திங்கள், டிசம்பர் 04, 2017

தழையுணர்த்தும் சிறுவாழ்வு

உலுக்கி உலுக்கி ஆட்டியபோதும்
முருங்கைக்கிளை 
சிரித்துக்கொண்டு நிமிர்ந்துவிடுகிறது
பெருமழைசொரிந்த
நேற்றைய சலிப்பெங்கே என்றால்
நம் காலடியில் உதிர்ந்து பறக்கும்
இலைகளைச் சுட்டியபடி
ஓராயிரமாய்க் கிழிந்து தொங்கும் 
வாழையிலையை வருடப்போகிறது

ஏறியிறங்கும் அணிலுக்கும் 
ஒண்டு இடுக்கில் நார் சேர்க்கும் காக்கைக்கும் 
ஆட்சேபமின்றி இடம்

மழையைக்குடிக்கும்
ஒளியைத்தின்னும்
இளவெயிலில் தழையுணர்த்தும்
சிறுவாழ்வு
சொல்லிக்கொள்கிறோம்
எதற்கும் இடந்தரா எம்முடையதைப் 
பெருவாழ்வென்று


சேதாரமிலா உபச்சாரம்

வருத்தங்களை உருக்கி உருக்கி 
இழையத்தட்டி நகாசு கிகாசு செய்து 
புத்திமதிகளை 
நாலு கல்லோ சலங்கையோ செதுக்கி 
அமுக்கி அமுக்கி ஓரம் மூடி 
அடக்கமாகப் பெட்டியிலிட்டு 
வைத்திருங்களேன்
செய்கூலி சேதாரத்தோடு நல்ல விலை போகும்
நல்ல விலை கொண்டு நாயை விற்பார்
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ
எதற்குப் பின் வருத்தத்திடம்
உபசார வார்த்தைகள்




சாலையோர அங்காளம்மை-2

முழம் முழமாய்ச் சுற்றி வைத்த பந்துகளிலிருந்து
ஒரு கிள்ளு கூடத்தராது ஒயர்கூடையில் பதுக்கியபடி
தன்னை வணங்க காசு வீசும்
வாகனதாரிகளை மறித்துவிட்டு
பேரத்தின் எரிச்சலை வெற்றிலை எச்சிலாய்ப்புளிச்சிடும்
பேச்சியின் பேச்சும் கூவலும் 

அத்துணை சுவாரசியம்
எவரோ எப்போதோ சார்த்திய

மஞ்சள் சுங்கடியில் சான்னித்தியம் அருளும் 
அங்காளிக்கு 





மீனின்குரல் கேட்கும் தூண்டில்

வனத்தில் நிறைந்திருந்த
வயலட் சிறு பூக்களின் பெயர் தெரியவில்லை
வண்ணத்துப் பூச்சிக்கும் எனக்கும்
அதனாலென்ன

********************************************************
கு
ளத்தின் பாடலை 
நீங்கள் தவளையின் குரலில் கேட்கிறீர்கள் 
உங்கள் தூண்டில் மீனின் குரலில் கேட்க 
நானோ நீரின் குரலில்

********************************************************
தூறலில் தொடங்காத 
மழையையும் 
பழகிக் கொள்கின்றன தொட்டிச் செடிகள்
***************************************************************

கண்ணாடித்தாள் போலச் சிறகு விரிக்கும் வண்ணத்துப்பூச்சி 
எங்கு கிழிபடுமோ 
பதட்டமாயிருந்ததில் 
சற்றுமுன் கிழித்த இதயம் மறந்து போனது

******************************************************************


வெள்ளி, டிசம்பர் 01, 2017

உதிரி செவ்வந்தி

உதிரி செவ்வந்தியை இட்டு 
கமலம் 
வரைந்த வாசலைத் தயக்கத்துடன் 
சாய்ந்து சாய்ந்து நனைக்கிறது மழை 
திருநாள் எங்கபோகுது 
நா எங்க போறேன் 
அட இந்த உதிரி செவ்வந்தியும்தான் 
எங்க போகுது
நீ வா தாராளமா
மழையிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்
அவள்



தளராடைவேளை

மாற்றிப்போட்ட சேலையின் ஓரப்பிசிறுவழி
கொடியிலிருந்து சொட்டிக் கொண்டிருக்கிறது
வெளியில் நான் விட்டுவந்த
மழை
கேட்கவேண்டும் எனத் தோன்றும் பாடல்கள்
எதையும் தேட நேரமில்லை
மெழுகுவத்தி கரைந்தே விடுமோ என்ற அச்சத்துடன்
ஊதிஊதி அணைத்து அணைத்து
ஏற்றிக் கொண்ட இரவுகளுக்கு
இருந்த வாசம்
இன்றைய நாசியில் அரூபமாய்
இறுக்கமாய்த் தோள் சார்த்திய வயலினை
இழைக்கும் விரல்களை நினைத்தபடி
வெங்காயம் நறுக்கும்
இந்த தளராடைவேளையின் பரபரப்பு
என்றாவது மணக்கக் கூடும்

குருதியின் நீர்மை

சொட்டுச் சொட்டாய் உதிர்ந்து கொண்டிருக்கிறது
எவ்வளவற்றை ஏந்திவிட முடியுமோ
அவ்வளவையும் ஏந்திவிடக் கை குவிக்கிறேன்
ஏந்திய மறுநொடி வழிந்தபோதும்
மழைத் துளியே உன்மீதிலான காதலைத்தான்
எப்படித் துறப்பேன்
உள்ளிறங்கி உள்ளிறங்கி

என் ரத்தக் குழாய்களில்
பயணிக்கும் பேரன்பு உனக்கு வாய்க்காதபோதும்
என் குருதியின் நீர்மை நீதானெனக்
கற்பித்துக் கொள்கிறேன்
பைசாசத்தைக் கூட்டு சேர்த்துக் கொண்டு
வெறியாடும் பொழுதுகளையும் மன்னித்து
பழரசமருந்தி இசைபாடும் 

காவிய நாயகனாக உருவகித்துக்
காத்திருக்கப் பழகுகிறேன்



வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...