******************************************
ஒரு பழைய ஓவியம்
வரைந்த பொழுதில் கற்பனை செய்திருந்த வண்ணக்கலவைகளை நினைவில் கொண்டு வருகிறது
ஒரு பழைய கவிதை
அதன் கட்டுமானத்துக்குள்
சறுக்குமரம் விளையாடி மகிழ்ந்த வாசகனை
நினைவில் கொண்டு வருகிறது
பழமையினால் மட்டும்
செல்லம் கொஞ்சவில்லை
என்ற ஆறுதலை
ஒரு கரண்டி கலந்து பருகிக்கொள்

நேற்றைய சம்பங்கி

 படரட்டுமெனத்தானே கயிறெல்லாம் கட்டி விட்டீர்கள் அது கைப்பிடிச்சுவர் பிடித்து ஏறுவது அவ்வளவு உறுத்துகிறதா கொழுந்து இலை நாலு கீழே கிடப்பதற்கு அணிலைச் சந்தேகப்படுவதா உங்களையா பிடிபடவில்லை

**************************************

படிக்கட்டில் சுருண்டிருக்கும் நாய்க்குட்டியாக
அவள் பாத வீக்கம்
தற்செயல் பார்வைக்குப்பின்
இழுத்துவிட்டுக் கொண்டாள் கொசுவத்தை
தெரியவேயில்லை
வீசி நடக்கும் நாழி
*****************************************
ஆளரவமற்ற மண்டபத்தில்
ஒரு வௌவால் படபடப்பாவது கேட்கிறதா
இருவாசியைத் தொட்டுவிட நீள்கிறது
அவன் கைத் தழல்
செஞ்சடைப்பிரியிலிருந்து
உதிர்கிறது
நேற்றைய சம்பங்கி ********************************************
சொல்லிக்கொண்டே
இருப்பது மட்டுமல்ல
சொல்லாமலிருப்பதும்
பதில்தான்

**********************************************

அதனதன் கிளை

 சிரித்துக்கொண்டேதான் சொன்னாய் அதுதான் புரியவில்லை

அவமானத்தின் நரம்பை இழுத்து விடும்போது கொஞ்சம் கை நடுக்கி விடுமல்லவா ***************************************************
சோடியாகத்தான் அடுத்தடுத்து
வேர் விட்டிருக்கிறது
ஆயினும்
எப்போதாவது பூக்கும் மனோரஞ்சிதத்திடம்
அனுமதி கோராமலே
பூத்து உதிர்கிறது
நித்திய கல்யாணி
அதனதன் கிளை
அதனதன் வாழ்வு
****************************************************
ஒரு முறை பார்த்துத் திருத்திக் கொண்டிருக்கலாம்
சற்றே வழிந்திறங்கும் கண் மையை
சொல்லத் தோன்றியதைச் சொல்லாமல் விட்டேன்
அவள் நாளைத்
திருத்துவதென்று தொடங்கினால் தீரவே தீராத வரிசையில் இதையும் வைத்தாயிற்று ********************************************

திரிகை மாவு

 எதையெல்லாம் என்னுடையதென்று சொல்வது சுற்றிலும் சுற்றிலும் ஊக்கு சரம் முதல் மணச்சீராய் வந்த பித்தளை அண்டா வரை

என் முகம் பாராது
அதனதன் இருப்பில்
அந்த அண்டா கூடுதலாய்
ஒரு நொடிப்பு நொடித்து
நின்று கொண்டது

என் கேள்வி உணர்ந்து விட்டதோ
*********************************************
எல்லாம் வேறென்ன
இந்த இருளுக்குள்ளேயும்
நான் இருக்கிறேன்
இந்த ஒளிக்குள்ளேயும்
நான் மறைகிறேன்
எப்படியாவது கண்டுபிடி
அல்லது கண்டுகொள்
****************************************
கைப்பிடி கைப்பிடியாகப் பெய்ய
திரிகைக்குள்ளிருந்து
மௌனமாக வீழ்ந்து கொண்டிருக்கிறது
உளுந்து
உடைபட்ட துக்கம் சொல்லாது
என்ன
கொஞ்சம் மாவு பறக்கும்
***********************************************

வியாழன், அக்டோபர் 08, 2020

வாழ்வின் சந்நிதானத்தில்

 கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர *********************************************

நிறைய பேசினோம்
ஊர் நிலவரம்
வீட்டிலிருந்த காலொடிந்த நாய்
கிணற்றில் பூனை விழுந்து தூக்கியது
பட்டு டீச்சர் வைத்திருந்த பிரம்பு
ராமு மாமா சைக்கிள் அலங்காரங்கள்
கூடப்படித்த ரவி சேர்மன் ஆனது
என்றெல்லாம்
ஏதாவது வேண்டுமா எனக் கேட்டிருக்கலாமோ **********************************************
எத்தனை முயன்றும்
கப்பல் செய்யத் தெரியவேயில்லை
கோபித்துக்கொண்டு போன மழை போனதுதான்
நான் வேண்டுமானால் மிதக்கிறேன்
உன் உள்ளங்கையில் தண்ணீரேந்து
என்று ஆறுதல் கூறி முகம் பார்க்கிறது சிற்றெறும்பு

கிடுகிடுக்கும் சுவை

 

எல்லாம் என் தலையெழுத்து
என்ற முடிப்போடு
நீ
நகர்ந்து விட்டாய்
அதில் என் எழுத்தின் பிரதி உண்டா 
ஆராய்ச்சியிலிருந்து
மீளாத்திகைப்புடன்
நான்

செம்பாதி இல்லாவிடினும்
ஒவ்வொரு குவளையின் கசப்பையும் 
பாகம் பிரித்துக்கொண்டதற்கு
பொருளிருக்கிறதா
உன் தலையெழுத்துக்குத் 
தனி அடையாளம் சூட்டுகையில்

*************************************************


இவ்வளவு தித்திப்பாக எதையும் தராதே
கொஞ்சம் குறைவாக இட்டே பழக்கமாகிவிட்டதா
பட்டதும் பல் கூசுகிறது
அறுசுவை என்பது
எல்லோர் அகராதியிலும் அதே அளவாக இருக்கவில்லை

முழுசாக ஒன்று
வந்தால் கிடுகிடுத்துப்போகிறது *********************************************************
பேனாக்கத்தியால்
தோல் சீவிக்கொண்டே
விவாதிக்கிறாய்
இடையில் ஒரு சீவல்
இரத்தப்பொட்டை உறிஞ்சிவிட்டு
மீண்டும் பழம் திருத்துகிறாய்
எங்கே விட்டேன் என்று
எனக்குதான் புரியவில்லை

******************************************

நேரத்துக்குக் கிளம்ப வேண்டியிருக்கிறது
நேரத்துக்குக் குளி
உண்
உறங்கு
திரும்பு
எழு
களி
முன்வாசல் முருங்கைக்கீரை போல நேரத்தின் காம்புகளில்
சின்னதிலிருந்து
பெருசாக
பெருசிலிருந்து சின்னதாக
இதோ ஒரு நாள்
ஆய்ந்தாயிற்று
அலகில்
இழுபடும் கொத்து

தஞ்சமடி தஞ்சம்

 மழையே உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்

இரவிடம் தஞ்சம் புகுந்துள்ளது உனக்குப் புரியவில்லையா
சற்றே பேசாமலிரு
சன்னலில் வழிகிறாய் என்பது தெரியும்போது
குற்றமிழைத்தது போலத் திடுக்கிடுகிறேன்
என்னை வீட்டுக்கு வெளியே விட்டுப் பூட்டிவிட்டதான
திடுக்கிடல் அது
யாராவது ஒரு அதிர்ச்சி தகவலைச் சொல்லிக் கண்தளும்ப வைத்துவிடுவது
ஒரு மணிக்கு ஒருமுறை நடந்துவிடும் இந்நாட்களில்
அவர்களெல்லாம் உறங்கப் போயிருக்கும் இந்நேரத்தை எனக்கு அருள மாட்டாயா
எங்கே நல்லிரவு சொல் பார்க்கலாம்

ஹத்ரஸின் பாடல்

 


மகளின்  முகம் பார்க்க விட்டிருக்கலாமே மகராசனே
ஒரு கை மண்ணும்
கிடைக்கவில்லையே அவளுக்கு

அவர்கள் போய்விடுவார்கள்
நாங்கள்தான் இங்கு இருப்போம்

எலும்புகளை உடைத்தது
உங்களுக்கு வசதிப்படவில்லை என்றா
அவளுக்கு
வலித்தது போதவில்லை என்றா

நாக்கு இருந்தபோதெல்லாம் பேசிவிடுகிறோமா என்ன

அவர்கள் போய்விடுவார்கள்
நாங்கள்தான் இங்கு இருப்போம்

ஒருவன் மனைவியை மற்றவன் பார்க்காதே
என்கிற மதத்தையும் சாதியையும்
அப்போது மட்டும்

உடுப்புகளோடு கழற்றி
எறிந்து விடுவீர்களா மகராசன்களே


அவர்கள் போய்விடுவார்கள்
நாங்கள்தான் இங்கு இருப்போம்

ஆமாம் மகராசன்களே
அடுத்தடுத்த நாட்களில்
நடப்பதிலிருந்து அறிந்து கொள்கிறோம்

நீங்கள்தான் இங்கு இருக்கிறீர்கள் 


காந்தி அழைப்பு

 எப்போதையும்விட

இப்போது நீ தேவைப்படுகிறாய்
சத்தியத்தின் உறுதியைப் பெற்றுதான்
எழுந்து நடமாட வேண்டும்


என்னை அப்படியே வழிபடு என்று
சாட்டை சுழற்றாத
முன்னோடியைத் தேடுகிறோம்


தன் தவறுகளை ஒப்புக்கொண்டு
பரிசோதனைகளைப் பகிர்ந்து கொண்டு

அதிகாரத்தினால்
வாள் பாய்ச்சாத தலைவனைத் தேடுகிறோம்

சந்தேகமாகதான் இருக்கிறது
நவநாகரீக ஆடையணியாமல்
தொடர்ந்து பொய்யுரைக்காமல்
பேதங்களை ஊதிப்பெருக்காமல்
இருக்கும் உன்னை எங்களுக்கு
அடையாளம் தெரியாமல் கூட இருக்கலாம்

உன்னை பிரமோட் செய்ய
 நிறுவனங்கள் உண்டா

தொலைக்காட்சி அரங்குகளில்
கண்மூடிக்கொண்டு கத்துவதற்கான
ஆள்பலம் உண்டா


இரண்டு வருடங்களுக்குள்
இன்னோவா தரமாட்டாயே நீ


ஏதாவது செய்வாய்
ஏதாவது தருவாய்
என்ற ரகசிய ஒப்பந்தங்கள் இல்லாது
வாய்மை அகிம்சை
என்ற வார்த்தைகளை நம்பி
கல்வியை,தொழிலை,
குடும்பத்தை விட்டுவிட்டு

நடப்பதற்கான கூட்டமாக
நாங்கள் இல்லை என்பதையும்
தெரிந்துகொண்டு ஏதாவது செய்

படம் :ஓவியர் ஆதிமூலம் 

    கடன்களின் கூட்டுவட்டி தள்ளுபடி

தள்ளிவைப்பு
வேட்டைகளின் நடுவே
விதைநெல் தவிர வேறெதுவும் தெரியாதவன்
வீட்டுத் தொலைக்காட்சியும்
கட்சிக்குள் சண்டையா என்றுதான் துப்புத் துலக்கிக் கொண்டிருக்கிறது ******************************************

நள்ளிரவு மழை பாவம் அனாதையாய்ப் பெய்து போய்விட்டது காலைப்பிசுக்கின் ஊடே பாதைகளில் விழுந்திருக்கக்கூடிய குழிகளின் நினைவுதான் வருகிறது ***********************************************


ஒரு கல் குறைவான தித்திப்பு

 சின்ன பூக்களை

குட்டி மீன்களை
பூ என்றும்
மீன் என்றும்
எழுதி
ரஃப் நோட்டின் பக்கமொன்றை வாழ்த்து மடலாக்கியளித்த குட்டிப்பையன் இப்போதும்
ஸ்விக்கியில் கேக் அனுப்புகிறான்
அவன் சொன்ன வாசகத்தை
யாரோ பிழிந்து எழுதும் தித்திப்பு
ஒரு கல் குறைவாகவே ருசிக்கிறது
***********************************************
தடதடவெனக் கருங்கல் ஜல்லி சரிந்து கொண்டிருக்கிறது
முதல் வண்டி
வந்த மாதிரி இல்லை இப்போது
எல்லாச் சத்தமும்
பழகிவிடுகிறது

எனாமல் ஆபரணம்

 பட்டை கொலுசை மறுத்தது ஆத்தாவுக்கு துக்கம்

திருகோடு ஒற்றைக்கொத்து சலங்கை இருப்பதில் எனாமல் பொட்டுகளோடு தேர்வு செய்தாள் அம்மா
அரைஞாண் கொடிபோலச் சுற்றியதைக் கொலுசென்று சொல்லித்தந்த சித்தியும்
தங்கத்தில் வேண்டுமென அடம்பிடித்த அத்தையும் சேர்ந்துதான் புலம்புகிறார்கள் ஜீன்ஸ் அணிந்த சின்னப்பாதத்தின் மறுதலிப்புக்கு

அழுவதை நிறுத்திவிட்டேன் எஸ் பி பி

 


அரஹர சிவனே அண்ணாமலையே பாட்டில்தான் தேயிலைத்தூளைச் சற்றுக் கூடுதலாக இடவேண்டுமென்ற முடிவெடுக்கிறேன்
இலக்கணம் மாறுதோ ஒலிக்க இட்லி குக்கர் அடுப்பிலேற்றுகிறேன்
இஞ்சி பூண்டு வெங்காயம் பச்சை மிளகாய் அஞ்சரைப்பெட்டி அனைத்தும் பக்கத்தில் வைத்தபடி துவங்கும் சமையல் மேடையில் நடுவில் இருக்கிறீர்கள் நீங்களும் ஒரு சிருங்காரச் சிரிப்போடு
பாருங்கள் தாளிப்பின் நெடியில் ஒரு ராராரீ வேறு
அவசரங்களினூடே
நிதானத்தையும்
ஆத்திரங்களூடே பக்குவத்தையும்
மண்டைக்குள் சுரக்கவைத்தபடி
அன்றும்
இன்றும்
என்றும்
இருக்கிறீர்கள்
நான் அழுவதை நிறுத்திவிட்டேன் எஸ் பி பி
உங்கள் மருத்துவக்கட்டணம்
உங்களைப் பார்க்க வந்தவர் வராதவர்
எதுவும் வேண்டாம் எனக்கு
நிலவு தூங்கும் நேரம்
தூங்கிடாத குரல் இருக்கிறது
எப்போதும்போல் என்னுடன்
அப்படியென்றால்
நீங்களும் இருக்கிறீர்கள்தானே

பாடும் நிலாவின் கிளிகள்

 உன் தோளில் தொற்றிய கிளியாகத்தான்
இருந்தோம் போல


மழைதருமோ என்மேகம் எனப்பாடிய
நாயகனை விட்டு

ஒரு சின்னப்பறவை அன்னையைத்தேடி
வானில் பறக்கிறது
என ஓடிய பிம்பத்தைவிட்டு
தேன் சிந்துதே வானம் உனை எனைத்
தாலாட்டுதே என்றதும்
உன் குழைவுக்கும்

சின்ன சிரிப்போடு பறந்த
சிறிய பறவைகள் கூட்டம்

அடிமைகள் ஆனது

ரகசியக்குரலில் பியூட்டிஃபுல் என்றுவிட்டு
நீ
அடுத்த வரிக்குப்போக
நகர முடியாது சுழலும் மனங்களோடு
வாழ்ந்துவிட்டுப் போவோம்

எம் காதலனே
❤️
உயிருக்குத்தான் பிரிவு
உன் குரலுக்கல்ல 

புதன், அக்டோபர் 07, 2020

மாத்திரை

 பிரியமிருந்திருக்கலாம் பார்வையிலும் சொல்லாது போனவற்றை பல்லாங்குழிச் சோழி போல இப்போது எதற்கு இட்டு அள்ளி இட்டு அள்ளி ************************************

கொலோனில் நனைந்த கைக்குட்டையோடு
முடிந்துவிட மறுக்கிறது காய்ச்சல்
அது பற்றுக்காக என்று புரிய வரும்போது
ஒற்றை மாத்திரையை நீட்ட மாட்டாய்தானே *****************************************
என்னவோ உறுத்துகிறதே
அட தளராடையைத் திருப்பிப் போடுகிறேன்
மாற்றியாயிற்று
கண்டுபிடிக்கவும்
மாற்றிப்போடவும்
இப்படி முடிந்தால்
எவ்வளவோ உறுத்தல் சரியாகியிருக்கும் ************************************
உரச்சாக்குகளை இழுத்துத் தைத்து
கூரைக்குள் திணிக்கிறவனிடம்
கைநீட்டி யாசகம் கேட்கும் மழைதான் இதோ உங்கள் குரோபேகில் இறங்காமல் வழிகிறது

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...