ஞாயிறு, மே 05, 2019

பொட்டுக்கரண்டியில் வார்த்த கடல்

வலியைச் 
சொல்லிப் புரியவைத்துவிட முடியுமென்ற
 நம்பிக்கையை
சலனமற்ற உன் முகம்தான் 
அபத்தமெனக் காறித் துப்பியது
***********************************************************
சின்னச்சின்னதாக
ஏதேதோ கொண்டுவந்து வைத்தாய்
தூக்கிஎறியத் தோதாக இருந்தது
சுண்டிப்போயிருக்கும் 
உன் கன்னத்தில் 
லேசாகத்தட்டிவிட்டுப் போக 
முடிந்தால் 
சரியான முற்றுப்புள்ளியாக இருக்கும்
நீ 
எங்கே

******************************************************
எவ்வளவு தவிப்பு
ஏக்கம்
கலவரம்
துயரம்
படபடப்பு
ஐயோ
கொஞ்சநேரம் மட்டும்
நான் அபிக்குட்டியானால்
ஏதாவது ஒருசொல்
ஒரு கண் உருட்டல் தலையசைப்பு
எதிலாவது புரியவைத்துவிடலாம்
என்ன செய்ய 

இந்த வயதை வைத்துக்கொண்டு
************************************************************
ஒரே கடல்தானாமே
பொட்டுக்கரண்டிதான்
உள்ளங்கையில்
வார்க்கிறது
நீ
பெருமாள்கோயில்
தீர்த்தமென ஒற்றி ருசிக்கிறாய்
நான்
என்னெதிரே காயும் 

தோசைக்கல்லில் தீற்றிக்கொள்கிறேன்

*************************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...