சனி, பிப்ரவரி 05, 2022

பிச்சி காலம்

    காப்படி முல்லை வாங்கிக் கையொடியக்கட்டி

நல்ல விளக்குக்கு ஒரு கிள்ளு
எப்பவோ செத்துப்போன நாத்தனார் படத்துக்கு ஒரு கிள்ளு
மத்ததெல்லாம் மகளுக்கு
வளைச்சு வளைச்சு வெச்சிவிடும் பெரியம்மாவின்
சீவாத தலையில
மூணுபல்லு உடைஞ்ச சீப்புதான் இருக்கும்
இரட்டைப்பின்னலுக்கும் இணைப்புப்பாலமாய்
இழுத்துவைத்த மல்லி
நேரம்போக தளர்ந்து தொங்கும் கழுத்தோரம்
கூடவே செருகிய ஒற்றை ரோஜா
எண்ணிவாங்கித்தொடுத்த
கனகாம்பரமோ
டிசம்பர் பூவோ
எதற்கும் சிணுங்காத கோமதி
தஞ்சாவூர்க் கதம்பம்டி என்று கெஞ்சினாலும் மறுப்பாள்
கனக்கும் செவ்வந்திகள் கூடத் தேவலாம் சிடுக்கெடுக்க நாளை
அசங்காதே
அசங்காதே எனக் குட்டு வாங்குவது யாராம்
கறுப்புக் குஞ்சங்களின் பொன்மஞ்சள் அலங்காரம்
ஒவ்வொரு தேர்க்கடை தெப்பக்கடை வைபோகம்
வாழை மட்டையும் பூ ஊசியும் சாட்டின் நூல்கண்டுமாக
சின்னு அக்காவின்
பரபரப்பில்
பூதைத்த சடைகளைத்
தலையணைக்குமேல் நீட்டி வைத்துக் காப்பாற்றிக்
கூட ஒருநாள் நட்சத்திர அந்தஸ்துக்கு
ஆசை கொள்வர் அம்மாக்கள்
தாழம்பூச்சடை என்றால் தைரியமாக இரண்டுநாள்தான்
சந்திர சூரிய பிறைகளும் சடைவில்லையும்
எண்ணெய் இறங்கிய கற்களைப்
பொருட்படுத்தாமல் இரவல் போய்வரும்
அரும்பே' கூவியபடி சைக்கிள் வராத நாட்களிலும்
அலங்கார ஆசைக்காக
உருவாகி வந்தன உறை மணிக்குஞ்சலங்கள்
ராக்கொடியும் பூச்சடையுமாக
ஒவ்வொரு பெண்ணையும்
அழகுபார்த்தன
புகைப்பட நிலையங்களின் கண்ணாடிகள்
மதுரைமல்லிக்கு புவிசார் குறியீடாமே
அம்மாவின் நினைவில் மணக்குமே
என்றெண்ணிக் கேட்கும் மகள்
கிரீமை மீறித் தொந்தரவு செய்யும்
எதையும் தொடுவதில்லை
அவள் மட்டுமென்ன
ஒருவரிசை மல்லி ஒரு வரிசை கனகாம்பரம்
எனச்சூடிய நாள் போய்
ரெண்டுமல்லி ரெண்டு பட்டன்ரோஸ் வைத்த
விரற்கடைப் பூவும் தாளாத அளகபாரம்
நிறைய படங்கள் இருக்கின்றன
வாங்கும் சரங்களைப் பங்கிட
முத்துமணிக் குஞ்சங்களும்
கண்ணில் படுகின்றன
எங்காவது திருவிழாக்கடைகளில்




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...