வியாழன், அக்டோபர் 08, 2020

காந்தி அழைப்பு

 எப்போதையும்விட

இப்போது நீ தேவைப்படுகிறாய்
சத்தியத்தின் உறுதியைப் பெற்றுதான்
எழுந்து நடமாட வேண்டும்


என்னை அப்படியே வழிபடு என்று
சாட்டை சுழற்றாத
முன்னோடியைத் தேடுகிறோம்


தன் தவறுகளை ஒப்புக்கொண்டு
பரிசோதனைகளைப் பகிர்ந்து கொண்டு

அதிகாரத்தினால்
வாள் பாய்ச்சாத தலைவனைத் தேடுகிறோம்

சந்தேகமாகதான் இருக்கிறது
நவநாகரீக ஆடையணியாமல்
தொடர்ந்து பொய்யுரைக்காமல்
பேதங்களை ஊதிப்பெருக்காமல்
இருக்கும் உன்னை எங்களுக்கு
அடையாளம் தெரியாமல் கூட இருக்கலாம்

உன்னை பிரமோட் செய்ய
 நிறுவனங்கள் உண்டா

தொலைக்காட்சி அரங்குகளில்
கண்மூடிக்கொண்டு கத்துவதற்கான
ஆள்பலம் உண்டா


இரண்டு வருடங்களுக்குள்
இன்னோவா தரமாட்டாயே நீ


ஏதாவது செய்வாய்
ஏதாவது தருவாய்
என்ற ரகசிய ஒப்பந்தங்கள் இல்லாது
வாய்மை அகிம்சை
என்ற வார்த்தைகளை நம்பி
கல்வியை,தொழிலை,
குடும்பத்தை விட்டுவிட்டு

நடப்பதற்கான கூட்டமாக
நாங்கள் இல்லை என்பதையும்
தெரிந்துகொண்டு ஏதாவது செய்

படம் :ஓவியர் ஆதிமூலம் 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...