புதன், ஜூன் 11, 2014

வலியின் தோற்றம்-3



பசுமையான காட்சி 
விரியும் மலர்
கனிந்த முகம் 
நெகிழ் குரல் 
கடலும் வானுமான நீலச் சங்கமம் 


வர்ணக் குழம்பை விசிறும் கதிர்
சர்க்கஸ் கோமாளிபோல் வளைந்து தொங்கி
கவனம் கேட்கும் மேகம்
ஜன்னலோரக் காற்று
குறும்புக் குழந்தை ...

கண்ணுக்கும் மனதுக்கும்
குறுக்கே மறிக்கிறது
வலி

வலியின் தோற்றம்-2



நான் சொல்லாததை 
எது சொல்லிவிடும் 
பாவனைகளில் வெளிப்பட்டுவிடாதபடி 
பயின்றிருக்கிறேன் 
வெளிச்சம் அருகிருப்பதாகவும்
நம்பிக்கையிலேயே ஆக்சிஜன்
உற்பத்தியாகும் என்றும்
புன்னகையால் பசியை அடக்கவோ,கடக்கவோ
முடியுமென்றும்
என் சொற்களால் உன்னையும் உணரவைப்பேன்
ஆனால் ...என் வலியை.....

வலியின் தோற்றம் -1


உடல் மொழியில், வாய் மொழியில்,
ஒரு தலையசைப்பில் ,
உன் இதழ்க்கடை நெளிவில் 
எப்போதோ பிறந்துவிட்டிருக்கிறது இது 
அணுவைத் துளைத்த கடலானதும்
ஒரு கடல் ஏழு ஆனதும்
எப்போதென்று தெரியவில்லை...
ஏழோடு நிறைந்துவிடும்
என்பதே இப்போதைய நம்பிக்கை

வீதி நாடகம்



அவள் வாளைப்
பாடநூலில் பார்த்திருக்கிறாள்...
கத்தி..சமையலறையில் 
அரிவாள் தேங்காய் உடைக்கவும் 
வேலிக்கொடியைக் கழித்துவிடவும்....
துப்பாக்கி தம்பியின் தீபாவளி...

உச்சிமுடி பிடித்திழுத்து
தெருவோரம் மிதிப்பவனுக்கு
எச்சில் போதும்
அவள் தூய்மையைக்
கூண்டிலேற்றும் சொற்களுக்கு
எதிர்ப்பதமும் தெரிந்தவள்தான்...
முகம்சுளித்தபடி ஒதுங்கும்
மகளின் நாகரீகம்
ஆயுதம் தரவில்லை
அவனோடு சேர்ந்து மிதிக்கிறது
அவமானமும் அழுத்தமும்

புன்னகைக்கு மணமுண்டா ..



உனக்கு வியப்போ ,எரிச்சலோ,
வரலாம்....
ஆனாலும்,இதற்கு விடை தா....
ரூபியின் புன்னகையில் 
சமையலறை தாளிப்பு வாசமும்,
அம்மாவின் புன்னகையில் 
கவலைகளின் கசங்கிய வாசமும்,
தேவாவுக்கு இழப்பின் 
அழுகல் வாடைச் சிரிப்பும்,
ரஞ்சியிடம் பொறாமையின் 
மழுப்பலான குப்பைநெடியும் ,
உணர்ந்தேன்  என்றாயே....
என் இதழ் உதிர்ப்பதில் 
நீ உணர்ந்ததென்ன 

செவ்வாய், மே 06, 2014

அங்கீகாரத்தின் குரல்


நான் பேசாமல் என்னோடு 
பேசிக் கொண்டிருந்திருக்கலாம் 
பேசாத உன்னோடு பேசிக் கொண்டிருப்பதாய் 
மட்டுமே புரிந்து கொண்டு 
கேட்காத உன்னோடு பேசிக் கிடந்திருக்கிறேன்
என் துயரெலாம் இப்போது
என்னைப் பற்றியே அல்ல
ஏந்திக் கொள்ள யாருமின்றி
சுவரில் மோதித்
தரையில் புரண்டுக்
காற்றில் கைவிரித்தழும்
என் சொற்களை
எப்படி ஆறுதல் செய்ய.....

-லதாம்மாவின் மரணம்


நான் ஏறிய பேருந்து,
அடுத்த தெருப் பள்ளிக்கூடம் ,
எங்கும் ஒட்டப்பட்டிருந்தது 
அந்தக் கண்ணீரஞ்சலி சுவரொட்டி ...

முட்டைக் கண்ணன் என்றோ,
தனா என்றோ கூப்பிடப்பட்ட 
லதா அண்ணன் அதிலே 
தனபால் ஆகியிருந்தான்...

வருந்தும் பா தனபால் குடும்பத்திற்குள் 
லதாவும் அடக்கம் என்றும் தெரியவில்லை,
லதாம்மாதான் 
ஆதிலட்சுமி என்றும் தெரியவில்லை

பறக்கும் தலையும் மூளிக்காதும்,
தாம்புக் கயிறுமாகவேதிரிந்த 
லதாம்மாதான் 
கொத்துச் சங்கிலியும் 
குறிப்பாகப் புன்னகையுமாகச் 
சுவரொட்டியில் பார்க்கிறாள் 
என்றும் தெரியாமல்தான் 
அன்று கடந்தேன் என்பதைச் சொல்லித் 
துக்கம் விசாரிக்கலாமா ..... 

7 5 14-ஆனந்தவிகடனில் வெளியானது.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...