செவ்வாய், அக்டோபர் 23, 2018

விசிறியாய் ஆடும் முழுக்கை சட்டை

மிகச்சரியாக பொத்தான்கள் இடப்பட்ட 
அந்த கடுங்காப்பி நிற 
முழுக்கைச்சட்டையை நீ மடித்துவிட்டிருக்கலாம் 
என்று ஏனோ பட்டது 
வாசல்முன் இறங்கியபோது
லேசாக விசிறி போலப் 
பொத்தான் அவிழ்ந்து ஆடும் சட்டையோடு 
தூறலுக்காக ஒரு கையுயர்த்திய நெற்றி மறைப்பில்
சற்றே குனிந்து 
விரைவில் படியேறியபோது நீ நனைந்துவிடவில்லை
புதியவன் முகம்பார்த்து 
மிரண்டு படியிறங்கிய
சோனிநாய்க்குட்டியை 
நனையாது திண்ணையேற்றியபோது
வீட்டின் மனம் நனைந்துபோனது

ருருரூ ரூரூரூ மின்மினி

ருருரூ ரூரூரூ என்று தொடங்கிய 
ஜானகி
குரலைத் தாழ்த்தி 
மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது
என்று சேர்ந்துகொண்ட வாசு
அப்போது மொட்டையாகியிராது 
எண்ணெய் வழியும் கிராப்பு தலையும் 
பெரியகாலர் சட்டையுமாக 
எங்கோ பார்த்திருந்த இளையராஜா
கொடுங்கோலர்களே...
எத்தனை காலங்கடந்தும் 
இப்படிப் படுத்துபவர்களை பின்னெப்படி அழைப்பது

நேற்றைய மலர்

எல்லாம் முக்கியம்தான்
யாருக்கு எது 
என்பதில் இருக்கிறது
யார் 
யார் என்பது

*****************************************
ஞாபகநதியில் நுரைத்த புனலோடு மிதந்து வந்த
நேற்றைய மலர் இன்றாவது கரை சேர்ந்திருக்கலாம்
கைக்கெட்டும் தூரத்திலாவது வந்திருக்கலாம்
எத்தனைகாலமும் இப்படியே
நேற்றைய மலராகவே மிதந்துகொண்டேதானா.
****************************************************
ரொட்டியும் வெண்ணெயும் சர்க்கரையும் 
மூடிவைத்துவிட்டு
சாரலை மென்று கொண்டிருக்கிறேன்
வளைந்து வளைந்து இறங்கும் 
மலைப்பாதையின் விளிம்பில்
ஆழத்திலிருந்து தவித்தேறி
ஆடிக் கொண்டிருந்தன
மலர்க்கொத்துகள்

*********************************************************************
படம் ராஜி சுவாமிநாதன் 

உரையாடல்களின் தேசம்


................
அதிகப்பிரசங்கி
பட்டிவாய் என்றெல்லாம் 
காலகாலமாக வையும் 
மெல்லினப் பதங்களை 
நன்கு இறுக்கி முறுக்கி
நெகிழிப்பைக்குள் திணித்து
வீசியெறி முதலில்..

ஸ்வச் பாரத்

கேள்வி என்பது பதிலுக்கானது என்ற
மூடப்பழங்கதையோடு
விடாது கேள்விக் கல் போட்டுக்கொண்டிருக்கும் காகங்களே..
சாடி நிரப்பவே உங்கள் காலம் போதாது 
இதுவோ ஆழ்பாழ்கிணறு
மந்தையாய்ப் பின் வரும்
வரம் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது
பிறவிப்பயன் எய்தினீர்
***
தேர்ச்சட்டகங்களின் மேல் 
அகன்ற மார்பு விம்ம விம்ம நின்றபடி
கரமுயர்த்தி ஆசீர்வதிக்கும்
உங்கள் அழகிய லட்சமதிப்பு துவராடைகளின் 
வெளிச்சத்துக்காக 
கூசும் கண்மூடிச் சற்றே நின்றமைக்காக..
என்ன தின்ன
என்ன உடுக்க
எப்படி நிற்க
எப்படி நடக்க
யாரை நேசிக்க
யாரை வாசிக்க
யாரை வணங்க
யாரைத்தூற்ற
எல்லாம் உங்கள்
சுட்டுவிரலுக்கு உரிமையாக்கவா

எம் சோற்றில் உப்பு உண்டு
இன்னும் கொஞ்சம் துப்பு உண்டு
இது உரையாடல்களின் தேசம்
ஒற்றைக்குரல்களின் சந்தைமதிப்பு 
சட்டெனப் பாதாளம் போகும்
அக்டோபர் 1 முகநூல் வழி த மு எ ச க வழி வெளியானது 

சரிகை புல்லாக்கு மினுங்க

செல்லாத்தா செல்ல மாரியாத்தா 
மிதந்து கொண்டிருக்கிறது பந்தலில்
திருவிழா வரிசையில் வாங்கிய
புளியோதரைத் தொன்னையைத் 
தலைநடுங்க நிற்கும் மாரிக்கிழவியிடம் 
கையளித்துவிட்டு
ஒருநிமிடம் நின்று
அரைஞாண்கயிற்றில் காற்சட்டை ஏற்றியபின் 
வரிசைக்கு மீளும் அப்புவைப் 
பார்த்துதான் சரிகை புல்லாக்கு மினுங்க 
புன்னகைத்தாள் கழுத்துமாரி
அதை எல்லார் ஈஸ்வரி பார்த்துவிட்டார் போல
இந்தக் கண்களிருந்து என்ன பயனென்று 
சொல்லடி நீயாத்தா
தேர்முட்டி தாண்டி எதிரொலிக்கிறது

காமதேனு அக்டோபர் 1 

மழை தொட்டு நகரும் விரல்

ஒரு குழிக்கரண்டி சீனியோ 
பத்தாய் 
இருபதாய் உடைத்த 
அச்சுவெல்லத்துண்டோ கிடைக்கும்
உப்புக்கல் பொதிந்த 
வேப்பிலை உருண்டைக்குப்பின்
கூடவே உள்ளிருக்கும் உப்புக்கல்லோடு 
சமாதானமாகப் பழகு என்றஅறிவுரையும்
அது நடந்தது
எப்போது என்றுதான் புரியவில்லை

********************************************************************
மழைதொட்டபடி நகரும் விரல்களை 
ஏதோ ஒரு முடுக்கில் உள்ளிழுக்கவும் 
உதறவும் கற்றீர்களே
அன்றுமுடிந்த வாழ்க்கை இது
தொட்டகுறை விட்டகுறைதான்
அந்தக் கண்ணில் மின்னல்
மழையோ அதே தாளத்தோடு
****************************************************************
நீங்கள் ஒப்புக் கொள்ளாவிடினும்
உங்கள் சாயல் அதன்விருப்பப்படியே 
வளர்ந்து மலர்ந்து தளர்ந்து நரை கூடிப்போகிறது
குலைதள்ளும் வாழையின் 
திக்கும் உயரமும் பற்றிய கவலையும் உமதே
*******************************************************************
அன்றாடக் கவளத்திற்கு
பிரதியாகக் காக்கை விட்டிருக்கக்கூடும் 
அந்த விதையை
எட்டிப்பார்க்க யாருமிலா மதில்உச்சியில் 
தலையசைக்கிறது ஓரிலை

பச்சை பீடித்த அகல்

சாய்ந்து அமர்ந்திருந்த
ஒடுங்கிச்சுருண்டிருந்த 
சுவரும் தரையும் பெயர்ந்து பெயர்ந்து
வாழ்வின் தருணங்களைக்
காலம் சப்பியெறிவதைக் காட்டிக்கொண்டிருக்க,
நடந்து ஓடி ஆடிக்கிடந்த தரையில்
உதிர்கூரையின் சருகுகளை
ஒதுக்கியபடி,
எப்போதோ ஒளிசிந்தி
மிஞ்சிய எண்ணெய்ப்பிசுக்கில் 

பச்சைபீடித்த அகலின் 
நிலையாமைக்கும் நிலைப்புக்கும் 
இடையே ஆடிப்போனதாகத் தளும்பிய பிறகும்
வாழத்தான் செய்கிறோம்


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...