வியாழன், அக்டோபர் 10, 2019

கொஞ்சூண்டு வானம்

போகன்வில்லாவின்
முட்கள்
உன் ரத்தச்சொட்டுகளைக்
கவனிப்பதில்லை
ரோஜாவினதும் கூட
ஆக
இரண்டும்
ஒன்றுதான்

*********************************
வேப்பங்கிளைகளின்
இடுக்கில் தெரியும்
கொஞ்சூண்டு வானத்தை
அண்ணாந்து பார்த்துவிட்டு
புரண்டு படுத்துக்கொண்டது நாய்க்குட்டி
என் கண்களோ பாதையில் மட்டும்

********************************************
உக்கிரத்தை அடக்கு
அழுகையை அடக்கு
வன்மத்தை அடக்கு
ஆசையை அடக்கு
நாவை அடக்கு
உணர்வை அடக்கு

நீ
என்னை அடக்குவது
போல்தானே
******************************************
மன்னித்தே ஆகவேண்டுமென 
மனதைத் தயார்படுத்துங்கள்
உங்கள் ஆவேசத்தின்போது
முகமளவு மனமும் சிவந்துகிடப்பது தெரியும்
ஆனாலும் மன்னிக்கத் தயாராகுங்கள்
சட்டென நகர்ந்துவிடாமல்
குற்றவுணர்ச்சியின் 
எச்சில் தெறிக்கும் வார்த்தைகளைச் சேகரியுங்கள்
உதிர்ந்த பவழமல்லியைத் 
துணி போட்டுச் சேகரிப்பீர்களே அதுபோல்தான்
ஆனால்
நீங்கள் துணிவிரிக்குமுன்பே
பவழமல்லியின் பூக்கும் பருவம் 
முடிந்து விட்டிருக்கிறது


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...