சனி, பிப்ரவரி 05, 2022

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா

 

எப்போதும் சிரித்த முகம்
தெத்துப் பற்களாலும் உங்களுக்கு அப்படித் தோன்றலாம்
சுப்பு அக்காவுக்குப் பாடலை முணுமுணுக்காமல் 
வேலைசெய்ய வராது

சுசீலாவா ஜானகியா சித்ராவா என்றுமட்டுமல்ல
டியெம்மெஸ்ஸா
யேசுதாஸா பாலுவா வாசுவா என்றுகூட பேதமில்லை அவளுக்கு

அடுப்பு மெழுகும் அதிகாலையில் கூட
 ஒரு சாமி பாட்டு பாடுதா பாரு எரும...
காதில் வாங்காமல் தொடருவாள் சுப்பு
' அடி தேவி உந்தன் தோழி'

நள்ளிரவிலேயே இசைத்தட்டை அடுக்கிவைத்துவிடுவாளோ மனதில்

' என்னடா பொல்லாத வாழ்க்கை....
' காற்றில் எந்தன் கீதம்'
அவளே நாயகி
அவளே தோழி
அவளே தத்துவம்
அவளே கொஞ்சல்

ருருரூ...ரூரூரூ... என்று ஆரம்பித்தபோது
அம்மாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வருகிறது
இருந்து வாழ வக்கில்ல இங்க வந்து பாட்டு....
ஆங்காரமாய்
குட்டுவைத்த ஒரு கணம் நிறுத்திவிட்டு
மறுகணம் துணியை உதறியபடி தொடர்கிறாள்
' இந்தக்கடல் பல கங்கைநதி வந்து சொந்தம் கொண்டாடும் இடம்'

பித்தமா
பித்தம் தெளிய மருந்தா
அம்மாவைப்போலவே
அவளுக்கும் தெரியாது


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...