வியாழன், மே 20, 2021

பெயரிலாக் காற்று

 நேற்றுதான் கவனித்தேன் புதிய தும்பைச்செடிகள் பூக்கத்தொடங்கியிருந்தன

பழைய செடிகள் இருந்த இடத்தில்
சாக்கடை வெட்டியிருந்தார்கள்
இன்றோ
புதிய செடிகளை மூழ்கடித்து
குப்பை மிதக்கும் மழைவெள்ளம்
எனக்குத்தெரியும்
நாளையோ மறுநாளோ
இது வடிந்தபின்
ஒன்றுமே நடவாதது போல தும்பை பூத்திருக்கும்
*******************************************************

மிதிபாகல்,பீர்க்கு
பிரண்டை
நாட்டுக்கொய்யா
ஆவாரம்பூ ,குப்பைக்கீரை,கருந்துளசி
இரண்டு கூடையும் ஒரு விரிப்புமாக
அரிதானவற்றைச் சேர்ப்பிக்கிறவள்
சில வாரங்களாகத்தான்
மீண்டும் விரித்துக் கொண்டிருந்தாள் அந்தச்சிரிப்பை
அவள் சேலையைப் போலவே அதுவும் வெளிறிப் போயிருந்தது
எல்லா இலை தழைக்கும் பெயர் தெரியும்
காற்றுக்குப் பெயர் உண்டு என்பதுதான் வினோதம் அவளுக்கு
சிறுகீரைக்கட்டை
"பிள்ளைத்தாச்சி சூப்பு வெச்சிக்குடி"
என்று சும்மா
சேர்த்துக் கொடுத்தவள்
இந்த மழை ஈரத்தில்
எங்கு காய்வாளோ

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...