வெள்ளி, பிப்ரவரி 07, 2014

அடையாளம்


அன்பைக் கண்டுகொள்ள
ஆவல் கொண்டேன்
என்னை நான் பார்க்கும் தருணம்
தெரியுமென்றாய் …….
சலனம் துடைக்க
பொதியில் அடைந்த உயர்காகிதச்சுருள்
உதவாது என உணரும்போது
அது பெருகித் தளும்பி
வழிந்து கொண்டிருந்தது…

ஒளிக்கீற்றைத் தொடர்ந்து
நடந்து கொண்டே இருக்கிறேன்
வெளிச்சம் எக்கணமும்
என்னுள்
நிரம்பிவிடலாம் என்று.

இளைப்பாறல் உறக்கம் அல்ல
உறக்கம் இளைப்பாறல் அல்ல
என்கிறாய்.
என் பாதங்களைப் போலவே
முன்பின்னாக மாற்றிப் போட்டுக் கொண்டே
போகிறது வானம்…

வானவில் பார்க்கலாம் என்றவன்
பாலை தாண்டி எப்போது வருவானோ…
நானோ மழைவானத்தின்
அடிவாரத்தில் நின்றும்
அவன் திசைப் பார்வையோடு.

புதன், ஜனவரி 22, 2014

அவியாக் குவியல்

பொய்கள் இறைந்த முற்றத்தில் 
புழுங்கிய நெல் துழாவி விட 
இடம் தேடுகிறாள் வள்ளி 
ஒவ்வாமை சொல்லி 
குவிந்து கொள்கிறது 
அவிந்த நெல் 
எப்படியும் மூட்டை கட்டப் போவது 
தன்னையல்ல என்றறிந்த 
முற்றத்துப் பொய் 
காலாற ஒருகோடிக்கும் 
மறுகோடிக்கும் ....
ஊறவும் புழுங்கவும் காயவும்
இடியவும் 
இன்னொரு மூட்டை 
தயாராகிறது .....

செவ்வாய், டிசம்பர் 17, 2013

துளிகளாலான வாழ்க்கை

மஹாகவிதை இதழில் வெளியானது 
***********************************
மகிழ்வின் கோப்பையை நிரப்பும் 
பொறுப்பு உன்னுடையது.
துளியாய்ச் சொட்டுவதா ...
சட்டென்று சரித்து நிரப்புவதா ....
சிந்தினால் மதிப்பெண் குறையுமா...
நிதான...மா....க...அலகு  அலகாக
இட்டு-அலங்காரமாக 
ஒரு பழநறுக்கோ ...இலைக்கீற்றோ
செருகுவதா ....
சிந்தித்.. த..வண்.. ண.. மே 
நிற்கிறாய்...
அவகாசத்தின் அளவு 
சொல்லப்படவில்லை என்ற முனகலோடு ..
உன் கால் கடுக்கும் 
என்ற கரிசனத்தோடு யாரேனும் 
ஒரு இருக்கையில் 
உன்னை அழுத்திவிடவும் கூடும்...
அங்கேதான் யாரிடமோ இருக்கிறது 
நேரமானி...
ஓசையின்றி நகர்ந்துகொண்டிருக்கும் 
டிஜிட்டல் எண்கள் வெற்று அடையாளமல்ல ...

சனி, டிசம்பர் 14, 2013

உறைந்த காலம்

வல்லமையில் நேற்று  13 12 13

உதிர்த்த சொற்களில்
நீ நின்றாய் ..
உரைக்காத சொல்லில் நான்…
என் உச்சரிப்பு குறித்து
கிளர்ச்சியோடு பகிர்கிறாய்…
மௌனத்தில் நடமிட்ட
பொழிவை கோர்க்க இயலவில்லை
என்னால் …
வண்ணத்துப் பூச்சியின்
சிறகு படிந்த மகரந்தமென ரசிக்கிறாய்
கூட்டுப் புழுவின் வரிகள்
என்னாயின ..
ஒருமுறை கேட்டிருக்கலாமோ

செவ்வாய், டிசம்பர் 10, 2013

எங்கே நீயோ

வல்லமையில் நேற்று...
                         9 12 13http://www.vallamai.com/

--பிரியம் சொல்லில் தளும்பல்
உன் ப்ரியம்
கருணை கண்ணில் வழிவது 
பார்வைக்கு அழகு 
பார்ப்பவர்க்கு அழகா ..?
என் ஆன்மாவை 
துடைத்துத் தூபம் காட்டி 
இறுகப் பூட்டிவிட்டேன் 
புற அழுக்கு குறித்த அச்சமென்றாய் ..

அழுக்கு தின்று மூச்சு விடும் 
மீன் அது என்பதை அறியாயோ 
அகவிழி திறந்து ஆன்மாவை 
உலவவிடு... 
தடாகம் முழுக்க துள்ளிப் புரண்டு 
நீந்தும்போதில் 
நீயும் கற்பாய் பிரியமும் கருணையும் 
விரல் வழியும் வழியும் என்பதை...
  

சனி, டிசம்பர் 07, 2013

நனவிலி

உன் சொல்லுக்காகக் காத்திருக்கிறேன் 
புதிய மொழி கற்றவன் 
எழுத்தெழுத்தாக இணைத்துப் பார்த்து 
மனசுக்குள் உச்சரித்து ஒத்திகை பார்த்து 
வெட்கமோ ஆர்வமோ தெறிக்கப் பேசுவது 
போல் 
நீ அன்பின் மொழிக்குள் 
அமிழ மாட்டாய் ...
தெரியும்...
வறுமை உணவே ஆடம்பரமாக்கியபோதும்
ஆவல் தின்பண்டக் கனவு தராதா என்ன....
நான் கனவிலிருக்கிறேன் ...


வெற்றுக் கோப்பைகளுடன் 
நீ வாசல் திறக்கிறாய் 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...