புதன், செப்டம்பர் 25, 2019

தொடங்கும் புள்ளியும் நிற்கும் புள்ளியும்

ஒரு புள்ளியில் நின்றுவிடுகிறது
ஒரு புள்ளியில் தொடங்கிவிடுகிறது
நிற்கும்போது தொடங்கும் எனத்தெரியவில்லை
தொடங்கும்போது நிற்கும்
என்ற அறிவுமில்லை
புள்ளி சிரித்துக்கொள்கிறது

********************************************************
கற்பூரவில்லைகளைக்
கைக்குள் இடுக்கியபடி
அம்மை தொடர
மூடிய சன்னதிகளின்
படிகள்தோறும் ஒன்றைவைத்து
ஏற்றிக் கைகூப்பியபடி சுற்றுகிறாள் மகள்
பிரகாரத்தின் முன்னிருந்து
ஆலயப்பணியாளர் வருகிறார்
அம்பிகே...
அவருக்கு வேறு வேலை கொடு

********************************************************
வெட்டலாம் வெட்டலாம்
இப்போதுதான் அலங்கரித்துக் கொண்டிருக்கிறேன்
உங்களுக்கில்லாமல் யாருக்கு
அப்புறம் அந்தக்கத்தி
கையில் இருக்கிறதல்லவா

*************************************************************
கடும்பச்சை நிறத்தில்
பாறையின் உச்சியைத் தொட்டுவருகிறேன் 

எனச்சவால் விடுத்து எழும்பிய அலை
பாதிஉயரத்தில்
எனக்கென்ன கல்வெட்டா
போதும் போ எனச்சலிப்புற்று விழுந்தது
அடுத்த தாவலில் அதே அலை அதே துளி
இருக்கலாம்
இல்லாமலும்

*******************************************************************
 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...