செவ்வாய், ஜூலை 09, 2019

காத்திருப்பின் அவசியம்

உழுதபோது சில தெய்வங்கள்
வந்தன
புற்றுக்குள்ளிருந்து 
ரத்தம் வழிய 
சில தெய்வங்கள் வந்தன
உதிர்ந்து துளிர்க்கும் மரக்கிளைகளில் 
சில தெய்வங்கள் 
பச்சையம் பருகிப் படுத்துறங்கின
கனவில் தரிசனம் தந்து 
சில தெய்வங்கள்
இரண்டு வாழைப்பழங்களோடு
பசியாறின
மிஞ்சிப்போனால் விம்மி வெடித்துக்கொண்டிருந்த
எவனோ ஒருவனை
கைப்பிடித்து எழுப்பிவிடுவதோடு முடிந்தது
அருள்பாலிப்பு

தானே தன்னை அறிவித்துக்கொள்ளும்
தயாபர தெய்வங்கள்
நவீன துப்பாக்கிகளோடு காத்துக்கொண்டிருக்கின்றன
பழைய தெய்வங்களின் மேலெல்லாம்
 பாசிபடர விட்டு
புதிய தெய்வ தரிசன 
ஆன்லைன் பதிவில் காத்திருக்கிறது
பக்தகூட்டம்
நந்நாலு ரவை போதும்தானே

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...