சனி, மார்ச் 31, 2012

நீலங்களின் திரை

                              வாளி நிறைய நீலக்குழம்போடு
                              வண்ணம் தீட்டிக் கொண்டே    
                              போனார் கடவுள்...
                              இன்னும் 
                              எவ்வளவு நாளாகும் 
                              என்றான் வழிப்போக்கன்...
                              தீரா நீலமும்
                              தீரா வானமும் 
                              பார்த்தபடி 
                              புன்னகைத்தார் கடவுள்..
                              பிறிதொருநாள் 
                              கடல் பார்த்தான் வழிப்போக்கன்.
                              கரைத்த இடமா..
                              கழுவியதா ...?
                              கடவுளைக் காணவில்லை...
                              நீலத்திடம் மொழியில்லை...
                                                       
 
                                  
                                 

புதன், மார்ச் 28, 2012

நிழல் தேடவில்லை


புதிய மாடிப்படி .... 
                                                   
க்ரோட்டன்சின்  எதிரி! 
தொட்டி துறந்து 
வேர்பிடித்தபின் 
இளவெயிலும் படராத்தடுப்பாய் 
அது முளைத்தது !
இயலாமையோடு 
இடித்தபடி குரோட்டன்ஸ் 
அந்தப்பக்கத்தில் நிற்கும் 
வாழை ,முருங்கையிடம் 
விசாரித்தது
விதையா,பதியமா
எப்படி வளர்ந்தது மாடிப்படி என்று?

சனி, மார்ச் 24, 2012

அபி உலகம் -8

துரத்தும் தெருநாய்                                            
அபியிடம்
தனியாய்க் குழைய
அம்மா நினைக்கிறாள்
குழந்தைக்கான பரிவு என்று.
அவளுக்குத் தெரியாது
வீட்டின் செல்ல நாய்த்தீனியில் 
பாதி
ஜன்னல்வழி வெளியேறுவது.......
**************************
களிம்பும் கையுமாய்
அபி வாசலில்......
வெளுத்த புள்ளிப்புண்ணோடு
கடைத்தெருவில்
காசுவாங்கிய யானையை
அப்பா
எங்குபோய்த் தேடுவாரோ    

வெள்ளி, மார்ச் 23, 2012

யுகங்கள் தோறும்

காரை பெயர்ந்த 
கட்டைச்சுவர் ..
புதுக்கருக்கில் 
சுவரொட்டி மறுக்கும்                                                          
ஆள் உயரம்...
...............
மதில்கள் மாறினாலும் 
விரிந்த விழிகளோடு 
பூனை அங்கேயே...
கண்ணாடிச் சில்லும் 
கம்பிவலையும் கூட 
அரூபமாய்த் தள்ளிவிட்டு 
தன இடம் விடாமல் 
எப்போதும்போல் 
இப்போதும் பூனை...
மதில் நிலையற்றது !
பூனை நிலையானது!     
                                        
19 3 12 உயிரோசையில் வெளியானது
 
 
 
 
 

சனி, மார்ச் 17, 2012

விலகிய சக பயணி

பரபரப்பான                                                                                 
நகரச் சந்தடியில் தொடங்கியது ...
புறநகர்த்தனி வீடுகள்,
மிஞ்சிக் கிடந்த
வயல்பரப்பு
தொலைதூரச் சிறுமுகடு
தப்பிய மரக்கூட்டம்
சிற்றூர்க் கடை வெளிச்சங்கள் ....
கூடவே.......
நகர்ந்துகொண்டிருந்த
மேகங்களைக் காணோம் ...........
அனிச்சையாய்
வாய் துடைத்து
உறக்கம் மீண்டபோது.

முந்தையநாள் படக்கதையை
சுவாரசியமாய் நிகழ்த்துகையில்
கண் சொக்கும் ஆச்சியிடம்
கோபித்து எழுந்து செல்லும்
பேபியக்கா போல
மேகங்களும்
மீண்டுவரக்கூடும் !

   

வெள்ளி, மார்ச் 16, 2012

பாராட்ட வருகிறார்கள்



அவசரமாய் 
 
ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை!
 
சம்பிரதாய வாழ்த்து ,
 
அழுத்தும் கைகுலுக்கல்,
 
பொய்யெனப் புரியும் 
 
புனைந்துரைகள் 
 
எல்லாவற்றுக்கும் 
 
முகநூலின்
 
ஒற்றை விருப்பச் சொடுக்காக 
 
புன்னகைக்கலாமா?
 
பல்....?
 
தலையசைப்பு 
 
சம்மதமாகவா ?மறுப்பாகவா?
 
மையமாகவா?
 
கண் பணித்துவிடுமோ...
 
சீரான சுவாசத்தோடு 
 
வெற்றுப்பார்வை தோதாகுமா?
 
பெருமிதம்?கூச்சம்?
 
''எவ்வளவோ பாத்துட்டோம்..?
 
இதற்குத் தானே ஆசைப்பட்டாய்....?
 
எது பொருந்தும்....?
 
அவசரமாய் ஒரு கண்ணாடி
 
அல்லது 
 
 ஒத்திகைக்கு ஒரு நல்ல துணை! 

                                            12 3 12 திண்ணையில் வெளியானது .

போக்குவரத்து நெரிசல்

    
எதிரிலுள்ள 
 
அடுக்ககத்தின்
 
பின்பக்கத்திலிருந்து  கிளம்பி,
 
மின்வடம்,தந்திவடம்
 
அளவிலாக்குடியில் தன்னிலை
 
இழந்த பாதசாரிபோல்
 
அண்ணாந்து கிடக்கும்
 
தொலைக்காட்சிக்குடைகள் 
 
அலைபேசிக் கோபுரங்கள்,
 
வழிமறித்து வேடிக்கைபார்க்கும்
 
நட்சத்திரங்கள் தாண்டி 
 
கண்ணுக்கெட்டும் 
 
ஜன்னல் சதுரத்துக்குள் 
 
நிலா 
 
வந்து சேரும்போது 
 
இரவு உணவு நேரமாகிவிடுகிறது ! 
 
                   12.3. 12  உயிரோசையில் வெளியானது  

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...