வியாழன், மே 27, 2021

நிலமென்னும் நல்லாள்

 மழை இடைவிடா

களிநடம் புரிகிறது
உங்களைப்போலவே
குளிருக்கு இதமாக
எதையோ போர்த்திக்கொண்டு
சுருண்டு கிடக்கிறான் ஆதவன்
***********
வறண்ட சருமத்திற்கு
எண்ணெய் பூசியதாக
சிலநாள் மழை ஈரத்தில் மினுக்கிக் கொண்ட நிலமென்னும் நல்லாள் திணறிக்கொண்டிருக்கிறாள்
உலகமே ஒரு திசையில்
போனாலும்
விதை,நாற்றுகளோடு
கண்விழித்தவன் குடி
நீர்ப்பெருக்கில் மூழ்கிக் கிடக்கிறது
*********
கணக்கெடுப்புகள்
மும்முரமாகின்றன
காய்ந்தாலும்
பெய்தாலும்
மிதியடியும் நனையாத மிதவாழ்வுக்குள்ளிருந்து
அவர்களும்
மூழ்கியிருக்கிறார்கள்
கரையில் நின்றபடியே
காப்பாற்றிவிடுவதான
கற்பனைக் காட்சிகளில்
******
பூனைக்குட்டி உறங்க வேண்டாமென்ற நல்லெண்ணத்தில்
அடுப்புகளை அகற்றியாயிற்று
எதற்குப் பிடிவாதமாய்
நெல்,கரும்பு,வாழையென மல்லுக்கட்டுகிறீர்கள்
உங்கள் வசதிக்காகதானே
அனுமதித்திருக்கிறார்கள்
ஆன்லைன் சேவைகளை
இன்னும் புரியவில்லையேயென்றுதான்
எரிவாயு விலை ஏற்றிவிடுகிறது
இதுதான் மாற்றமென்று எப்படியாவது புரிந்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...