சனி, பிப்ரவரி 05, 2022

நான் என்ன செய்வேன் என் தேவனே

 என்றைக்காவது

தற்கொலை செய்து கொள்வேன் என்றாள் அவள்

எப்போது என்றோ எப்படி என்றோ
தெரியாத ஒன்றை சர்வநிச்சயமாக நிகழப்போகும் பாவனையில்
சொல்லும் அவளை வெறித்துப் பார்த்தேன்
ஆனால் அதற்கு சற்றுமுன்
ஹரிபிரசாத் சௌராஸியாவைக்
கேட்டபடி
இரண்டு பாஸந்தி சாப்பிடுவேன்
என்கிறாள்
என்றாவது எதுவும் நிகழ்ந்துவிட்டால்
இந்த வரிசையில்
நடந்ததா என்று சரிபார்க்க வேண்டுமா
அல்லது
இதுகூட நிறைவேறாமற் போய்விட்டாயே
என்று அஞ்சலி எழுத வேண்டுமா
இப்படித்தான் யாராவது
புதிய கவலைகளை ஏற்றி வைத்து விடுகிறார்கள்

வேம்பின் பூங்கொத்து

 அத்தனை வெறுப்பு பொங்கும் மனசோடு எப்படி ஒரு புன்னகை என்றேன்

வேம்பின் பூங்கொத்து
அத்தனை அழகில்லையா எனப்
பேச்சை மாற்றுகிறாய்

*********************************************************
கைவிடுவதற்கென்று
ஒன்றும் இல்லாத
இடத்திலிருந்து பெயர்ந்தபோதும்
நினைவைச்
சுரண்டும் வெறுமை
மனசாட்சி சனியனிடம்
எதையும் கேட்டு வைக்க வேண்டாம்
உருண்டு புரண்டு சிரித்து வைக்கும்
அப்புறம் அது துப்பிய எச்சிலை
அவசரமாகத் துடைத்துக்கொண்டு
அசட்டுச்சிரிப்பு வேறு சிரிப்பீர்கள்

திறந்திடு சீசேம்

 காக்கா கொத்திவிடாமல் கறுப்புத்துணி விரித்துத் தானியம் துழாவிவிட்டுத்

தனியாக ஓரிடத்தில் குருணை வைக்கத் தெரிகிறது
மிச்சத்தை வழித்துத் தெருநாய்க்குப் போடும்
ஜீவகாருண்யப் பந்தியைச் சரியாக
நாலுவீடு தள்ளி நடத்துகிறாய்
யாரென்று அடையாளம் தெரிந்தபின்னரே
புன்னகை செலவழிக்கிறாய்
இந்தப் பாடங்களெல்லாம்
நடத்தியபோது
நான் விடுப்பா என்ன

********************************************

ஒரு சிட்டிகை நம்பிக்கையை வைத்துக்கொண்டு
தினந்தோறும் தினந்தோறும் ஆக்கி அவித்து முடிக்கிறாய்
புதிதாய் கூடுதலாய்
இன்னுமொரு சிட்டிகையாவது கிடைத்திடாதா
என்ற ஏக்கத்தோடு
நீ திறக்கும் ஜாடிகள்
உனக்கு முன்னால் குரல் கொடுக்கின்றன
திறந்திடு சீசேம்
இங்கு இருப்பு இல்லை என்பதை
இப்படியும் சொல்லலாமோ




ஆடிக்கென்று பிரத்யேக சித்திரம்

 

மழை வரி வரியாக விழுந்து
கலைத்துக் கொண்டிருக்கிறது
**""""""
மழையினூடாக
யாரையோ அடையாளம் கண்டுகொண்ட
யாரோ
உரக்க அழைக்கிறார்கள்
உதிர் இலைகளோடு
அதையும் சேர்த்து அடித்துப்போகிறது காற்று
******"""
என்ன எல்லோரும்
வீட்டுக்குள் அடைந்தாயிற்றா?
சரிபார்த்தபின்
பெய்கிறது அம்மாமழை

அம்மாவின் பேரேடு

 ஏதோ ஒரு மொழியில் பாத்திரம் விற்றுக் கொண்டிருக்கிறாள் தொலைக்காட்சி விளம்பரப்பெண்

மூச்சுவிடாமல்
இது எவ்வளவு லாபமானது
எவ்வளவு பயன்படும்
ஒன்று இரண்டு என வரிசைப்படுத்திய
அவ்வையைவிட
வேகமாக சொல்லிக்கொண்டிருக்கிறாள்
எத்திசைச் செலினும்
அத்திசைச் சோறே

***********************************************
விளக்கு வைக்கிற நேரம்
தாயம் உருட்டாதே என்று ஆத்தா விரட்டியதும்
திண்ணை காலியாகும்
பித்தளைக் கட்டைகள் புள்ளிகளோடு உருண்டு ஒதுங்க
சாக்பீஸ் கட்டங்கள்
இருதாயம்
முத்தாயம்
ஏ பன்னண்டு என்று தானே கூவிக்கொள்கின்றன
விளக்கு வைத்த நேரம்
செய்யக்கூடாத பட்டியலைத்
தன் பேரேட்டிலிருந்து.
ஒவ்வொன்றாக அறிவித்துக் கொண்டிருக்கிறாள்
அம்மா

படுக்காதே
தலைசீவாதே
குப்பை கொட்டாதே
ஒருதாயம்
இருதாயம்
ஆறு பன்னண்டு

***************************************************

பிச்சி காலம்

    காப்படி முல்லை வாங்கிக் கையொடியக்கட்டி

நல்ல விளக்குக்கு ஒரு கிள்ளு
எப்பவோ செத்துப்போன நாத்தனார் படத்துக்கு ஒரு கிள்ளு
மத்ததெல்லாம் மகளுக்கு
வளைச்சு வளைச்சு வெச்சிவிடும் பெரியம்மாவின்
சீவாத தலையில
மூணுபல்லு உடைஞ்ச சீப்புதான் இருக்கும்
இரட்டைப்பின்னலுக்கும் இணைப்புப்பாலமாய்
இழுத்துவைத்த மல்லி
நேரம்போக தளர்ந்து தொங்கும் கழுத்தோரம்
கூடவே செருகிய ஒற்றை ரோஜா
எண்ணிவாங்கித்தொடுத்த
கனகாம்பரமோ
டிசம்பர் பூவோ
எதற்கும் சிணுங்காத கோமதி
தஞ்சாவூர்க் கதம்பம்டி என்று கெஞ்சினாலும் மறுப்பாள்
கனக்கும் செவ்வந்திகள் கூடத் தேவலாம் சிடுக்கெடுக்க நாளை
அசங்காதே
அசங்காதே எனக் குட்டு வாங்குவது யாராம்
கறுப்புக் குஞ்சங்களின் பொன்மஞ்சள் அலங்காரம்
ஒவ்வொரு தேர்க்கடை தெப்பக்கடை வைபோகம்
வாழை மட்டையும் பூ ஊசியும் சாட்டின் நூல்கண்டுமாக
சின்னு அக்காவின்
பரபரப்பில்
பூதைத்த சடைகளைத்
தலையணைக்குமேல் நீட்டி வைத்துக் காப்பாற்றிக்
கூட ஒருநாள் நட்சத்திர அந்தஸ்துக்கு
ஆசை கொள்வர் அம்மாக்கள்
தாழம்பூச்சடை என்றால் தைரியமாக இரண்டுநாள்தான்
சந்திர சூரிய பிறைகளும் சடைவில்லையும்
எண்ணெய் இறங்கிய கற்களைப்
பொருட்படுத்தாமல் இரவல் போய்வரும்
அரும்பே' கூவியபடி சைக்கிள் வராத நாட்களிலும்
அலங்கார ஆசைக்காக
உருவாகி வந்தன உறை மணிக்குஞ்சலங்கள்
ராக்கொடியும் பூச்சடையுமாக
ஒவ்வொரு பெண்ணையும்
அழகுபார்த்தன
புகைப்பட நிலையங்களின் கண்ணாடிகள்
மதுரைமல்லிக்கு புவிசார் குறியீடாமே
அம்மாவின் நினைவில் மணக்குமே
என்றெண்ணிக் கேட்கும் மகள்
கிரீமை மீறித் தொந்தரவு செய்யும்
எதையும் தொடுவதில்லை
அவள் மட்டுமென்ன
ஒருவரிசை மல்லி ஒரு வரிசை கனகாம்பரம்
எனச்சூடிய நாள் போய்
ரெண்டுமல்லி ரெண்டு பட்டன்ரோஸ் வைத்த
விரற்கடைப் பூவும் தாளாத அளகபாரம்
நிறைய படங்கள் இருக்கின்றன
வாங்கும் சரங்களைப் பங்கிட
முத்துமணிக் குஞ்சங்களும்
கண்ணில் படுகின்றன
எங்காவது திருவிழாக்கடைகளில்




வளர்ந்த கலை(தை)

    "பொண்ணு வளர்த்த அழகைத்தான் மெச்சுவாங்க" என்ற வசனத்தைக் கரைத்துப் புகட்டி நான் வளர்கிறேனே மம்மி என்றால் நறுக்கெனக் குட்டி

"புளியைக் கரைக்காதே சனியனே"
என்று ஆசைமொழி பேசும் அம்மாக்களும் அத்தைகளும்
சித்திகளும் ஆத்தாக்களும்
கவலை கொண்ட வளர்ச்சி
கார்மேகக்கூந்தல் அடர்த்திதான்
கட்டியாய்த்தின்பதைக்
கரைத்துக் குடித்தாலும்
எண்ணெயும் அரப்பும் தப்பாது
கரிசலாங்கண்ணி மருதாணி
தேடித்தேடி அரைத்து வில்லைதட்டி
ஊறவைத்த எண்ணெய் வாடையோடு
சாட்டையாய்த் தொங்கும் சங்கரியின் பின்னல்
கூழையாய்ச்சுருளும் நாய்க்காது சடையை
ரிப்பனின் பட்டர்ஃபிளை முடிச்சாவது
அழகாக்கிடாதா என்ற ஆசை
விஜயாவின் அவ்வாவுக்கு
பள்ளிவிடுப்பென்றால்
அம்மாவின் முழங்காலுக்குள்
சாமியாடியபடியே
பேன்களுக்கு சாவுபயம்
காட்டிக்கொண்டிருப்பாள் தைலா
ஈருளியும் வெள்ளியில் வைக்கணும்
என்ற வள்ளியம்மை வீட்டுச் சீர்ப்பட்டியலை நினைத்தபடியே
இரவல் ஈருளியைக் கழுவிக் கொடுப்பாள் செல்வி
ஃப்ரீ ஹேர்விட்டு
பூர்ணிமாவும் நதியாவும் செருகிக்கொண்ட
பின்னூசிகளை
சரிதாவாக வழித்துச்சீவிதான் செருகிக்கொண்டோம்
கேசவர்த்தினியும்
சடங்குச் சீரில் அடக்கம்
பள்ளிக்கால ரிப்பன்களை
மீண்டும் மகள்களுக்காக அளந்து வாங்கி
மறக்காமல் ஓரம் தைத்த அம்மாக்கள்
பாட்டியானபின்னும்
தொலைக்காட்சித் தாய்மார் மகளின் பின்னலை இழுத்து
"நீ எங்கே குட்டியா இருக்கே"
என அடர்த்தியை நீளத்தை அளந்துகொண்டே இருக்கிறார்கள்
தோள்வரை கத்தரித்த கூந்தலை
குட்டிக் கிளிப்பில் அடக்கிவிட்டு
"பாய்கட்தான் ஆனா கேர்ளுக்கு"
என்று சிகைதிருத்துநரிடம் நேரம் கேட்கும் அம்மாக்கள்
ஓரக்கண்ணால் சிரித்துக் கொள்கிறார்கள்
கூந்தலால் வளரும் விளம்பரம் பார்த்து




வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...