ஞாயிறு, ஜனவரி 09, 2022

இடைவெளிகளுக்கு வந்த வாழ்வு

 மறந்தே போய்விட்டது

கவிச்சி கலந்து
முகத்திலறையும் உப்புக்காற்றில் கூந்தல் பறக்க
அலை மோதும் பாதங்களுக்கடியில் கரையும் மணலில்
தடுமாறித்தடுமாறி
நகர்ந்து கொள்ளும் கடலோரப் பொழுதுகள்
பெயர் தெரியாச்செடிகளும் பூக்களுமான கலவையான மணத்தோடு
உயரும் மலைப்பாதையின்
சுற்றுச்சுவர்களில்
தாவும் குரங்குகளும்
சிறுதீனி இடைநிற்றலுமான
இலக்கற்ற குறிஞ்சி நாட்கள்
பெருவழியற்ற
மரங்களூடே
குறைந்த ஒளியில்
விரையும் வாகனத்தினுள் சுழலும் இசைவரிசையை
அடுத்தடுத்து
உன்னுடையது
என்னுடையது
எனப் பங்குபிரித்துச் சொந்தம் கொண்டாடிய
முல்லைவழிவாசம்
பெருகும் நதியோரப் பாதையின் மறுபக்கம் விரிந்த
பச்சைப்பாயில் போய்ப்படுத்துக்கொள்ளும்
மனசை அள்ளியள்ளி மீட்டுவரும்
மருதயோகம்
எதுவுமில்லாது
எங்கு
எங்குதான் இருக்கிறேன்
வயதும் மறந்து வாழ்வும் மறந்து
நினைவிருப்பதெல்லாம்
இடைவெளிகள்தான்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...