செவ்வாய், ஜனவரி 12, 2016

ஜனவரிப் பூக்கள் 1

ஆக
அந்த வண்ணத்துப்பூச்சியை
நீ
தூரிகையோடுதான்
துரத்துகிறாய்
*****************************
அமர முற்பட்டபோது
கிளைகள்
ஒடிந்ததை அறிந்த
பறவை
பறக்க முற்பட்டபோது
சிறகு உதிர்ந்ததை
உணர்ந்தது

*****************************
வானத்தின் நீலமும்
நீ இறைத்ததாகவே
நம்புகிறேன்
ஊமத்தம்பூ 
நீட்டிய கரம் பற்றிக்கொள்

****************************
உள்ளம் என்பது
இப்படித் ததும்பும் குளமா
மீனாகக்கிடந்து
அறியாது போனேனே

******************************
நிறைய பலூன்கள்
நிறைய காற்றாடிகள்
சந்தேகமே இல்லை
உங்கள் உலகம்
திருவிழா கொண்டாடியபடியே இருக்கிறது
நாங்கள் தான் அறியவில்லை

************************************
எங்கிருந்தோ ஒரு கேள்வி
உரித்த பூண்டுத்தோல் போலவே வீசிப்போகிறாய்
விழுந்த இடம்
உறுதி செய்யாமல்

**************************************
யாருடைய தேன்மொழிகளோ
யாருடைய நஸ்ரியாக்களோ
யாருக்கேனும்
கீதா அக்காகளாகி
ஆறுதல் சொல்கிறார்கள்
அன்பு செய்கிறார்கள்

**************************************
இரண்டு நாட்கள்
ஆகிவிட்டால்
சந்திரன் சுட்டெரித்த வதையும்
மறந்து விடலாம்

*********************************

மூன்று வேளையும்
நிலாவைப் பிட்டுத்தின்று
இரண்டு வேளையும்
நட்சத்திரம்
கரைத்துக் குடிப்பவனிடம்
ஆரஞ்சு மிட்டாய்
விற்கப் பார்க்கிறாய்
அஜீரண மருந்தை
எழுதி அனுப்பாமல் பின்னே

************************************
ஒரு காகிதக்கோப்பையை
ஒரு நெகிழிப்பையை
ஒரு குளிர்பானக்குப்பியை
ஒரு மலிவுவிலை எழுதுகோலை
மட்டுமே
பயன்கொண்டு எறிவதாக
இவற்றின் வருகைக்குப்பின்னே
இத்தத்துவம் அறிந்ததாக
நினைத்தால்
நீ பாவம்
அல்லது பாவி



1 கருத்து:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...