வியாழன், நவம்பர் 23, 2017

வீழ்சருகின் குரல்

தரையோடு படர்ந்து கிடக்கிறது குப்பைக்கீரை
பெயரின் கண்ணாடியில்
முகம் பார்க்கத் தெரியாதவரை
பிழைத்தேன்

********************************************************

வீதிகளற்ற கனவில் 
தினமும் தாவிக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி 
எதிர்ப்படும் கைரேகை பட்டழிகிறது

***********************************************************
புல்லையும் அளவாகக்
கத்தரித்துவிட வேண்டிய
உலகில் 
விடுதலை கீதம்
பாடிச்சுற்றும் பொன்வண்டே
உன் சின்னச்சிறகுகள்
கண்டு பட படக்குதென் இதயம்


***************************************************************
மேல் கீழாக எழுதிப் பார்த்தேன்
கீழ்மேலாகவும்
இடவலம் வல இடம்
எப்படி எழுதிடினும்
குன்றா கசப்பு 
தேனால் மெழுகித்தான் என்ன


************************************************************
விழுதாடிக்கொண்டிருந்த
காற்றைப் பார்த்து சிரித்துக்கொள்கிறது
அடர்கிளை
இங்கோ
அடர்கிளையின் இலை
துறந்த ஒற்றைக்குச்சி


**********************************************************
கழிவிரக்கப் புன்னகைக்குப் பதில்
காறித் துப்பிவிட்டு
சுருண்டது நிழல்


*****************************************************

இந்த நதியின் அலைகளுக்கப்பால்
இந்த முகடுகளின் மேகப்பூச்சுக்கப்பால்
இந்த நீலத்தின்
கூசும் ஒளிக்கப்பால்
இருப்பதெல்லாம் இருள்
ஏன் இத்தனை திரை


********************************************************
இலை இலை இலை
அடுக்கடுக்கடுக்காக
இலை
வளைந்து நெளிந்து
நுழையும் கீற்று அதுபோக்கில்தான் தரை தொடுகிறது
கோணல் புன்னகையென
சலம்புகிறது வீழ்சருகு


**********************************************************
எதுவுமே நினைக்காதவர்கள்
பற்றிக்கூட
என்ன நினைப்பார்களோ என 

நினைத்துக்கொள்கிறீர்கள்


நனையும் குப்பை


கோடி கோடி இலைகள்
உதிர்ந்து கொண்டே இருக்கின்றன
அந்த ஒற்றை இலை
சுழன்று விழுந்தது
ஓரலை இழுத்து விழுங்கியது
ஏனோ நடுங்குகிறது


***********************************************

உங்களைப்பற்றி 
நினைத்துக்
கொண்டேயிருக்கையில் நீங்களே 

வருவது அற்புதம்தான்
நினைத்த மாதிரியே
வந்திருந்தால்


************************************************

நசநசத்துக்கிடக்கிறது
குப்பை
ஞாபகங்களைப்போல
மழையில் நனைந்துகொண்டு


***************************************************
யாரையோ யாருக்கோ
பிடித்திருக்கிறது
அது
உங்களுக்குப் பிடிக்கிறதா
என்பதே உங்கள் பிரச்னை


***********************************************


செவ்வாய், நவம்பர் 21, 2017

அப்படியும் இப்படியும்

இறந்தவன் பெயரை எப்படி மாற்றுவது
இறப்பதற்கு முன்பாகத்தான்
அழகான ஒரு படத்தை முகநூலில்
அடையாளப்
படமாக்கியிருக்கிறான்
முகவரிக்குறிப்பேட்டில்
அலைபேசி சேமிப்பில் எண்ணாக எழுத்தாக
அடங்கிக்கிடக்கும் நினைவுகளை
முகநூல்வழி ஆட்டிப்படைக்கும்
அவனிடம் சொல்ல வழியில்லை
போனவன் பெயரைநினைவூட்டாதே என
இவனிடமாவது 
சொல்ல முடியுமெனத் தோன்றவில்லை
*******************************************************************

பாதுகாப்பாக உணர 
முற்படுகிறது ஒரு ஆயுதம்
ஏந்தியிருப்பவனும்
 எதிர்கொள்பவனும்
 மறைத்தும் மாற்றியும் 
ஏமாற்றியும் 
பாதுகாப்பைப் போர்த்திக்கொள்ளத் 
துடித்துக்கொண்டிருக்கையில்
ஆயுதத்தின்
பாதுகாப்புணர்வுக்கென்ன அவசரம்
**************************************************
ஆயுதங்கள் அறிவதில்லை அழிக்கவே பிறந்த கதை

*************************************************************
இது உனக்கான நேரம் என்பதை 
எப்படியாவது சொல்ல விரும்புகிறாய்
நீயே மறந்தும் போகிறாய்
வேறு வழியின்றி
**************************************************
இப்படி இருப்பதில்
குற்றவுணர்வு மிக
அப்படி ஆக முயல்கிறாய்
அப்படி இருப்பதிலும்
குற்றவுணர்வு கிளைக்கும்
எப்படியேனும் மாறத் துடிப்பாய்
அப்படி இப்படி இருப்பவர்கள்
அப்படியே இருப்பதைக் கண்டு
வியந்தபடி
*********************************************



வீட்டுக்குப் போகும் வழி


நாம் வீட்டுக்குப் போகும் வழியில்
இரண்டு அல்லிக் குளங்கள்
ஒரு ஆறு 
கொண்டையன் வாய்க்கால் ஆற்றில் சேர்த்தியா
என்ற சந்தேகமும் இருந்தது
பாதையோரப் புளியமரங்களின் முதற்குத்தகை
நமக்கு
கொடுக்காப்புளி.,அருநெல்லி,
நாவற்பழத்துக்கு சற்றே பாதை விலகியும்
நடையிலும் ஓட்டத்திலும் சேர்த்தியிலா போக்கில்
சிதறாது சேகரிக்க முந்தி வேண்டியே
முந்திப்போட்ட தாவணிகள்
திடீர் பாண்டி கட்டங்கள் 
நேரமிழுத்தபோதும்
அம்மையர் புலம்பவில்லை
குட் டச் பேட் டச் தெரியாத தடிக்கழுதை என்று
வாசலில் வண்டி ஏற்றி கம்பிச் சிறையிலிருந்து
கட்டிடச் சிறைக்கு இடம் மாறித் திரும்பும்
ஏழுவயதுப் பெண்ணிடம் 
எப்படியும் சொல்லிவிடவேண்டும்
இவ்வார விடுமுறையில்
என்ன இருந்தாலும்
காலில் முள் படாத நாகரீக காலம் இது

வண்ணக் குழம்போடு திரியும் கடவுள்

எந்த இரண்டு புள்ளியில் பொறி உறங்குகிறது
எனத் தெரியாது 
மாற்றி மாற்றி உரசிக் கொண்டிருக்கிறோம்
நேசத்தின் இலைகளின்மேல் பனி மூடிக் கிடக்கிறது
பசிய ஒளி சுடராமல் இற்று விழுந்து விடுவோமோ
என்று நடுங்குகிறது கிளையோடு
காற்றோ தன்னிடம் வனம் உரையாடக் காத்திருப்பதாகப்
புறப்பட்டு வருகிறது
தப்பித் தப்பி நடக்கும் எல்லாவற்றுக்கும்
அமரத்துவம் பூசிவிட

வண்ணக் குழம்போடு
திரிகிறான் கடவுள்
அவனிடமிருந்து பிழைப்பதுதான் பெரும்பாடு

எங்களுக்கென.....

பேசத்துவங்குமுன் சற்றே
தொண்டை கமறுகிறது
உனது சொற்களா எனதா
எதைத் துப்புவது என்ற
தள்ளுமுள்ளுதான்
இதற்கு விக்ஸ் என்செயும்
ஸ்ட்ரெப்ஸில்ஸ் தான் என் செயும்


*************************************************

நீங்கள் நம்பவே போவதில்லை
எங்களுக்கென்று ஒரு உயரம்
இருந்ததையும்
எங்களுக்கென்று ஒரு துயரம்
இருப்பதையும்

கண்ணீராலாவதென்ன
***********************************************

கதவைத் தட்டுபவர்கள் என்று
யாருமே இல்லை
மின்சார அழைப்புமணி 
வைக்கத்தொடங்கிய பின்னும்
கதவைத்தட்டி அழைப்பவர்கள்
கதவைத்தட்டி நுழைபவர்கள் இருந்தார்கள்
அப்படி யாரும் தட்டாத
பொழுதுகளிலும்
தட்டிய ஒலியின் பிரமையில்
திடுக்கிட்டு எழுமளவு
கதவைத் தட்டும் ஒலி நம் இதயத்தில்
கேட்டுக்கொண்டிருந்தது
இங்கோ தட்டுவதற்கானதல்ல கதவு
என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்
எப்படி நுழைகிறார்கள் என்பதுதான்
தெளிவாகவில்லை


கிணற்றகல இருள்

இருளை விசிறுகிறவர்கள்
ஒளியைக் கைப்பற்ற 
உங்களைத் தூண்டுகிறார்கள்
அது விதியாகத்தான் இருக்கட்டுமே

**********************************************

கிணற்றகல இருளில் மிதந்து கொண்டிருந்த 
இரண்டு 
நந்தியாவட்டைகள் மட்டும்
இன்னும் வெளிச்சமாக

**********************************************

தூவானத்துக்கென்று
தனி நிறம்
உங்கள் எந்த தூரிகையிலும் இல்லாதபடி

********************************************************
நினைத்தது நிஜம்
நினைக்காததும்
இங்கிருப்பதெல்லாம்
இங்கில்லாததும்தானே

*****************************************************

செம்பருத்தியின் அடர்சிவப்பு காணாதவனே
சாம்பிய முகத்தோடு நாள் திறப்பதன்றி 
ஏது வழியுனக்கு

***************************************************************


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...