வியாழன், மே 27, 2021

நாற்காலிகள் நகைக்கும் ஒலி


வீட்டிற்கு ஒரு நாற்காலி
கூட இருக்காது
வீட்டுத்தலைவர்களுக்கும்
திண்ணையே போதுமாயிருந்தது
மறைந்து நின்றே பேசிப்பழகிவிட்ட ஆத்தாக்களுக்கும்
நாற்காலி கிடைக்கும்
இறுதி நாளில்
பல்லக்கில் ஏற்றியவுடன்
கழுவிக் கையளிக்கப்படும்
நாற்காலிகள்
ஊருக்குள் ஒன்றிரண்டு வீட்டிலுண்டு
மழுமழுவெனத் தேய்த்த
பிடிகளும்
வேலைப்பாடுள்ள கால்களுமாக
ஒற்றை நாற்காலி
அந்தஸ்தின் அடையாளம்
பிரம்பில் பின்னிய நாற்காலிகள் நான்கு வாங்கியபோது
அத்தை
பார்க்க வருவோர்க்கு தண்ணி கொடுத்து மாளலை
எனப் பெருமையோடு அலுத்துக்கொண்டாள்
ஆளரவமற்ற பொழுதுகளில்
அமர்ந்தும் பார்த்தாளாம்
ஒயர்பின்னலைக்கற்று
நாற்காலிகளால்
அமர முடிந்தது
பார்வையிழந்த நண்பருக்கு
பள்ளிகளில் கிடைத்த
பெஞ்சுகள் வீட்டில் கிடைக்க
வெகுகாலமானது
பெண்களுக்கு
தனக்கென்று ஒரு நாற்காலி கிடைத்த மகிழ்ச்சியில்
தனம் டீச்சர் சிந்திய கண்ணீரைப் பிள்ளைகள்
சாக்பீஸ் தூள் விழுந்துருச்சு
புது டீச்சர் கண்ணுல என மொழிபெயர்த்தார்கள்
மனைவியை அனுமதிக்கத் தோன்றாத நாற்காலியில்
மகளை அழகு பார்த்தவர்களின்
மருமகள்கள்
இன்னும் சில பத்தாண்டுகள்
கால் கடுக்க நின்றே பரிமாறினர்
நாற்காலி பழக்கியதே
திரையரங்குகள்தான்
மணற்குவியலையும்
பேக்பெஞ்சும் விட்டு
ஒரு ரூபாய் செலவில்
சமத்துவத்துக்கு முன்னேறிய தலம்
மடக்கு நாற்காலிகளின்
வருகையில்
மாதத்தவணையின் கருணையில்
வீடுகள்தோறும் நடந்தது
கிரீச்சென்ற மங்கல இசை முழங்கிய
இருக்கைப்புரட்சி
இதோ
வண்ணம் வெளிற வெளிற
கடையில் காத்திருக்கும்
பிளாஸ்டிக் நாற்காலிகளுக்கு
உண்டு
வாசல்தோறும் கிடக்கும்
வாத்சல்யம்
குட்டி ராஜாராணிகளையும்
குனிந்து
ஏற்றுக்கொள்ளும்
அளவான இதயம் அவற்றுக்குத்தானே இருந்தது
மற்றபடி
நாற்காலிகளுக்காவே
நாணங்கெடுவோர்
பற்றிச் சொல்வதை
நாற்காலிகளே விரும்புவதில்லை
தான் மட்டுமே நிரந்தரம்
அமர்வோர் அல்ல
என்பதை நினைவூட்ட
சட்டென நொடித்துக்காட்டி
நகைக்கும் ஒலி கேட்கிறதா

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...