ஞாயிறு, நவம்பர் 13, 2016

செல்வதும் செல்லாததும்

என்ன செய்ய
எந்தக்கணமும் நீ நீயல்ல
என்ற உத்தரவு வரலாம்
செல்லத்தக்க அன்பு பற்றி
செல்லத்தக்க புன்னகை பற்றி
செல்லத்தக்க விரோதம் பற்றி
செல்லத்தக்க நோய் பற்றி
செல்லத்தக்க கும்பிடு பற்றி
முன்கூட்டியே சொல்லமுடியுமா
உத்தரவுகளின் பின்பக்கத்தில்
பழைய பாக்கிகள் போல
பழைய பற்றுகளை
பழைய எதிர்ப்புகளை
பழைய உறவுகளை
பழைய நினைவுகளைக் குறித்துத்
தருவாருண்டா
படர்கிளைகளைக் கழித்துவிட்ட 

முருங்கை போல நிற்கத் தயாராக
இருக்கட்டும் மனது
வரிசைகளில் நிற்கும்போது
கைபேசியில்
ஜல்லிக்கட்டு விளையாட முடியுமென்றால் 

ஏது கவலை


எறிந்த முதுகெலும்பு

விட்டுவிடு விலகிவிடு என்று 
யாருக்கும் உத்தரவிட 
இயலா அடிமைகள் நாங்கள் 
பிறந்தபோது முதுகெலும்பு இருந்திருக்கலாம் 
சதைப்பிண்டத்தையே ஆதாரமாக 
தகவமைத்துக் கொண்டுவிட்டோம்
எப்போதும் குனிய
குட்டிக்கரணம் போட
இலைபோர்த்திக் கதையெழுத
கற்பனையிலேயே புளகாங்கிதம்பெற
எல்லோருக்கும் தோதாக
சாம்பல்சத்து தேவைப்பட்ட சந்தர்ப்பங்களில்
எடுத்துக்கொள்ள ஏற்றபடி
எரித்து வைத்திருக்கிறோம்
மற்றபடி
பால் வேறுபாடில்லா குலவழக்கம் இது
என்பதையும் பதியுங்கள்

உருளைக்கிழங்கு துண்டுகளின் பிம்பம்


தும்பைச்செடிகளும் கீழாநெல்லியும்
ஓரமாய்ப்பெருகிக் கிடக்கும் ஒரு பாதையில்
நடந்து சென்றிருந்தோம்.
வராமல் கூட இருந்திருக்கலாம்
ஆனால்
படுபாடு பட்டு வந்தாயிற்று
திடீரென போய்ச் சேர்ந்து
புதிய சமையலொன்றைச் செய்யும்
அசௌகர்யம் தந்த குற்ற உணர்வோடு
கால்களைக் கழுவிய
அதே கிணற்றடி
உள்ளே கசகசத்த நெருக்கத்திலிருந்து
தப்பிக்க ஏற்ற பதுங்குகுழிதான்
சகடையில் இப்போது
டயர்களால் ஆன கயிறு
குறைந்தது நான்கு பண்டமில்லாமல்
இலைவிரிக்க மாட்டேன் எனத்
தூக்கிச் செருகிய சேலையும்
உடைந்த பற்களிடையே
வழிந்த புன்னகையுமாக
ஓடிக்கொண்டிருந்த அத்தைதான்
முன்வாசலில் நாற்காலியில்
சார்த்தப்பட்டிருக்கிறாள்
இந்த வீட்டின் நகரக்கிளையில்
உருளைக்கிழங்கைத் தோல்சீவி
சமைப்பதா ,அவித்து உரிப்பதா
எது சிக்கனம்
என்ற நீள் விவாதத்தின் பின்
சமைத்து பரிமாறப்பட்ட இரண்டே துண்டு
போல கிணற்றின் நீரலைவில் தெரிந்தது
திடுக்கிட்டுத் திரும்பியபோது
நீரிறைக்க வந்திருந்தாள் மருமகள்
அவள் கைகளின் நீட்சி போல


நீர்மையற்ற வாழ்வு

உங்களோடுதான் அவர்களும் இருந்தார்கள் 
அல்லது
அவர்களோடுதான் நீங்களும் 
சரி 
உங்களைப்பற்றி சொன்னால்தான்
உங்களுக்குப்பிடிக்கும்
முதலிலிருந்தே வருகிறேன்
உங்களோடுதான் அவர்களும் இருந்தார்கள்
பொருள் வந்த பொழுதிலோ
பொருளின் பொருளறிந்த பொழுதிலோ 

நிகழ்ந்த நகர்வு அது
நகர்ந்தது நீங்களென்பதால்
அறியாது
எப்போதும்போல் சிரிக்கும்
அந்த முகம் எரிச்சலூட்டுகிறது
அவமானம் தருகிறது
கொஞ்சம் கை கொடுத்தாலென்ன
கேட்கும் குரலும் விரோதமாகிவிடுகிறது
சுற்றிப்பாருங்கள் பாளம் பாளமாய்
வெடிப்பு
நீர்மை காய்ந்த சேறு



காலம் கேள்விகளால் தொடுக்கப்பட்டிருக்கிறது


கடலாகவோ மலையாகவோ
விரிவானாகவோ சொல்லிவிடமுடியவில்லை
காலத்தை
கோபமாகவோ மகிழ்ச்சியாகவோ
குமைவாகவோ அணுகமுடியவில்லை
காலத்தை
அறிந்ததாகவோ அறியாததாகவோ
நுனிப்புல்லாகவோ உணரமுடியவில்லை
காலத்தை
கொண்டதாகவோ இழந்ததாகவோ
ஏங்கியதாகவோ விடமுடியவில்லை
காலத்தை
உன்னுடையதாகவோ என்னுடையதாகவோ
நம்முடையதாகவோ பொதியமுடியவில்லை
காலத்தை
இறுகினால் இற்றுவிடுவிடுமோ
இளகினால் கொட்டிவிடுமோ
என்ற பாவனைக் கேள்விகளால்
தொடுக்கப்பட்டிருக்கிறது காலம்
மாலை வாடிவிடாது என்ற நம்பிக்கையுடன்...

செவ்வாய், நவம்பர் 08, 2016

இட்லி அரிசியும் சாப்பாட்டு அரிசியும்


நிறைநாழி நெல் முந்தானையில் ஏந்திக்கொண்டுதான் 
உள்ளே நுழைந்தார்கள்
வாழவந்த பெண்கள்
மணையில் அமருமுன் கவனமாக
அடியில் நெல் பரப்பியே சமுக்காளம்
விரிப்பது மங்கலநிகழ்வுதோறும்
கொத்தான புதிர்நெல் எரவாணத்தில்
அடுத்த கொத்து வரும்வரை
உலர்ந்தாலும் உதிர்ந்தாலும் தொங்கும்
பத்தாயங்களின் வாசனையோடு
கோணிச்சாக்குகளின் உதறலோடு
மழையும் வெயிலும் முற்றத்தில் இறங்கின
இதெல்லாம் தொன்மமாகிவிட்ட வீடு இது
நேராக உட்கார்ந்தே அறியாத தலைவன்
சாய்வு நாற்காலியில்
அகன்ற திரை தொலைக்காட்சி பார்த்தபடி
நடவு,அறுப்பு என்று அலைந்துகொண்டிருந்த தலைவி
நல்லவேளை நமது நாலு ஏக்கரும்
பிரதான சாலையில் இருந்தது
என்று பெருமூச்சோடு ஆறுதல் அடைகிறாள்
நல்லவேளை நமது ஊருக்கு
கலெக்டர் ஆபீசும் கல்லூரியும் வந்தது
என்கிறாள் தாய்வீடு வந்திருக்கும்
இளைய மகள்
நல்லவேளை நீயும் அப்பாவும்
வயலை மனையாக்க சம்மதித்தீர்கள்
என்றாள் தாய்வீடு வந்திருக்கும்
மூத்தமகள் தலைதுவட்டியபடி
உங்கள் வாழ்வு அல்லவா
என்றபடி தானும் தலைதுவட்டத்
தொடங்கினாள் தலைவி
அவர்கள் அப்போதுதான் துக்கவீட்டிலிருந்து
திரும்பியிருந்தார்கள்
காய்ந்த வயல் பார்த்துக் கடனை நினைத்துப்
பாலிடால் பருகிய பங்காளி சாவு அது
"அம்மா என்ன வாங்கவேண்டும் "
பட்டணத்திலிருந்து வந்திருக்கும்
மகன் கேட்கிறான்
அரிசி வாங்கணும்பா
இட்லி அரிசியா சாப்பாட்டு அரிசியா
தலைவர் சற்றே திரும்பிப் பார்த்தார்
எரவாணத்தில் காய்ந்த புதிர் ஆடும்
இடத்தை

திங்கள், நவம்பர் 07, 2016

இதுவும் அதே ஏன்தானா

ஏன் இழந்தவற்றுக்காக
வருந்தவேண்டும்
ஏன் தவறியவற்றை நினைத்து
 தலையிலடித்துக்கொள்ள வேண்டும்
ஏன் கடந்தவர்களை நினைத்துக்
கண்ணீர் விடவேண்டும்
ஏன் உளறல்களை நினைத்து
கொதிக்க வேண்டும்
ஏன் பித்துகளை தக்கவைக்க 

இப்படித் தவிக்க வேண்டும்
ஏனென்று தெரியாதவற்றையெல்லாம்
ஏனிப்படி ....


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...