திங்கள், அக்டோபர் 31, 2016

யுகங்கள் கடந்து

நைந்த மனதோடும் அதைவிட 
நைந்த தேய்பஞ்சோடும் 
ஒட்டிக்கொண்டிருக்கும் சோப்பை
முடிந்தவரை துடைத்து துடைத்து
தேய்ப்பது அன்றாட நிகழ்வு
கனகத்துக்கு
ஆனாலும் பொழுது மாறி விடிந்தது
மூடிய கதவுச்சமூகத்தின் 
மூன்று வீடுகளுக்கான பணியாளாக வந்த
நாளிலிருந்து வாழ்க்கை 
சிலபல சில்லறை சௌகரிய 
கணங்களைக்கொண்டு வந்திருந்தது.
குழாய் திறந்தால் கொட்டும் தண்ணீர்
மிஞ்சியதென்றாலும் வண்ணமான உண்டி
மண்ணெண்ணெய்க்கு அலையா
மகிமை மிகு வாழ்வு
மற்றபடி ஏங்குவதெற்கெல்லாம் நேரமுமில்லை
எதைப்பார்த்து ஏங்குவதென்று
தெரியவுமில்லை
அதே தேய்பஞ்சும் சோப்பும்தானென்றாலும் 
சலிப்பில்லை
அவர்கள் மொழி அவர்கள் வழி
அவர்கள் கருவி அவர்கள் தரை
பழகத்தான் நாள்பிடித்தது
தப்பிப்பிழைத்து தடுமாறி 
வந்துவிட்ட சமையலறைக்குழாயடி ஒற்றைக்கரப்புக்கு
ஊளையிட்ட மக்களைப்பார்த்து
சிரிக்கிறாள்
எத்தனை உரையாடல்களை
இடுக்குகள்தோறும் நுழைந்து 
வெளியேறும் கரப்புகளோடு 
நிகழ்த்தியிருக்கிறோம்
தலை துண்டானாலும் ஒன்பது நாள் வாழும் கரப்பு
பசியில் உயிர்விடும் என்றறிந்து
இனமென்று அடிக்காது துரத்தியிருக்கிறோம்
பாற்சோறு போட்டும் பதமான உணவிட்டும் 
நாய்பூனை வளர்ப்போருக்கு
தானே ஒளியும் தனிக்கரப்பிடம்
என்ன அச்சம் என முனகிக்கொண்டாள்
கூட்டிப்போகலாம் தன்னோடு மாலை 
எனப்பரிவோடு யோசித்தபோது
"படம் நிச்சயம் ஹிட் ஹிட்" என ஓடிவந்தான் ஒருவன்
தொடர்பில்லாத செய்தியென
ஒருகணம் திரும்பித்திரும்புவதற்குள்
கரப்பைக்காணோம்
காலந்தோறும் வாழ்வதைக் கற்பதென்னாளோ 
கனகம் முனகியது கரப்புக்குக் கேட்டது


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...